கல்கிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பு வந்துவிட, கண்முழித்து பார்க்க அவள் அறையில் இருந்தாள். நேரம் பார்க்க பதினொன்று. தீடீரென வரப்ரசாத்தின் நினைவு அவளைக் கேட்காமலே வஞ்சியிடம் வந்தது.
அவன் வீட்டிற்கு வந்திருப்பானா இல்லையா என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. ஊருக்கு வந்த குஷியில் அவன் நினைவின்றி அம்மா, அப்பா, அப்பத்தா என்று எல்லாருடனும் பேசிவிட்டு சந்தோஷமாய் நேரம் ஓடிவிட பயணக் களைப்பில் பாவை அசந்தும் போயிருந்தாள். ஆனால் வாழ்க்கையின் வழக்கமாய் சில மாதங்களாய் மாறிப்போன ஒன்றை மாற்ற முடியுமா?
இப்போது விழிப்பு வர, அவளின் பயமும் விழித்தது. அவன் வந்திருப்பானா இல்லையா என்று தெரியாமல் உறக்கம் வரும்போல் தெரியவில்லை. இதோ இப்போது ஊருக்கு வந்தபின் அவனைத் தேடாமல் உறங்கிவிட்டாள் தானே? அது போல்தானே இனி இருப்பாள். எப்போதும் அவன் வருகையும் பாதுகாப்பும் தன்னை இப்படி பாதிக்குமா என்ற ஐயம் அவளிடம்!
யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்று தோன்றியது. ஏன் அவனைப் போல் நினைக்கிறாய்? உனக்கு அவன் மீது அக்கறை இருக்கிறது. அது என்றும் போகாது! ஏன் போக வேண்டும்? என்று தன்னை சமாதானம் செய்தவள் அவனின் பத்திரம் தெரிந்தால் மட்டுமே தன்னால் நிம்மதியாக உறங்க முடியும் என்று அவளுக்கு இத்தனை மாத அனுபவித்தினால் தெரிய, உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள்.
அழைத்துவிட்ட பின் அவளின் அகம் அவளை திட்டியது. அவன் உன்னை எப்படி எடுத்தெறிந்து பேசினான்?
‘லிமிட் க்ராஸ் செய்ற நீ!’ என்று அதட்டினானே அதெல்லாம் மறந்து போனாயா? என்று மனம் மங்கையை சாடியது. அதையும் விட தன் ஈகோ விட்டு அவனிடம் பேச தோன்றவில்லை. அவனும் உடனே இவள் அழைப்பை ஏற்கவும் சட்டென யோசித்தவள் சமயோஜிதமாய்
“இங்க மழை வர மாதிரி இருக்கு. என்னோட புக் கிச்சன் பக்கத்துல உள்ள பால்கனியில வைச்ச மாதிரி இருக்கு, அது அங்க இருக்கானு செக் பண்ணி சொல்றீங்களா?” என்றாள்.
இப்பொழுது தெரிந்து விடும் அவன் வீட்டிற்கு வந்துவிட்டானா இல்லையா என்று கல்கி நினைக்க, அவளில்லாது தவித்தவனுக்கு அவள் அழைப்பு தண்மழையாய் இருக்க, பேச்சோ தணல்மழை.!
சிரஞ்சீவிக்குப் புரியவே இல்லை. பதினொறு மணிக்கு அழைத்து அங்கு மழை வருவது போல் இருந்தால் இங்கே பார்க்க சொல்வாளா? இத்தனை நேரம் இவள் தூங்காமல் என்ன செய்கிறாள் என்று யோசனை போனது.
“உங்க கிட்ட தான் பேசுறேன் மிஸ்டர். காரம். புக் நனையாம எடுத்து வைங்க” என்று கல்கி இயல்பாய்ப் பேசுவது போல் பேசினாள்.
“அங்க மழை வர மாதிரி இருந்தா இங்க நான் பார்க்கனுமா?” என்றான் ப்ரசாத் கடுப்பாக.
“இங்க வர மழை அங்க வராதா என்ன? எல்லா இடத்திலயும் இதே வானம்தானே? நீங்க வீட்ல இருந்தா பார்த்து சொல்லுங்க, என் புக் நனைய போகுது” கல்கி கெத்தாய்ப் பேச பேச காரம் ஏறியதுடன் அவள் காரியம் புரிந்தது இவனுக்கு.
தினமும் என்னை எதிர்ப்பார்த்து இருப்பவளுக்கு இன்று நான் வீடு வந்தேனா என்ற சந்தேகம் என்று சிரஞ்சீவிக்குப் பளிச்சென புரிய, இதழ்கள் இன்பத்தில் விரிந்தன.
“நான் ஒன்னும் வீக் இல்லை, மழை வந்தா புக் நனைஞ்சிடும்னு டென்ஷன்ல போன் பண்ணினா என்னைக் கிண்டல் செய்றீங்களா? இப்ப இல்லைனாலும் இனிமே மழை வரப்ப புக் நனைஞ்சா.. அப்போ நீங்க வீட்ல இல்லைன்னா? அதான் ஞாபகம் வரப்ப சொல்றேன்” என்றவள் கொஞ்சமும் இறங்கி வந்து அவனிடம் வீட்டிற்கு வந்துவிட்டாயா என்று கேட்கவில்லை.
‘அஹம்பாவ அம்மடூ!’ என்று அவளின் ஈகோ உணர்ந்தவனும் வேண்டுமென்றே அவளை சீண்டினான்.
