“என்ன கல்கி சென்னையில மழையா? குண்டூர்ல துணி எடுக்கனுமா?” என்று கல்கி போன் செய்யவுமே நக்கல் செய்தான் சிரஞ்சீவி.
கல்கியோ “அப்போ பேச காரணமில்ல அப்படி கேட்டேன். இப்போ நான் என்ன பேசினாலும் நீங்க கேட்டுத்தான் ஆகனும். ஸோ ரொம்ப ஓட்டாதீங்க மாமா” என்று கல்கி சொல்லவும்
“பேசு பேசு யார் வேண்டாம்னா, நீ செப்புரா” என்றான் உல்லாசமாக. சில நிமிட பேச்சுக்குப் பின்
“எப்போ ப்ரசாத் வரீங்க?” என்ற கல்கியின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. திருமணம் முடிந்து மூன்றரை மாதங்கள் ஆகிறது. திருமணம், விருந்து என செமெஸ்டர் விடுமுறை முடிந்து விட, கல்கி கல்லூரி செல்ல சிரஞ்சீவியும் குண்டூர் சென்றுவிட்டான். அதன்பின் இருவாரங்களுக்கு ஒரு முறை வந்தவன், இடையில் அஞ்சனாவிற்குப் பெண்குழந்தை பிறக்கவும் குடும்பத்துடன் கும்பகோணம் சென்று வந்தான்.
இதோ ஒரு மாதத்திற்கு மேல் ஆகிற்று, அவன் கல்கியைப் பார்த்து. போக முடியாத அளவு அவனுக்கு வேலை இருந்தது.
“முடிஞ்சா வர மாட்டேனா? நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வரேன்” என்றான் வரப்ரசாத் சமாதானமாக.
“இதையே சொல்லி ஒரு மாசம் ஓடிடுச்சு” என்றாள் சலிப்பாக.
“கண்டிப்பா வரேன் கல்கி, நீ படிக்கிறதைப் பாரு” என்று அவன் அறிவுரை வழங்க
“நான் உங்களைக் கேள்வி கேட்டா இப்படி டைவர்ட் செய்றீங்களா என்னை? ரொம்ப பண்றீங்க நீங்க” என்றவளின் குரலில் எரிச்சல் கொட்டியது.
“என்ன பண்றாங்க? வேலை இருக்குன்னா மீக்கு அர்த்தம் காலேது?” என்று அவனும் பதிலுக்குக் கோபம் கொண்டான்.
கல்கி அமைதியாக இருக்க, அவள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபமும் அவளைக் காணமுடியா ஏக்கமும் சங்கமிக்க சண்டை ஒன்று தானாய் வெடித்தது.
கல்யாணத்திற்கு பின் ஒரு கன்னிவெடித் தருணம்!
“கூடவே இருந்தாதான் பாசம்னு அர்த்தமா? படிக்கத்தானே வந்த அப்போ அந்த வேலையை ஃப்ரஸ்ட் பாரு, முடிஞ்சா வர மாட்டேனா?” என்று அவன் கத்த அவன் பேச்சின் நெடி கல்கியைத் தாக்கிய நொடி
“அப்போ படிக்க விடாம அம்மடூன்னு ஏன் சுத்தி வந்தீங்க?” என்றாள் கோபமாக.
“அப்படியே விட்டிருந்தா நான் பாட்டுக்குப் படிச்சிட்டு போயிருந்திருப்பேன்ல, உங்களைத் தேடினா கோவம் வருதா உங்களுக்கு? ஊர்லயே இல்லாதவர் மாதிரி ஸ்டேட் விட்டு ஸ்டேட் கல்யாணம் செஞ்சதுக்கு எனக்கு நல்லா வேணும்” என்றவள் ஆதங்கம் தாங்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டாள். அவன் மீண்டும் அழைப்பான் என நினைக்க, அழைக்கவே இல்லை. அதுவே இன்னும் கோபத்தையும் கூடவே காதலையும் கூட்டியது.
