“உங்க பாட்டிக்கு என்ன பிடிக்கும் பாப்பா? வயசானவங்க சாப்பிடுற மாதிரி சொல்லுடா” என்று கேட்டார்.
“அப்பத்தா நல்லி எலும்பையே நல்லா கடிக்கும், பல்லு அவ்வளவு ஸ்ட்ராங்” என்றவள்
“கேக் வாங்கிக்கலாம் மாமா, அப்புறம் ஸ்வீட் பன் பிடிக்கும்” என்றதும் தையல் நாயகிக்கு அதனை வாங்கியவர் அருகில் இருந்த இன்னொரு பெரிய ஸ்வீட் ஸ்டாலில் கல்கிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு வாங்கியவர் சிரஞ்சீவிக்கும் சேர்த்து வாங்கினார்.
“உன்னை மாதிரி சிருவுக்கும் காரம்தான் பிடிக்கும். எனக்கும் காரம்னா இஷ்டம்” என்றவர் எல்லாம் வாங்கிக் கொண்டு அவளுடன் வீடு வந்து சேர்ந்தார்.
இவர்கள் வந்த போது ஸோஃபாவில் உட்கார்ந்திருந்த தையல் நாயகி மருமகன் வரவும் பொசுக்கென்று கீழே இறங்கிவிட்டார்.
“ம்மா, ஏன் மா?” என்று யமுனா அவரருகே உட்கார்ந்திருந்தவர் கேட்க
“மருமகப்பிள்ள முன்னாடி மேல உட்காரலாமா?” என்று கேட்டவர் கீழே காலை மடக்கி உட்கார்ந்து கொள்ள
“அப்பத்தா, அதெல்லாம் மாமா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ காலையாச்சும் நீட்டி உட்காரு” என்றாள் கல்கி.
சூர்யா மனைவியிடம் என்ன என்பதாய்ப் பார்க்க “மாப்பிள்ளை முன்னாடி மேல உட்கார கூடாதாம் சூர்யா, ஊர்ல இப்படித்தான் செய்வாங்க” என்றதும்
“இன்னமுமா இப்படி?” என்ற சூர்யா தையல் நாயகியிடம்
“நீங்க இஷ்டம் போல உட்காருங்க அத்த, இது உங்க பொண்ணு வீடு இல்லை. உங்க வீடுன்னு நினைச்சிக்கோங்க” என்றார் சூர்ய நாராயணன்.
“இருக்கட்டும்ங்க மாப்பிள்ளை” என்ற தையல் நாயகி காலை மடக்கியே உட்கார்ந்திருந்தார். அவர் வீடானால் நீட்டிக்கொண்டுதான் டீவி பார்ப்பார், இங்கு கூட சூர்யா வரும் முன் ஒன்று சோஃபாவில் உட்கார்ந்திருப்பார் இல்லையா காலை நீட்டி சோஃபாவில் சாய்ந்தவண்ணம் உட்காருவார்.
கல்கிக்குத் தெரியாதா தையல் நாயகிப் பற்றி? மெதுவே தன் அத்தையிடம்
“மாமா இங்க உட்கார்ந்திருக்க வரைக்கும் இப்படித்தான் பில்டப் கொடுப்பாங்க உங்கம்மா, நம்ம அந்த பக்கம் போய்ட்டா கிழவி காலைத் தானா நீட்டிடும்த்த” என்றதும் சூர்யாவை இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றுவிட்டார் யமுனா.
கல்கியும் பின்னால் செல்ல யமுனா வாங்கி வந்ததை எல்லாம் தட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.
“நான் இழுக்கலன்னாலும் உங்க மாமாவே என் பின்னாடி வந்திருப்பார்” என்று யமுனா சிரிக்க, சூர்யாவும் சிரித்துவிட்டார்.
“ஓவர் லவ்ஸுப்பா” என்று கையை ஆட்டி ராகம் பாடிய கல்கி
“அத்த ஒரு டவுட்” என்றாள்.
