கல்கி இப்போது பல அவதாரங்கள் எடுத்து இருந்தாள். எல்லா பொறுப்புகளும் அவளுடையதே. சிரஞ்சீவி ஒரு முறை பேச்சுவாக்கில்
“அப்பாவுக்கு ரீடையர் ஆன பின்னாடி சிரிபுரம்ல செட்டில் ஆகனும்தான் ஆசை கல்கி” என்று சொல்லியிருக்க குழந்தை பிறந்த பின் கும்பகோணத்தில் ஐந்து மாதம் இருந்தவள் குண்டூரிலேயே இருந்து கொள்ளலாம் என்றுவிட்டாள். சென்னையில் இருந்த ப்ளாட்டை வாடகைக்கு விட்டுவிட்டனர்.
தனக்காக எல்லாம் பார்த்து செய்யும் மாமா, அத்தைக்கு சொந்த ஊரில் இருப்பதுதான் சந்தோஷம் எனில் தனது சுய நலத்திற்காக அவர்களை சென்னையில் இருக்க சொல்வது நியாயமாகப்படவில்லை அவளுக்கு. சிரஞ்சீவிக்குமே ஆந்திராவில் போஸ்டிங் ஆக இவள் ஒருத்திக்காக மொத்த குடும்பமும் தியாகம் செய்ய வேண்டுமா என்று நினைத்தவள் சிரஞ்சீவியிடம் தன் முடிவை சொல்ல
“அங்க உனக்கு தெலுங்கும் தெரியாது. உன்னோட கேரீயர் கஷ்டமா போயிடும் கல்கி. அம்மா அப்பா மட்டும் குண்டூர்ல இருக்கட்டும், நான் உன்னோட சென்னையில இருக்கேன்” என்று அவன் சொல்ல
“இல்ல, ப்ரசாத். உங்களுக்கும் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகும். எனக்கு நிச்சயம் தெரியும் மாமா அத்தை அம்லுவை விட்டு இருக்க மாட்டாங்க. பாப்பா ஸ்கூல் போகும்போது இப்படி இடம் மாறிட்டே இருந்தா கஷ்டம், அங்கன்னா பெரிய மாமா பக்கத்துலயே இருக்காங்க, சின்ன மாமா இருக்காங்க. குழந்தை சொந்தத்தோட வளருவா”
“நான் உன்னைப் பத்தி பேசுறேன், இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிட்டு வீட்ல உட்கார போறியா? குண்டூர் சென்னை மாதிரி இல்லை ஹைதரபாத் மாதிரியோ பெரிய மெட்ரோ சிட்டி கிடையாது. அங்கு உனக்கு வாய்ப்பு எல்லாம் நிறைய இல்ல. சொன்னா புரிஞ்சிக்கோ” என்று திட்டியவனிடம்
“எப்படியும் குண்டூர்ல நேஷனல் பேப்பர் இருக்கும்தானே? தெலுங்கும் கத்துக்கிறேன். மாமா எனக்காக அங்க வந்து மூணு வருஷம் இருந்தாங்க. அவங்களுக்கு அப்போ சந்தோஷம் எதுவோ அதைத்தானே நான் செய்யனும். நான் பார்த்துக்கிறேன் நான் ஒன்னும் ஃப்ரஸ்ட் ப்ரஸ்ட் நீங்க பார்த்த டீனேஜ் பொண்ணு இல்லை. ஒரு குழந்தைக்கு அம்மா” என்றதும் அவனுக்கு அவளின் பிடிவாதம் தெரியும் என்பதால் ஒன்றும் சொல்லவில்லை.
இப்போது குழந்தை பிறந்தது முதல் குண்டூர்வாசியாகிவிட்டாள் கல்கி. சுபாஷினியிடம் பேசி பேசி இந்த ஏழு வருடத்தில் சுத்த தெலுங்கே பேசுவாள். ஆனால் அதெல்லாம் வெளியாட்களிடம் மட்டுமே. வீட்டில் செந்தமிழ் உலா மட்டுமே!!
ஒரு தேசிய நாளிதழில் சப் எடிட்டராக வேலையில் இருக்கிறாள், அவளுக்குப் பிடித்தது போல் கருத்து சுதந்திரம் நிறைய உள்ள வேலை. தேசிய நாளிதழிலின் தமிழ் பதிப்பிலும் அவளுக்கென்று ‘கல்கி ஸ்பீக்ஸ்’ என தனி பக்கம் உண்டு. எல்லாம் ஆன்லைனில் செய்துவிடுவாள்.
