“நா ஒன்னும் ஒங்களுக்காவ எல்லாம் சொல்லல. எனக்கு நெதைக்கும் பூ வச்சாதேன் எம்முடிக்கு மவுசு. ரெண்டுநாளா இம்பிட்டிம்பிட்டா வெச்சு மனசே நெறயல…” என்றவள் கூந்தலில் பொன்னி வாங்கி வைத்துவிட்ட பூவை எடுத்து முன்னே விட்டுக்கொண்டாள்.
“தப்புத்தேன்த்தா. காலம்பற கெளம்பையில அந்த பூவையும் ஒனக்கே குடுக்காம போனேம்பாரு?…”
“எம்மோவ், ஒனக்கு ஒம்மருமவள புடிச்சு ஆட்ட மட்டுந்தேன் தெரியும். ஒம்மவக்கிட்ட அவ புருசென் வீட்டுல என்ன செய்யனுமின்னு மொத புத்திய சொல்லி அனுப்புத்தா…” என்றாள் சீனியம்மாவிடம் சென்று.
“கேக்குதா பாரு கேணத்தனமா? இதுக்குத்தேன் ஒன்னிய கூவங்கேன். மொத வட்டல்ல போட்டு அவ கையில குடுக்கத்தான? அதோட ஒத்த பழத்தையும் வெய்யி. தேங்காய சில்லெடுத்து சேத்து வெய்யி. செம்பவத்துக்கு அதேன் புடிக்கும்…” என சூழ்நிலையை மடை மாற்றினார் சீனியம்மாள்.
கயல்விழியும் மாமியார் சொல்லியதை கேட்டு அதனை செய்ய செண்பகம் பொங்கல் யார் செய்தது என கேட்டு உண்ண ஆரம்பித்தாள்.
“பாத்தியாத்தா என்னையல்லம் பொன்னியத்தே கூப்புடல….” என்று அடுத்ததாக ஆரம்பிக்க,
“இந்த சிப்பத்தட்ட எங்கின காணும்? சோறு வடிக்கனும். பருக்க பருவட்டா இல்லாம மாவா அவிஞ்சிட்டா ஒருத்தரு தொண்டையிலையும் எறங்கி தொலையாது…” என காதில் வாங்காததை போல சோறு வடிக்கும் மூடியை தேடுவதை போல அங்குமிங்குமாய் நகர்ந்தார் சீனியம்மாள்.
பொங்கல் வைத்தது பொன்னி என்று மட்டுமே கயல் அவரிடம் சொல்லியிருந்தாள்.
அது தேனரசனுக்கான வேண்டுதல் என்று சீனியம்மாவிடம் தெரியப்படுத்தவில்லை.
அவனுக்கும், மாமியாருக்குமான வாய்க்கால் தகராறு தான் ஊரறிந்த விஷயமாகிற்றே.
சொன்னால் இந்த நேரம் பொங்கல் கழனி தண்ணியில் சென்று சேர்ந்திருக்கும் என தெரிந்திருந்தது.
வரும்பொழுதே வெண்மணியும் இதனை சொல்லியிருக்க மூச்சுவிடவில்லை இருவரும்.
மதிய உணவு விருந்து போல தயாராக வீட்டில் வேலை செய்பவனை அழைத்து பாயசத்தை அந்த பொங்கல் வாங்கிவந்த தூக்குவாளியில் ஊற்றி பொன்னியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சீனியம்மாள்.
மாலை பொன்னியும், குழலியும் புடவை, பூ பழம், கூடவே இருட்டுக்கடை அல்வாவும், சீனி பலகாரமும் என வாங்கி வந்துவிட்டனர்.
“மதி போன் போட்டியான். பேச்சுவாக்குல பொறந்தநாளுன்னு அவேன்கிட்ட சொன்னேன். மொத போயி மணிக்கு சீலைய எடுத்து குடுத்துட்டு வாங்கன்னு சொல்லிட்டியான். புடிக்குதான்னு பாருத்தா. இல்லாங்காட்டி வேற மாத்திக்கத்தான?…” என பொன்னி ஆசையாய் மருமகளுக்கு தர,
“அல்வாவுமா? சீனிமிட்டா எப்பத்தே வாங்கினீய? நெல்லடவுனுக்கு (நெல்லை டவுன்) போனீயளோ?…” என கேட்டு முதலில் அந்த இனிப்புகளை தான் உண்டாள் வெண்மணி.
சீனி பலகாரம் தேனரசனிடம் சொல்லி வரும் பொழுது டவுனில் இருந்து வாங்கிவர சொல்லியிருந்தார் பொன்னி.
அவனாக தரணிக்கு வாங்கி வந்தது அந்த அல்வா. அதையும் இரண்டு சுருளை எடுத்து வைத்துக்கொண்டார் பொன்னி வெண்மணிக்கு பிடிக்குமே என்று.
சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினார்கள் இரு பெண்களும். பேச்சில் மதி வெண்மணியை அத்தனை விசாரித்ததாக சொல்ல சீனியம்மாள் முகத்தில் வெளிச்சம்.
சந்தோஷத்துடன் பேசிக்கொண்டிருந்து கிளம்பியவர்களை அனுப்பிவிட்டு வர வெண்மணி அந்த புடவையை பிரித்து பார்த்தாள்.
“சீல நல்லா எடுப்பா இருக்குத்தா ஒனக்கு. நாளைக்கே போயி ரவிக்க தெக்க குடுத்துட்டு வாரன். நவ செய்ய குடுக்க போறன்னிக்கு இத கெட்டிக்க…” என்று மகள் மேல் வைத்து பார்த்துவிட்டு உள்ளே சென்றார் அவர்.