“நான் இப்போ வீட்ல இருந்தாதானே?” என அவளிடம் வீட்டில் இருந்து கொண்டே கேட்க, கல்கிக்கு இவன் இன்னமும் வீடு போகவில்லையா என்று கவலையாகிவிட்டது.
‘இப்பவே மணி பதினொன்னு. இனிமே இவர் போய் நான் தூங்கி..’ நினைக்கவே கடுப்பாய் இருந்தது. கேஸ் எதாவது இருக்குமோ என்று நினைத்தாலும் அவனிடம் வாய் விட்டுக் கேட்க முடியவில்லை. அதனால் கல்கி,
“போன அப்புறம் சொல்லுங்க” என்றாள் சின்னக்குரலில்.
இப்பவும் கூட இவளின் பிடிவாதம் விட்டு என்னிடம் பேசமாட்டாளாமா என்று நினைத்தவன் ஒருவேளை தனக்கு அவளைப் பிடித்துவிட்டதால் தன் இஷ்டப்பட்டி மனம் ‘மண்டேலா effect’ ல கண்டபடி கற்பனை செய்கிறதோ என்று நினைத்து அவள் சொன்னது போல் கிச்சன் பக்கம் உள்ள பால்கனியில் போய் பார்க்க அங்கு புத்தகமெல்லாம் இல்லை.
பெருமூச்சுடன் மீண்டும் தன் அறைக்குள் வந்து மெத்தையில் சாய்ந்தவன்,
“நான் போக லேட்டாகும்” என்றான் வேண்டுமென்றே.
“சீக்கிரம் வீட்டுக்குப் போய்ட்டு சொல்லுங்க” என்று கல்கி அவசரப்படுத்த
“ஏன் நான் இன்னும் வீட்டுக்குப் போகலன்னு மேடம்க்கு டென்ஷனா இருக்கா?” என்று வரப்ரசாத் நக்கலாய்க் கேட்க
“அய்யோ! ரொம்ப கற்பனை பண்ணாதீங்க! நான் என் புக் நனைஞ்சிடுமேன்னு கவலைப்பட்டேன். நீங்க என்ன சின்னக்குழந்தையா? வீடு வரத் தெரியாதா என்ன?” என்று அவன் வார்த்தைகளை அவனிடம் சொல்லி வெறுப்பேற்றினாள்.
“அவனு? ஓகே. பட் நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன். வீடு போக லேட்டாகும். உன் புக் நனைஞ்சா நோ ப்ராப்ளம் நான் புதுசு வாங்கித் தரேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டான். அவளும் இறங்கி வந்து உண்மையைக் கேட்கவில்லை, அவளின் தவிப்பும் எண்ணமும் தெரிந்தாலும் இவனும் பாவமே என்று பாவையிடம் உண்மை சொல்லவில்லை. வீம்புடன் இருந்தனர்.
போனை வைத்தவனுக்கு தன் மனம் புரிந்தாலும் தயல் மனம் புரியா நிலையில் இருந்தான். ஆனாலும் அவள் குரல் கேட்ட குளிர் நிலையில் உறக்கம் தழுவியது சிரஞ்சீவியை.
அடுத்த நாள் பகல் எல்லாம் இருவருக்கும் அவரவர் வேலையே சரியாய் இருந்தது. ஆனால் இரவு என்று ஒன்று வர, இருவரின் வானிலும் மற்றவர் குறித்து நிலவாய் நினைவுகள் ஒளிவீசின!
வீட்டிற்குப் போகவேண்டுமோ என்ற எண்ணம் வந்தது சிரஞ்சீவிக்கு. அந்த எண்ணத்துடன் போனவனுக்கு வீட்டின் வெறுமை துயராய் இருந்தது. இத்தனை நாள் இனித்த தனிமை இப்போது இனிக்கவில்லை. அவளின்றி இருப்பது அவனில் பாதி காணாமல் போன எண்ணமே! அவள் பேச்சு கேட்காத வீட்டில் நிலவிய மௌனம் கூட இரைச்சலாய் இருந்தது அவனுக்கு!
‘கல்கி! யூ ஆர் கில்லிங் மீ’ என்று வாய் விட்டு புலம்பினான்.
மணி பார்க்க பத்து! கல்கியை அறிந்தவனுக்கு அவள் தன்னைப் பற்றி அறியாமல் உறங்கியிருக்க மாட்டாள் என்று தெரியும். உண்மையும் அதுதான்!
இன்று என்ன சொல்லி அவனிடம் பேசுவது என்று பெண் யோசிக்க, பெண்ணின் யோசனையில் உழன்றவனோ அவள் உள்ளம் நோகவேண்டாம் என்று நினைத்து அவனாகவே பெரிய மனது வைத்து,
‘ஐ கேம் ஹோம் மா’ என்று கல்கிக்கு மெசெஜ் போட்டான். அதனைப் பார்த்த கல்கிக்கு
‘பரவாயில்லை, இன்னிக்கு சீக்கிரம் போய்ட்டார்’ என்று நிம்மதியாய் இருக்க, படுத்துவிட்டாள்.
இருந்தும் அவனிடம் பேசவேண்டும் போல் உணர்வு எழுந்தது. சண்டைக்குப் பின் சரியான பேச்சுவார்த்தை இருவருக்குள்ளும் இல்லை, அதன்பின் இவளுக்குத் தேர்வுகளும் வந்துவிட இவளின் கவனம் படிப்பில் மட்டும்! இப்போது அவன் குரல் கேட்க ஆவல்!