இரவு மணி எட்டாகிவிட, அவள் வீட்டில் உறவினர் கூட்டம். அவர்களின் மகள் சின்மயிக்கு நாளை ஏழாவது பிறந்த நாள். அதற்காக தையல் நாயகி, உதயமூர்த்தி, அங்கையற்கண்ணி, அஞ்சனா, மனோ, யுகன், அவனின் தங்கை யுகஸ்ரீ என்று எல்லாரும் வந்திருக்கின்றனர். வாசலில் வந்து நின்றவள் கார் வரவும் முறைத்தபடியே நின்றாள். ஜெகதீஷும் மலர்விழியும் அவர்களின் மகன் ஜெய்கணேஷுடன் இறங்கினார்கள். ஜெய் இவளை
“பெரியம்மா” என்று கட்டிக்கொள்ள
“ஜெய் வா டா…உள்ள போ, யுகன் அண்ணா இருக்கான்” என்று சொன்னவள் மலரின் பின் நின்ற மாமன் மகனை முறைத்துவிட்டு மலர்விழியிடம் பேசினாள்.
“மலரக்கா! உங்க வீட்டுக்காரனை விட்டுத் தள்ளி நின்னுடுங்க. கும்பகோணத்தில் இருந்துட்டு எல்லாரும் வந்தாச்சு. சென்னையில இருந்து வர இவனுக்கு லேட்டா?” என்று திட்ட
“நீயாச்சு, உன் மாமா பையனாச்சு. என்னைக் கேட்காதே, அஞ்சு எங்க டி கல்கி?” என்று மலர்விழி சிரிப்புடன் கேட்டாள்.
“மலரே! இந்த பிசாசுட்ட என்னை விட்டுப் போகாத, போலீஸ்காரன் பொண்டாட்டி என்னை கும்மிடுவா டி. ரெடியாக லேட் ஆனது நீ தானடி” என்று அலறினான் ஜெகதீஷ்.
உண்மையில் அவனை மிகவும் அதிர்ஷ்டம் செய்தவனாய் உணரவைத்தாள் மலர்விழி. முன்பு போலவே அவனின் அத்தை மகள்களுடன் அவனின் உறவு கலாட்டாக்களுடம் கேலியுடனும் தான் இருந்தது. துணையாய் வந்தவர்கள் சரியாய் இருக்க சீரான உறவு அவர்களுக்குள். மலர்விழியும் ஜெகதீஷும் சென்னையில் வேலைப்பார்க்க, அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். இப்போது சின்மயி பிறந்த நாளுக்கு வர சொல்லி,
“சித்தப்பா, நீங்க அண்ணா கூட்டிட்டு குண்டூருக்கு வரனும். இல்ல நான் கா விட்டுடுவேன்” என்று சின்மயி சித்தப்பனை மிரட்டியிருக்க, லீவ் போட்டுக்கொண்டு வந்திருந்தான் ஜெகதீஷ்.
“லேட்டா வந்துட்டு உனக்குப் பேச்சு வேறையா மாமா?” என்று கல்கி சண்டையிட
“அடியே! என்னைத் திட்டுறியே? உன் சிங்காரம் எங்க? வந்தவனை கூப்பிட வரல” என்று சிரஞ்சீவியைக் கோர்த்துவிட்டான்.
“அவர் இன்னும் வரல, நீ வாசல்ல நிக்காம உள்ள போ” என்றதும்
“அவருக்கு வேலை இருக்கும்டி, வந்துடுவார். நான் ஈவினிங் பேசினேன்” என்று அத்தை மகளை சமாதானம் செய்ய
“உங்க நொண்ணனுக்கு சப்போர்ட் செஞ்சு என்னை வெறுப்பேத்தாம போ மாமா” என்றவள் வந்தவர்களைக் கவனிக்கச் சென்றாள். இரவு பத்து மணி ஆகிவிட, எல்லாரும் உறங்கப்போனார்கள். இங்கே மூன்று அறை மட்டுமே இருக்க, பெரியவர்கள் எல்லாம் சூர்யாவின் அண்ணன் வீட்டில் தங்கிகொள்ள, சின்னவர்கள் இங்கு இருந்தனர். அறையில் மகளைத் தன்பக்கம் போட்டுத் தட்டிக்கொண்டிருந்த கல்கிக்கு சிரஞ்சீவியிடமிருந்து போன் வர
“எங்க இருக்கீங்க?” என்று பல்லைக் கடித்தாள்.
