அன்று காலை உதயமூர்த்தி சென்னை வருவதாக இருந்தது. சிரஞ்சீவி வழக்கம் போலவே காலை நேர நடைபயிற்சிக்குத் தயாராகி வந்தவன் கல்கி இன்னும் வராமல் இருப்பது கண்டு ஹாலில் இருந்தபடியே
“கல்கி!” என்று குரல் கொடுத்தான்.
“கூப்பிட்டீங்களா?” என்றபடி கல்கி வெளியே வர
“வாக்கிங் வரல நீ?” என்றான்.
“இல்லை, அப்பா வராங்க. அப்பாவுக்கு காலையில பொண்ணுங்க வாக்கிங் போறது எல்லாம் பிடிக்காது. அதெல்லாம் வயசானவங்க செய்றதுன்னு சொல்வார். அப்பா ஊருக்குப் போறவரைக்கும் நோ வாக்கிங், நோ டிரைவிங், நோ பேக்கிங்” என்றவளிடம்
“ஓகே, உன்னிஷ்டம். நான் கிளம்புறேன்” என்று சொல்லி அவன் சென்றுவிட்டான்.
கல்கி இப்போது வார இறுதி நாட்களில் காலையில் டிரைவிங் பயிற்சி செல்கிறாள், மாலை நேரத்தில் பேக்கிங் வகுப்புகள். மற்ற நேரம் கல்லூரி படிப்பு என்று நேரம் சென்றது. ஐந்தரை மணி போல் உதயமூர்த்தி வந்து பெல்லை அடிக்க, கல்கி கதவைத் திறக்கவும் மகளை ஒரு மாதம் கழித்துப் பார்க்க அவ்வளவு சந்தோஷம் அவருக்கு.
“எப்படி கல்கி இருக்க?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.
உதயமூர்த்தி சோஃபாவில் உட்காரவும் அவரருகே தரையில் உட்கார்ந்தவள்
“ம்ம், அம்மாவை அழைச்சிட்டு வந்துட்டா அங்க ஆடு மாடெல்லாம் யார் பார்க்கிறது? அப்பத்தாவும் இங்க உன்னோட வந்தாச்சு. இதுக்குத்தான் அங்கேயே இருந்து படின்னா கேட்டாதானே? இப்ப அம்மாவைப் பார்க்கனும்னு கேட்கிற. எனக்கும் உன்னை இங்க விட்டுட்டு மனசு கேட்கல” என்றார் உதயமூர்த்தி.
இன்னமும் மகளை அனுப்பியதில் அவருக்கு முழுமனதாய் சம்மதமில்லை. ஒரு பக்கம் மகளின் பாதுகாப்பு பற்றிய பயமென்றால் யமுனா கொடுத்து சென்ற காயத்தின் வடு அவ்வப்போது அதன் தாக்கத்தை அவரிடம் காட்ட, மகளிடம் அதனை அப்படியே காட்டினார். கூடவே மகள் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. அதனை அப்படியே சொல்லியிருந்தாலாவது கல்கியின் மனம் களித்து கனிந்திருக்கும். அவரோ அதனை சொல்லாமல் அவளைப் பேசிவிட கல்கியின் முகம் வாடிப்போனது.
மகள் அமைதியாய் இருக்கவும்
“இந்த பையில சம்படத்துல உங்கம்மா மீன் குழம்பு கொடுத்துவிட்டிருக்கா கல்கி, முதல்ல எடுத்து சூடு பண்ணி வை. அப்புறம் இதுல தயிர் இருக்கு, காய்கறி கூட இருக்கு எல்லாத்தையும் ஃப்ரிட்ஜ்ல வை” என்றவர்
“அம்மா எங்க? அந்த பையன் எங்க?” என்றார்.
“அப்பத்தா தூங்குறாங்கப்பா, அவங்க வாக்கிங் போயிருக்காங்க. வர ஒரு மணி நேரமாகும்”
“ஓஹ், அந்த பையன் ஊர்ல கோபமா பேசினானே நல்லா பார்த்துக்கிறானா?” என்று கேட்டார்.
“இந்த ரூம்ல பாத்ரூம் இருக்கு யூஸ் பண்ணிக்கோங்கப்பா, நான் போய் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லி கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள் கல்கி. அரை மணி நேரம் கழித்து உதயமூர்த்தி குளித்துவிட்டே வெளியே வர, வாசலில் காலிங் பெல் சத்தம். கல்கி போய் கதவைத் திறக்க வசந்தி நின்றிருந்தார்.