“கேளும்மா”
“அது உங்களுக்குத்தான் தெலுங்கு தெரியாதே, மாமா கூட எப்படி லவ் வந்துச்சு. இங்கிலிஷ்ல பேசினீங்களா?” என்று நீண்ட நெடு நாளையை சந்தேகத்தைக் கேட்டு வைத்தாள்.
யமுனா பதில் சொல்லும் முன் சூர்யாவே பேசினார்.
“கல்கி பாப்பா! லவ் பண்ண மொழியெல்லாம் தேவையில்லை. நான் காலேஜ் படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன், வாங்க போங்க சாப்பிட்டீங்களா தவிர ஒன்னும் தெரியாது. இதுல உங்கத்த இங்கிலிஷ் சுத்த மோசம்” என்றதும் யமுனா கணவரை முறைத்தார்.
“ஊர்ல எல்லாம் அவ்வளவு நல்லா சொல்லிக் கொடுக்க மாட்டாங்க கல்கி. இவர் எங்கிட்ட இங்கிலிஷ்ல பேசினாலும் எனக்குப் புரிஞ்சாலும் பதில் சொல்ல வராது. ரொம்ப கஷ்டமா இருக்கும்”
“அவுனு அவுனு” என்றதும் யமுனா கணவரைப் பார்க்க
“உங்கிட்ட தான் பேசக் கூடாது பாப்பா கிட்ட பேசலாம், என்ன பாப்பா?” என்று கல்கியிடம் சூர்யா கேட்க
“ஆமா ஆமா, அப்போதான் உங்க பையன் என்னை தெலுங்குல திட்டினா எனக்குத் தெரியும் அத்த” என்றாள் கல்கி.
“என்ன அவன் உன்னைத் திட்டுறானா?” யமுனா சட்டென கேட்க
“அச்சோ மாமா? இந்த அத்தை என்ன எல்லாத்துக்கும் கொஸ்டின் கேட்கிறாங்க, உங்க சிங்காரம் அப்படியே உங்களை மாதிரி” என்று பேச்சுவாக்கில் சொல்லிவிட்டாள். சிங்காரம் என்றதும் யமுனா சிரித்து
“இப்பவும் அவனை அப்படி சொல்றியா நீ?” என்று கேட்டார் யமுனா.
“இல்லை இல்லை!” என்று அவசரமாய் மறுத்தவள்
“உங்க கிட்ட சொல்றேன், அவர்கிட்ட எல்லாம் எஸ் ஆர் நோ தான். எக்ஸ்ட்ரா எல்லாம் கல்கி பேசுறது இல்லை” என்றாள்.
“என்ன அது சிங்காரம்?” என்று சூர்யா கேட்க யமுனா விளக்கம் சொல்ல
“கொண்ட்டே அம்மாயி” என்று சொல்லி சூர்யா சிரித்தவர்
“நா கொடுக்கு உனக்கு சிங்காரமா? அவன் என்னோட செல்ல பங்காரம்” என்றார் முகம் முழுவதும் நிறைந்த புன்னகையுடன். பெருமையும் கூட மகனைப் பற்றி பேசும்போது.
“பங்காரம் இல்லை அவர் பயங்கர காரம் மாமா” என்றாள் கல்கி விடாமல்.
“இப்ப என்ன எதையோ கொண்டார சொன்னீங்களே என்ன மாமா?” என்றும் கேட்க
“ஹாஹா, கொண்ட்டே அம்மாயின்னா வாலுப்பொண்ணு” என்றார் இன்னும் விரிந்த புன்னகையுடன்.
“மாமா, போதும் உங்க கதையை சொல்லுங்க எத்தனை வருஷ டவுட் தெரியுமா?” என்றதும் யமுனா
“அப்போ என்னை நினைச்சிருக்கியா கல்கி?” என்றார் எதிர்ப்பார்ப்புடன்.
