“அசையாதடி, ஆட்டாதடி அவம்பாதமெடுத்தவளே…” என அவ்வப்போது தேனரசனை அலறவிடுவதில் ஒருவித அலாதி வெண்மணிக்கு.
அவனின் சத்தம் அதிகமாகும் பொழுதெல்லாம் பொன்னி என்னவோ என அங்கிருந்து ஓடிவந்து பார்க்க,
“எம்புருசென நாலு வப்பு வெக்க கூட பொண்டாட்டியா எனக்கு குடுப்பன இல்ல?…” என்று சொல்லி சலித்துக்கொள்வாள் வெண்மணி.
இப்படியாக அவளின் நாட்களும் இனிமையை சுமந்து செல்ல இடுப்புவலி கண்டு பிரசவத்திற்கு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் வெண்மணி.
ஆண்குழந்தை அழகாய் அவதரிக்க அத்தனைபேரின் கண்களையும் குழந்தை பறித்துக்கொண்டது.
கொள்ளை அழகு. தேனரசனின் அரசன் அவனின் தகப்பனின் அழகை அப்படியே கொண்டுவந்து பிறந்திருந்தான்.
“புள்ளைய அவ புருசென மாரிக்கே பெத்துருக்கா…” என சத்தம் வராமல் சீனியம்மாள் சொல்லிக்கொண்டாலும் அதில் தன் மகளின் ஜாடையை தேடினார் அவர்.
அழகாய் எச்சில் இதழ்களுடன் முகம் கசக்கி கண்ணை உருட்டி பொக்கை வாய் சிரிப்போடு அவரை அள்ளிக்கொண்டான் குழந்தை.
வெண்மணியும், தேனரசனும் சீனியம்மாவை மருத்துவமனையில் தவிர்க்கவில்லை.
அவரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவரை அப்படியே விட்டிருக்க வெண்மணி வீடு கிளம்பும் வரை அவர் மருத்துவமனை விட்டு நகரவில்லை.
ஆனால் மகளிடம் எதுவும் பேசவில்லை. அவளும் பேச முயலவில்லை. ஆனால் பார்வையாலேயே அந்த கரிசனைகள் இருந்துகொண்டு தான் இருந்தது.
பேரனை கையில் வைத்தபடி மகன் வைத்தியிடம் வந்தார் சீனியம்மாள் மகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என சொல்ல.
“இங்காரு ம்மோவ் இந்த பேச்செல்லா ஒம்மருமவேங்கிட்ட பேசிக்க. என்னிய இழுக்காத. ஒன்னியாலதன் கூட பொறந்தவள வீட்டோட வச்சு பக்குவம் பாக்க வக்கத்து நிக்கிதன். மாத்தவள பேசி பேசி இப்ப நம்மதன் அந்த கெதில நிக்கிதம்…” என பேசிவிட்டான் வைத்தி.
தவராசன் எதுவானாலும் மகளிடமும், மருமகனிடமும் பேசிக்கொள் என்று சொல்லிவிட்டார் சீனியம்மாவிடம்.
“கெட்டினவ நீயே என்னிய மனுசெனா மதிக்கல. மருமவேன் மருவாதி தரனுமின்னு என்ன இருக்கு?…” என்று சொல்லிவிட்டார் தவராசன்.
சீனியம்மாள் தேனரசனின் முகம் பார்க்கவும், மகளை பார்க்கவுமாக தவித்து போனார்.
வாய் திறந்து வீட்டிற்கு அழைக்க முடியாமல் அவரின் நாக்கு சண்டித்தனம் செய்ய தொண்டை இறுக்கி பிடித்தது அவரை.
கூப்பிடு, பேசு என எத்தனை முயற்சித்தும் முடியவில்லை. கண்ணீருடன் மகளை தேனரசன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு பொன்னியின் வீடே கதி என கிடந்தார் சீனியம்மாள்.
