“சொகந்தேன் லைப்ரேரியன் அண்ணாச்சி…” என சொல்லி தனது அட்டையை எடுத்து ஏற்கனவே எடுத்து சென்றிருந்த புத்தகத்தை ஒப்படைத்தான்.
“எம்புள்ளக்கிட்ட சொல்லி நீங்க கேட்ட கேள்வித்தாள வாங்கிட்டு வந்துட்டன் தம்பி. இந்தாங்க…” என்று அவர் நீட்டவும்,
“நன்றிங்க…” என்று வாங்கிக்கொண்டான்.
“மத்த ஸ்கூல் கேள்வி பேப்பரும் இருக்கு. புள்ளையோட கூட படிக்கிதவகட்ட இருந்து வாங்கியாந்துருக்கு. பாத்துக்கங்க…” என்றதும் அதற்கும் நன்றி தெரிவித்தான் தேனரசன்.
“இன்னிக்கி இங்கதேங்களா?….” என அவனிடம் கேட்க,
“ஆமாங்க அண்ணாச்சி. வேல எதுவுமில்லாங்காட்டி இதேன் நமக்கு சோலி…” என சொல்ல அதற்குள் அடுத்த ஆள் வரவும்,
“செரிங்க நா அங்கின ஒக்காருதேன்…” என்று நகர்ந்தான்.
இடையே தனக்கு டீ வருகையில் தேனரசனுக்கும் சேர்த்து வாங்கி வைத்து அவனை அழைத்துக்கொண்டார் லைப்ரேரியன்.
மாலை வரை அங்கு தான் இருந்தான் தேனரசன். மதிய உணவும் இல்லை. அந்த டீயும், இரண்டு வடையும் என முடித்துக்கொண்டவன் மாலை கிளம்பும் நேரம் இருட்டுக்கடை அல்வா வாங்க அந்த பக்கம் சென்றான்.
வீட்டுக்கு அவசியமானது, அத்தியாவசியமானது என தேவையானவற்றை யோசித்து வாங்கவே நேரம் சென்றுவிட ஊர் வந்திறங்க இரவாகி போனது.
பேருந்துநிலையத்தில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்தவன் வீடு நோக்கி சென்றான்.
சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு எல்லா பொருட்களையும் உள்ளே வைத்துவிட்டு மீண்டும் வாசலில் நின்ற சைக்கிளை எடுக்க வர அந்த நேரம் வைரமுத்துவும் வெளியே வந்தார்.
பெண் பார்த்துவிட்டு விசேஷம் முடிந்து வந்திருந்த தோற்றம் அப்படியே இருந்தது.
அவர் நிழலை கண்டதுமே கண்டுகொள்ளாததை போல அவன் தன் சைக்கிளை எடுக்க ஓரக்கண்ணால் அதை பார்த்தபடி தேனரசனை தாண்டிக்கொண்டு சென்றவர் நொடியில் கால் இடறி கீழே விழுந்திருந்தார்.
“எப்போவ்…” என பார்த்ததும் பதறியவன் வைரத்தை அழைத்ததோடு வேகமாய் நெருங்கி தூக்கி தன் மீது சாய்த்து நிறுத்தினான்.
“சின்னம்மா, இங்க வாத்தா….” என்றவனின் பெருங்குரல் வேறு அக்கம்பக்கத்தினரையும் வெளியே இழுத்திருந்தது.
“பாத்து வரமாட்டியளோ? என்னய்யா நீரு?….” என்று கடிந்துகொண்டான் வைரத்தை.
அதற்குள் ஆங்காங்கே நின்று வாசலில் பேசிக்கொண்டிருந்தவர்களும் கூடிவிட்டனர் வைரம் கீழே விழுந்ததை கண்டு.
வீட்டினுள் இருந்து பொன்னியுடன் மற்றவர்களும் ஓடி வர மதியழகனும், கதிரும் வந்ததும் வைரத்தை தங்கள் பக்கம் அணைத்து பிடித்துக்கொண்டனர்.
“என்னய்யா, அரசா என்னாச்சு?….” பொன்னி வைரத்தை தொட்டு பார்த்துவிட்டு தேனரசனிடம் கேட்டார்.
வைரம் கீழே விழுந்ததில் காலிலும், பின்பக்கமும் வலி ஏற்பட்டிருக்க அந்த அதிர்வில் நிற்க முடியாமல் உடல் நடுங்கினார்.
“கீழ கெவனியாம நடந்துட்டாரு போலுக்க? உள்ள கூட்டிப்போயி மருந்த போடுத்தா. இல்லாங்காட்டி பேசாம ஆஸ்ப்பத்திரி போ…” என்று தேனரசன் சொல்ல,
“மதி ஆட்டோ புடிச்சாருடா…” என்றான் கதிர்.
“செத்த உள்ள ஒக்காருய்யா…” என்ற கதிர் மதியழகனுடன் சேர்ந்து வைரத்தை வீட்டின் முன் திண்ணைக்கு அழைத்து அமர வைத்தனர்.
