அவர் தன் மரியாதை, வயது என எதையும் யோசிக்கவில்லை. தேனரசனின் அடிபட்ட பார்வையையும், கண்ணீர் தளும்பி நின்ற முகத்தையும் தான் பார்த்தார்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?’ என பேசிய பின்பு, அதிலும் அவன் கை ஓங்கிய பின்பு தான் உணர்ந்தார்.
எத்தனை காயப்பட்டிருப்பான் அவன் இந்த வார்த்தையில் என தெரிந்தாலும் என்னவோ அவரின் தன்மானமும் அடிவாகிவிட்டது அந்த செயலில்.
கதிரை அழைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் வைரம் அந்த வீட்டை விட்டு செல்ல தேனரசனுக்கு அந்த நிகழ்வு மனதில் அப்படியே தங்கிவிட்டது.
விஷயத்தை மதியழகனுக்கு தெரியப்படுத்தியிருந்தான் கதிர். அவன் அதற்கு மேல் பேச பொன்னியிடமும், தன் மனைவி குழலியிடமும் தேனரசனிடம் உறவே வைத்துக்கொள்ள கூடாதென கட்டளையிட்டான் கதிர்.
“ஒங்கப்பாரு பேசுனது மட்டும் செரியோ? இனிக்குதோ? அந்த மனுசென நிப்பாட்ட சொன்னா அடங்குதாரா? ஒனக்கும் ஒங்கப்பாவுக்கும் இத்தனபேரு இருக்கோமே? எம்மவனுக்கு நா மட்டுந்தேன்னு நெனச்சிக்குதன்…” என்று இருநாட்களாக கூச்சலும் கரைச்சலுமாகவே சென்றது.
வைரம் அதற்கு எதுவுமே மறுத்து பேசவில்லை. செல் என்றும் சொல்லவில்லை. செல்லாதே என்றும் பேசவில்லை.
அதுவே பிள்ளைகளுக்கு உணர்த்திவிட்டது தந்தையும் தாயின் பக்கம் தான் என்று.
இரு நாட்களுக்கு பின்னர் தான் தானாகவே தேனரசனின் வீட்டுக்குள் நுழைந்தார் பொன்னி.
இந்த இரண்டு நாட்களும் அவனையுமே வெளியே பார்க்க முடியவில்லை அவர்களால்.
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பவனா அவரின் மகன்? பெறாத வயிறு கலங்கியது.
வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தவர் அவன் வீட்டை எட்டி பார்க்க தேனரசன் சைக்கிள் தார்சாவில் நிற்பதை கண்டு கதவும் உட்பக்கமாக வெறுமனே சாற்றி இருக்க வந்துவிட்டார்.
அடுக்களையில் தான் சத்தம் கேட்டது. கூடவே தாளிக்கும் வாசமும் வர அங்கே செல்ல தேனரசன் குழம்பை தாளித்துவிட்டு சோறை வடிக்க ஆரம்பித்தான்.
பொன்னி வந்ததை திரும்பி பாராமல் கூட உணர்ந்தவன் இதழ்கள் மெல்லிய புன்னகையை சிந்த,
“இத வடிச்சு தா சின்னம்மா….” என்று தலையில் கட்டியிருந்த துண்டால் கையை துடைத்துக்கொண்டு நகர்ந்து நின்றான்.
அவரை தவிர வேறு யார் அந்த வீட்டிற்குள் நுழைய முடியும்? தந்தையின் இறப்பின் பிறகு அங்கே வந்து செல்லும் ஒரே ஆள் பொன்னி மட்டுமே.
அவ்வப்போது வைரமும், கதிரும். சிறுவயதில் இருந்தே மதியழகனுக்கும் தேனரசனுக்கும் என்றைக்குமே பெரிதாய் ஒத்து போகாது.
தான் வரவும் இலகுவாய் வேலையை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு தள்ளி நின்றவனை பார்த்தார் பொன்னி.
தவறு செய்துவிட்ட பாவனை அவனின் முகத்தில் இல்லவே இல்லை. அமைதியாக, கொஞ்சமே கொஞ்சம் வருத்தமாக தெரிந்தது.
பெருமூச்சுடன் அவன் நிமிர்த்தி வைத்திருந்த சோற்று பானையை கீழிருந்த பாத்திரத்தில் சரித்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இடையே சொருகிவிட்டு நகர்ந்தார்.
“சின்னய்யா சொவமா?…” தேனரசன் கேட்க,
“மனுசென் ஆடி போயிட்டாரு. என்னனுலே ஒனக்கு அம்புட்டு வேவம்? கோவமின்னா எங்கிட்ட காட்டத்தான? கைய ஓங்குதம்பிட்டு வளந்துட்டியோ?….” என கேட்டவரிடம் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க,
“ப்ச்…” என முகத்தை திருப்பிக்கொண்டான்.
“அவரு மொவத்த காண ஆவல. யாருங்காணாதப்ப கண்ண தொடச்சிக்குதாரு. மத்த நேரமெல்லாம் வீராப்பு…”
“என்ன செய்ய சொல்லுதத்தா? எவனும் என்னமும் பேசட்டும். இந்த மனுசென் பேசலாமா?…” என்று கவலையுடன் கேட்டான் தேனரசன்.
“தப்புத்தேன் ராசா. அதுக்குன்னு…”
“வேணுமின்னுட்டு செய்யல சின்னம்மா….” என அங்கிருந்து வெளியேறி ஊஞ்சலில் வந்து அமர்ந்துகொண்டான்.
“அவிய நெனப்பு எல்லா ஒனக்கு ஒரு கண்ணாலங்காச்சியா பண்ணிப்பிட மட்டுந்தேன். மத்தவடிக்கு என்னத்த அள்ளி நெறைக்க போறாரு?…” பொன்னியும் வைரத்திற்கு பரிந்து பேசினார்.