அவள் பேச பேச மடியில் உறங்கிய மகன் சிணுங்க ஆரம்பிக்க கால்களை ஆட்டி அவனை அமர்த்தினாள்.
“இம்பிட்டு இடும்பா கெட்டிக்கிட்டு நின்னா நானும் நிக்கத்தன் செய்யிவேன். அந்தம்மா எம்புருசென்கிட்ட பேச கூட வேணா. எம்புள்ளைய பாக்க கூட வரலல்ல இங்கின?…” என்று கேட்க பொன்னியால் பதில் சொல்ல முடியவில்லை.
தேனரசன் வீட்டிலேயே இல்லை. இத்தனை பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்க கயல்விழி தான் இங்கே வந்து வெண்மணிக்கு சமையல் செய்து அவளை பார்த்துக்கொள்வது எல்லாம்.
அவள் சூப்பை ஆற்றி கொண்டே வந்து தம்ளரில் வெண்மணியிடம் கொடுக்க கண்ணீரை துடைத்துக்கொண்டு வாங்கினாள் வெண்மணி.
“இங்காருத்தா, மணி சொல்லுததுல என்ன தப்புங்கேன்? அவளையே போவ சொல்லுதியே, எம்மாமியா கொஞ்சமாச்சும் மாசமாருக்க பொண்ணுன்னு எறங்கி வந்துச்சா? அம்பிட்டுக்கு உடும்பா நிக்குது. அத பேசாம. சும்மாருத்தா…” என்று சொல்லிவிட்டாள் கயல்விழி.
“என்னதன் பொறந்த வீடா இருந்தாலுமேட்டு கலியாணத்துக்கு பொறவு அவ புருசென நடத்துததுதன் மவளுக்கும். செம்பாவ பத்தி நா சொல்ல அவசியமில்ல. ஆனாங்காட்டி அவளே சொல்லி பாட்டுப்படிப்பாளே, சொல்லிகாமிப்பா எங்கின பேசுதமின்னு இல்லாம….” என்ற கயல்விழி,
“மணி இனிமேட்டு எத்தன புள்ள பெத்தாலும் மொத புள்ளைக்கி அது என்னத்த இங்கின செஞ்சி தவிச்சிச்சு? காலத்துக்கும் அத ஒரு பேச்சாக்கி விட்டுருச்சுல? அம்புட்டுக்க ஒரு பெரிய மனுசிக்கு புத்தி மழுமட்டையா போவும்? இனி ஆருக்காச்சும் நாயம் பேசறேன்னு போனா மூக்கறுத்துட மாட்டாவள?…”
“மணி கலியாணம் முடிச்சதுல இருந்து ஒருநாவாச்சும் அந்தம்மா இங்கின வந்து மருமவேன்னு ஒரு பார்வ பாத்துருக்குமா? அவகள பேசாம இங்கின பேசுதீய. ஒம்மவனுக்கு தான இம்பிட்டு பாடும்..” என்று சொல்லிவிட்டாள் கயல்விழி.
வெளியே தேனரசனின் வண்டியின் சத்தம் கேட்கவும் உடனே புடவை தலைப்பில் முகத்தை துடைத்துக்கொண்டவள் பளிச்சென்று சிரிக்க முகமெல்லாம் புன்னகையுடன் உளேள் வந்தான் தேனரசன்.
“புள்ளைக்கி ஒனக்கு எல்லா வாங்கியாந்துட்டன். செரியாருக்கான்னு பாத்துக்கிடு…” என்று அவன் கொண்டுவந்ததை கடைபரப்ப,
“அதெல்லா அதுக்கு மேலதன் வாங்கியாந்திருப்ப. போதும்ய்யா…” என்று சிரித்தாள் வெண்மணி.
“என்னடி கண்ணுல?…” என கேட்டவன் கயல்விழி, பொன்னியை பார்க்க,
“ஊஞ்சலுல ஒக்காரமின்னா. அதட்டுனன். அதேன்…” என்று சிரித்தார் பொன்னி.