மற்றவர்கள் விசாரிப்பு எதுவும் வைரத்தை அசைக்கவில்லை. பார்வை எல்லாம் தன் அண்ணன் மகனிடம் மட்டுமே.
அவனின் அழைப்பை கேட்டு எத்தனை வருடங்களாகிற்று? தங்கப்பனின் இறப்பின் பின் யாரிடமும் ஒட்டுதலின்றி இருப்பவன்.
ஆனாலும் தாங்கள் சென்று பேசினால் பேச்சிற்கு மட்டுமே பதில் சொல்லுபவன் அத்தனையாய் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டான்.
மொத்தமாய் பேச்சற்று போன நாளில் இருந்து இதோ இன்றுவரை அவரை நேருக்கு நேர் கூட பார்க்காதவன் எத்தனை பதறி வந்து அணைத்து பிடித்தான்?
கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது வைரத்திற்கு. பார்த்த தேனரசனுக்கும் நெஞ்சத்தை பிசைந்தது.
அவனின் எல்லைக்குள் நின்றவன் பரிதவிப்புடன் வைரத்தையும், அவரின் முகபாவனையையும் தான் கவனித்தான்.
“சின்னம்மா அவருக்கு நோவுதாங்காட்டி அம்புடுது. என்னன்னு நல்லா கேளுத்தா…” என்றான் தேனரசன்.
“என்னன்னு சொல்லுங்கய்யா?…” என பொன்னியும் கேட்க,
“மாமா இந்த தண்ணிய குடிங்க. இப்ப ஆட்டோ வந்துரும்…” அவரின் மருமகள் குழலி தண்ணீரை தந்தாள்.
“எங்கியாச்சும் நோவுதாய்யா? எங்க கால காட்டும்?…” என கதிர் அவரின் காலை தொட்டு வெளிச்சத்தில் பார்க்க எதையும் காதில் வாங்காதவர் தள்ளி நின்ற தேனரசனை பார்த்துவிட்டு,
“என்ன வெளாடுதியானா? நேத்திக்கே அவக வீட்டுல இருந்து சேதி கேட்டு சொல்ல சொல்லுதாவ? இவேன் என்னடான்னா?….” என கோபத்துடன் தேனரசனை தேடி அவனின் வீட்டிற்குள் செல்ல புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவன் எழுந்து நின்றான்.
“வாரும் சின்னய்யா…” என்ற அழைப்பில் சற்று நிதானித்தவர்,
“சின்னம்மா இப்ப எனக்கு எந்த விசேசமும் வேணா. மொத நா நெலையா ஒரு வேலையில நின்னுக்கறன். பொறவு மத்த காச்சிய(கல்யாணம் காட்சி) பாப்பம்…” என அலட்டிக்கொள்ளாமல் அவன் பதில் சொல்ல,
“எங்கிட்ட பேசுலே. அவக்கிட்ட என்னத்துக்கு சொல்லுத?….” என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அடிப்பது போல அவன் முன்னே சென்றார்.
“எனக்கென்ன அச்சங்கேன்? ஒம்மக்கிட்டவே சொல்லுதன். எனக்கு இப்ப வேணாம். அம்புட்டுத்தேன்….” என்றான் அதே தோரணையுடன்.
தன் மகன்கள் இருவருமே தன் பேச்சிற்கு மறுபேச்சு பேசாதவர்கள். தேனரசன் ஒருவனே அவரை எப்போதும் நேருக்கு நின்று பதில் தருபவன்.
அதில் சிலநேரம் பெரிதாக தெரியாமல் இருந்தாலும் பல நேரம் அதிருப்தி தான் தோன்றும் என் பேச்சை கேட்கவில்லை என.
இப்போது அவனின் வாழ்க்கையில் எத்தனை பெரிய விஷயம் செய்யவிருக்க, அதிலும் அவனின் பின்புலம் அறிந்து பெண் கொடுக்காதவர்கள் மத்தியில் பெண்ணை தேடி கொண்டுவந்திருக்க இப்படி பேசுகிறானே என்ற ஆற்றாமையில் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
பெற்றோர்கள் இருவரும் இல்லை. அதன் காரணம் அசிங்கமாக பேசப்பட்டது. உடன் பிறந்தவர்கள் இல்லை.
எதை நம்பி பெண்ணை கொடுக்க? நாளைப்பின் பிரச்சனை என்றால் யாரிடம் நியாயம் கேட்பது? என பெண் தரவே முடியாதென்றனர்.
அதில் ஒரு இடம் வைரத்தை வைத்து பெண் தரவிருக்க இப்படி கூடிவரும் நேரத்தில் முடியாதென்கிறானே என்று பற்றிக்கொண்டு வந்தது வைரத்திற்கு.
“சின்னம்மோவ், அதேன் சொல்லிட்டன்ல. கெளம்புங்க…” என்றான் தேனரசன் வைரத்தின் பார்வையின் வேகத்தை கண்டு.
என்னவோ சொல்ல போகிறார் என அவனின் உள்ளுணர்வு எச்சரிக்க அங்கிருந்து அவரை அனுப்பவே பார்த்தான் தேனரசன்.