“ஒரு முக்கியமான கேஸ் ஹாண்டில் பண்றேன் கல்கி, அதான் வர முடியல”
கல்கி அமைதியாய் இருந்தாள். அவனைக் கண்டு இதோடு ஐந்து மாதங்கள் ஆகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றாத அவன் மீது கடுங்கோபம் பெருகியது. அது அவளுக்குப் பிடிக்காத பழக்கமும் கூட.!
“கல்கி, பேசு. நான் சீக்கிரமே இந்த கேஸ் முடிஞ்சதும் வரேன்” சிரஞ்சீவி தன்மையாய் சொன்ன போதிலும் கல்கியின் கோபம் தீரவில்லை.
“நீங்க சொன்னபடி நான் ப்ரஸ்ட் மார்க் எடுத்துட்டேன். ஆனா நீங்க சொன்ன வாக்கைக் காப்பாத்தாதீங்க” என்று திட்ட
சிரஞ்சீவிக்கு சுர்ரென கோபம் ஏறியது. அது என்ன பேசும்போதே இப்படி செய்கிறாள் என. அதே நேரம் நீ சொன்னதை அவள் செய்தாள், அப்போது அவளின் எதிர்ப்பார்ப்பும் நியாயம்தானே என்ற எண்ணத்தில் கொஞ்சம் தணிந்தான். கல்கிக்கு மீண்டும் அழைத்தால் எடுக்க மாட்டாள் என தெரிந்து அம்மாவிற்கு அழைத்தவன் அவரிடம் பேசினான்.
“அப்புறம் உங்க அண்ணன் பொண்ணு என்ன பண்றா?” என்று கேட்க
“அவ எப்பவும் படிச்சிட்டே தான் இருக்கா. செம ப்ரியல்லண்ட்!” என்ற யமுனாவிற்குக் கல்கியைப் புகழ ஆரம்பித்தால் வாய் மூடாது. ஆசிரியரான அவருக்குக் கல்கி நன்றாகப் படிப்பது தெரிய எப்போதும் ஊக்குவிப்பார்.
“ப்ரசாத், சொல்ல மறந்துட்டேன். சுபாக்கா பேசினாங்கடா, அவங்க ஒரு அலையன்ஸ் சொன்னாங்க, பொண்ணு டாக்டராம். அழகா இருந்தாடா, அவங்கப்பா கூட டிஃபன்ஸ்ல இருக்காங்களாம், குண்டூர் பொண்ணும் கூட, உனக்கு போட்டோ அனுப்பவா?” என்ற யமுனா இப்போதெல்லாம் மகனின் திருமண பேச்சில் மிகுந்த ஆர்வமாய் இருந்தார்.
“ம்மா, இன்னும் ஒரு வருஷம் போகட்டும்” என்று சிரஞ்சீவி மறுத்து பேசியவன்
“ஏன் உங்களுக்குத் தெலுங்குப் பொண்ணுதான் வேணுமா? தமிழ் பொண்ணு வேண்டாமா?” என்று கேட்டான்.
“என்ன நீயா தமிழ் பொண்ணு கேட்கிற?” என்றார் ஆச்சர்யமாக.
“ஏன் கேட்கக் கூடாதா?” என்று மகன் திருப்பிக் கேட்டான்.
“நீ முன்னாடியெல்லாம் இப்படி பேசினதில்லையே ப்ரசாத். திடீர்னு தமிழ் பொண்ணு கேட்கிற? யாராவது ஐபிஎஸ் பொண்ணா?” என்று யமுனா மகனிடம் தோண்டித் துருவினார். (Valium) கொஞ்சமும் கல்கியாக இருக்கும் என்ற சந்தேகமில்லை அவரிடம். சிரஞ்சீவி இங்கு வந்தாலும் கல்கியிடம் மிகவும் அளவான பேச்சுகள்தான். ஆனால் பார்வை? அதைக் கவனிக்கவில்லை யமுனா.