“அக்கா, எங்கப்பா” என்று கல்கி அறிமுகம் செய்ய வசந்தி வணக்கம் சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க போனார்.
“இவங்க யாரும்மா? சமையல் செய்வாங்களா?” என்று உதயமூர்த்தி மகளிடம் கேட்க
“ஆமாம்பா, காலையில இந்த டைம் வந்து சமைச்சு வைச்சிட்டுப் போவாங்க, சாயங்காலம் மறுபடி நைட்டுக்கு சமைக்க வருவாங்க. மத்த வேலைக்கு இன்னொரு அக்கா வருவாங்க” என்றாள்.
“ம்ம், ஒழுங்கா படிக்கிறியா நீ?” என்று அடுத்து ஆரம்பிக்க
“படிக்கிறேன்பா” என்றாள் பவ்யமாக.
அப்பாவிற்கு டீவியைப் போட்டுவிட்டவள்
“அப்பா, காலேஜுக்கு லேட்டாகிடும், நான் போய் ரெடியாகுறேன்” என்று சொல்லி அறைக்குள் போக, தையல் நாயகி எழுந்துவிட்டார்.
மகனைக் கண்டுவிட்டு
“என்னய்யா மூர்த்தி இப்படி இளைச்சிப்போய்ட்ட? அந்த அங்கை புள்ளை இல்லைனதும் உன்னை சரியா கவனிக்கறதில்லையா?” என்று மருமகளைக் குறை சொல்ல
“அதெல்லாம் நான் நல்லா இருக்கேன். அவளும் என்னை நல்லா கவனிக்கிறாம்மா. உனக்கு இங்க எப்படி இருக்கு? நல்லாயிருக்கியா?” என்று அம்மாவிடம் கேட்டார் உதயமூர்த்தி.
“எனக்கென்னய்யா? என் பேரன் என்னை நல்லா பார்த்துக்கிறான். இதோ அந்த வசந்தி நல்லாத்தான் சமைக்கும். ஆனாலும் ஊரு நினைப்பு எங்க விடுது?” என்று புலம்பினார்.
“அப்புறம் இந்த அங்கை அந்த கிட்டினம்மாவுக்கு பால் கூட ஊத்திக்கொடுத்துட போறா, நான் இல்லைனா உன் பொண்டாட்டி அவ இஷ்டத்துக்கு எல்லாம் செய்வா. இந்த வெள்ளாட்டுக்கு அடுத்த மாசம் பிரசவம் ஆகிடனும்ல, நல்லா புல்லு போட சொல்லு அவளை” என்று பேசிக்கொண்டே போக
“ம்மா, அதெல்லாம் நாங்க நல்லாதான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோம். நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரேன்” என்றார் கடுப்பாக. சிரஞ்சீவி நடைபயிற்சி முடித்து வந்தவன் இவரைக் கண்டுவிட்டு
“வாங்க மாமா, ரொம்ப நேரமாச்சா?” என்றான்.
“ஐஞ்சரைக்கு வந்தேன் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்க
“நான் நல்லாயிருக்கேன் மாமா, டீ குடிச்சீங்களா?” என்று விசாரித்தான்.
“ம்ம், குடிச்சிட்டேன் தம்பி” என்றதும் இருவருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை. கல்கி சுடிதார் அணிந்து கல்லூரிக்குத் தயாராகி வெளியே வர
தையல் நாயகி சும்மா இராமல்
“இந்தா வந்துட்டா உன் மவ, சொல்ற பேச்சே கேட்கறதில்லை. எதிர்த்து எதிர்த்து பேசுறா” என்று பேத்தியைப் போட்டு கொடுக்க, உதயமூர்த்தி உக்கிரமூர்த்தியாய் மகளைப் பார்க்க, கல்கி தையல் நாயகியை முறைத்தாள்.
“என்ன கல்கி அப்பத்தாவை எதிர்த்துப் பேசுனியா?” என்று உதயமூர்த்தி கோபத்துடன் கேட்க
“ப்பா, சத்தமா டீவி வைச்சுப் பார்த்து என்னைப் படிக்கவிடறதில்லை. அதைக் கேட்டா தப்பா?” என்றாள் கல்கியும் கோபமாக. கல்கி தன்னைக் குறை சொல்லவும்
“வயசான காலத்துல பிடிச்ச மாதிரி இந்த டீவியைப் பொட்டியைக் கூட பார்க்க கூடாதா நான்? காது நல்லா கேட்டா நான் ஏன் சத்தம் வைக்கிறேன்? இவளுக்காகத்தானே நான் ஊரை உறவை விட்டு வந்து இருக்கேன்” என்று தையல் நாயகி கொஞ்சம் கண்ணீருடன் பேச உதயமூர்த்தி அம்மாவின் பேச்சில் உருகிப்போனார்.