இருவருமே கோபத்தில் சரிசமமாய் இருந்தனர்.
திருமணம் முடிந்து சேர்ந்தாற்போல் ஒரு வாரம்தான் கல்கியுடன் இருந்தான் அவள் கணவன். அவனால் வேலையிலும் இப்போது மாற்றல் வாங்க முடியாது. கல்கி படித்து முடிக்கும் வரை இங்கேயே இருக்கட்டும் என்று அவன் அங்கே இருக்க, முன்பே அவ்வளவு தேடுவாள் இப்போது இன்னும் அதிகமானது. வரப்ரசாத் இடையிடையே வந்து போனவன் ஒரு மாதமாய் கண்ணாமூச்சி ஆடுகிறான். அதுவே அவளுக்கு கவலையாய் இருந்தது. அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே சூர்யாவிடம் போய் நின்றாள்.
“மாமா, எனக்கு குண்டூர் போகனும்” என்று அவரிடம் சொல்ல, அவர் அதிர்ச்சியாய்ப் பார்த்தார். சூர்யா இப்போது விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு அவர் நண்பரைப் போல் யுபிஎஸ்சி பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
“என்ன பாப்பா? என்ன தீடீர்னு?” என்று அவர் கவலையாகக் கேட்க
“ப்ரசாத் வர சொன்னானா கல்கி?” என்று யமுனா விசாரித்தார்.
“இல்லைத்த, எனக்கு அவரைப் பார்க்கனும் போல இருக்கு” என்று கல்கி சொல்ல, அவளைப் பிடித்து தன்னருகே உட்கார வைத்துக்கொண்டார் யமுனா.
“என்னடா அவனோட சண்டையா?” என்று யமுனா மெல்ல விசாரிக்க
“பார்க்கனும் போல இருக்குத்த” என்றாள்.
“வேலை முடிஞ்சிட்டா சிருவே வருவான் கல்கிம்மா, நீ ஏன் தேவையில்லாம அலையற?” என்று சூர்யா தன் விருப்பமின்மையை தெரிவிக்க
“அவர் வேலை என்னைக்கு மாமா முடியும்? ப்ளீஸ் மாமா. நான் இன்னிக்கே கிளம்புறேன், நீங்க அவர்கிட்ட நான் வரேன்னு சொல்லாதீங்க. அப்புறம் உனக்குக் காலேஜ் இருக்குன்னு ஆரம்பிச்சிடுவார், இப்போ நாலு நாள் எனக்கு லீவ்தானே?” என்ற கல்கியின் மனம் யமுனாவிற்குப் புரிய
“அவ போய்ட்டு வரட்டுமே சூர்யா, ஏன் வேண்டாம் சொல்றீங்க?”
“அதுக்கில்ல யமுனா..” என்று சூர்யா இழுத்தவர்
“சரிடா, ட்ரையின்ல டிக்கெட் கஷ்டம். ஃப்ளைட்ல போய்டலாமா?” என்ற கணவரை முறைத்தார் யமுனா.
“அவ மட்டும் போகட்டும், அவன் கிட்ட சொல்லாதீங்க சூர்யா. கல்கியைப் பார்த்து ஸர்ப்பரைஸ் ஆகட்டும்” என்று யமுனா சொல்லவும் சூர்யாவும் வேறு வழியின்றி கல்கி குண்டூர் செல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் சிருவிடம் சொல்லவும் மறக்கவில்லை, அவளை ப்ளைட் ஏற்றிவிட்டபின் அவர் சொல்லியிருக்க சிரஞ்சீவிக்கு டென்ஷன் கூடியது.
கல்கி விஜயவாடா விமான நிலையத்தில் வந்து இறங்க, அழைப்பதற்கு வரப்ரசாத் வந்து நின்றான். ஆனால் ஒரு திங்கள் கடந்து தன்னவனைக் கண்டவளுக்குக் கொஞ்சமும் சந்தோஷமும் கிட்டவில்லை, அவன் இருந்த நிலை அப்படி.