“நினைக்காமலா? உங்களைத் துவைச்சுத் தொங்கப்போடாத நாளே கிடையாது அத்த. அதனால நானும் அஞ்சுவும் அடிக்கடி நினைப்போம். ஆனா எங்க டவுட் என்னன்னா எப்படி அத்தை ஆந்திராக்காரங்களை லவ் பண்ணியிருப்பாங்கன்னுதான்” என்று விரலைத் தாடையில் வைத்து யோசித்தாள்.
கல்கி சொன்ன முன்பாதியில் கலங்கினாலும் பின்பாதியில் அதனை ஒதுக்கியவர்
“காதலிக்க மொழியெல்லாம் தேவையே இல்லை. உங்க மாமா என்.எஸ்.எஸ்ல இருந்தாங்க, நிறைய பேருக்கு ஹெல்ப் செய்வார். பொண்ணுங்களை ரொம்ப மதிச்சு நடப்பார், கூடவே அவரோட தமிழ் சிரிப்பா வரும். இவர் எங்கிட்ட இங்கிலிஷ்ல பேச ட்ரை பண்ண எனக்கு வரல, என்னோட கூட இருந்தவங்களாம் இங்கிலிஷ் வரலன்னு என்னைக் கிண்டல் செய்வாங்க”
“உங்க மாமா என்ன செஞ்சார் தெரியுமா? சில புக்ஸ் கொண்டு வந்து கொடுத்து இதையெல்லாம் படிங்க, இங்கிலிஷ் ஒரு மொழிதான் அறிவில்லைன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்”
“அப்புறம் என்னாச்சு?” என்றாள் கல்கி ஆர்வமாய்.
“அப்புறம் என்ன இவர் என் பின்னாடி ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மான்னு சுத்தி வந்தார், அதுவும் எங்கிட்ட காதலை சொல்றேன்னு ஒரு அஞ்சு நிமிஷம் தெலுங்குல பேசினார்”
“உங்களுக்குப் புரிஞ்சதா அத்த?”
“புரியல, ஆனா அவரோட காதல் என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. காதல்ன்றது உணர்தல் கல்கி. அவர் பேசின மொழி புரியல, அவரோட கண்ல எனக்கான காதல் நிறைய இருந்துச்சு” என்றவரின் கண்கள் காதலாய் கணவனை நோக்க அவரின் பார்வையும் மனைவியின் மீதுதான்.
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும் மரியாதையும் கல்கிக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அப்பாவின் நம்பிக்கையை அத்தை உடைத்த வருத்தமும் அதனால் தாங்கள் பட்ட கஷ்டமும் வாங்கிய பேச்சுகளும் மறக்கவில்லை. அதை அந்த நேரத்தில் சொல்லி அவர்களின் சந்தோஷ நிமிடங்களை சங்கடமாய் மாற்ற கல்கி நினைக்கவில்லை.
அப்படியே அவர்கள் சந்தோஷமாய்ப் பேசி சிரிக்க ஏழு மணி போல் சூர்யா
“ப்ரியத்தம்மா, நம்ம தேஜஸ்வி வீட்டுக்குப் போகனுமே மறந்துட்டியா?” என்றார்.
“ஆமால” என்ற யமுனா கல்கியிடம்
“மாமாவோட பெரியப்பா பேத்தி இங்க இருக்கா டா. அவங்களைப் பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். நானும் மாமாவும் போய்ட்டு வந்திடுறோம். நீ நான் வைச்சிருக்க போண்டாவை ப்ரசாத் வந்தவுடனே அவனுக்கு எடுத்துக் கொடுக்கிறியா? சட்னியோட வைச்சுக் கொடு” என்றார்.
“பங்காரத்துக்கு நம்ம வாங்கிட்டு வந்த ஸ்னாக்ஸும் கொடுத்துடு பாப்பா” சூர்யாவும் கல்கியிடம் சொல்ல
“பங்காரத்தோட பங்கு பங்கமில்லாம அவருக்குப் போய்டும். கல்கி கணக்குல புலி” என்று சொல்ல அவர்கள் சிரித்தபடி கிளம்பினார்கள்.
