“ஏட்டி மணி, ஒங்கண்ணே பூ வாங்கியாந்துட்டாக…” என வாழை இலையில் கட்டப்பட்டிருந்த நாரின் முடிச்சுகளை அவிழ்த்து உள்ளிருந்த முல்லை சரத்தை எடுத்தாள் கயல்.
வைத்தியலிங்கம் கொண்டுவந்து குடுத்து சென்றதை பார்த்த சீனியம்மாள் அவன் கிளம்பும் வரை மௌனமாக இருந்துவிட்டு மகனின் வண்டி சத்தம் மறையவும்,
“கோயிலுக்கு போறீயன்னு அவேங்கிட்ட சொல்லி வாங்கியார சொன்னியோ?….” என்றார் மருமகளிடம்.
கேட்டவிதத்திலேயே அவரிடம் சொல்லவில்லை என கோபத்தில் மாமியார் இருப்பது கயல்விழிக்கு புரிய,
“இன்னிக்கு மணிக்கு பொறந்தநாளு. அதேன்…”
“இத ராத்திரியே எங்கிட்ட சொல்லைத்தான? கூவ கூவ….” என்று பேசியவர்,
“பாத்து சூதானமா போயிட்டு வரனும். அங்கின, இங்கினன்னு பராக்கு பாத்துட்டு நிக்காம வந்து சேருங்க. தேதி வச்ச பொறவு எப்புடி இருக்கனுமின்னு தெரியுந்தான?…”
“பாத்துக்கிடுதன் த்தே…” கயல்விழி சொல்ல,
“சேரி, அந்த பூக்காரி மாரிக்கிட்ட நெதைக்கும் பூவ கொண்டுவர சொல்லி ஒன்னும் ஆவல. ரெண்டுநாளா தேடி போயி வாங்குதமாரி இருக்கு. மாலக்கழுத்து புள்ள இருக்க வீட்டுல மணக்க வேணா? அங்கின கோவில் வாசல்ல இருந்தா அவள நாலு கிழி கிழிச்சிட்டு வா….”
“சேரித்தே…” என்று சொல்லிய விதத்தில் கடுகடுத்தவர்,
“எனக்குன்னு வந்து வாச்சிருக்கபாரு புள்ள பூச்சியா. நா சொன்னாமட்டும் பேசி கிழிச்சு தட்டிருவ நீயி…” என மருமகளை திட்டியவர்,
“போ, ஒன்னு சொல்ல ஆவல, ஒடனே மூஞ்சிய இம்மினிக்கா வெச்சிக்கிட்டு கண்ண கசக்குதது. ஒம்பசப்பும் இங்க வேவுது பாரு…” என தோளில் இடித்துவிட்டு செல்ல பெருமூச்சுடன் வெண்மணி அறைக்கு சென்றாள் கயல்விழி.
“ம்க்கும், அதுக்கொன்னுதேன் கொறச்ச. ஒங்கம்மாவுக்கு நா சொல்லன்னுமாட்டிருக்கு ஒம்பொறந்தநாள. இதுக்கு இம்பிட்டு ஏச்சு…” என பூவை நான்காக வெட்டி அவர்கள் இருவரும் வைத்துவிட்டு எஞ்சியிருந்த பூவை அதே வாழை இலையில் சுற்றினாள்.
“நாம அந்த முடுக்குல திரும்புனா ஒங்கக்கா இந்த பக்கம் வருவா பாரு. வந்து எனக்கு எங்கண்ணே என்னத்த வாங்கியாந்தான்னு பாட ஆரம்பிக்க ஒங்கம்மா அதுக்கும் ஆடும். அவ கேக்குதமாரி நீயேன் வெக்கன்னு…” என்று சிரித்தபடி அதனை எடுத்துக்கொண்டு அடுக்களைக்கு சென்றாள்.
சீனியம்மாள் தேங்காயை உடைத்து தரையில் அமர்ந்து துருவிக்கொண்டிருக்க அவரிடம்,
“எத்தே மிச்ச பூவ சுத்திட்டன். பாத்துக்கிடுங்க…” என்று சொல்லிவிட்டு அவரை பார்க்க தலையசைப்பு மட்டும் தான் அவரிடம்.
அவர் கோபத்தை பார்த்தவள் அதற்குமேல் நின்றால் எதுவும் சொல்லிவிடுவாரோ என வெளியே வர,
“வாரன்த்தா…” என சொல்லிவிட்டு வெளியே சென்றாள் வெண்மணி.