“ம்மா, ஐபிஎஸ் எல்லாம் இல்ல” என்றவன்
“இப்போதைக்கு நீங்க எனக்கு எந்த பொண்ணும் பார்க்க வேண்டாம்” என்றான் கொஞ்சம் சீரியஸாகவே.
“நாங்க பார்க்க வேண்டாம்னா நீயே பார்த்துட்டியா?” என்று அவன் மனம் அறியக் கேட்டார் யமுனா.
சிரஞ்சீவி மறைக்கவெல்லாம் இல்லை. மிகவும் இயல்பாய் “ம்ம், பார்த்துட்டேன்” என்றதும் யமுனா அதிர்ந்துவிட்டார்.
“ப்ரசாத் நீ ஒரு பொண்ணை லவ் பண்றியா? கேஸுக்கு நடுவில உனக்கு லவ் பண்ண டைம் கிடைச்சா ஒன்னு உன்னை மாதிரி போலிஸ் இல்லைன்னா லாயராத்தான் இருக்கனும். அந்த பொண்ணு தமிழா? என்ன பண்றா?” என்று அவர் விசாரிக்க கல்கிக்கு இங்கு டென்ஷன் கூடியது.
“ம்மா ம்மா, ஸ்டாப் அந்த பொண்ணு ஒரு ஜர்னஸ்லிஸ்ட்” என்றவன்
“இவ்வளவுதான் இப்போதைக்கு சொல்வேன். இதுக்கு மேல கேட்டாலும் எங்கிட்ட பதில் வராது. அந்த பொண்ணு வீட்ல மேரேஜ் பேசும்போது நான் சொல்றேன், அப்போ நம்ம பேசிக்கலாம்” என்றான் அழுத்தமாக.
“என்ன ப்ரசாத் நீ? இப்படி சொல்ற? அந்த பொண்ணு வீட்ல ஒத்துப்பாங்களா?” என்றார் கவலையாக.
“அதெல்லாம் ஒத்துப்பாங்க, நீங்க இப்படியெல்லாம் நினைச்சுக் கவலைப்படுவீங்கன்னுதான் நான் சொல்லல. அப்பா கிட்ட சொல்லி அவரையும் டென்ஷன் பண்ணாதீங்க” என்றவன்
“கல்கி என்ன செய்றா? அவ கிட்ட போன் கொடுங்க” என்று இயல்பாய்ச் சொல்லவும் கல்கியிடம் போனை நீட்டினார் யமுனா.
“ஹலோ கல்கி எப்படி இருக்க?” என்று ஐந்து நிமிடம் முன் பேசியவன் கேட்கவும் கல்கிக்கு எரிந்தது.
“நல்லாயிருக்கேன்” என்றாள் சிரமப்பட்டு.
“அஹங்கார அம்மாயி டி நீ! எவ்வளவு திமிரா போனைக் கட் பண்ற? பட் அதெல்லாம் எங்கிட்ட நடக்காது” என்று சீண்டினான்.
அத்துடன் விடாது “ஐ மிஸ் யூ அம்மடூ” என்றான் ஆழ்ந்த குரலில்.
கல்கியால் அத்தையின் முன் ஒன்றும் பேசமுடியவில்லை. யமுனா கிச்சனில் ஏதோ மாலை நேர சிற்றுண்டி செய்துகொண்டிருந்தவர் இவளைப் பேசு என்று சைகையில் சொல்லிவிட்டு செல்ல,
“மிஸ் பண்ணிட்டு அங்கேயே இருந்துக்கோ” என்றாள் கல்கி கடுப்பாக.
“ஏன் டி? அம்மா இல்லையா அங்க? மரியாதை எல்லாம் காணும்” என்றதும்
“அதான் அத்தைக்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களே அப்புறம் என்ன?” என்று கல்கி எரிச்சலில் பேச
“லேதம்மா! எல்லாம் சொல்லல. அவங்க அலையன்ஸ் பார்த்து யார் மனசுலையும் என்னால ஒரு எண்ணம் வந்துட்டா, அதான் முன்னாடியே சொல்லி வைச்சேன்” என்றான் வரப்ரசாத்.
