கல்கியிடம் இரண்டு நாட்கள் பேசவே நேரமில்லை வரப்ரசாத்திற்கு, கேஸ் விஷயமாய் சுற்றிக்கொண்டிருந்தான். பேச மட்டுமில்லை பார்க்கவுமில்லை என்பதே மூன்றாம் நாள்தான் உரைத்தது. கல்கி காலையில் இப்போதெல்லாம் வாக்கிங் வருவதில்லை. சில நாட்கள் உடல் நலமில்லையென்றாலோ ப்ரீயட்ஸ் என்றாலோ வரமாட்டாள் என்பதால் சிரஞ்சீவி அதனைப் பெரிதாய் எடுக்கவில்லை.
அந்த வாரம் கேஸ் ஹியரிங் ஒன்று இருக்க சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. கல்கியைத் தனக்குத் தெரியும் என்ற எண்ணம் வேறு அவனிடம். கல்கியும் அவன் மீது கோபமில்லை என்று சொல்லியிருக்க ஒரு பிரச்சனையுமில்லை என்ற பிம்பமே.
கல்கி படித்து முடிக்கட்டும். அவளுக்குத் திருமணம் பேசும்போது பார்த்துக்கொள்ளலாம், அதுவரை இதே நட்பு நிலை தொடரட்டும் என்ற உள்ளத்தெளிவு அவனிடம் தெள்ளத்தெளிவாய் இருந்தது. ஆனால் அதெல்லாம் கல்கிக்கும் இருக்கும் என்று தவறாய்க் கணித்துவிட்டான்.
வரப்ரசாத்தை பொருத்தவரையில் காதல் அழகானது! அது தவறில்லை என்ற மனப்பாங்கு அவனிடம். கல்கியைப் பொருத்தவரையில் காதலின் பரிணாமமே வேறு. அது ஒரு பெருங்குற்றம் என்று சொல்லிவளர்க்கப்பட்ட பெண். அதிலும் யமுனாவின் செயலினால் தாங்கள் சின்ன சின்ன விஷயத்துக்கும் எப்படி சுதந்திரமில்லாமல் இருந்தோம் என்று நினைக்க நினைக்க பெரும் உளைச்சல் அவளிடம்.
சிரஞ்சீவியின் ஸ்ருங்காரத்தை ரசித்து அதனில் லயித்திருந்த போது எந்த யோசனையுமில்லை கல்கிக்கு. வானம் போல் அது அவளைக் காத்து நிற்க, அதை இயல்பாய் ஏற்றாள். இப்போது இந்த ப்ரியத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்பது நன்றாய்ப் புரிய புரிதல் தெளிவு தரும் என்றால் இவளுக்கு குழப்பம் மட்டுமே, கூடவே குற்றவுணர்வும்..!
அதற்காக சிரஞ்சீவியை விட்டுவிடும் எண்ணமில்லை. அவனில்லாத ஒரு வாழ்வை நினைக்க கூட முடியவில்லை. மொத்தமாய் அவளைக் களவாடியிருந்தான் அவன். அவன் அன்பில் இவள் காணாமல் போயிருந்தாள். சிரஞ்சீவி மீது கொள்ளை கொள்ளையாய் அன்பிருந்தது, அவன் ஆயுளுக்கும் அவளுடன் வர வேண்டும் என்ற ஆவல் இருந்தது. வார்த்தையால் சொல்லாவிடினும் குறையாத காதல் இருந்தது.
ஆனாலும் அறிவு அவளை சாடியது.! எதற்காக இங்கு நீ வந்தாய் என்று திட்டியது. அத்தையைக் காதலித்தார் என்று அவ்வளவு பேசிவிட்டு இன்று அவர் மகன் மீது இப்படி மயக்கம் கொண்டிருக்கிறாயே என்று ஏசியது. படிப்பதற்காக அத்தனை பிடிவாதம் பிடித்ததென்ன? ஒரு வருடம் காத்திருந்தது என்ன என்று நினைக்க நினைக்க மனம் கூசியது.