“வெல்கம்” என்று அவன் புன்னகையுடன் கை நீட்ட முறைத்தவள் பதில் பேசாது அவனுடன் நடக்க, அவளின் மன நிலை புரிந்து
“ஜஸ்ட் ஒரு சின்ன ஃப்ராக்சர் டா அம்மடூ, நத்திங் சீரியஸ். நானே மேனேஜ் பண்ணிட்டேன், அதான் சொல்லல” என்று சமாதானம் செய்தான். கல்கிக்குக் கண்கள் கலங்கியது அவன் தன்னிடம் இதை சொல்லவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இவனுக்கு இப்படி அடிப்பட்டிருக்கிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம் என அகமெல்லாம் அவன் மீதான உணர்வுகளே உயர்ந்தோங்கியிருந்தன. அந்த உணர்ச்சிப்பெருக்கில் அழுகை வரும் போல் இருக்க, அமைதியாக அதனை அடக்கிக் கொண்டிருந்தாள். அவன் கேப் புக் செய்திருக்க, அதில் இருவரும் குண்டூர் பயணப்பட்டனர்.
அவர்களின் வீடு செல்லவுமே கல்கி சோஃபாவில் உட்கார்ந்தபடி அழ, அவளின் அழுகையில் வரப்ரசாத் வருத்தம் மேலிட
“அம்மடூ, ஒன்னுமே இல்லை, இன்னும் டூ த்ரீ டேய்ஸ்ல இதைக் கூட எடுத்திடலாம். இது தெரிஞ்சா நீங்க ஃபீல் செய்வீங்கன்னுதான் சொல்லல, ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா” என்று வலக்கையால் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல
“நாங்க ஃபீல் பண்ணாம, உங்களுக்கு ஒன்னுன்னா யார் ஃபீல் செய்வா சொல்லுங்க?” என்று அழுகையுடன் ஆத்திரமாய்க் கல்கி அவனிடம் கேட்டாள்.
“ப்ச், ஏமிரா நீ? இது சின்ன ப்ராக்சர்” என்று அவன் பொறுமையாய் சொல்ல
“எப்படி ஆச்சு?” என்றாள்.
“அது ஒரு அக்யூஸ்ட் பிடிக்க போனப்ப ஆகிடுச்சு, நானாவுக்கு மட்டும் சொன்னேன்”
“மாமா என்னைப் போக விடாம தடுத்தப்பவே நினைச்சேன், இதுல சார் வேற என்னை சமாதானம் செய்யாம கோபமா இருக்கட்டும்னு விட்டுடீங்கதானே?” என்றாள் கோபமாக. அவன் பதில் பேசாமல் இருக்க,
“வேற எங்க அடிபட்டுச்சு?” என்று கல்கி பார்க்க
“இல்ல, இது மட்டும்தான். கால்ல கொஞ்சம் அடி” என்றதும் அவள் குனிந்து காலைப் பார்க்க, முழங்காலில் ஒரு பெரிய தழும்பு இருக்க, கல்கியின் கண்ணீர் அதில் விழுந்தது.
“அம்மடூ” என்று கரம்பற்றி அவளை எழுப்பி தன் வலப்பக்கம் சாய்த்துக்கொள்ள, கல்கிக்கு என்னவோ மனதிற்கு மிகுந்த கஷ்டமாகிவிட்டது. ஒன்றரை மாதம் காணாமல் இருந்த ஏக்கம் எல்லாம் சேர அழுத்தம் நீங்க அழுதாள்.
“கல்கி, உன்னோட எல்லாமே எனக்குப் பிடிக்கும் எக்ஸெப்ட் திஸ். அழாத” என்று அதட்டலாக வரப்ரசாத் சொல்ல
“உங்களுக்குப் பிடிச்சதை எல்லாம் செய்யனும்னு எனக்கொன்னுமில்ல. நான் யார் உங்களுக்கு? இப்படி இவ்வளவு அடிப்பட்டிருக்கு ஒரு வார்த்தை சொல்லல, நான் மட்டும் எதுவும் சொல்லாம செஞ்சா எப்படி கத்துவீங்க நீங்க. ரொம்ப ரொம்ப திமிர் உங்களுக்கு” என்றாள் அழுகையுடன்.