இவன் சொல்வது கூட சரிதானே, யாரோ ஒருவர் அவனை அப்படி ஒரு நொடி நினைத்தாலும் அது வருத்தம்தானே? இப்படியெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுதே என்று நினைத்த கல்கி
“இருந்தாலும் இந்த யமுனா புள்ளையை இவ்வளவு நல்லவனா வளர்த்து வைச்சிருக்க கூடாதுப்பா” என்றாள் கிண்டலாக.
“அந்த நல்லவனைத்தான் திட்டி போனைக் கட் பண்ணின நீ” அவளே மறந்துவிட்டு இயல்பாய்ப் பேச இவன் ஞாபகம் செய்துவிட
“அதானே? ரொம்ப நல்லவன்… கல்கிக்கு மட்டும் கெட்டவன்”
“ஒரு நாள் பாரு உன்னை சர்ப்ரைஸா வந்து மீட் பண்றேன். ரொம்ப பேசாத” என்றவன்
“ஓகே, இன்னொரு கால் வருது. பை” என்றவன் பதிலைக் கூட எதிர்ப்பாராமல் வைத்துவிட்டான்.
அவ்வளவுதான் அவனின் சமாதானங்கள். அதற்கு மேல் அவனுக்கும் வராது, கல்கியும் எதிர்ப்பார்க்க மாட்டாள். ஆனால் அவனிடம் பேசிய பின் கல்கியின் மனம் இறகாய் சிறகாய் விரிய அத்தையிடம் அந்த சந்தோஷத்துடன் ஓடிப்போனாள்.
**************************
கல்கி என்றால் ஜெகதீஷுக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போது கல்கி பிறந்தாள். அஞ்சனாவுக்கும் அவனுக்கும் கல்கியைத் தூக்கி வைத்துக்கொள்வதில் பயங்கர சண்டையாகும்.
எப்போதும் கல்கியின் துறுதுறுப்பு அவனை ஈர்க்கும். அவ்வளவு பேச்சும் அடியும் வாங்கினாலும் அடுத்த நிமிடமே ஒன்றும் நடக்காதது போல் இருக்கும் அவளின் பாவனை அவனை அதியசயப்படுத்தும். சொந்தமாய் இருக்கும் அவளை தன் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனின் கல்லூரி காலத்தில் தோன்றியதுதான். எதுவாக இருந்தாலும் மாமா மாமா என்று உரிமையாகக் கேட்பவள் அவனை பெரிய மனிதனாக உணரவைத்தாள்.
இந்த வருடம் அவள் எப்படியும் கல்லூரி முடித்துவிடுவாள் என்பதால் அவனின் மனதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம். இந்த முறை ஊருக்குப் போனதும் சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் சிரஞ்சீவியின் வீட்டின் முன் வந்து நின்றான்.
“பெரியம்மா கேப் வந்துடுச்சு, ஏய் கல்கி சீக்கிரம் வா” என்றான் ஜெகதீஷ். மூவரும் நதியாவின் திருமணத்திற்காக ஊருக்குச் செல்லத் தயாராயினர். ரெயிலில் யமுனா கீழ் பெர்த்தில் உறங்க, அப்பரில் ஒரு பக்கம் ஜெகதீஷும், இன்னொரு பக்கம் கல்கியும் இருந்தனர். கல்கி சிரஞ்சீவியின் மெசெஜ் வருவதற்காகக் காத்திருந்தாள்.
தினமும் இருவருக்குமான பேச்சு வார்த்தைகள் பெரிதாக இருக்காது. தள்ளி இருக்க வேண்டும் என்று போனவன் தள்ளியே இருந்தான். பேச்சுதான் இல்லையே தவிர ஒருவர் நினைவில் ஒருவர் காதலாய் தேடலாய் கலந்துதான் இருந்தனர்.
ஆனால் இரவு வீட்டிற்கு வந்தவுடன் குட் நைட் என்று அவன் சொன்னால்தான் உறக்கம் வரும் கல்கிக்கு. சிரஞ்சீவி எவ்வளவு திட்டினாலும் அதை மற்றும் மாற்றமுடியவில்லை அவளால்.