“ஏன் கல்கி இப்படி செய்ற? யாருமில்லனா இப்படித்தான் இஷ்டத்துக்குப் பேசுவியா நீ? உனக்காகத்தானே அப்பத்தா இங்க வந்து இருக்கு. இனிமே மரியாதை இல்லாம பேசக் கூடாது நீ” என்றார் கட்டளையாக.
கல்கி அமைதியாய் தலையசைத்துக் கேட்டு கொண்டாள். கல்கியின் மீதே கண்கள் வைத்திருந்த சிரஞ்சீவிக்கு அவள் நிலைக் கண்டு கோபமாய் வந்தது. தையல் நாயகி கல்கியைக் கவனிப்பதே இல்லை என்பது அவனுக்கு நன்றாய்த் தெரியும். (Xanax) திருடன் வந்தால் கூட தெரியாத அளவு டீவியில் மூழ்கி இருக்கும் ஆள் அவர், அவர் சொல்கிறார் என்று தன் பெண்ணை எப்படி பேசுகிறார் என்று தாய்மாமனை மனதில் எழுந்த கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் டியுட்டிக்குக் கிளம்பும்வரை கல்கியைக் கண்காணிக்க, அவனுக்கு ஒன்று புரிந்தது. கல்கி மற்ற நாட்கள் இருப்பது போல் இப்போது இல்லை, இதே மற்ற நாள் என்றால் வாக்கிங் முடித்து வந்தவுடன் காஃபி குடித்து தன்னுடன் பேசிக்கொண்டு தெரியாத விஷயங்களைப் பேப்பரில் படித்து தன்னிடம் சந்தேகம் கேட்பாள். அதன்பின் குளித்து வருபவள் டீவியில் பாட்டு ஓட, கூடவே அவளும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வண்ணத்துப்பூச்சியாய் வதனம் விகசிக்க வளைய வருவாள்.
இன்று சிறைப்பறவையாய் அவள் அப்பாவின் பேச்சுக்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டிருந்தாள். அவள் உடல்மொழியில் ஒரு இயல்பற்ற இறுக்கம், அது வரப்ரசாத்தின் பார்வையில் சரியாய் விழுந்துவிட, கல்கியின் பணிவில் இவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பும் கூட வந்தது.
தன்னிடம் எப்படி சரிக்கு சரியாய்ப் பேசுவாள், முதல் நாள் அம்மாவை எப்படி வைத்து விளாசினாள் இன்று அப்பாவிடம் பம்மிக்கொண்டு இருக்கிறாளே என்று கண்களில் கிண்டலுடன் பார்க்க, அது பாவையின் பார்வையில் அப்படியே விழ, கல்கி அவனை முறைத்தாள். அப்பாவின் முன் அவனிடம் சண்டையிடவும் முடியாதே!
மகள் கல்லூரிக்குக் கிளம்பவும் உதயமூர்த்தியும் தங்கள் உறவினரைப் பார்க்க சென்றுவிட்டார். மதியம் கல்கி கல்லூரி விட்டு வந்தவள் ஜெகதீஷுக்குப் போன் செய்தாள்.
“டேய் மாமா! ஈவினிங் ஃப்ரீயா?” என்று கேட்க
“ஃபீரிதான்” என்றான் உடனே.
“அப்போ இங்க அத்த வீட்டுக்கு வா” என்றதும்
“அங்க நான் எதுக்கு? உன்னைப் பார்க்கனும்னா நீ வெளியே எங்காச்சும் வா” என்று ஜெகதீஷ் பிடி கொடுக்காது பேச
“ஓவரா பண்ணாதடா, உங்கத்த கெண்டை மீன் குழம்பு கொடுத்துவிட்டிருக்காங்க. உனக்கும் பிடிக்குமே, நம்ம மாம்ஸும் வீட்டு சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறானே பார்த்தா ஓவரா பண்ற. எங்கப்பாவும் வந்திருக்கார், பார்த்திட்டு போகலாமில்ல. நான் கூட உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சே” என்று கல்கி சொல்ல ஜெகதீஷுக்கு தரை காலில் படவில்லை.