சிரஞ்சீவி வரும்போது கல்கி சோஃபாவில் உட்கார்ந்து தின்பண்டங்களைக் கொறித்துக் கொண்டிருக்க, தையல் நாயகி சாய்ந்தவாக்கில் காலை நீட்டி நாடகம் பார்த்தார். கூடவே புலம்பலும்
“ச்ச, நாளைக்கு ஞாயித்துக் கிழமையாடி கல்கி? நாடகமெல்லாம் தெனைக்கும் போட்டா அவன் அப்பன் விட்டு சொத்தா போவுது. பாரு இந்த கௌசி அவ மாமியார் கிட்ட மாட்டிப்பாளா இல்லையான்னு எனக்குத் தெரியல” என்று அப்போதுதான் முடிந்த நாடகத்தைப் பார்த்து திட்டினார்.
சிரஞ்சீவி அறைக்குள் புகுந்து ஆடைமாற்றி வர, கல்கி அவனிடம் யமுனா செய்துவைத்திருந்த மைசூர் போண்டாவை தேங்காய் சட்னியுடன் நீட்டினாள். அவனும் வாங்கிக் கொண்டு அவளுடன் அதே சோஃபாவில் வலப்பக்கத்தில் உட்கார்ந்தபடி உண்டான்.
நாடகம் முடிந்து விளம்பரம் வரவும் பேரனையும் பேத்தியையும் குறுகுறுவென பார்த்த தையல் நாயகி
“ஏட்டி சின்னவளே! கீழே இறங்கி உட்காரு. உன்னை விட வயசுல பெரியவன் அவனுக்கு சமானமா உட்கார்ந்திருக்க, இறங்குடி” என்று அதட்டல் போட
“முடியாது போ” என்று கல்கி சொல்ல
“சொன்னா கேட்கல உன் அப்பங்கிட்ட சொல்லிக் கொடுப்பேன்” என்று தையல் நாயகி அவளை மிரட்டினார்.
இது நாள் வரை அவன் இப்படி ரிலாக்ஸாய் உட்கார்ந்திருந்தது கிடையாது. வருவதற்கே இரவாகிவிடும், இல்லையா அவன் இருக்கும் நேரம் கல்கி அறையில் எதாவது வேலையாய் இருப்பாள். இன்று என்னவோ இருவரும் ஒன்றாய் ஒரே சோஃபாவில் உட்கார்ந்திருக்க தையல் நாயகிக்கு அது என்ன ஆண்பிள்ளைக்கு சமமாய் உட்காருவது என்ற எண்ணம்.
“என்ன அம்மம்மா நீங்க? அவ உங்க பேத்தின்னா நான் உங்க பேரன் சோஃபாவுல இடமிருக்கு, உட்கார்ந்திருக்கா. அதுக்கு ஏன் பேசுறீங்க?” என்றான்.
பேரன் பேசவும் உடனே சிரித்த முகத்துடன் தையல் நாயகியோ “அதில்லைய்யா, அது என்ன ஆம்பள புள்ளக்குப் போட்டியா இந்த சிறுக்கியும் உட்காருரா, அதெல்லாம் உனக்குப் புரியாதுயா. ஏட்டி கீழ வாடி பட்டணத்துக்கு வந்து திமிரா போச்சா உனக்கு” என்று திட்ட
“கல்கி! நீ உட்காரு” என்று அவளிடம் சொன்ன வரப்ரசாத்
“என்ன ஆம்பிள, பொம்பள? அவளுக்கும் இரண்டு கால், எனக்கும் இரண்டு கால். இப்படியெல்லாம் பேசாதீங்க அம்மம்மா. எனக்குப் பிடிக்கல” என்றான் அழுத்தமான குரலில். அவனது குரலில் தையல் நாயகி அமைதியாகிவிட்டார், கூடவே விளம்பரம் முடிந்து நாடகம் தொடங்கிவிட்டது.
“ம்ம், நல்லா இருந்துச்சு. மாமாவே என்னை அழைச்சிட்டுப் போய்ட்டாங்க” என்றதும்
“அப்பா சொல்லிட்டாங்க கல்கி” என்றான்.