“இன்னும் தூங்கமா என்னடி போனை பார்க்கிற?” என்று கல்கியிடம் ஜெகதீஷ் கேட்க
“நீ ஏன் தூங்காம என்னைப் பார்க்கிற?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
“கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு”
இவனிடம் எல்லாம் சொல்லிவிடுவோமா என்று நினைத்தாள் கல்கி.
பின் அவளாகவே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள். ஜெகதீஷ் சிறுவயது முதலே இவளோ அஞ்சனாவோ எதையாவது சொல்லிவிட்டால், சண்டை வரும்போது அதனை வைத்து ப்ளாக்மெயில் செய்வான். அது இதுவரையில் விளையாட்டாகத்தான் இருந்திருக்கிறது இருந்தாலும் வேண்டாம் என்று மனதில் தோண அப்படியே விட்டுவிட்டாள். அஞ்சனாவிடம் மட்டும் மறைக்காமல் எல்லாம் சொல்லிவிட்டாள். இவளின் குற்றவுணர்வை கூட அக்காவிடம் பகிர அஞ்சனாவோ
“ஒருத்தங்களைப் பிடிக்கிறது ஒன்னும் பெரிய தப்பில்லை கல்கி, அதுவும் அவர் நம்ம அத்தைப் பையன் தானே? நீ இதையெல்லாம் யோசிக்காம ரிலாக்ஸா இரு. இப்போதைக்கு யார்கிட்டவும் சொல்லாத” என்றும் சொல்லியிருந்தாள்.
“போதும் பேசினது. தூங்கு முதல்ல” என்று அதட்டியவன் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கிவிட, கல்கி சிரஞ்சீவியிடன் ‘குட் நைட் அம்மடூ’ வந்த பின் தான் உறங்கினாள்.
நதியாவின் திருமணம் அன்று. வெளியே மைக் செட் கட்டி பாடல் களைக்கட்டிக்கொண்டிருந்தது. பேச்சாளர் வைத்த திருமணம் என்பதால் எந்த சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை. நதியாவிற்கு அம்மா இல்லை என்பதால் அஞ்சனாதான் பொறுப்பாய் நின்று எல்லாம் செய்தாள். அவளுக்குத் தெரியாததை அம்மாவிடம் கேட்டு செய்தாள். நதியா தயாராகும்வரை அவளுக்குத் துணையாக யுகனுடன் மணமகள் அறையில் இருந்தாள் கல்கி. அவள் தயாரானதும் யுகனைத் தூக்கிக் கொண்டு கல்கி கீழே வந்து பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, ஜெகதீஷ் வாசலில் நின்று கொண்டிருந்தவன் கல்கியைக் கண்டு ரசித்தான்.
புடவை கட்டி, பூ வைத்து மிகவும் லட்சணமாய் இருந்தாள். இங்கு கல்கியோ யமுனாவிடமும் தையல் நாயகிடமும் பேசிக்கொண்டிருந்தாள். அஞ்சனாவின் கல்லூரி தோழி மலர்விழி வந்தவள்
“ஹேய் கல்கி? எப்படி டி இருக்க?” என்று கேட்டாள்.
“மலரக்கா எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?” என்று அவளுடன் பேச்சில் இருக்க, ஜெகதீஷ் வந்தான். அவனைக் கண்டு விட்டு
“இது உங்க ஜெகதீஷ் மாமா தானே?” என்றாள் மலர்விழி.