பின்னே கல்கி தனக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்று தன்னை வர சொல்லியிருக்கிறாளே என்ற எண்ணம், அதனையும் விட தன்னைப் பார்த்து நாளாயிற்று என்று அவள் சொன்ன வார்த்தை எல்லாம் அவனின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்ப்பவையாய் இருக்க, அகமெங்கும் அந்திச்சாரல்!
“இவ்வளவு ஆசையா கூப்பிடுற, வராம இருப்பேனா? நான் வரேன்” என்றான்.
“சூப்பர்” என்று சொல்லி கல்கி போனை வைத்தாள். அவள் அவனின் மீதான அன்பில் அழைத்திருக்க அவனுக்கோ அது காதலின் அழைப்பாய் தெரிந்தது அவன் பிழையோ?
வசந்தியை மாலை வரவேண்டாம் என்று கல்கி சொல்லிவிட்டாள். அவள் அம்மா வைத்திருந்த குழம்பு இருக்க அதையே மதியம் வைத்து உண்டுவிட்டனர். ஜெகதீஷுக்கும் சிரஞ்சீவிக்கும் தனியே எடுத்து வைத்துவிட்டாள். ஆம், சிரஞ்சீவி காலையில் போனவன் இன்னும் வீடு திரும்பவில்லை.
ஜெகதீஷ் அன்று பெர்மிஷன் சொல்லிவிட்டு மூன்று மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டான். அவன் வரவும் உதயமூர்த்தியும் அவனும் பேசிக்கொண்டிருந்தனர்.
“டேய் ஜெகா! இவளை அடிக்கடி வந்து பார்த்துக்கோ” என்று உதயமூர்த்தி சொல்ல
‘அது என் கடமை’ என்று அவன் காதல் மனம் சொன்னது.
“இதெல்லாம் நீங்க சொல்லனுமா மாமா, நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றான்.
“மாமா, சாப்பிட வா” என்று கல்கி அழைக்க
“இப்போ வேண்டாம் டி, நீ குழம்பைக் கொடு. நான் ரூம்க்குப் போய் சாப்பிட்டுக்கிறேன்” என்றான். அவளும் அவனுக்கான குழம்பை ஒரு டப்பாவில் போட்டு கொடுத்தாள். மூவருமாகப் பேசிக்கொண்டிருக்க, அறைக்குள் சென்ற தையல் நாயகி மெல்ல பேத்தியை அழைத்து
“ஏட்டி கல்கி! உன் மாமன் மவனுக்குக் குழம்பு எடுத்து வைச்சியே, எம்மூட்டு பேரன் இன்னும் சாப்பிடலையே, அவனுக்கு வைச்சிருக்கியா இல்லையா?” என்று கேட்டவரை முறைத்த கல்கி அவரின் காதை மெல்லமாய்த் திருக
“அடியே வலிக்குது டி விடு” என்று அவர் கத்தவும்தான் விட்டாள்.
“அதெல்லாம் உன் பேரனுக்கு எடுத்து வைச்சாச்சு, நீ ரொம்ப கவலைப்படாத” என்றதும் அவர் சிரித்தபடி
“சரி டி சரி டி ராசாத்தி. அவனுக்கு இருக்கோ என்னமோன்னுட்டுதான் கேட்டேன். உங்கப்பன் கிட்ட போய் சொல்லி வைக்காத ” என்று வெளியே போனார்.
ஜெகதீஷ் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டான். உதயமூர்த்தியும் ஊருக்குக் கிளம்பித் தயாராய் உட்கார்ந்திருந்தார். சிரஞ்சீவியின் வருகைக்காகக் காத்திருந்தார். அவன் வர ஒன்பது மணி ஆகிற்று.
அவன் வந்தவுடன் உதயமூர்த்தி “நான் ஊருக்குக் கிளம்புறேன் தம்பி, பார்த்துக்கோங்க” என்று சொல்ல
“சரிங்க மாமா” என்றவன்
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க, டிரஸ் மாத்திட்டு வரேன். நானே உங்களை பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன் மாமா” என்றான். கல்கி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள், இவனுக்கு இதெல்லாம் வராதே என்பது போல, உண்மையும் அதுவே!
யமுனா மகனுக்கு அழைத்து அண்ணனை காலையில் அழைக்கப்போகாததற்கே திட்டிவிட்டார். இவனோ
“அவர் வரேன்னு எங்கிட்ட சொல்லவே இல்லைம்மா, கல்கி நைட் சொன்னா. அவகிட்ட கேட்டதுக்கு அவரே வந்துடுவார் சொன்னாம்மா. நேனு ஏமி செய்யாலிம்மா?” என்றான் இவனும் கடுப்பாக.