“மங்களகிரில இருக்கேன் கல்கி, எல்லாரும் வந்தாச்சா?” என்று சிரஞ்சீவி விசாரிக்க
“வந்துட்டாங்க. நீங்க எப்போ வருவீங்க ப்ரசாத்?”
“சின்னு பர்த்டேக்கு கண்டிப்பா இருப்பேன், நீ எல்லாரையும் கவனிச்சிக்கோ கல்கி. இன்னிக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்குடா” என்று சொல்ல
கல்கிக்குக் கடுப்பாய் வந்தது, ‘எல்லாரையும் நான் கவனித்தாலும் என்னை இவன் தானே கவனிக்க வேண்டும்’ என்று கோபம் பெருகியது. அவள் அமைதியாய் இருக்க, “ஓகேடா, நீ தூங்கு. பை” என்று சொல்லி அவன் வைத்துவிட அடுத்த நாள் காலை வரை அது தொடர்ந்தது.
சின்ன வயதில் சின்னவள் என்று எத்தனை எத்தனை அவளுக்குப் பொறுப்புகள் இன்றி இருந்தாளோ அத்தனைக்கும் சேர்த்து கல்கி இப்போது எல்லாவற்றையும் கவனித்தாள். அலுவலகம் செல்வது, குழந்தையைப் படிக்க வைப்பது, மாமா அத்தையைக் கவனிப்பது, ஹனுமந்தன் சுபாஷினி மக்கள் எல்லாம் வெளி நாட்டில் இருக்க, அவர்களும் அவளின் பொறுப்புதான்.
எல்லாம் செய்தாலும் இன்னும் வரப்ரசாத்தின் செல்ல அம்மடூதான் அவள். மற்ற நாட்கள் அவன் உடன் இல்லாவிட்டால் கூட சமாளித்துக்கொள்வாள், ஆனால் ஒரு நல்ல நாள் விஷேஷம் என வருகையில் அவன் இப்படி செய்தால் அவ்வளவுதான். கன்னிவெடியாகிவிடுவாள் கல்கி!
ஆனாலும் சிரஞ்சீவி பத்து ஆண்டுகளாய் அவளை சமாளிக்க கற்றுக்கொண்டான். அடுத்த நாள் கல்கி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு பின் பக்கம் இருந்த செடிகளுக்கு நீர் விட சூர்யா அவரின் அண்ணனுடன் காலை நடைபயிற்சிக்குச் சென்றிருந்தவர் அண்ணன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருக்கும்போது சிரஞ்சீவி காரில் போவதைக் கண்டார். அவன் கையசைத்துவிட்டு அவர்களின் வீட்டுக்குப் போக, வாசல் கதவு திறந்திருக்க, கல்கியைத் தேடிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான் வரப்ரசாத்.
கல்கி அப்பொழுதுதான் குளித்து முடித்து, தலையை விரித்து விட்டு பின்னால் நின்று உலர்த்திக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டவள் ஒன்றும் பேசாமல் அவள் தலையைத் துவட்ட, அவளிடமிருந்து துண்டை வாங்கி அவன் அவளைப் பிடித்து துவட்டி விட, கல்கி பேசவில்லை.
“என்ன மிசஸ். த்ரிபுரனேனி? ரொம்ப கோவமோ?” என்று அவள் முகம் பார்க்க
அந்த பச்சைவண்ணக் கதவை சாற்றியவன் மனைவியை சுவரோரம் சாய வைத்து,
“அம்மடூ, அங்க நைட் ஒரு ரெய்ட்க்காக போனேன், லேட்டாச்சு. பாரு காலையில எவ்வளவு சீக்கிரம் வந்துட்டேன். இன்னும் பனி கூட விலகல” என்றவன் பேச்சுக்கேற்ப லாளிதமான ஒரு காலை பொழுது. பனி மூட்டமாய், ஜில்லென்ற சாரல் உடலைத் தழுவ, கல்கி அப்போதுதான் குளிர்த்திருக்க, இன்னுமே குளுமையாய் உணர்ந்தாள்.