“ஆமா க்கா, உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கல்கி கேட்க
“அஞ்சு சொல்லியிருக்கா, நானும் பார்த்திருக்கேன்” என்றாள். கல்கியின் அருகே நின்றவளைப் பார்த்து ‘யார் இது?’ என ஜெகதீஷ் சைகையில் கேட்க, மலர்விழியாகவே “நான் மலர்விழி, அஞ்சனா ப்ரண்ட். நல்லாயிருக்கீங்களா?” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“நல்லாயிருக்கேன்” என்று முடித்து கொண்டவன் யுகன் அவனைக் கண்டு தாவவும்
“வா டா செல்லம்” என்று யுகனைத் தூக்கிக் கொள்ள
“தாலி கட்டுற நேரம் அவனை இங்க அழைச்சிட்டு வந்துடு மாமா, இல்லைன்னா நதியா என்னை உண்டு இல்லை ஆக்கிடுவா” என்று சொல்லி அனுப்பினாள் கல்கி. திருமணம் முடியவும் எல்லாரும் உண்ணப் போக யுகனைத் தேடினாள் கல்கி. அவன் ஜெகதீஷுடன் மேடையில் நின்று கொண்டிருக்க, அவர்களை கீழே அழைத்தாள்.
“என்னடி?”
“இரண்டு பந்தி முடிஞ்சு போச்சு, யுகனைக் கொடு அவனுக்குப் பசிக்கும். நானும் அவனும் போய் சாப்பிடுறோம்” என்றதும் யுகனை நீட்ட இரண்டு அடி நடந்தவள்
“நீ இங்க இருந்து என்ன செய்ய போற மாமா? நீயும் சாப்பிட வாயேன்” என்று கல்கி அழைக்க
“என்னடி என் மேல இவ்வளவு அக்கறை?” என்று கேட்டாலும் சிரித்தபடியே அவனும் நடக்க, மலர்விழியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டாள் கல்கி.
“அக்கறை இல்ல மாமா, அது ஒரு ப்ளானிங். இப்போ நீன்னா இன்னொரு கறி கப் கொண்டு வாங்கன்னு கத்தி சொன்னா உடனே கொண்டு வருவாங்க. நான் கத்தினா எல்லாம் என்னை திரும்பி பார்ப்பாங்க. உன் கூட வந்தா நல்லா சாப்பிடலாம்” என்றதும் காதல் இன்றி கடுப்பாய்க் கல்கியைப் பார்த்த ஜெகதீஷ்
“எங்கத்த ஆக்கியே போடாத மாதிரி பேசாதடி” என்று பல்லைக் கடித்தான்.
“என்ன இருந்தாலும் கல்யாண வீட்டு கறிவிருந்து மாறி இருக்குமா? குடலும் பருப்பும், கறி கப்பும் ஹோட்டல்ல கூட கிடைக்காது. அப்புறம் சமையல் யாரு நம்ம தனபால் மாமாவா?” என்று வேறு கேட்க முறைத்துக் கொண்டே முன்னால் சென்றான் ஜெகதீஷ். மலர்விழி கல்கியின் பேச்சை ரசித்தவள் “அவங்க கோச்சுக்கிட்டு போய்ட்டாங்க பாரு கல்கி” என்று சிரிக்க
“அதெல்லாம் இல்லை, எப்படியும் அங்க போனா நம்மைத்தான் ஸ்பெஷலா கவனிப்பாங்க பாருங்க க்கா” என்று சொல்லி அழைத்துப் போனாள். அது போலவே ஜெகதீஷ் அவனே எல்லாம் பரிமாற வைத்தான். கல்கியையும் மலர்விழியையும் சேர்த்தே கவனித்தான்.
யுகனை வைத்துக் கொண்டு திருமண வீட்டில் வேலைகள் பார்க்க முடியாது என்பதால் யுகனை அழைத்துக் கொண்டு கல்கியை வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டாள் அஞ்சனா. அவளுக்கு உதவியாக அங்கையற்கண்ணி, யமுனா, தையல் நாயகி எல்லாம் மண்டபத்தில் இருக்க, மனோகருடன் இருந்தார் உதயமூர்த்தி. ஜெகதீஷை அழைத்து
“ஜெகா, கல்கியையும் யுகனையும் வீட்ல விட்டுட்டு வா. இங்க மாப்பிள்ளைக்கு நம்மதான் எல்லாம் இருந்து செய்யனும்” என்று சொல்லி அனுப்பினார்.