“அவ சொன்னா நீ அப்படியே விடுவியா எங்கிட்ட சொல்லியிருக்கனுமா இல்லையா? நான் நீயா செய்வன்னு நினைச்சேன்” என்று யமுனாவும் கோபமாய்ப் பேச சிரஞ்சீவியும் கோபமானான்.
“உங்கண்ணா என்ன குழந்தையா? அவருக்கு வர தெரியும்தானே? அதான் வந்துட்டார். ரொம்ப பண்றீங்கம்மா நீங்க. இன்னும் ரொம்ப பாசமா அண்ணா கிடைச்சிருந்தா அவ்வளவுதான்” என்று அவரிடம் காய
“அப்படித்தான் செய்வேன், ஏன் எங்கண்ணா பாசத்துக்கு என்ன குறை? கூடப்பிறந்தவங்க இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும் ப்ரசாத்” என்றார் யமுனா.
“அது என்னோட மிஸ்டேக் இல்லை” என்று சிரஞ்சீவி சொல்ல கேட்டிருந்த சூர்யாவுக்கு மகனின் பேச்சில் சிரிப்பு எழ, யமுனா முறைக்கவும்
“பாபு! அம்மா சொல்றதை செய்டா, உங்க மாமாவை நைட் நீயே போய் ட்ராப் பண்ணு. அவரை ஸ்டே பண்ண சொன்னோம், வேலை இருக்குன்னுட்டார்” என்று சொல்ல
“அவுனு நைனா” என்றான் உடனே.
“அவர் சொன்னா ஒத்துக்கோ, என்னை மட்டும் டென்ஷன் பண்ணு” என்று திட்டிவிட்டுத்தான் யமுனா வைத்திருந்தார். அதனாலயே வீட்டிற்கு சீக்கிரம் வந்தான் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி அப்படி சொல்லவும் உதயமூர்த்தி மறுத்துவிட்டார்.
“உங்களுக்கு ஏன் தம்பி சிரமம்? நானே போய்ப்பேன்” என்றார். அவனோ அம்மாவின் பேச்சை நினைத்துப் பார்த்தவன்
“இல்லை மாமா, நான் வரேன்” என்று சொல்லி அறைக்குள் போனான். தையல் நாயகி உடனே பெருமையாக
“பார்த்தியா டா பேரனை, உன் மேல எவ்வளவு பாசமா சொல்றான்” என்றார். உதயமூர்த்தி கிளம்பு முன் மகளிடம் மீண்டும்
“ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கனும் கல்கி. எந்த சேட்டையும் செய்யக் கூடாது. அப்பத்தாவை எதிர்த்துப் பேசக் கூடாது. இங்க உன்னை கவனிக்க யாருமில்லன்னு இஷ்டத்துக்கு இருக்க கூடாது” என்று அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்க, தயல் தலையாட்டி பொம்மை ஆனாள். டீஷர்ட்டுக்கு மாறி வந்த வரப்ரசாத்தின் பார்வையில் இது விழ ஒன்று முடிவு செய்து கொண்டான்.
கல்கி தன் வீட்டில் இஷ்டம்போல் இருக்கட்டும் என்று!
இப்படி அவள் இயல்பைத் தொலைத்தெல்லாம் தன் வீட்டில் இருக்க வேண்டாம், இங்கு இருக்கும்வரையில் சந்தோஷமாய் இருக்கட்டும் என்றே அவனின் எண்ணம்! ஒன்று மட்டும் நிச்சயமாய்ப் புரிந்தது இப்படிப்பட்ட ஒருவரிடம் நிச்சயம் தன் அம்மா தன் காதலை சொல்லியிருந்தாலும் அது நிறைவேறியிருக்காது என, அதே நேரம் ஒருவேளை அம்மா இவரை மீறி போகாமல் இருந்திருந்தால் இன்று இவர் இவ்வளவு கடுமையாக, கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க மாட்டாரோ என்று இருப்பக்கமும் யோசித்தான்.
மறந்தும் மங்கையிடம் இதனைப் பகிரவில்லை அவன். அவளை இனி நன்றாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமூர்த்தியை விட்டுவிட்டு அவன் வர, உண்மையில் கல்கிதான் அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.
அவள் செய்கையில் அவனுள் ஒரு ரகசிய ரசனை அவனையுமறியாமல்!!