பொன்னியும் அவனுடன் வந்து அமரவும் அவரின் முகம் பார்த்தவன் முகத்தில் வேதனையின் புன்னகை.
“அதத்தேன் வேணாங்கேன். இந்த இப்பவே இந்த மனுசென் இந்த வீட்டுக்கே வாக்கப்பட்டு வராத புள்ளைய வாக்கொள்ளாம பேசிபோட்டாரு. மத்தவக பேசமாட்டாவளா? இன்னொருத்தி ஒழுக்கத்த வரமின்ன பேச இவரு ஆருங்கேன்?…” என நிதானமாக தேனரசன் கேட்க,
“இங்கின என்னோட பேரென்னத்தா? ஓடுகாலி மவேன். வாரவளயும் அதத்தான சொல்லி அழைப்பாவ? இந்தா ஒரு புள்ள வரமின்ன சின்னய்யாவே பேசிட்டாரே? மொறையாத்தா?….” என கேட்க சுரீர் என்றது பொன்னிக்கு.
அவன் சொல்லுவதில் இருக்கும் நியாயமும் அவருக்கு சரி என்று தான் விளங்கியது.
“மொத எனக்கான மருவாதிய நா தேடிக்குதன். பொறவு என்ன நம்பி வாரவளுக்கு அது தானா அமையும். செரித்தான சின்னம்மா?….” என்றவனிடம் அவரின் தலை தன்னைப்போல் அசைந்தது.
“மொத வந்து உண்கு சாமி. பொறவு ஆடலாம்….” என அழைத்தார் பொன்னி.
“சின்னய்யா சொவந்தான? காலு சுழுக்கு என்னமும் இருக்காத்தா?….” என கேட்டுக்கொண்டே எழுந்து சென்றவன் உள்ளிருந்து ஒரு தாள் சுருட்டலை கொண்டுவந்து தரணியிடம் காண்பித்தான்.
“அவகளுக்கு ஒண்ணுமில்ல. கரண்ட காலுல சிராச்சிவுட்டுருக்கு. வேற ஒண்ணுமில்ல. நீயி ஒக்காரு…” என்றவர் தான் கொண்டுவந்ததை எடுத்து வைத்தார்.
பெண் பார்க்க சென்று வந்த பலகாரங்களும், இரவு உணவும் அதில் இருக்க மறுக்காமல் வந்தான் தேனரசன்.
அவன் கையில் தினசரி நாளிதழுக்கு மேல் வாழை இலையில் இருட்டுக்கடை அல்வா நெய் சொட்ட மினுங்கியது.
“நானு நானு மொத….” என பார்த்ததும் கையை ஆட்டிக்கொண்டு தாரணி குதித்து இறங்க பார்க்க லாவகமாய் அவனை பிடித்துக்கொண்டான்.
“ஏலே மவனே, நீ பாட்டுக்க கவுந்தடிச்சு ஒங்கப்பேன் என்னிய கட்டய கொண்டு சாத்தத்தான. ஒனக்குத்தேன் வாங்கியாந்தேன். ஒக்காரு…” என கீழே அவனை அமர வைத்தவன் இன்னும் மூன்று சுருட்டலை எடுத்து நீட்டினான் பொன்னியிடம்.
“எப்ப தேதி வெச்சிருக்க சின்னம்மா? எம்புட்டு நவநட்டு போடுதாவலாம் ஒங்கண்ணே மவளுக்கு?…” என கிண்டலாக ஆரம்பித்தான்.
“நவைய பத்தி எல்லா பேசலைய்யா. ரெண்டுமாசம் போவ நாலு தேதி சொல்லிருக்காவ. மொத அவளுக்கு அந்த தேதி தோதுப்படுதான்னு பாத்துக்கிட்டு நாள குறிக்கத்தன்…” என்றார்.
“ஒம்மவேன் என்ன சொல்லுதியான்? வெரப்பா நிக்கிதானே? என்ன சேதி?…”
பொன்னி கொண்டுவந்த கேசரியை முதலில் உண்டவன் வட்டலில் வெண்பொங்கலை வைத்து சாம்பாரை விட்டுக்கொண்டே கேட்டான்.
“ம்க்கும் அதட்டி முறைச்சு கட்டி வெச்சா போதுமாத்தா? அவென் ஏஞ்சொல்லுதியான்னு கேக்கத்தான?…”
“நல்லா கேட்டாரே இந்த மனுசென்? மொத முடிச்சிவிட்டுட்டு அக்கடான்னு ஒக்காரனுமாம் கெழவனுக்கு…” என்று சொல்லவும்,
“ஆரு கண்டா ஒன்னிய கூட்டிட்டு ஒலாத்த நெனைக்காரோ என்னவோ? நீ போய்டுவாத்தா….” என கேலி பேச,
“சும்மா கெடடா. இவேன் வேற….” என தேனரசனின் மடியில் தட்டியவர் அவன் உண்டு முடிக்கும் வரை அமர்ந்திருந்துவிட்டு கிளம்பி சென்றார்.
அதன் பின்னர் சைக்கிளை எடுத்து உள்ளே நிறுத்தியவன் போனில் பாடலை ஒலிக்கவிட்டுவிட்டு அன்று வாங்கிவந்த கேள்வித்தாள்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தான் தேனரசன்.
மனதிற்குள் இனிமேல் வெண்மணியிடம் வார்த்தைகளை பார்த்து பேசவேண்டும், தம்பிக்கு மனைவியாக போகிறவள் என ஞாபகத்தில் வைத்துக்கொண்டான் தேனரசன்.