கல்கியைத் தன்னுடன் அழைத்தவன் அருகே இருந்த மலர்விழியைப் பார்த்து
கல்கியைப் பார்த்தவன் “பத்து நிமிஷம் இருடி” என்று சொல்லி
“இங்க இருந்து பஸ் ஸ்டாண்ட்க்கு இந்த வெயில்ல போக வேண்டாம். நீங்க வரீங்களா உங்களை விட்டுடுறேன்” என்று மலர்விழியிடம் கேட்க அவள் கல்கியைப் பார்க்க
“எங்க மாமா தானேக்கா, பத்திரமா விட்டுடும். வெயில்ல போகாதீங்க” என்றதும் மலர்விழி வண்டியில் ஏறிக்கொள்ள ஜெகதீஷ் அவளைப் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டான். அடுத்து கல்கியையும் யுகனையும் வீட்டில் விட்ட ஜெகதீஷுக்கு அப்போதுதான் ஒன்று தோன்றியது. கல்கியை இனி தனியே பார்ப்பது கஷ்டம். நாளை இவள் சென்னை சென்றுவிடுவாள். அதன்பின் வெளியே அழைத்தாலும் படிக்கனும் என்று சொல்வாள். இப்படி யோசித்தவன் கல்கியிடம்
“வெயில்ல வந்தது தலைவலிக்குது, ஒரு டீ கொடு” என்று கேட்டு நடுவீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள
“யுகன் தூங்கிட்டான். அவனைப் படுக்க வைச்சுட்டு வரேன்” என்றவள் ஜெகதீஷுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.
டீயை வாங்கிப் பருகியவன் “அப்புறம் நதியா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுப் போச்சு, அடுத்து நம்ம கல்யாணம்தானே கல்கி?” என்று கேட்க
அவனின் ‘நம்ம கல்யாணம்’ என்ற வார்த்தை கூட கல்கிக்குத் தவறாய் தெரியவில்லை. அவள் ஒரு நொடி கூட அப்படியான கோணத்தில் சிந்திக்காதவள் என்பதால்
“அய்யே ப்ரஸ்ட் உனக்குத்தான் கல்யாணம். நான் இந்த வருஷம் படிப்பு முடிக்காம கல்யாணம் எல்லாம் செய்ய மாட்டேன்” என்றாள் உடனே.
அவள் பதிலில் சோர்வடைந்தவன் தான் சொல்ல வருவதை உடைத்தே சொல்ல விரும்பி “கல்கி! நம்ம கல்யாணம்னா உன்னோட நடக்கப்போற என்னோட கல்யாணம், நம்ம கல்யாணம். புரிஞ்சதா?” என்று கேட்க கல்கிக்குத் தன் காதால் கேட்டதை நம்பவே சில நொடிகள் தேவைப்பட்டது.
“மாமா, விளையாடாத” என்று அப்போதும் கல்கி சொல்ல
“ப்ச், விளையாடுற விஷயமாடி இது. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கல்கி. உன்னைத்தான் நான் கல்யாணம் செய்ய ஆசைப்படுறேன். உனக்கும் என்னை பிடிக்கும்தானே?” என்று ஜெகதீஷ் ஆவலுடன் கேட்க
“அறிவிருக்கா உனக்கு?” என்று கத்தினாள் கல்கி. இதே ஒரு மூன்றாம் நபர் சொல்லியிருந்தால் பொறுமையாகவே உங்களை அப்படி பார்க்கவில்லை என்று சொல்லியிருப்பாள். ஆனால் ஜெகதீஷ்? அவனை அப்படியா நினைத்தாள் அவள்? அஞ்சனாவைப் போல அல்லவா நினைத்திருந்தாள்.