அவள் கோபமான வார்த்தைகளை விடவும் அந்த கோபமில்லாத காதலும் அதனால் விழிகளில் விளைந்த கண்ணீருமே அவனைக் கரைக்க,
“அம்மடூ! இதெல்லாம் சகஜம்தான். நானே ரெகவர் ஆகிட்டேன், அதான் சொல்லத் தோணல, ஜஸ்ட் ஒரு ஃபோர் டேய்ஸ் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். ரொம்ப முடியலன்னா நானா உங்ககிட்ட சொல்லாம இருப்பாரா? நீயும் அம்மாவும் பயப்படுவீங்கன்னுதான் டா சொல்லல, எனக்கு அடிப்பட்டப்போ இண்டர்னெல்ஸ் நடந்துச்சு உனக்கு, இதை சொல்லி உன்னை அப்செட் செய்ய வேண்டாம்னு சொல்லல. புரிஞ்சிக்கோடாம்மா” என்று அவன் பொறுமையாக சொல்ல கல்கிக்கு இவனுக்கு எதாவது ஆகியிருந்தால் என்று எண்ணம் எழ, அவளின் அத்தனை தைரியமும் வடிய, அழுகையில் கரைந்தாள்.
சில நிமிடங்கள் பொறுத்த சிரஞ்சீவிக்கு கல்கியின் அழுகை கோபத்தை தர, அவளை சமாதானம் செய்ய முடியாத இயலாமையும் சேர
“உங்கிட்ட பிடிச்சதே உன்னோட போல்ட்நெஸ்தான் கல்கி, இப்படி குழந்தை மாதிரி அழாத. இரிட்டேட் ஆகுது எனக்கு. இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு அழுவியா நீ? என் வேலை அப்படி, இப்படி என்ன வேணும்னாலும் நடக்கலாம். தெரிஞ்சுதானே விரும்பின? என்ன நடந்தாலும் நீ தைரியமா இருக்க வேண்டாமா?” என்று அவன் வார்த்தை விட அவ்வளவு நேரம் அழுததில் அவள் விழிகள் சிவந்திருக்க, ஆவேசத்துடன் எழுந்தவள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தள்ளி விட்டாள்.
“கல்கி, ஸ்டாப் இட்” என்ற சிரஞ்சீவியின் அதட்டல் எல்லாம் வேலை செய்யவில்லை அவ்வேளையில்.
“என்ன நடக்கும் கேட்கிறேன்? ஏன் ப்ரசாத் இப்படி இருக்கீங்க? என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சு நீங்க செய்ற இந்த அதிகப்ரசங்கித்தனம்தான் என்னைக் கஷ்டப்படுத்துது. உங்களுக்குத்தான் என்னைத் தெரியல. தைரியமா இருக்கேன்றதுக்காக என்ன வேணும்னாலும் பேசக் கூடாது நீங்க” என்று விரல் நீட்டி சொன்னவள் அவனின் அறைக்குள் போய் படுத்துவிட்டாள். அவள் அழுவது தெரிய, அவள் சொன்னதும் புரிய இவன் சமாதானம் செய்ய நினைப்பதற்குள் சுபாஷினி இருவருக்கும் உணவுடன் வந்துவிட்டார்.
“கல்கி எக்கடா சிரூ?” என்று சுபாஷினி கேட்க
“ரூம்ல இருக்கா பெத்தம்மா” என்று தெலுங்கில் சொன்னவன் அவரை உட்கார சொல்லிவிட்டு கல்கியின் முன் போய் நின்றான்.