அப்பாவிடம் எவ்வளவு நம்பிக்கையாய் உறுதியாய் பேசினாய். இன்று அத்தையைப் போலவே உன் அப்பாவின் நம்பிக்கையை நீ உடைத்துக் கொண்டிருக்கிறாய் என்ற உள்ளத்தின் கூச்சலை அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை. அதே நேரம் சிரஞ்சீவியும் வேண்டும் என்று மனம் எண்ண இதயத்தின் இரட்டை வேஷத்தில் தவிப்பதும் மறுகுவதுமாக அவள் பொழுதுகள் இருந்தன.
போதாக்குறைக்குக் குண்டூரில் காரமாய் சாப்பிட்டது அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போக, இரண்டு நாட்களாய் தயிர் சாதம்தான் உண்கிறாள். கல்லூரி விட்டு வந்தவளுக்குக் களைப்பாய் இருந்தது. அப்போது பார்த்து ஜெகதீஷ் அழைத்தான். மனமெல்லாம் கல்கி மீதான அன்பு நிறைய இருந்தாலும் கோபம் தான் முன்னே நின்றது அவனுக்கு.
“சொல்லு மாமா” என்று அவளின் குரல் சோர்வாய் ஒலிக்க
“என்ன சொல்லு மாமா? எங்கிட்ட நீ பேசி இரண்டு வாரம் ஆகுது டி. நானும் நீயா போன் பண்ணுவ பார்த்தா உனக்கு என்னைக் கூப்பிட கூட நேரமில்லை இல்லையா?” என்றான் கோபமாக.
“அப்படி இல்லை, மறந்துட்டேன்”
“அதான் உன்னோட அத்தை வந்ததும் என்னை சுத்தமா மறந்துட்ட. உங்க அத்தை வீட்டுக்குப் போனது கூட அஞ்சு சொல்லி எனக்குத் தெரியுது. நீ சொல்லல” என்றான் குற்றச்சாட்டாக.
“அஞ்சு சொன்னாதானே? நான் சொன்னா என்ன அவ சொன்னா என்ன? அப்பா வெள்ளிக்கிழமைதான் பெர்மிஷனே கொடுத்தார், அப்புறம் அவசரமா கிளம்பிட்டோம்” என்று கல்கி பேசிக்கொண்டே போக
அஞ்சு சொல்வதும் கல்கி சொல்வதும் ஒன்றா என்று நினைத்தான் ஜெகதீஷ். ஜெகதீஷுக்கும் அஞ்சனாவிற்கும் கிட்டதட்ட ஒரே வயதுதான். அவர்களும் நண்பர்களை போலவேதான் பழகுவார்கள். அதனால் கல்கி அப்படி சொல்ல, ஜெகதீஷுக்கு அஞ்சனா நல்ல தோழி, கல்கி அப்படி இல்லையே.
அந்த கோபத்தில்
“ஓஹ், அவ சொன்னா நீ சொல்ல மாட்டியா? நான் உனக்கு ரொம்ப வேண்டாதவனாகிட்ட டி. எங்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போனா என்ன? உங்கத்தையை திட்டும்போதெல்லாம் எங்கிட்ட திட்டுவ. இப்ப சேர்ந்ததும் என்னை மறந்துட்ட” என்றான் எரிச்சலாக.
கல்கிக்கு அவன் பேச்சு இன்னும் வருத்தமாய் இருந்தது. அவனிடம் தன் மன உளைச்சலை சொல்லலாம் என்று நினைத்திருக்க, ஜெகதீஷும் இப்படி பேசிவிட அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“ஏன் நீ எங்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்றியா? உன் மாமா வீடு போகும்போது எல்லாம் எங்கிட்ட பெர்மிஷன் கேட்கிறியா?” கல்கியும் கோபத்தில் பேசினாள்.
“நான் சொல்லலன்னா நீயும் சொல்லமாட்டியா?”
“முதல்ல ஏன் சொல்லனும் கேட்கிறேன். இங்க பார் நான் எது செஞ்சாலும் உங்கிட்ட சொல்லிட்டு செய்யனும்னு எனக்கு அவசியமில்லை. எங்கப்பா கூட என்னைக் கேள்வி கேட்கல. நீ கேட்பியா?” என்ற கல்கியின் பேச்சில் காயப்பட்டது ஜெகதீஷின் மனம்.