இவன் காக்கி உடையுடன் அவளைக் கட்டிப்பிடிக்க,
“டிரஸ் கூட மாத்தாம வருவீங்களா? போங்க போங்க” என்று அவள் தள்ளிவிட அவனை அசைக்கக் கூட முடியவில்லை அவளால். சுவரோரம் சாய்த்தவன்
“கோவமில்லை சொல்லும்மா” என்று அவள் காதோரம் பேச
“நீங்க இருக்கீங்களே, உங்ககிட்ட என்னால கோவத்தைக் காட்டவே முடியல. எதாவது செஞ்சு என்னை மயக்கிடுவீங்க” என்று சலித்தவள் அவனின் சட்டையினைப் பிடித்து நிற்க
“நானா மயக்கிறேன், நீதான் அம்மடூ என்னை மயக்கி வைச்சிருக்க” என்றான்.
சண்டையிட்டாலும் உடனே சமாதானம் செய்துவிடுவான் சிரஞ்சீவி. அம்மா, அப்பா, மகள் என்று எல்லாரையும் அவள் அப்படி பார்த்துக்கொள்ள, அவளிடம் கோபத்தைப் பிடித்து வைக்கத் தோணாது இவனுக்கு. குடும்பத்தை அவள் பார்க்க, அவளைப் பார்ப்பது இவன் வேலை.
அவளின் ஈர கூந்தலில் கையை விட்டு அளைந்தவன், அவள் கன்னங்களில் முத்தமிட ஆரம்பிக்க, அவனின் பிடியே அவன் விடமாட்டான் என்பதை உணர்த்த,
“லிமிட் க்ராஸ் பண்றீங்க சிங்காரம்” என்றாள். அதில் கடுப்பானவன் அவள் கன்னத்தை கடித்தான்.
“ஹவுச், வெளியே நின்னுட்டு என்ன இது. நல்லா விடிஞ்சிடுச்சு. இனிமே எல்லாம் லிமிட் க்ராஸ் செய்ய முடியாது” என்று கல்கி சொல்ல
“லிமிட்டெல்லாம் இல்லைன்னு எத்தன தடவ சொல்றது?” என்றவன் இடையில் கைவைக்க, அவன் கைமீது தன் கை வைத்தவள்
“ஜூனியர் பங்காரம் வந்துட்டார் எஸ்பி ஸார், ஸோ ஸ்டே ஆன் யுவர் லிமிட்ஸ்” என்ற கல்கியைக் காதலாய்ப் பார்த்தவனுக்குக் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.
“இந்த டைம் இங்கேயே போஸ்டீங்க், என் அம்மடூ மிஸ் பண்ணினதெல்லாம் கொடுத்திடுவேன்” என்று அப்போதும் அவளைப் பற்றிய பேசுபவனை பேச்சற்றவனாக்கினாள் கல்கி ஒரு ஆழ முத்தம் அவனிதழில் பதித்து.
“அம்மடூ, நல்லா விடிஞ்சிடுச்சு. சின்னுக்கு நான் தான் ப்ரஸ்ட் விஷ் பண்ணனும்” என்று சொல்லி விலகியவனை கல்கி முறைக்க,
“ஏமிரா? கோவமா?” என்றவன் அவளின் தலையைப் பிடித்து நன்றாய் ஈரம் போகும்வரை துவட்டிவிட்டு இருவருமாக மகளைப் பார்க்க சென்றனர்.
“சின்னுக்குட்டி” என்று மகளிடம் போன சிரஞ்சீவியைப் பின்னால் இருந்து பிடித்து இழுத்தாள் கல்கி.
“என்ன கல்கி? உன்னைத்தானே ப்ரஸ்ட் பார்த்தேன்” என்று முறைத்தவனிடம் பதில் பேசாமல் அவனின் காக்கி சட்டையைக் கழட்டினாள்.
“பர்த்டே அதுவுமா யுனிஃபார்ம்ல பாப்பாவுக்கு விஷ் பண்ணாதீங்க. அதுவும் நேத்து போட்டது” என்று முகத்தை சுழித்தாள்.
“ரொம்ப பண்ற நீ” என்றவன் மகளின் தலையை வருடி
“அம்லுக்குட்டி, சின்னுக்குட்டி! ஹாப்பி பர்த்டே பங்காரம்” என்று சொல்லி கன்னத்தில் முத்தம் வைக்க, கல்கி பெண்ணின் மறுபுறம் உட்கார்ந்து கொண்டு,
“என் தங்கத்து ஹாப்பி பர்த்டே” என்று இன்னொரு கன்னத்தில் முத்தம் வைத்தாள். அப்பா அம்மாவை ஒன்றாய் பார்த்த சின்மயி சந்தோஷமாய் எழுந்து
“நானா? மீரு எப்புடு ஒச்சாரு?” என்று சொல்லி சிரஞ்சீவியைக் கட்டிக்கொள்ள, சின்மயிக்கு தெலுங்கு அவள் அப்பாவை போல் சரளமே.