“கல்கி, பெத்தம்மா வந்துருக்காங்க, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்று சொல்ல கல்கி அவனிடம் பதில் பேசாமல் பாத்ரூம் சென்று முகம் கழுவி வெளியே வந்து சுபாஷினியிடம் பேசினாள்.
“நீங்க எங்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல அத்த?” என்று அவள் கேட்க
“இவந்தான் நானே மேனேஜ் பண்றேன் சொல்லிட்டான்மா, நான் என்ன செய்ய?” என்றார்.
“சரி சாப்பாடு கொண்டு வந்துட்டேன், சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நாளைக்குக் காலையில வரேன்” என்று சொல்லி அவர் போய்விட கல்கி உணவினை எடுத்து மேஜையின் மீது வைக்க, சிரஞ்சீவி எழுந்து சென்று நெய் பாட்டில் உடன் வந்தான்.
கல்கி சாதத்துடன் சுபாஷினி கொண்டு வந்த குழம்பை ஊற்ற,
“நீங்க பேசினதை விட இது ஒன்னும் எனக்கு எரிச்சல் தராது” என்றாள் கடுமையாக. உள்ளத்தில் அவன் பேசிய வார்த்தைகள் இன்னும் புயலாய் வீசிக்கொண்டிருந்தது.
“அவுனா?” என்று அவனும் கோபத்துடன் சொல்லி, கல்கியின் தட்டில் அவனாகவே நெய் விட்டு அவனுக்கென அவர் கொண்டு வந்த சாதத்தை ஸ்பூன் கொண்டு வலக்கையால் உண்ண, அந்த ஸ்பூனைப் பறித்த பாவை, கணவனுக்குத் தன் கரத்தினால் ஊட்ட, சிரஞ்சீவியின் கண்களில் ஒரு கள்ளச்சிரிப்பு.
“எனக்கு இன்னும் உங்க மேல பயங்கர கோவம்தான். ஊட்டி விடுறேன்னு கோவம் போச்சு நினைக்காதீங்க” என்று திட்டிக்கொண்டே அவள் ஊட்டவும், அவள் கொடுத்ததை வாங்கி உண்டவன்,
“இப்படி பேசினாதானே என் அம்மடூக்கு அழகா இருக்கு. அதை விட்டு அழலாமா?” என்று அவன் சமாதான முயற்சியில் இறங்க
“அழ வச்சிட்டு பேசாதீங்க ப்ரசாத் நீங்க. எனக்கு இன்னும் டென்ஷன் போகல. அமைதியா சாப்பிடுங்க” என்றதும் அவன் அமைதியாக அவள் ஊட்டியதை வாங்கிக் கொண்டான். கல்கி சாப்பிடும்வரை அவள் அருகே உட்கார்ந்திருந்தான். அவள் உண்டு முடித்து பாத்திரங்களைக் கழுவி வர, இவன் வீட்டைப் பூட்டிவிட்டு அறைக்குள் வந்து படுத்துக் கொண்டான். கல்கியும் வந்து அவனருகே உறங்க நினைத்தவள் இன்னும் யமுனாவிற்குப் பேசவில்லை என்பது நினைவில் வர போனை எடுக்க
“நீ வந்ததும் நானாவுக்கு மெசெஜ் அனுப்பிட்டேன், அம்மாகிட்ட அவர் நீ வந்துட்டன்னு சொல்லியிருப்பார். இப்போ கால் பண்ணாத” என்றான். கல்கியும் போனை வைக்க,
“உங்களை ஏர்ப்போர்ட்ல இப்படி பார்க்கவும் எனக்கும் அப்படித்தானே இருந்துச்சு”
“ஓஹ், நான் கஷ்டப்படுத்திட்டேன் ஓகே, நீயும் பதிலுக்கு என்னைக் கஷ்டப்படுத்துவியா?” என்று அவன் கேட்க கல்கியின் காதல் மனம் தவித்தது.