அங்கு வரப்ரசாத்திற்கும் அதே ஆவல்தான்! என்ன அவளை போல் அக்கறை மட்டுமில்லை, அகக் கரை உடைத்த காதலும் கூட அவனிடம். அவனின் விழைதல் பிழையா? என்று கூட அவனிடம் ஒரு எண்ணம். எத்தனை தூரம் இது செல்லும்? கல்கிக்கும் தன்னைக் குறித்து அது போல் எண்ணம் இருக்குமா? வீட்டில் ஒத்துக்கொள்வார்களா? ஏற்கனவே காதல் என்றால் கசக்கும் குடும்பம் அல்லவா? என்று எண்ணற்ற யோசனைகள் ஓட, அதன் ஓட்டம் நிறுத்த அழைத்தாள் கல்கி.
“மழையெல்லாம் இல்ல, ஏன் எனக்கு மெசெஜ் பண்ணியிருக்கீங்க?” என்றாள் என்னமோ அது தனக்கு தேவை இல்லை என்பது போல. அவள் அப்படி கேட்கவும் சுறுசுறுவென சிரஞ்சீவிக்கும் கோபம் ஏறியது. இங்கு இருந்தால் தான் வரும்வரை உறங்காமல் காத்திருப்பது. ஆனால் வாய் திறந்து சொல்ல முடியாத அளவு வீம்பா இவளுக்கு என்று நினைத்தவன் அவளைப் போலவே சாதாரணமாய்,
“அவுனு? அக்சுவலி அம்மாவுக்கு அனுப்பறதுக்குப் பதிலா உனக்கு மெசெஜ் அனுப்பிட்டேன் போல” என்று சொல்ல கல்கி ஒருவேளை அப்படி இருக்குமோ என்று யோசித்தவள்
“அத்தை நம்பர் அம்மான்னு இருக்கும், என் பெயர் கல்கி. ‘ஏ’வுக்கும் ‘கே’வுக்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியலையா?” என்றாள் நக்கலாக.
“அம்மா நம்பர் அம்மானு இருக்கும், உன் நம்பர் அம்மடூன்னு இருக்கும். இப்போ டவுட் க்ளியரா அம்ம…டூ” என்றான் கிண்டலாக இழுத்து.
கல்கியும் தெரியாமல் அனுப்பியிருப்பான் போல, எப்படியோ தனக்குத் தேவையானது கிடைத்துவிட்ட திருப்தியில்
“ஓகே நான் தூங்கப் போறேன்” என்று சொல்லிவைத்துவிட்டு நிம்மதியாய் உறங்கிவிட்டாள். அவளிடம் பேசிய நிம்மதியில் சிரஞ்சீவிக்கும் உறக்கம் தழுவியது.
அடுத்த நாள் தங்கையைக் காண அஞ்சனா யுகனுடன் வந்திருந்தாள். அக்காவை இத்தனை நாள் கழித்து காணவும் அவளிடம் கதைப்பேசவே கல்கிக்கு நேரம் சரியாய் இருந்தது. மாலையில் டீ குடித்தபடி அஞ்சனா, அங்கையற்கண்ணி கல்கி எல்லாரும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தையல் நாயகி ஆடுகளைப் பார்த்துக் கொண்டு வயலில் இருந்தார்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி யுகனை வாங்கி தன் மடியில் உட்காரவைத்தார் வெளியே சென்று வந்த உதயமூர்த்தி.
“இல்லைப்பா, கல்கிக்கு காலேஜ்ல டூர் எல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா கேட்டேன்” அஞ்சனா சொல்ல
“இவ படிக்கத்தான் போயிருக்கா, டூர் எல்லாம் போகவேண்டாம்” பட்டென உதயமூர்த்தி சொல்லவும் பெண்கள் முகம் மாறிப்போனது.
“ஏற்கனவே இவளை மெட்ராஸுக்குப் படிக்க அனுப்பிட்டு எனக்கு டென்ஷன். இதுல டூர் வேறயா? ஒழுங்கா படிக்கிற வழியை மட்டும் பார்க்கனும் கல்கி” என்றார் கண்டிப்புடன்.
அப்பா அப்படி பேச, அவரின் பேச்சை திசைத்திருப்ப வேண்டி அஞ்சனா “ப்பா, அவர் உங்களை நதியாவுக்கு எதாவது நல்ல வரன் வந்தா பார்க்க சொன்னார்ப்பா” என்றாள்.
“மாப்பிள்ளை சொன்னாரா?” என்று கேட்டவர் அஞ்சனா தலையசைக்கவும்
“நீ நதியாவோட ஜாதகம் எனக்கு அனுப்பி வைம்மா, தெரிஞ்சவங்க கிட்ட நான் சொல்லிவைக்கிறேன்” என்றவரின் பார்வை கல்கியின் மீது விழுந்தது.
“கல்கியை விட நதியா இரண்டு வயசுதானே பெரிய பொண்ணு?” என்று அஞ்சனாவிடம் கேட்க கல்கியோ அப்பா அடுத்து என்ன சொல்வாரோ என்று பயந்து பார்த்தாள்.