“நின்னு என்னன்னு கேக்காளா பாரு. அவம்புடுச்ச கழுத. வரட்டும் பேசிக்கிடுதேன்….” என சொல்லிக்கொண்டே அடுப்பில் பாயாசத்திற்கு சிறுபருப்பை வேக வைத்தார்.
வேகமாக வாசலில் இறங்கிய வெண்மணி கயல்விழியின் கையை பிடித்துக்கொண்டு நடக்க அவள் முகத்தில் சலிப்பு தான் மிஞ்சியது.
“பரிச்சைக்கே பொங்கன்னா பாசானா கெடாதென் பாத்துக்கிடு மணி….” என கயலும் சொல்ல,
“வெச்சிட்டா போச்சு. எங்கத்தே அவிய அரசருக்கு அதையும் செய்யும்….” என்று குழலியும் சொல்ல பொங்கல் பொங்கி பாலை ஊற்றியது.
“கெழக்க பாத்து பொங்கிருக்கு. மவராசி. ஒங்கையால சாமிய வேண்டிக்கிட்டு அரிசிய போட்டுத்தா…” என்றார் பொன்னி கழுவி வைத்திருந்த அரிசி பருப்பை எடுத்து வெண்மணியிடம் நீட்டி.
“ம்க்கும், இந்த பொங்க வெச்சா மட்டும் ஒம்மவரு அதேன் அந்த அரசரு எங்கிட்டயா நோட்ட வாங்கி நீட்ட போறாவ? சும்மாவே வாயி நீளந்தேன், இதுல அவிய பவுசுக்கு இனி நிக்காமல வசபாடும்….” என பெருமூச்சுடன் சொல்ல,
“செரித்தா, அயித்தைக்காவ போடத்தான?….” என்றதும் வாங்கியவள் முதல் பிடியை மனதார வேண்டிக்கொண்டு தேனரசனுக்கு அவன் நினைத்த வேலை அமையவேண்டும் என்று அரிசியை உலையில் போட்டாள் வெண்மணி.
“இந்தாருத்தே மொத மாச சம்பளத்த எங்கிட்ட எண்ணி தர சொல்லிரு. இல்லாங்காட்டி மறுக்கா பொங்கவச்சு கெடைக்கித வேலைய புடுங்கிருவேன்…” என்று மிரட்டவும் சிரிப்புடன் எரியும் தீயை கொஞ்சம் வெளியே இழுத்து தணித்தார் பொன்னி.
“சீல கெட்டத்தானத்தா? மூணு மாசத்துல விசேசமிருக்கு. தாவணியோட வந்திருக்க?…” என்று குழலி கேட்கவும்,
“எங்க புது உடுப்பு எடுக்க? எம்மாமியாளுக்கு எங்க ரெண்டுபேத்தையும் வாக்குள்ள போட்டு அரைக்கவே செரியா போவுது. நேத்து ராத்திரிதேன் எனக்கே ஞாவவம். அதுக்குள்ள இவ மொதவே வெச்சிருந்த புது தாவணிய எடுத்து கெட்டிட்டா. ராத்திரி இவக அண்ணே வாரப்ப சீல எடுத்தாரேன்னு சொல்லிருக்காக…”
கயல் விளக்கமாக விஷயத்தை சொல்லி முடித்து காலை கிளம்பும் பொழுது நடந்தவற்றையும் பேசி சிரிக்க அதற்குள் பொங்கலும் வைத்தாகிற்று.
சாமிக்கு படைத்துவிட்டு பொங்கலை வெண்மணிக்கும் வீட்டில் குடுக்க சொல்லி தூக்குவாளியில் தந்துவிட்ட பொன்னி மருமகளுக்கு பூவை வாங்கி வைத்து அனுப்பினார்.
“இப்ப சொல்லுத, மொதவே தெரிஞ்சுருந்தா எதாச்சும் வாங்கி கொண்டாந்திருப்பேன்…” என சங்கடத்துடன் கூறினார்.
“என்னத்தே ஒமக்கு இப்ப வெசனங்கேன்? அடுத்த வருஷம் ஒம்மருமவ நானு, பெருசா ஒ மனசு போல கெடா வெட்டியே செய்யத்தான….” என்று சொல்லிய வெண்மணி முகம் நிறைந்த புன்னகையுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
கிளம்பும்முன் கோவில் வாசலில் இருந்த பூக்காரியிடம் சொல்லிவிட்டு செல்லவும் மறக்கவில்லை.