தடுமாறும் தன் மனதைக் கட்டுப்படுத்தியவள் “கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் அமைதியா இருக்கேன் ப்ரசாத். பேச வைக்காதீங்க, நான் தூங்கனும்” என்று சொல்ல, இவனும் அதற்கு மேல் பேசாது கண்களை மூடிக்கொண்டான். கல்கி தீடீரென நினைவு வந்தவளாக
“டேப்லெட்ஸ் எல்லாம் இல்லையா?” என்று சிரஞ்சீவியின் பக்கம் திரும்பி கேட்க
“இது நடந்து த்ரீ வீக்ஸ் மேல ஆகுது, மேடிகேஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இன்னும் ஒரு டூ டேய்ஸ்ல ஆர்ம் ஸ்லிங் கூட எடுத்திடலாம், அதை செஞ்சிட்டு உன்னை வந்து பார்க்கலாம் இருந்தேன். அதுக்குள்ள நீ அவசரப்பட்டுட்ட கல்கி” என்றவனை கண்களால் கனலாய் எரித்தாள் பெண்.
“நானும் எங்காச்சும் விழுந்துட்டு இப்படி செய்றேன், அப்போ நீங்க அவசரப்படாம வாங்க ப்ரசாத்” என்ற கல்கியை முறைப்பது வரப்ரசாத்தின் முறையாகிற்று.
“இப்படி பேசி நீ என்னை டென்ஷன் பண்ணாத கல்கி”
“ஏன் என்ன வேணும்னாலும் நடக்கும்னு ரொம்ப ப்ராக்டிக்கலா பேசினீங்களே ப்ரசாத், அது எனக்கும் கூட நடக்கும்” என்றதும்
“ஷட் அப் கல்கி!” என்றதில் அவனின் கோபம் புரிய, கல்கி மனதில் ஒரு சோர்வு, இத்தனை நாள் கழித்துப் பார்க்கும்போது எத்தனை காதலாய் கழிய வேண்டிய பொழுதுகள், இப்படி கோபத்துடனா இருவரும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. காதல் இருந்தாலும் அது கோபமாய் வெளிப்படும் சூழல் இருவருக்கும். இனியும் பேசினால் சண்டையாகிவிடும் என வாயை மூடியவள் அப்படியே உறங்கிப்போக, சிரஞ்சீவியும் தூங்கிவிட்டான்.
அடுத்த நாள் விடியலில் எப்போதும் போல் சிரஞ்சீவி சீக்கிரமே எழுந்து விட அமைதியாக கல்கியின் முகம் பார்த்து படுத்திருந்தான். கல்கி ஆறு மணிக்கு மேல் எழுந்தவள் வாசலில் பார்க்க, பால் பாக்கெட் கிடக்க, காஃபி கலக்கி அவனுக்குக் கொடுத்து தானும் குடித்தாள். காலைக்கு என்ன செய்யலாம் என அவள் பார்க்க,
“பெத்தம்மா எதாவது எடுத்துட்டு வருவாங்க, நீ ஒன்னும் செய்ய வேண்டாம்” என்றான் வரப்ரசாத்.
“அவங்களுக்கு ஏன் சிரமம்? நான் இருக்கும்போது நான் செய்றேனே?” என்று கல்கி கேட்க
“அவங்க செஞ்சிருப்பாங்க கல்கி” என்றதும் அமைதியாகிவிட்டாள். சுபாஷினி காலை உணவு எடுத்துவர இருவரும் உண்டு முடிக்கவும், சிரஞ்சீவி வேலைக்குக் கிளம்பியவன்,
“உனக்கு தனியா இருக்க போர் அடிக்கும் கல்கி, பட் எனக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு. ஒரு மீட்டீங்க் கூட, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பெத்தம்மா வீட்ல போய் இரு. ஈவினிங் சீக்கிரம் வரேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
மாலை அவன் வந்த பின்னும் இருவருக்குமிடையே ஒரு இடைவெளி இருக்க, அதைக் களையவே இருவருக்கும் விருப்பம். அன்றிரவும் உணவு சுபாஷினி வீட்டில் இருந்து வந்துவிட, உண்டு உறங்கும் நேரம் கல்கியை வலப்பக்கமாய்ப் பிடித்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் வரப்ரசாத்.