“கல்கி, ஏன் கோவப்படுற? நானும் படிக்கிற பொண்ணுக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன் டி. ஆனாலும் சொல்லாம மனசுக்குள்ள இதை வைச்சிக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கல்கி. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் டி” என்று ஜெகதீஷ் பேச பேச கல்கிக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
“வாயை மூடு டா! என்ன பார்த்துப்ப நீ? லூசா நீ? நான் உன்னை ஒரு நாளும் அப்படி நினைச்சது கிடையாது”
“சரி விடு, எப்படியும் மாமா ஒருத்தனுக்கு உன்னைக் கட்டி வைப்பார்தானே அது ஏன் நானா இருக்க கூடாது? நான் உன் முறைப்பையன் தானே?” என்று ஜெகதீஷ் கேட்க
“உன்னை!” என்று பல்லைக் கடித்தவள் “யாரோ ஒருத்தனும் நீயும் ஒன்னா? மண்ணாங்கட்டி முறைப்பையன். என் கூடவே வளர்ந்தவன் நீ, உன்னை எப்படி என்னால அப்படி பார்க்க முடியும்?” என்ற கல்கியிடம் அதிர்வையும் தாண்டிய ஆவேசம்.
“உன்னை எனக்கு பிடிக்கும் மாமா, அண்ணன் தம்பி இல்லாத எனக்கு நீதான் எதுனாலும் செய்வ, அஞ்சனா மாதிரி எனக்கு சப்போர்ட் செய்வ அதனால பிடிக்கும். அதைப் போய் நீ இப்படி” என்று கல்கி பேச
“அப்போ அண்ணன்னு கூப்பிட வேண்டியதுதானே? மாமா மாமான்னு ஆசையா என்னை சுத்தி வருவியே கல்கி, கொஞ்சமாச்சும் என்னை புரிஞ்சிக்கோ டி” என்று ஜெகதீஷ் பேச
“நீ என் மாமா மகன் தானே? அப்போ அப்படித்தானே கூப்பிட முடியும்? உன் மேல மாமன் மகன்ற பாசமிருக்கு, உரிமையிருக்கு. அதுக்காக உன்னை கட்டிக்க முடியுமா? நம்ம வீட்ல கூட நம்மள அப்படி சேர்த்து வைச்சு விளையாட்டுக்குக் கூட பேசினதில்ல” என்று கல்கி கோபத்தில் பேசினாள்.
“எதுனாலும் எங்கிட்டதானே கல்கி நீ சொல்லுவ. என்னைக் கல்யாணம் செஞ்சா நான் உன்னை சந்தோஷமா வைச்சுப்பேன், ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்று ஜெகதீஷ் பேச பேச கல்கிக்குக் கோபம்தான் எகிறியது
“ஏன்னா நீ எனக்கு ஸ்பெஷல். அதனால உங்கிட்ட பேசினேன், ஒரு ப்ரண்டா நினைச்சேன். உன்னை அப்படி நினைச்சதே இல்லன்னு கத்துறேன்னே உனக்குப் புரியவே இல்லையா? இந்த பேச்சே எனக்கு சந்தோஷம் தராதப்போ எப்படி நீ அப்படி நினைக்கலாம்?” என்று இருவருக்கும் மிகுந்த வாக்குவாதங்கள். கடைசியில்
“இப்படி ஒரு நினைப்போட எங்கிட்ட நீ இனி பேசாத” என்று கல்கி சொல்லிவிட, ஜெகதீஷ் இனியும் பேசினால் கோபம் கொள்வாள், பொறுமையாய் யோசித்தால் என் மனம் புரியும் என பெண் மனம் அறியாமல் நினைத்துக்கொண்டான்.
கல்கி அங்கே தவறு செய்தாள். ஜெகதீஷிடம் சிரஞ்சீவியைக் காதலிப்பதை சொல்லாமல் விட்டுவிட்டாள். ஜெகதீஷ் அவன் காதலை சொன்ன அதிர்வில் இருந்தவளுக்கு இதனை சொல்ல வேண்டுமென்ற எண்ணமே இல்லை. ஜெகதீஷோ தன்னை அப்படி பார்க்கவில்லை என்று நினைத்தானே தவிர கல்கியின் மனதில் இன்னொருவன் இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதுவே அவனின் காதலுக்கு இன்னும் பிடிப்பையும் பிடிமானத்தையும் வழங்கியது.