“கல்கி நதியாவை விட சின்னப்பொண்ணுதான்ப்பா. நதியா படிச்சு முடிச்சிட்டா. அதான் வரன் பார்க்கலாம்னு மாமாவும் அவரும் சொன்னாங்க” என்று அஞ்சனா சமாளித்துப் பேச
“இவளும் ஒழுங்கா போன வருஷம் காலேஜ் சேர்ந்திருந்தா அடுத்த வருஷம் படிப்பு முடிஞ்சிருக்கும். அடுத்த வருஷம் கட்டிக்கொடுத்துட்டு நான் நிம்மதியா இருந்திருப்பேன். இவதான் அடம்பிடிச்சு இப்போ இன்னும் இரண்டு வருஷம் நான் காத்திருக்கனும்” என்று உதயமூர்த்தி சொல்லவும்தான் கல்கிக்கு நிம்மதியாய் இருந்தது.
“அவ படிச்சதும் பார்க்கலாம்பா. இப்போ ஏன் அதைப் பேசுறீங்க,விடுங்கப்பா” என்று அஞ்சனா சொல்ல
“நீ ஈசியா சொல்லிடுவ அஞ்சு, எனக்குத்தானே பக்குன்னு இருக்கு. இவளை ஒரு நல்ல பையன் கையில பிடிச்சுக் கொடுத்திட்டா நிம்மதியா இருக்கும் . எனக்கு அப்புறம் உங்களைப் பார்க்க அண்ணன் தம்பியா இருக்கான்? உனக்காச்சும் குடும்பம், குழந்தைன்னு ஆகிப்போச்சு. இவளை நினைச்சுத்தான் கவலையே எனக்கு” என்றவரின் சட்டையை யுகன் பிடித்து இழுத்தான்.
“நான் இவனோட அப்படியே ஆத்துக்கரை வரைக்கும் போய்ட்டு வரேன். அங்கை வீட்டுக்கு எதாச்சும் வாங்கனும்னா சொல்லு” என்று கேட்டு விட்டு அவர் கிளம்பிப் போகவும் அக்காவின் முதுகில் அடி போட்டாள் கல்கி.
“என்னை ஏன் டி அடிக்கிற?” என்று அஞ்சனா முதுகைத் தேய்த்தபடி திட்ட
“அடிக்காம என்ன செய்ய சொல்ற? உன் நாத்தனாருக்கு மாப்பிள்ளைப் பார்க்கிற மேட்டரை சொல்ல இதான் நேரமா உனக்கு? அப்பாவோட லுக் அப்படியே என் பக்கம் வரவும் நான் பயந்துப் போய்ட்டேன் தெரியுமா?”
“படிப்பு முடியாம எல்லாம் அப்பா கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டார் டி லூசு” என்று அஞ்சனா சொல்ல
“நீயேன் கல்கி பயப்படுற? அப்பாவுக்கே தெரியும் மாப்பிள்ளைப் பார்க்கனும்னா கூட படிச்ச பொண்ணுங்களைத்தான் கேட்குறாங்கன்னு. அதுக்காகவே படிப்பு முடியறவரைக்கும் இந்த பேச்சு எடுக்க மாட்டார். நதியா பத்தி சொல்லவும் அவருக்குத் தோணியிருக்கும். அவர் மேலயும் தப்பில்லை, உன்னைக் கரை சேர்த்துட்டா எங்களுக்கும் நிம்மதி தானே டி” என்றார் அங்கையற்கண்ணி.
“எனக்கு அறிவில்லையா? பெத்த உங்களை விட வேறொருத்தன் என்னை நல்லா பார்த்துப்பானா? அப்பாவை விட வேற யார் என்னை நல்லா பார்த்துக்க முடியும். நீங்க பேசுறது எல்லாம் லூசுத்தனமா இருக்கு. அப்படி பொம்பள புள்ள வேண்டாம்னா ஏன் பெத்துக்கிட்டீங்க? இதுல அண்ணன் இல்லை தொம்பி இல்லன்னு” என்றாள் எரிச்சலாக.
“பார்த்தியா டி அப்பா இருந்தவரைக்கும் பயந்துட்டு வாய்ப் பேசல. இப்போ என்ன பேச்சு பேசுறா” அங்கை அஞ்சனாவிடம் குறை சொல்ல
“பயம் எல்லாம் இல்லை. நான் எதாவது சொல்லிட்டா உன் வீட்டுக்காரர் எமோஷனலா ஒரு லுக் விட்டு என்னை ஆஃப் பண்ணிடுவார். நானும் அப்பா பாவமேனு விட்டுடுவேன். அது மட்டுமில்லாம நான் என்ன சொன்னாலும் இவ சின்னப்பொண்ணுன்னு அவர் மதிக்கமாட்டார். அதுக்கு எதுக்குப் பேசிக்கிட்டுன்னு அமைதியா இருக்கேன் நான்” கல்கி பேச பேச அஞ்சனாவின் முகத்தில் புன்னகை.
“என்னடி? அவ பேசுறா நீ சிரிக்கிற?” கணவருக்கு ஆதரவாய் அங்கையற்கண்ணி பேசவும் அஞ்சனா உடனே
“பின்ன என்னம்மா எப்பவும் அண்ணன் இல்லை தம்பி இல்லைன்னு எங்களைப் பேசினா கடுப்பாகுதுல, ஏன் நான் இவளைப் பார்க்க மாட்டேனா? அக்கா தங்கச்சி எல்லாம் பாசமா இருக்கறதில்லையா?” என்றாள் கோபத்துடன்.
“சும்மா படிக்க அனுப்பிட்டு லீவுக்கு வரவகிட்ட பாசமா பேசாம இப்படி பேசினா? கல்பனா சாவ்லாவை நிலாவுக்கே அனுப்பினாங்க. அப்பா என்னடான்னா கல்கியை சென்னைக்கு அனுப்பிட்டு செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பின மாதிரி பதறுறார்” என்றாள் அஞ்சனாவும் எரிச்சலாக.