“உங்களை சொல்லி சொல்லி என் புள்ள தமிழ்ல பேச மாட்டேங்கிறா” என்று கல்கி புலம்பினாள்.
அவளின் புலம்பலை ரசித்தவன் “அம்மா உனக்குக் கிஃப்ட் வைச்சிருக்காங்களாம், என்னன்னு கேளு சின்னு” என்று சொல்லிக் கொடுக்க
“ம்மா, என்ன கிஃப்ட்?” என்று ஆசையாய்க் கேட்டாள் சின்மயி.
“அது அம்மாவுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுதுடா?” என்று மகளின் முகம் பார்க்க
“அய்ய்ய்! ஜாலி. அப்போ நம்ம வீட்ல டூ பாப்பா. எப்போ வரும்?” என்று ஆசையாய்க் கேட்டாள்.
“நீ தர்ட் போகும்போது பாப்பா வந்துடும்” என்ற அம்மாவிடம்
“ம்மா, ஸாரீ தள்ளுங்க. நான் பாப்பாவுக்குக் கிஸ் பண்ணனும்” என்று சொல்ல, சிரஞ்சீவி சிரித்தாலும் ரசித்து மகளையும் மனைவியையும் பார்க்க குழந்தைக்கு முத்தம் கொடுத்த சின்மயி அம்மாவின் கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள். சிரஞ்சீவி மகளைத் தூக்கிக் கொண்டு,
“அப்பா, உனக்கு சைக்கிள் வாங்கிட்டு வந்துட்டேன். கார்ல இருக்கு, போய் எடுக்கலாம் பங்காரம் வா” என்று சொல்லி மகளை அழைத்துப் போக, குழந்தை வேகமாய் ஹனுமந்தனின் வீட்டிற்கு ஓடிச்சென்றாள்.
“தாத்தா!” என்று மூச்சு வாங்க ஓடி வந்த சின்மயினை
“என்னடா பங்காரம்?” என்று சூர்யா தூக்கிக் கொள்ள “எனக்கு விளையாட குட்டிப் பாப்பா வரப்போகுது” என்று அவள் விட்ட சத்தம் இரண்டு வீடுகள் தள்ளி இருந்த சூர்யாவின் வீட்டிற்கே கேட்டது. எல்லாரும் காலையிலேயே கல்கியின் வீட்டில் கூடிவிட, கல்கிக்கு ஆயிரம் அட்வைஸ். உதயமூர்த்தி மகளிடம்
“அத்த சொல்றதைக் கேட்டு நட கல்கி, வேலைக்கெல்லாம் போக வேண்டாம்” என்றதும் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டாள்.
சிரஞ்சீவி மாமனிடம் “நல்லாயிருக்கீங்களா மாமா? செக் அப் போனீங்களா?” என்று விசாரித்தான். ஜெகதீஷ் உடனே “என் அத்தை பொண்ணுங்களுக்கு இருக்க வாய்க்கு இரண்டு வாய் பேசாத ஜீவனுங்க வந்து மாட்டியிருக்காங்க” என்று மனோவையும் சிரஞ்சீவியையும் வம்பிழுத்தான்.
“கல்கி, இந்த ஜெகதீஷ் என்னவோ சொல்றான்” என்று கல்கியிடம் மாட்டிவிட்டான் சிரஞ்சீவி. இருவரும் வாயாட, மனைவியிடம்
“அது என்ன? உங்கப்பா சொன்னா மட்டும் மண்டை எல்லா டைரக்ஷன்லயும் ஆடுது?” என்றதும்
“எதிர்த்துப் பேசினா அவரும் பேசி டென்ஷன் ஆவார். அமைதியா கேட்டுட்டு விட்டுட வேண்டியதுதான்” என்று சிரித்தாள் அவள்.