“அம்புட்டுத்தான?…” என்றவன் வெண்மணியை தூக்குவது போல பாவனை செய்ய,
“நீயி செய்யிய்யா…” என்றாள் வெண்மணி.
“யாத்தே இவக செஞ்சாலும் செய்யிவாக. நாம அங்கிட்டு போவம்த்தா…” என்று கயல்விழி பொன்னியுடன் வெளியேறிவிட தேனரசனின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது.
அவர்கள் கிளம்பவும் உடைமாற்றி வந்தவன் மகனை தன் மடிக்கு மாற்றிக்கொண்டான்.
அவள் சொல்லியதை போல தகப்பனின் கை பட்டதும் பிள்ளையும் விழித்துக்கொள்ள அதன் பின் அவர்கள் பொழுதுகள் எல்லாம் சந்தோஷமாய்.
அவனின் சிரிப்பு, பார்வை எல்லாம் அரசனை போலவே இருக்க வெண்மணி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“ஒன்னியமாரிக்கே இருக்கான்யா அரசா. மூக்கு மட்டும் ஒங்கய்யன மாரிக்கே…” என பொன்னி மருத்துவமனையில் வைத்து சொல்லியிருக்க,
“வேணாம் சின்னம்மோவ். எம்புள்ள அவன மாரி இருந்தா போதும்த்தா. ஆர மாரியும் வேணா. அப்பன போல புள்ள, ஆத்தாவ போல புள்ளன்னு சொல்லி என்னத்துக்கு? நல்லதுக்கும் வேணா, கெட்டதுக்கும் வேணா. அவனுக்குன்னு ஒன்னு விதிச்சிருக்கும். அதுபடியே இருக்கத்தான?…” என்று சொல்லிவிட்டான் சிரித்துகொண்டே.
ஆனால் வெண்மணிக்கு தெரியும் இவன் நிச்சயம் தேனரசனை போல தான் வருவான், வளருவான் என்று.
அதுதான் அவள் விரும்புவதும். அந்த குணாதிசயங்கள் நிச்சயம் அவனை சுற்றி உள்ளவர்களை எல்லாம் மகிழ்வாய் வைத்திருக்கும் என்பதை பரிபூரணமாய் நம்பினாள்.
அவனை போலிருந்தால் யாரை வேண்டுமானாலும் சந்தோஷமாய் வைத்துக்கொள்ள முடியும். எதையும் எதிர்கொள்ள முடியும். நிறைவாய் வாழ முடியும். நிம்மதியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இப்படி ஒவ்வொன்றிலும் கணவனை அவனின் மேன்மையை அவதானித்து வைத்திருந்தாள் வெண்மணி.
இதோ முழுதாய் இரண்டு மாதங்கள் கடந்திருக்க அன்று தேனரசனுக்கும் விடுமுறை.
இரவு நேரம் அழ ஆரம்பித்த குழந்தை நேரம் செல்ல செல்ல ஒரு இடத்தில் படுக்காமல் இங்குமங்குமாய் அனத்திக்கொண்டிருந்தது.
பாலை குடுத்தும், தோளில் போட்டு நடந்தும் என எதற்கும் கட்டுப்படவில்லை. லேசாய் அழுத்தி பிடித்தாலே அழுகையை கூட்டினான் தேனரசனின் மகன்.
இடையிடையே சிறிது நேரம் உறங்க, பின் அழ என அவர்களை ஆட்டிப்படைத்தான் குழந்தை.
காலை வாசல் தெளிக்க கதவை திறந்த பொன்னி குழந்தையின் வீறிடலில் ஓடிவர பொன்னி வீட்டிலிருந்து அத்தனைபேரும் எழுந்து வந்துவிட்டனர்.
தேனரசன், வெண்மணி இருவருக்கும் எதுவுமே புரியவில்லை. அவளும் எப்படியெல்லாமோ சமாதானம் செய்து பார்க்க அழுகை நின்ற பாடில்லை.