“கல்கி..?”
“பேசாத.. உனக்குப் பிடிச்சத செஞ்சு நான் என்ன செய்யப்போறேன்னு சொன்னாதான் நீ பேசுவன்னா நீ பேசவே வேண்டாம் ராசா. வை போனை” என்று கட் செய்துவிட்டாள். ஜெகதீஷ் சீக்கிரமே தன் மனதில் இவளுக்கான இடத்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
கல்கிக்கு சிரஞ்சீவியைப் பார்க்கவே தயக்கமாய் இருந்தது. என்னவோ அப்பா பேசும்போதெல்லாம் குற்றவுணர்ச்சியாய் இருக்க இப்போது படிக்க வேண்டும் என்பது மட்டுமே ப்ரதான எண்ணமாய் இருக்க, காதல் சொன்னவனைக் கண்டுகொண்டு பார்க்க துணிவில்லை.
இயல்பாய்க் கூட சிரஞ்சீவியிடம் பேச முடியவில்லை, அப்பாவின் நினைப்பு வந்துவிடுகிறது. பேசாமல் இருந்தால் சிரஞ்சீவி என்ன நினைப்பான் என்ற கவலை. அதனால் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். குண்டூரில் இருந்து வந்து ஒருவாரம் ஆகியிருக்கும். சிரஞ்சீவிக்கும் வேலை முடிந்து இருக்க, கல்கியைப் பார்க்கவே முடியவில்லை.
சீக்கிரமே வீட்டிற்கு வந்தவன் கல்கி என்று அறையில் இருந்தவளை அழைக்க கல்கியோ அறைக்குள் இருந்தே “எனக்குப் படிக்கிறது இருக்கு. நான் முன்னாடியே சாப்பிட்டேன்” என்றாள்.
இதற்கு முன்னும் இப்படி சொல்லியிருக்கிறாள். ஆனால் அது சொல்லும் வகை வேறாக இருக்கும்.
“மிஸ்டர். காரம் படிச்சிட்டு இருக்கேன். முன்னாடியே சாப்பிட்டேன், நீங்க சாப்பிடுங்க. முடிச்சுட்டு வரேன்” என்று ஒரு உற்சாகமாய்ப் பேசுவாள். சிரஞ்சீவியும் இரண்டு நாட்கள் பொறுத்து இருந்தான். கல்கியின் உற்சாகமற்ற மன நிலை வசந்தி அக்காவிற்குக் கூட தெரிந்தது.
“என்ன பாப்பா நீ? ரொம்ப டல்லா இருக்க?” என்று கேட்டார்.
தோசை என்றால் அவன் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொள்ளும் இந்த காதல் மனம். அதனால்
“அக்கா, இட்லி செஞ்சிடுங்கக்கா” என்றாள் கல்கி. அவரும் இட்லி செய்துவிட்டு போனார். அடுத்து வந்த நாட்களும் சப்பாத்தி, பொங்கல் என்று செய்ய சொல்லிவிட்டாள்.
தற்செயலாய்ப் பார்க்காமல் இருப்பதற்கும் தன்னை வேண்டும் என்றே தவிர்ப்பதற்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியாதவனா சிரஞ்சீவி?
ஆனால் ஏன்? என்று தெரியவில்லை. பொறுத்துப் பார்த்தவன் ஒரு நாள் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். கல்கி அவன் வருவதைப் பார்த்தவள் அறைக்குள் நுழைந்துகொள்ள அறைக்கதவைக் காலால் தடுத்தவன், கல்கியை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
“எனக்குப் படிக்கனும்” கல்கி அவன் முகம் பார்க்காது சொல்ல
“என்னைக்குமே நான் படிக்க வேண்டாம்னு சொன்னதில்ல, பட் ஏன் நீ கொஞ்ச நாளா என்னை அவாய்ட் பண்ற அம்மடூ” என்றான் பொறுமையாகவே.