“பேசிடு அம்மடூ! நீ சைலண்டா இருந்தா எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்குடா” என்று சமாதானம் துவங்க
“நீங்க பேசினப்ப கூட எனக்கும் கஷ்டமா இருந்துச்சு ப்ரசாத். நீங்க டக்குனு மனசுல தோணறதைப் பேசிடுவீங்க தெரியும். எல்லாருக்கும் எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும்தான், அதுக்காக இருக்க நிமிஷத்துல சந்தோஷமா இல்லாம அப்படி பேசனுமா என்ன? நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா?” என்று சொன்னவள் அவனுக்கு வலிக்குமே என்று நகர
“வலிக்கல, இப்படியே இரு” என்றான்.
“நான் உங்கிட்ட சொல்லாம இருந்திடலாம் நினைச்சேன்மா, ப்ச் மாட்டிக்கிட்டேன்” என்று அவன் சொன்ன பாவனையில் அவ்வளவு வருத்தமிருந்தாலும் அவனை ரசிக்கவே தோன்றியது கல்கிக்கு. கல்கியின் கண்களில் ரசனைத் தெரிய, அவள் பக்கம் மெல்ல திரும்பியவன்
“அது இப்போ ஹாண்டில் பண்ற கேஸ்ல நிறைய ப்ரஷர்டா கல்கி, இந்த டைம்ல நீ வரேன்னு அப்பா சொல்ல, அதுவும் ப்ளைட் ஏத்திட்டு சொல்லவும் ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன். வீட்டுக்கு வந்து நீ அழவும் எனக்கு டாலரேட் செய்ய முடியல. உன்னோட அழுகை என்னை எப்பவும் டிஸ்டர்ப் செய்யும் கல்கி. உன்னை அழவைக்குறோமேன்ற டென்ஷன்ல இன்னும் பேசி அழ வைச்சிட்டேன், ஸாரிடாம்மா” என்று சொல்லும்போது கல்கிக்குக் கோபத்தைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவள் எதுவும் பேசாது அமைதியாய் இருக்க
“என்ன கல்கி? ஒத்தைக் கை வைச்சிட்டு சமாதானம் செய்றேனே, அதுக்காச்சும் கூல் டவுன் ரா” என்று சிரஞ்சீவி சொல்ல, இருகரத்தாலும் அவனை மெல்ல அணைத்தாள் கல்கி.
“கல்கி, இன்னும் டூ டேய்ஸ் லீவ் எடுக்கிறியா?” என்று கேட்டவனை ஆச்சர்யமாய் அவள் விழி பார்க்க
“ஏமிரா?” என்று அவன் பார்க்கவும்
“நீங்களா லீவ் எடுக்க சொல்றீங்க, நம்ப முடியல” என்றாலும் “எடுத்துட்டா போச்சு” என்றாள் கல்கியும் புன்னகையுடன்.
“என்ன இவ்வளவு ஷாக்? எனக்கும் என் அம்மடூ கூட டைம் ஸ்பென்ட் செய்ய நிறைய நிறைய ஆசை இருக்கு” என்றான். நேற்று போல் இல்லாது இன்று இருவரும் ஒரு இத நிலையில் வெகு நேரம் பேசியபடி இரவுப் பொழுதை இனிதாக்கினார். இரண்டு நாள் கழித்து குண்டூரில் அன்று பலமான மழை.
சிரஞ்சீவி வீடு வந்தபோது கதவு திறந்து இருக்க, மழையில் நனைந்தபடியே அவன் உள்ளே வர கல்கி பின்பக்கம் மழைத்தூறல் அவள் முகத்தில் தெறிக்க, அதனை ரசித்துப் பார்த்திருந்தாள்.
