“ராத்திரி அவகளுக்கு என்ன சோலிங்கேன்? இம்பிட்டு நாளாச்சு? ஒரு போனு போட்டதில்ல. இன்னிக்கு கூட இப்ப போனா போவட்டுமின்னு அனுப்புத மாரித்தேன் அம்புடுது மயினி…”
“நீயா ஒன்னத்த நெனைக்காம இருங்கன்ல. ஒருவேள பேச வெக்கப்பட்டுட்டு இருக்காவளோ என்னமோ?…” என்று பலதரப்பட்ட சமாதானங்களை கூறினாள் கயல்விழி.
வெண்மணியின் சந்தேகமும், சஞ்சலமும் அவளுக்கும் சரி என்று தான் தோன்றியது.
திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிற்கு அனுப்புவதை போலவா உள்ளது அந்த செய்தி?
அதுவும் இத்தனை நாளில் ஒருமுறை கூட அழைத்து பேசியதில்லை. வீட்டில் மரியாதை, கூச்சம் என்னென்னவோ ஆயிரம் காரணங்களை நாமாகவே எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் கூடவா இருக்காது? கயல்விழி மனதிலும் சந்தேகம் விழுந்துவிட்டது.
இதைப்பற்றி வைத்தியலிங்கத்திடம் பேசவேண்டும் என எண்ணிக்கொண்டாள் கயல்விழி.
அதற்குள் சீனியம்மாள் அழைத்துவிட இருவருமாக கூடத்திற்கு செல்ல கத்திக்கொண்டிருந்தார் கையில் அந்த புது புடவையை வைத்து.
“புது சீலய வேவாரிக்கா போட்டுட்டு போவியாடி நீயி? கூறு கெட்டவளே. சீலய புள்ள கலச்சு வெளாடுதியான்…” என்று அதை மகளின் கையில் திணித்தார்.
“இவனோட பெரிய ரோதனையா போச்சு…” என்ற கயல் தன் மகனை அடிக்க கை ஓங்க,
“மாடாட்டம் வளந்திருக்கவளுக்கே இங்கின கூறு பாயுது பாரு. நீயி பிள்ளைய சவட்டுத? போங்கடி ரெண்டுபேரும்…” என மகளையும், மருமகளையும் விரட்டிவிட்டு பேரனை கொஞ்சிக்கொண்டு வெளியே சென்றார்.
“என்னத்தையோ அப்பிருக்கியானே?….” என்று பார்த்த கயல் அதில் எண்ணெய் பிசுக்கை கண்டு,
“செரித்தா. அம்புட்டுத்தான…” என்றவன் மென்மையான புன்னகையில் கயல்விழியும் கவலைகளை தள்ளி வைத்தாள்.
மறுநாள் வைத்தியலிங்கம் தான் சொல்லியதை போலவே வைரமுத்துவிடம் பேச சென்றிருந்தான்.
“என்னய்யா கட வரைக்கி வந்திருக்கீரு?…” என மருமகனை அன்புடன் வைரம் விசாரிக்க,
“சும்மாத்தேன் மாமோவ், என்ன செய்யுதீய?…” என்று பொதுவாக பேசிக்கொண்டிருந்தவன் மதியழகன் அடுத்து எப்போது வருவான் என்றும் கேட்க வைரத்திற்கும் வித்தியாசமாக படவில்லை.
“அடுத்து விசேசத்துக்குத்தேன் வருவியான். வேல கெடக்காம். போட்டுபோட்டு வரமுடியாது பாத்துக்கிடு. படிச்ச புள்ள, அவென் சொல்லுதது எம்மண்டையில எங்க ஏறுது? புள்ளைக்கு ஒரு கலியாணங்காச்சியா செஞ்சு வெச்சாங்காட்டிதேன் எனக்கு நிம்மதி…” என்றார்.
வைத்தியலிங்கம் கேட்ட கேள்விகள் எதற்கும் வைரத்திடம் தடுமாற்றமில்லாத பதில்கள் வர அவனுக்கும் திருப்தி.
“அஞ்சு கிலோ அரிசி தாரும்…” என்றவன் குரலில் வைத்தி திரும்ப தேனரசன் தான் நின்றிருந்தான்.
கையில் ஒரு பையும் இன்னொரு கையில் பணமும் வைத்திருந்தவனை பார்த்தவன் அங்கிருந்த பெஞ்சில் நன்றாக அமர்ந்துகொண்டான்.
முன்பொருகாலம் ஏதேனும் அவசியமென்றால் பேசியிருந்தனரே தவிர்த்து பெரிதாய் நல்ல உறவுமுறை இருந்ததில்லை.
வைத்தியலிங்கம் அவனிடம் ஒதுங்கியே இருந்துவிடுவான். இதில் தேனரசனின் நக்கல் பேச்சுக்கள் சுத்தமாக அவனுக்கு பிடிக்கவும் செய்வதில்லை என்பதால் ஒரு அசூயையுடன் தான் பார்ப்பானே தவிர்த்து எந்த வம்பும் வைத்துக்கொள்ளமாட்டான்.
சீனியம்மாள் தான் கிடந்து குதிப்பார். அவனை கண்டாலே என்னவோ காணக்கூடாததை பார்ப்பதை போல கத்தி தீர்ப்பார்.
“என்னத்துக்கும்மோவ் ஒனக்கு இம்பிட்டு பொங்கிட்டு வருது? நானுந்தன் பாத்துட்டன், நீ வார்த்தைய விட்டாத்தேன் அவேனும் பேசுதியான். அவேங்கிட்ட என்னத்துக்கு வெச்சிக்கித? நமக்கு இது அவசியந்தான?…” என்பான்.