“அடி போடி! காலம் கெட்டு கெடக்கு. நிலாவுல கூட பொண்ணுங்க பத்திரமா இருந்திடலாம்டி. பொறுக்கிப் பசங்க கிட்ட இங்கதான் இருக்க முடியறதில்லை”
“அதுக்குன்னு பயந்துட்டே இருந்தா ஆச்சா?” என்று அஞ்சனாவும் அம்மாவிடம் பதிலுக்குப் பதில் பேச கல்கி அமைதியாகவே இருந்தாள்.
அந்த டிரைவிங் க்ளாஸ் நிகழ்வு அம்மாவின் பேச்சில் நினைவில் எழ, ஒருவித இறுக்கம் அவளிடம். அதனால் அமைதியாகிவிட அஞ்சனாவோ
“ஏய் டூர் போகும்போது நீ போய்க்கலாம். அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத கல்கி. அப்பாவுக்கு சொல்லாம போனா போச்சு” என்று சொல்ல, அஞ்சனாவில் பேச்சில் சுயத்திற்கு வந்த கல்கி
“ஏன் க்கா? என்னைப் போக சொல்றியே? நீ டூர் எல்லாம் போகலன்னு ஃபீல் பண்ணலையா?” என்று அக்காவிற்காக கல்கி யோசிக்க தங்கையைப் பார்த்து புன்னகைத்தவள்
“கிடைக்காதுன்னு தெரிஞ்ச பின்னாடி அதை நான் கொஞ்சமும் நினைக்கறதில்ல கல்கி. வந்தா வரட்டும் போனா போகட்டும்தான். டூர் போகலன்னா என்ன மனோ கூட வருஷம் வருஷம் வெளியூர் போய்ட்டுத்தானே இருக்கேன்” என்று இயல்பாய் சொல்லிவிட்டாள் அஞ்சனா.
கல்கியென்றால் அங்கையற்கண்ணிக்கு தனி ப்ரியம். மாமியார் தன்னைப் பேசினால் கணவர் கூட கேட்கமாட்டார். ஆனால் கல்கி திட்டு வாங்கினாலும் கூட அம்மாவுக்குப் பரிந்து பேசுவாள். அதனால் மகள் முகம் வாடியிருப்பது பொறுக்காமல் “டூர் போகனும்னா நீ அக்கா சொல்ற மாதிரி போ கல்கி. பணம் வேணும்னா அம்மா தரேன், காலேஜ்லதானே கூட்டிட்டுப்போவாங்க, அப்போ பத்திரமா போய்ட்டுவா. உங்கப்பா கிட்ட சொல்லவேண்டாம்” என்று சொன்ன அம்மாவை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் கல்கி.
“ஒருத்தி ஆடு மேய்ச்சிட்டு களைப்பா வருவாளே காஃபி தண்ணி கொடுப்போம்னு இல்லாம, இவளுங்க கூட சேர்ந்து கதையளந்து இருக்கியா நீ?” என்று மருமகளிடம் காய்ந்தார்.
கல்கியைப் பார்த்தவர் “ஏய் சின்னக்குட்டி! வந்து டீவியைப் போட்டுவிடு டி” என்று சொல்லி
“என்ன ரொம்ப பேசுற நீ? எங்கம்மாவை நான் இல்லனதும் ரொம்ப வேலை வாங்குறியா?” என்று கல்கி அவரிடம் வாய் பேச
அங்கை உடனே “அஞ்சு! நீ போய் ஆத்தாவுக்கு டீவியைப் போட்டுவிடு. கல்கி பேசாம வந்து இந்த வெங்காயத்தை அரிஞ்சுக் கொடு” என்று மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டார். விட்டால் இருவரும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரியுமே.
இரவு உணவின் போது உதயமூர்த்தி அஞ்சனாவிடம் , “நதியாவுக்கு சுத்த ஜாதகம் போல, அந்த பிள்ளைக்கு ஏத்தமாதிரி இரண்டு வரன் வந்திருக்கு. மாப்பிள்ளைக்கு நேரம் இருக்கும்போது எனக்குப் போன் செய்ய சொல்லு அஞ்சு, பேசனும்” என்றவர் அங்கையற்கண்ணியிடம்
“அங்கை! கல்கியோட ஜாதகத்தையும் ஒரு நாள் பார்க்கனும். எடுத்து வை” என்று சொல்லிவிட்டு கல்கியைப் பார்த்தார்.
“இங்க பாரு கல்கி! நீ ஆசைப்பட்ட படிப்பு படிக்க வைச்சாச்சு. படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போறேன்னு நிக்காம ஒழுங்கா கல்யாணம் செஞ்சுக்கனும்” என்றார் உதயமூர்த்தி.
“ப்பா, படிக்கிறதே வேலைப் பார்க்கிறதுக்குத்தானே?” என்று கல்கி அவளையும் மீறி பேசிவிட
“இதுக்குத்தான் உன்னைப் படிக்க அனுப்ப மாட்டேன் சொன்னேன். அக்காவைப் பாரு ஒழுங்கா சொல்ற பேச்சுக் கேட்டு படிச்சா, படிச்சதும் கல்யாணத்து ஒத்துக்கிட்டா. நீ எல்லாத்துக்கும் ஏட்டிக்குப்போட்டியாவே பேசு. இப்போ படிக்கனும்ன்ற, அப்புறம் வேலைக்குப் போகனும்னு நிப்ப, அப்போ இன்னும் எத்தனை வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் செய்றது உனக்கு. பெத்தவங்க பேச்சைக் கேட்க கூடாதுன்னே நீ சபதம் எடுத்திருக்கியா?” என்றார் கடுமையாக.