“நான் ஒன்னும் அவாய்ட் பண்ணல. எனக்கு நிஜமா படிக்கிற வேலை இருக்கு. தள்ளிப்போங்க”
“கல்கி, என்னாச்சு?” என்றவனின் குரலில் ஒரு விசாரனைத் தொனி.
“என்னாச்சு? ஒன்னுமில்லை” என்றாள் தன்னை இயல்பாய்க் காட்டிக்கொண்டு. குற்றவுணர்வு அவளை தவிக்க செய்திருந்தது. என்னமோ செய்யக் கூடாத தவறை செய்த உணர்வு. காதலை ஏற்கவும் முடியாமல் அதனை உதறவும் முடியாமல் தனக்குள்ளாகவே தவித்தாள்.
“கல்கி! டோண்ட் லை” என்றான் தீவிரமான ஒரு குரலில். கல்கி தன்னிடம் இருந்து விலகியிருப்பது அவனை பலவாறாக யோசிக்க வைத்தது. தன்னைப் பிடித்தும் ஏன் இந்த தயக்கம் என்ற நிலைதான்.
கல்கி பதில் பேசாமல் இருக்க “கல்கி! நானும் உன்னை பார்த்துட்டுதான் இருக்க, நீ ரெஸ்ட்லெஸா இருக்க. நான் வர நேரம் லைட் ஆஃப் பண்ணி ரூம்குள்ள போற, மனசுல இருக்கறதை சொல்லிட்டேன்றதால உங்கிட்ட நான் எந்த அட்வாண்டேஜும் எடுக்க மாட்டேன் கல்கி. முன்ன மாதிரி பேசுறதுக்கென்ன? டிரிட் மீ லைக் எ ப்ரண்ட்” என்றான்.
காதல் சொன்னவனை காதல் தவிர வேற எந்த உணர்வுடனும் பார்க்கமுடியவில்லை. உணர்ந்த போது தெரியாதது உரைத்த போது தெரிந்தது.
“ஆன்ஸர் மீ” என்றவனின் குரல் சற்றே உயர்ந்தது. கல்கியின் மௌனம் அவனை சத்தமாய்ப் பேச வைத்தது.
“கல்கி… ஏன் இப்படி தடுமாற? என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்” என்றான் சத்தமாக.
“தடுமாற வைக்கிறது உங்க வார்த்தையும் என் வயசும்தான்” என்றாள் கண்ணில் நீர் நிறைய.
“கல்கி…இதுல என்ன இருக்கு. நம்ம எந்த தப்பும் செய்யல” பொறுமையாய்ப் பேச வைத்தது கல்கியின் கண்ணீர்.
“இல்லை, நீங்க செய்யல. நான் தான் தப்பு செய்றேன்” என்றாள் உடைந்த குரலில்.
“அப்படி இல்ல கல்கி, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைடா”
“உங்களுக்கு இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை. என்னோட தப்புதான் எல்லாம்…” அவள் உணர்ச்சிவசத்தில் உளறிக்கொண்டு இருக்க கோபம் வந்தது சிரஞ்சீவிக்கு. காதல் எத்தனை அழகான உணர்வு. அதற்கு ஏன் அழுகிறாள் என்ற எரிச்சல் அவனுக்கு. அவளைத் தெரிந்த அளவு அவளின் நுண்ணிய உணர்வுகள் தெரியவில்லை, அறியவில்லை.
“இப்போ என்ன தான் உன் பிரச்சனை?” பொறுமைப் பறக்க அவன் கேட்க
“என்னால இன்னொரு யமுனாவா இருக்க முடியாது” என்று கல்கி உணர்ச்சிவசத்தில் தன்னை மீறி பேச அந்த வார்த்தைகள் சிரஞ்சீவியின் சினத்தை பல மடங்கு பெருக்கியது.
“ஷட் அப் இடியட்! ஜஸ்ட் ஷட் யுவர் மவுத், ஒரு வார்த்தைப் பேசாத” என்று விரல் நீட்டி கத்தினான். அதில் அவனைக் காயப்படுத்திவிட்டோம் என்று புரிய கல்கியின் கண்களில் கண்ணீர்..!
‘கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்’