கல்கிக்கு அவனிடம் இன்னும் சகஜமான பேச்சுகள் இல்லை. இருவருமே அதற்கு முனையவில்லை. என்ன ஏது என்று தேவைக்கு மட்டுமே பேச்சுகள். இன்று அத்தையிடம் அவன் ஏன் சொல்லவில்லை என்பதைக் கேட்கவேண்டும் போல கல்கிக்குத் தோன்ற இதுதான் நேரம் என நினைத்துக் கேட்டுவிட்டாள்.
அவனோ மிகவும் சாதாரணமாய்
“உனக்கு சொல்லனும்னு விருப்பமிருந்தா நீயே சொல்லுவன்னு தெரியும் கல்கி. என்ன இருந்தாலும் அது உன்னோட விஷயம். நீயே இஷ்டப்பட்டதான் சொல்லனும்” என்றான் தெளிவாய்.
அவளோ அவனைப் பார்த்து
“அப்போ என்னை அன்னிக்கு அத்தனை கொஸ்டின் கேட்டீங்க?” என்றதும்
“அது உன்னை என்னை நம்பி விட்டிருக்காங்க? நீ எங்க போற வரனு தெரிஞ்சக்கறது தப்பில்லையே. நான் கால் பண்ணினப்ப உண்மையை சொல்லியிருந்தா நான் உன்னை பேசவே அவசியம் இல்லை” என்றான்.
“ஆனா அத்தை கிட்ட கூட நீங்க சொல்லாம இருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை” என்றாள் ஆச்சர்யமாக.
“நீ சொன்னதுதான், சொல்லாம செய்றதால அது தப்புன்னு ஆகிடாது இல்லையா? அம்மாவா இருந்தாலும் அது உன்னோட விஷயம் உன் பெர்மிஷன் இல்லாம நான் சொல்றது சரி கிடையாது கல்கி”
கல்கி மனதில் ‘புள்ளையை நல்லா வளர்த்திருக்கீங்கம்மா ஒத்த ரோசா’ என்று அத்தையைப் பாராட்டினாள்.
“அண்ட் நீயே அம்மா கிட்ட சொல்லுவன்னு எனக்குத் தோணிச்சு. நான் வீட்ல சொல்லிடுவேனோன்றதுதானே உன் பயம், உன் விஷயம் எதுவும் உன் அனுமதி இல்லாம நான் என்னோட அம்மாவா இருந்தாலும் கூட சொல்ல மாட்டேன். உன்னோடதுன்னு இல்லை, யார்னாலும் நான் அப்படித்தான்”
“நான் சொல்லாம இருந்திருந்தா?” கல்கி கேள்வி கேட்க
“கண்டிப்பா சொல்லுவன்னு எனக்குத் தெரியும், நீ தப்பா செய்ற சொல்லாம இருக்க? அம்மா புரிஞ்சிப்பாங்கன்னு உனக்குத் தெரியும். அதான் அவங்ககிட்ட சொல்லியிருக்க” என்றான் அவளைப் புரிந்தவனாக,
கல்கி கொஞ்சம் விளையாட்டாக
“அப்போ நான் உங்ககிட்ட மட்டும் சொல்லிட்டு எதாவது செஞ்சா நீங்க யார்கிட்டவும் சொல்ல மாட்டீங்க அப்படித்தானே?”
“எஸ்! கண்டிப்பா. எங்கிட்ட சொல்றன்னா கண்டிப்பா நீ தப்பு செய்ய மாட்ட. ஸோ சரியான விஷயத்துக்கு வரப்ரசாத் சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு. இதோ இந்த சோஃபா மேட்டர் மாதிரி” என்றதும் கல்கி சிரித்துவிட சிரஞ்சீவியின் மீது ஒரு நல்ல அபிமானம் அவள் அகத்தில் முதல்முறையாகத் தோன்றியது.
இருவருக்கும் அப்படியே பேச்சு நீள, அது முற்றும் இடம் சண்டையாகிப்போனதுதான் அங்கே வினை!