இதற்குப் பதில் பேசினால் இன்னும் வாக்குவாதம் தான் வரும் என்பதால் கல்கி அமைதியாகிவிட்டாள். எப்போதும் தன் சிறகுகளை வெட்டி சிறைப்படுத்துவதே இவர்கள் வேலை என்று எண்ணியவள் புரிந்துகொள்ளாதவர்களிடம் பேசி என்ன பயன். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.
ஆனால் அப்பா சீக்கிரமே தன்னை ஒரு இக்கட்டில் தள்ள போகிறார் என அக்கணம் அவள் அறியவில்லை. அப்பாவின் பேச்சில் கல்கியின் முகம் வாட அங்கை குறுக்கீட்டார்.
“இரண்டு வருஷம் போகட்டும்ங்க. இப்பவே எதுக்கு இதைப் பேசிக்கிட்டு. சின்னப்பொண்ணுங்க அவ” என்றதும் மகளின் முகம் பார்த்தவருக்கும் ஒருமாதிரியாகிவிட அந்த பேச்சை அத்துடன் விட்டார்.
அப்பாவிடம் திட்டுவாங்கியவளுக்கு மனது ஒரு மாதிரி இருக்க உறக்கம் வராமல் புரண்டாள். இதில் வரப்ரசாத் என்பவன் அவளின் நினைவில் இல்லாமல் போக, அவனுக்கு அப்படி இல்லை.
முடிவிலியாய் தன்னைக் கல்கி ஆட்கொண்டுவிட்டாள் என்பது சிரஞ்சீவிக்குத் தெள்ளத்தெளிவாய்ப் புரிந்தது. நேற்றுப் போல் கலக்கமெல்லாம் இல்லை அவனிடம்!
முழுக்க முழுக்க காதல் மயக்கம் மட்டுமே! கல்கிக்கு மட்டும் தன் மீது விருப்பமிருந்துவிட்டால் வேறென்ன வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். அம்மா அப்பாவின் காதல் சின்னமாய் இருந்துவிட்டு காதலிக்கத் தயக்கமென்ன தடையென்ன என்ற நிலை!
இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஏன் என் வாழ்வில் இல்லை என ஏங்க வைத்தாள் கல்கி. பிரிவில் அவள் மீதான ப்ரியம் கூடிப்போனது.
ஆவல் காதல் தேடல் என அத்தனை உணர்வுகளுடன் அச்சமும் சேர்ந்தே இருந்தது. காதல் என்பது இருவரின் சங்கமம் அல்லவா? தான் மட்டும் அவள் நினைவாய் இருக்க, கல்கிக்கு அப்படி இல்லையென்றால் என்று நினைக்கவே அச்சமாய் இருந்தது சிரஞ்சீவிக்கு. அதே நேரம் இது குறித்து அவளிடம் வெளிப்படையாய்ப் பேசவும் மனமில்லை. படிக்கும் பெண்ணிடம் எப்படி காதல் சொல்வது என்ற எண்ணம். இன்றும் அவள் அழைப்பாளா என்று ஏங்கித் தவிக்க, அவள் அழைக்கவே இல்லை என்றதும் அவனுக்கு வருத்தமாகிப்போனது.
“கல்யாணம் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு தானே டி மாமா பண்ண சொல்றார், என்னைக்கா இருந்தாலும் செய்யத்தானே வேணும். அதுக்கு ஏன் ஃபீலிங்?” என்று ஜெகதீஷ் பேசவும் கல்கிக்குக் கோபம் ஏறியது. வீட்டில் அவளை எப்போதும் திட்டினாலும் நண்பனாய் அவள் தேடுவது ஜெகதீஷைத்தான்.
அதனால் நேற்று அப்பா பேசியதை பொறுக்காமல் அவனிடம் பகிர, அவனோ இன்னும் இரண்டு வருடம் தான் காத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு மேல் தாங்காது என்பதால் அவன் நிலையில் இருந்து பேசினான்.
“படிச்சு முடிச்சா கல்யாணம்தான் செய்யனுமா டா? அப்போ நான் எப்போ வேலைக்குப் போறது. கல்யாணம், குழந்தைனு அப்படியே சைக்கிள் ரீபிட் ஆகனுமா?”
“நீ ரொம்ப யோசிக்கிற டி, ஃப்ரீயா விடு. வேலைக்கு எல்லாம் கல்யாணம் ஆனாலும் போகலாம்” என்று ஜெகதீஷ் எளிதாய் அவளின் உணர்வின் ஆழம் தெரியாமல் வாய்விட, இவனிடம் ஏன் சொன்னோம் என்று நினைத்தாள் கல்கி.
“நான் மேல படிக்கனும்னு இருக்கேன். அதுவும் டெல்லில” என்று கல்கி அவள் ஆசையை சொல்ல, ஜெகதீஷோ அவள் வீட்டினரை அறிந்தவனாக,
“உன்னை மாமா ஒருதடவ சென்னைக்கு படிக்க அனுப்பிட்டார்னு பயங்கரமா கனவு காணாதடி. சென்னைக்குப் போகறதுக்கே அத்தனை அக்கப்போர். இதுல டெல்லி” என்றான் சலிப்பாக. இத்தனை வருடமாய்ப் பார்க்கிறான் தானே? அதனால் அவன் எதார்த்தம் பேசினான்.