தாயை தான் பேச்சை குறை என கண்டிப்பானே தவிர்த்து தேனரசனிடம் எதுவும் வைத்துக்கொள்ளமாட்டன.
பேசினால், ஏசினால் தானே தேவையின்றி பேச்சு வளரும் என்று நீயெல்லாம் எனக்கொரு ஆளா என கண்டும் காணாமல் சென்றுவிடுவான் வைத்தி.
இப்போதும் அவனை பார்த்ததும் ஒதுங்கி சென்று அமர இதை எல்லாம் தேனரசன் கண்டுகொள்ளவே இல்லை.
அரிசியை அளந்து போட்ட வைரம் தேனரசன் தந்த பணத்தை வாங்கி மீதத்தை எண்ணி நீட்டினார் அவனிடம்.
பணத்தை வாங்கி அங்கேயே எண்ணியவன் கணக்கு பார்க்க பன்னிரெண்டு ரூபாய் குறைந்தது.
“மீதி காச ஆரு தருவா?…” என கறாராக கேட்டான் தேனரசன்.
“சில்லற இல்ல…” வைரம் உள்ளம் பாகாய் உருகினாலும் வெளியே மிடுக்கு குறையாது பதில் தர,
“அது ஒம்ம பாடு சோலி. காச கொண்டாரும், இல்லாங்காட்டி இந்த அரிசிய வெச்சிக்கிட்டு நா குடுத்த காச தாரும். பொறவு வாங்கிக்குதேன்…” என்று அரிசி பையை அங்கே மேடையில் வைக்க வைத்திக்கு இதென்னடா என்றானது.
வைரம் எங்கே மகன் அரிசியை வாங்காமல் சென்றுவிடுவானோ என பாவமாக பார்த்தார்.
“நெசத்துக்கே காசு இல்லய்யா…” என்றவர்,
“அதுக்கு வேணா சேத்து அரிசிய போடுதேன்…” என்றார்.
அதற்கு போடுகிறேன் என்றால் எவ்வளவு அரிசி போடுவார் என தெரியுமே? அந்த சலுகை தானே வேண்டாம் என்கிறான்.
“இந்த ஆகாத சோலிதேன் வேணாங்குதேன்…” என்ற தேனரசன் இந்த நேரம் வந்திருக்கவே கூடாதோ என்று நினைத்தார்.
இபோதெல்லாம் வைரம் கடைக்கு வருவதே அரிதாக இருந்தது. நன்றாக இருக்கிறார் என்று தெரிந்தாலும் பேச அத்தனை மனது துடித்தாலும் அவர் கிழித்த காயத்தின் ரணம் இன்னும் அவனிடம் மறையவில்லை.
இப்போது வேலைக்கு செல்லும் வழியில் கடையில் வைத்து அவரை பார்த்துவிட காலையில் கதிரும் வெளியே சென்றிருக்க உடனே வந்துவிட்டான்.
எப்போதும் கதிர் இருக்கும் பொழுது வருபவன் இப்போது அரிசி வாங்குவதை போல வந்து சில்லறைக்கு சண்டைக்கு நிற்பதை போலிருக்க,
“பிசாத்து காசு, பன்னெண்டு ஓவாவுக்கு…” என வாயிருக்கமாட்டாமல் வைத்தி என்னவோ ஒரு வேகத்தில் இகழ்ச்சியாக சொல்லியும்விட,
தன்னிடம் வைத்தி எந்த வம்புதும்பும் வார்த்தையாடலும் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவனின் பார்வைகள் எப்போதுமே தேனரசனை உஷ்ணப்படுத்தும்.
‘இவனெல்லாம் எனக்கு ஒரு ஆளா?’ என்னும் அந்த பார்வையே தேனரசனை சீண்டி பார்க்க இப்போது வகையாக வந்து மாட்டியவனை சும்மா விடுவதா என பிடித்துக்கொண்டான்.
என்னை கீழாக பார்க்க நீ யார் என்னும் கோபம் ஒருபுறம், இவன் அப்படி பார்க்கும் அளவிற்கு நான் என்ன குறைந்துவிட்டேன் என்னும் எண்ணம் ஒருபுறம் தேனரசன் தேனீயாய் மாறி கொட்ட நின்றான்.
வைத்தி பதிலுக்கு இடக்காக பேசட்டும் இன்று இருக்கிறது என பார்க்க அவன் திகைத்து அமர்ந்திருந்ததோடு சரி.
இப்போது அந்த இகழ்ச்சி பார்வை எதுவும் இல்லாமல் இப்படி என்னை கேட்டுவிட்டானே என திகைத்து பார்த்திருந்தான் வைத்தி.
“ஐயா, அரசா இருய்யா….” என கடையை விட்டு வெளியே வந்துவிட்டார் வைரம்.
அதற்குள் வைத்தியே தன்னிடமிருந்த சில்லறை காசுகளை எடுத்து பன்னிரெண்டு ரூபாயை வைரத்திடம் தந்தவன்,
“மொத காச குடுத்து அனுப்பும்…” என்று சொல்ல வைரம் அதனை சங்கட்டத்துடன் பார்த்தார்.
தேனரசனின் பார்வை ‘அதை வாங்கி என்னிடம் தந்துவிடுவீரோ?’ என்று அவரிடம் கேட்டு முறைத்து நிற்க,
“ம்க்கும், பன்னெண்டு ரூவாய்க்கு ஒம்மகிட்ட மல்லுக்கு நிக்கிதியான். யே நீரு அவென் சின்னய்யா தான? ஒம்மக்கிட்ட என்ன வரவு செலவு? ஓசில அரிசி குடுத்தா ஆவாதோ?…” என இன்னும் தேனரசன் குறித்து ஒரு கிண்டல் தொனியே அவனிடம்.