வெளி வாசல் கதவடைத்தவன்
“அம்மடூ! மழையில நிக்காத. ரூமுக்கு வா” என்று ஹாலில் இருந்து சத்தம் போட
“மழை செமையா பெய்யுது. சென்னையில மழையே இல்லையாம். கொஞ்சமாச்சும் ரசிக்க விடுங்க” என்று சொல்லி அவள் அங்கேயே நிற்க, சிரஞ்சீவியும் அவளருகே போய் நிற்க பின்பக்கம் ஓடுகள் இருக்க, அதிலிருந்து மழை நீர் மெல்ல விழுந்தது. அது கல்கியின் கார்குழலின் வழி ஓடி, கன்னம் நனைத்தது. அதை துடைத்தபடி இருந்தாள் கல்கி. அந்த பச்சை வண்ண கதவில், அவள் மஞ்சள் வண்ண புடவையில் நின்றிருக்க, கார்குழலில் பன்னீர் ரோஸ் மணம் வீசியது. மண்வாசத்துடன் மங்கை வாசமும் அவன் சுவாசத்தை நிறைத்தது.
“நீங்க வரவரைக்கும் போர் அடிச்சது, மழை வரவும் இங்கேயே ஜாலியா நின்னுட்டேன்” என்றவளை ஆவல் காதல் எல்லாம் மீகிய ஒரு பார்வைப் பார்த்தான் வரப்ரசாத்.
“என்னை சொல்லிட்டு நீங்க என்ன மழையில நிக்குறீங்க?” என்று கல்கி கேட்க
“நீ மழையைப் பார்க்கிற, நான் உன்னைப் பார்க்கிறேன்” என்றவனை இப்பொழுதுதான் கல்கி நன்றாய்த் திரும்பிப் பார்க்க, ஒரு பாதி கதவில் அவனும், மறுபாதி கதவில் அவளும் சாய்ந்திருக்க, மையல் பெருகிய நேரமது.
“இதை எடுத்தாச்சா?” என்றபடி ஆர்ம் ஸ்லிங் இல்லாத அவன் கையைப் பார்த்த கல்கிக்கு ஆனந்த துள்ளல்.
“எஸ், ரிமூவ் பண்ணியாச்சு. ஐ அம் சூப்பர் ஃபைன்” என்றான் வரப்ரசாத் வசீகரப் புன்னகையுடன். கல்கி சந்தோஷமாய் அவனைப் பார்க்க, மறுபாதி கதவில் மனைவியாய் நின்ற மங்கையைத் தன் பக்கம் இடையில் கையிட்டு இழுத்தவன்
“அம்மடூ, எப்பவும் நீ ஏன் என்னோட லிமிட் க்ராஸ் பண்ண வைக்கிற?” என்று கேட்க, கல்கி புரியாமல் பார்க்க
“க்ராஸ் பண்ணவா?” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் மெல்ல மெல்ல முகமெல்லாம் முத்தம் கொண்டு நிறைத்திட இடைவெளியின்றி ஒரு இறுகிய அணைப்பு அவனிடம். அவன் சொன்னது கல்கிக்குத் தெளிவாய்ப் புரிய, இத்தனை நாள் ப்ரசாத் விலகி நின்றிருக்க, அவளுக்கு அவனைத் தடுக்கவோ மறுக்கவோ எண்ணமில்லை. அவன் முத்தத்தில் வெட்கம் சூழ்ந்தது கல்கியை. அவளின் கரங்களும் அவனை அணைக்க,
“அம்மடூ! ஆன்ஸர் மீ” என்றவன் காதோரம் முத்தமிட்டு வினாவிட பதிலை வார்த்தையாய் இல்லாமல் வஞ்சி முத்தமாய் கணவனின் கன்னத்தில் பதிக்க, கதவை சாற்றிவிட்டு கல்கியைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்ற சிரஞ்சீவி ஸ்ருங்காரத் தேடலை தன் அம்மடூவிடம் தொடங்கினான்.
‘இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது விண்ணை தொட்டு மிதக்குது வெட்கம் விட்டு இணைந்ததம்மா’