அவன் பேச்சைக் கேட்கவும் கல்கிக்கு இன்னும் எரிச்சல் கூடியது. இவனும் அவள் அப்பாவைப் போலவே பேசுகிறானே என்று நினைத்தாள்.
“ஏன் கனவு கண்டா என்னடா தப்பு?” என்று கேட்கும்போதே இன்னொரு அழைப்பு வர, அழைத்தது சிரஞ்சீவி. நேற்று முழுவதும் கல்கியிடம் பேசாமல் இருந்துவிட, இன்று பகலில் அவளிடம் பேசிவிடுவோம் என்று மனது கேட்காமல் அழைத்துவிட்டான். கூடவே கோபமும் இருந்தது, ஊருக்குச் சென்றதும் தன்னை மறந்துவிட்டாளே என்று.
அப்போதுதான் அவன் நினைவே வந்தது. நேற்று வேறு அவனிடம் பேசவில்லையே என்று நினைத்தவள் ஜெகதீஷிடம்
“நான் அப்புறம் பேசுறேன்” என்று கட் செய்தவள் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்றாள்.
“என்ன கல்கி? பிஸியா இருந்த போல. அப்புறம் கூப்பிடவா?” என்று சிரஞ்சீவி கேட்க
“இல்லை, நீங்க சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?” என்றவளின் குரலில் வழக்கமான உற்சாகமே இல்லை. அது வஞ்சியை உள்ளமெல்லாம் நினைத்திருப்பவனுக்கு சொல்லாமலே புரிய
“யாராச்சும் எதாவது சொன்னாங்களா?” என்று கேட்க கல்கிக்கு ஆச்சர்யம்.
“ஏன் அப்படி கேட்குறீங்க?”
“எப்பவும் கல்கிட்ட இருக்க ஜோஷ் இல்லையே, வேலை முடிஞ்சு வரப்போ உங்கிட்ட பேசினா எனக்கு எனர்ஜெட்டிக்கா இருக்கும், ஆனா இப்போ அது மிஸ்ஸிங்” என்றான் வரப்ரசாத்.
“எல்லாம் என் அப்பாதான்” என்று சொல்ல, அவன் என்னவென்று கேட்க எல்லாம் சொல்லவும் சில நொடி அமைதி சிரஞ்சீவியிடம். அவளுக்காக அவளிடத்தில் நின்று யோசித்துப் பேசினான்.
காதல் எல்லாவற்றையும் காதலிக்கும்! கனவுகளை, கோபத்தை, குறையை என்று அத்தனையும் ஏற்கும் பேரன்பே காதல்!! இது பிடிக்கும் இது பிடிக்காது என்பதில்லை காதல்! அப்படித்தான் கல்கியின் அத்தனையையும் அணுஅணுவாய் காதலித்தான். எப்படி எங்கு தொடங்கியது இத்தனை பிடித்தம் என அவனின் அறிவுக்குத் தெரியவில்லை.
“கல்கி! அவர் அப்படி சொன்னா சொல்லட்டும். நீ ஏன் கண்டுக்கற?” என்று சிரஞ்சீவி நிதானமாய்க் கேட்க
“எப்படி அப்படியே விட சொல்றீங்க? எனக்கு இரிட்டேட் ஆகுது. எனக்கு ஹையர் ஸ்டடிஸ் செய்யனும் ஆசை. ஒரு சின்ன மாற்றமாவது என்னால இந்த உலகத்துல வரனும்னு ஆசை. படிச்சு முடிச்சதுமே கல்யாணம்னு சொன்னா எப்படி? எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் வருத்தமாக. அவளின் வருத்தமான குரல் அவனையும் வருத்தியது.
“அம்மடூ! லிஸன். உனக்கு என்ன வேணும்னு நீதான் டிசைட் செய்யனும் கல்கி. உங்க அப்பா முதல்ல சென்னைக்கே அனுப்பாம ஒரு வருஷம் விட்டவர்தானே? உன்னைப் புரிஞ்சிட்டு சென்னைக்கு இப்போ அனுப்பினார்தானே? திங் பாஸிட்டிவிலி மை கேர்ள்! நீ இந்த கல்யாணம் அது இதுன்னு எதையும் யோசிக்காம உன்னோட படிப்புல கவனம் வை”
“உன்னோட டிடர்மினேஷன் எனக்குத் தெரியுது உனக்குத் தெரியலையா? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு நடக்கும்னு உங்கப்பா சொன்ன விஷயத்துக்காக இன்னிக்கு அப்ஸெட் ஆவியா? சில் ஆவுதாம் அம்மடூ! லைஃப் இஸ் எ மிரக்கிள். எந்த நிமிஷம் வேணும்னாலும் எதுவும் மாறும். இப்பவே அப்பா நமக்குக் கல்யாணம் செஞ்சிடுவார்னு யோசிச்சு ஏன் உன்னோட அமைதியை நீயே கெடுத்துக்கிற? உன்னோட ஆர்வம் பார்த்து உன் அப்பாவே என் பொண்ணு இன்னும் படிக்கட்டும் சொல்லனும். ஆக்ஷன் ஸ்பீக்ஸ்” என்றான் அழுத்தமாய்.