மதிய உணவு தடபுடலாய் இருக்க, மாலை எல்லாரும் கனகதுர்கா கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தனர். கோவிலுக்குச் சென்று விட்டு அதன் பின் கேக் வெட்ட திட்டம். இரண்டு கார்கள் இருக்க, ஒன்றை சூர்யா ஓட்ட, இன்னொன்றை சிரஞ்சீவி ஓட்டினான். கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து நிறைவாய் எல்லாரும் கீழே அடிவாரத்தில் உட்கார்ந்திருக்க,
ஜெகதீஷ் “பாப்பா, வாட் இஸ் யுவர் நேம்?” என்று சின்மயிடம் கேட்க
“என் பெயர் தெரியாதா சித்தப்பா?” என்று கேட்க “சொல்லுடா” என்று அவன் சொல்ல
கல்கி முறைத்துக் கொண்டிருக்க, எல்லாரும் சிரிப்புடன் பார்த்தார்கள். இதை செய்து கல்கியை வெறுப்பேற்றுவதில் எல்லாருக்கும் ஒரு குஷி.
“நா பேரு த்ரிபுரனேனி சின்மயி சிரஞ்சீவி வரப்ரசாத். நா ஊரு குண்டூர்ல சிரிபுரம்” என்று சுந்தர தெலுங்கில் சொன்ன பேத்தியை அள்ளி அணைத்துக்கொண்டார் சூர்ய நாராயணன்.
“உன் பெயரை சொல்லி டயர்ட் ஆகியிருப்ப சின்னும்மா, இந்தா தண்ணீயைக் குடி” என்று வம்பிழுத்தான் ஜெகா.
“விடு டா கல்கி, இவங்களுக்கு இதே வேலை. என் பேத்தி தமிழும் நல்லா பேசுவா” என்றார் யமுனா.
“அத்த, என்னம்மா கலாய்ச்சிருப்பா? பார்த்தா அவ பெயர்லயும் ஒரு த்ரிபுரத்தை சேர்த்துவிட்டுடீங்களே?” என்று அஞ்சனாவும் தங்கையைக் கிண்டல் செய்து மாமன் மகனுடன் ஒரு ஹைஃபை போட்டுக்கொண்டாள்.
அருகே இருந்த கிருஷ்ணா நதியைப் பார்த்தபடி எல்லாரும் படிக்கட்டில் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருந்தனர். ஜெகதீஷும் மலர்விழியும் அப்படியே கைகள் கோர்த்துக் கொண்டு நடக்க, உதயமூர்த்திக்கும் அங்கைக்கும் மகள்களின் வாழ்வு கண்டு மன நிறைவு. குழந்தைகள் எல்லாம் அவர்களிடம் இருக்க, அஞ்சுவும் மனோவும் குழந்தைகளை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். யமுனா கோவில் கோபுரத்தைப் பார்ப்பதைக் கண்ட சூர்யா
“ஏன்ட்டீ ப்ரியத்தம்மா? ஹாப்பி தானே? இன்னொரு பேரக்குழந்தை வரப்போகுது?” என்று கேட்க யமுனா புன்னகை செய்தவர்
“இத்தனை வருஷம் ஆகிடுச்சுல, ஆனா நீங்களோ உங்க அன்போ எதுவும் மாறல. எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சூர்யாகாரு” என்று காதலாய் கணவரின் கரம்பற்றிக்கொண்டார்.
“இவ்வளவு அழகான குடும்பம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் யமுனாகாரு” என்றார் சூர்யா சிரிப்புடன்.
இவர்களை விட்டு கல்கியும் சிரஞ்சீவியும் தள்ளி நின்று ஓடும் நீரை வேடிக்கைப் பார்த்தனர். அந்த மாலை பொழுதில் ப்ரகாஷம் பேரேஜ் வண்ண விளக்கால் ஒளிர்ந்து மஞ்சிமம் கூடிப் போய் இருந்தது. மலையின் குளுமையில் மனைவியுடன் இருந்த தருணம் இனிமைக் கூட்டியது தலைவனுக்கு.
“என்ன வேண்டின துர்க்காமாட்ட?” என்று வரப்ரசாத் கேட்க
“எதுவும் கேட்கத் தோணல, உங்களைக் கொடுத்தப்பவே இந்தம்மா எனக்கு எல்லாம் கொடுத்துட்டா. எதாவது வேணும்னாலும் உங்களைத் தான் கேட்பேன், வரப்ரசாத் விட வேற வரம் இல்லை” என்றவளை நெகிழ்ச்சியுடன் பார்த்தான்.
“நுவ்வு நான் ஜீவிதம்டா அம்மடூ” என்று சொல்லி அவள் கரத்தைப் பற்றி அவன் மெல்ல முத்தமிட