அவன் பேச பேச கல்கிக்கும் இப்பவே ஏன் அதை நினைக்க வேண்டும். வருந்த வேண்டும். இவன் சொல்வது போல் அப்பாவின் மனம் மாறினால்? என்று யோசிக்க தானாய் இதழில் முறுவல் மலர்ந்தது. மனம் அவனிடம் பேசிய பின் மிகவும் லேசானது.
தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசும் அவன்மீது ஒரு தனிப்ரியம் உருவானது கல்கிக்கு. அதனால் புன்னகையுடன் அவனிடம்
“தெலுங்குல நல்ல பிள்ளைன்னு எப்படி சொல்றது?” என்று கேட்க
“ஏன்ட்டீமா, நேனு..ப்ச் நான் என்ன பேசுறேன்?” என்று அவன் பல்லைக் கடித்தான்.
“சொல்லுங்க ப்ளீஸ்” என்று அவள் சொல்லவும்
“மன்ச்சி பிள்ளா” என்றான் புன்னகையுடன்.
“எஸ்! நீங்க ரொம்ப ரொம்ப மன்ச்சீ பிள்ளா” என்றதும் அந்த பக்கம் வாய்விட்டே சிரித்தான் சிரஞ்சீவி.
“பிள்ளடா சொல்லனும் எனக்கு”
“சரி டா சேர்த்துக்கோங்க. தேங்க்ஸ்! ஒரு மாதிரி கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். இப்போ நல்லா இருக்கு” என்றாள் மனதார.
“சாப்பிட்டீங்களா?” என்று பேச
“பார்டா! இரண்டு நாள் கழிச்சு என்னை விசாரிக்க எல்லாம் கல்கிக்கு மனசு வருது” வரப்ரசாத் கிண்டல் செய்தான்.
“நான் கேட்கலன்னா சாப்பிடாம இருக்கீங்களா என்ன? குழந்தையா நீங்க?” என்று அன்று அவன் பேசியதை மனதில் வைத்துப் பேச
“உனக்கு இன்னும் கோவம் போகலையா கல்கி? அன்னிக்கு அந்த கேஸ் டென்ஷன் கத்திட்டேன்” என்றான் வரப்ரசாத்.
“எனக்கு அக்கறை இருக்கக் கூடாதுன்ற மாதிரி பேசினா எனக்குக் கோவம் வராதா?”கல்கியும் கொஞ்சம் கோபமாய்க் கேட்க
“நான் சொன்னது உண்மைன்ற மாதிரித்தானே நீ நடந்துக்கிற? ஊருக்குப் போனதும் பாரு இரண்டு நாள்ல என்னை மறந்துட்ட”
அவனையும் மீறி அவன் தேடல் வார்த்தைகளில் வெளிப்பட
“நான் ஒன்னும் உங்களை மறக்கல”
“இஸீட்? நேத்து ஒருதடவ கூட எங்கிட்ட நீ பேசல”
“பேசலன்னா மறந்துட்டாங்கன்னு அர்த்தமா?”
“அப்படி இல்லையா என்ன?”
“இல்லை! இங்க நான் சில டைம் உங்களை நினைச்சுப்பேன். அப்பா திட்டும்போதெல்லாம் நீங்க என்னை எங்கரெஜ் பண்றதுதான் எனக்கு ஞாபகம் வரும். நைட் அக்கா கூட பேசிட்டு சாப்பிடும்போதும் உங்களோட பேசுறது ஞாபகம் வரும். சொல்லாம இருக்கேன்றதுக்காக உங்களை நினைக்கல சொல்வீங்களா?” என்று எதார்த்தமாக சொல்லிவிட அவனுக்குத்தான் தலைகால் புரியவில்லை.
‘பரவாயில்லை, என்னைக் கொஞ்சமாவது நினைக்கிறாளே’ என்று மகிழ்ந்து போனான். பேசிக்கொண்டே இருக்கும்போது சிரஞ்சீவிக்கு வேறு கால் வர
“ஸாரி கல்கி! இன்னொரு கால். அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லி அவன் வைத்துவிட்டான்.
அன்று இரவு எப்போதும் போல் சீரஞ்சீவியின் நினைவு வந்துவிட அவனுக்கு அழைக்கலாமா என்று நினைக்க அவனிடமிருந்து வீடு வந்துவிட்டேன் என்று மெசெஜ் வர, இவளுக்குப் புன்னகை. அடுத்து வந்த நாட்களும் கல்கியைக் காக்க வைக்காமல் வரப்ரசாத் வீடு வரவும் அவளுக்கு மெசெஜ் செய்துவிடுவான். நேரம் கிடைக்கும்போது இவள் அழைத்தால் பேசுவான். பேசுவான் என்பதை விட அவளைப் பேசவிட்டு ரசிப்பான்.
எவ்வளவு பேசினாலும் அவன் மனதின் காதலை மட்டும் கல்கியிடம் சொல்லவே இல்லை அவன். அவள் கள்ளமற்ற உள்ளத்துடன் அவனிடம் பழக, அதைக் கெடுக்க நினைக்கவில்லை. அவளுக்கான காதல் காத்திருப்பைக் கூட சுகமாக்கியது. அப்படியே நாட்கள் ஓட, கல்கி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தாள்.
கல்கியை நேரில் பார்க்கவும்தான் தன் மனம் அவளை எத்தனை தேடியிருக்கிறது என்பதை சிரஞ்சீவியே அறிந்தான். தூர நிலா அருகே வந்து உணர்வு!!
‘எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய்’