பத்தொன்பது வயதை நெருங்கியும் மனோரமா இன்னும் பூப்பெய்தி இருக்கவில்லை என்று சாரதா கூறியதைக் கேட்டதுமே வெளியே வந்து சுதிரைப் பார்த்தவன் மதுரையிலே சிறந்த மகளிர் மருத்துவர் யார் என்று பார்த்து முன்பதிவும் செய்யக் கூறி இருந்தான் சிபிரஞ்சன்.
அவர்கள் அங்கே செல்வதற்குள் அவர்களுக்கான அனுமதிச் சீட்டும் தயாராக இருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவரின் முன்னே அமர்ந்து இருந்தனர் நால்வரும்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட மருத்துவரும் சிபிரஞ்சனைப் போலவே பெரிய பெண்களை கடிந்து விட்டு மனோரமாவை சோதித்தவர், அவளுக்கு செய்ய வேண்டிய ஊடுகதிர் (ஸ்கேன்) சோதனைகளையும் எடுத்து வரப் பணித்தார்.
சற்று நேரத்தில் சோதனை முடிவுகளும் அவர் கையில் வந்து சேர்ந்து இருக்க, அவற்றை பார்வையிட்டு முடித்தவர், “நான் நினைச்ச அளவுக்கு பெரிசா ஒன்னும் ப்ரோப்லம் இல்லை. ஹார்மோன் பிரச்னையால தான் அவ ஏஜ் அட்டென்ட் பண்றது டிலேவாகுது” என்றவர் அதற்கான ஊசி மருந்துகளையும் போட்டு விட்டு மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தவர், “டூ ஆர் த்ரீ டேஸ்லயே ரிசல்ட் தெரிய வாய்ப்பிருக்கு. ஒன் வீக் மேல ஆச்சுன்னா அகைன் கூட்டிட்டு வாங்க. இன்னொரு இன்ஜெக்ஷன் போடலாம்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
தன் வயதை ஒத்த அந்த மருத்துவரின் பேச்சும் வைத்தியமும் அவர் கூறிய விஷயங்களும் சாரதாவிற்கும் ஓரளவு ஆறுதலாக இருக்க, “டாக்டர் சொன்ன போல சீக்கிரம் இவ வயசுக்கு வந்துட்டான்னா அந்த தம்பிக்கு கோவில் கட்டி கும்மிடுவேன் மதுமா” என்று கண் கலங்கக் கூறியவரை தேற்றியபடியே அனைவரும் வீடு வந்து சேர்ந்திருக்க, அங்கோ அடிபட்ட புலி போல் அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்தார் பட்டம்மாள் பாட்டி.
தங்கள் வீட்டு விசேஷத்திற்கு பேத்தியை அழைத்து வர வேண்டாம் என்று கூறிய உறவுகளை ஒரு வழியாக்கிவிட்டு சற்று முன்னர் வந்திருந்தவர் வெறுமையாகக் கிடந்த வீட்டைக் கண்டு குழம்பித்தான் போனார்.
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க இயலும் என்பதைப் போல் வீராவின் அன்னை, சிபிரஞ்சனைப் பற்றி சற்று அதிகமாகவே கூறி இருக்க, அதைக்கேட்ட பட்டம்மாளுக்கோ ஆத்திரம் எல்லயைக் கடந்தது.
“எந்த ஆஸ்பத்திரிக்கு போயிருக்காகன்னு உனக்கு தெரியுமா வீரா?” என்று கர்ஜனையாகக் கேட்டவரை,
“பட்டு கொஞ்சம் பொறுமையா இருமா. ஆஸ்பத்திரிக்கு போயிருக்கவுக வந்த பின்ன பேசிக்கலாம்.” என்ற சொக்கலிங்கம் அமைதிபடுத்த முயலும் பொழுதே, சிபிரஞ்சனின் லம்போர்கினி வீட்டு வாயிலில் வந்து நின்றிருந்தது.
முதலில் இறங்கிய மதுவும் சாரதாவும், மிகவும் சோர்ந்து தெரிந்த மனோவையும் மெதுவாக கரத்தைப் பிடித்து இறக்கி வீட்டிற்குள்ளும் அழைத்துச் செல்ல அவர்களைத் தொடர்ந்து சிபிரஞ்சனும் உள்ளே நுழைந்தான்.
“நில்லு அங்கையே” என்று அவனை வாயிலிலே நிறுத்தியிருந்த பட்டம்மாள், “நாலு எழுத்து அதிகமா படிச்சிட்டு பம்பாய்ல இருந்து கிளம்பி வந்துட்டா என் வீட்டுலயே நாட்டாமை பண்ணுவியா நீயி? ஏதோ என் பேத்தி கூட வந்தவராச்சேன்னு கொஞ்சம் இடம் கொடுத்தா நீ மடத்தில ஏறி உக்காரப் பாக்கற.” என்றும் உறுமலாகக் கூறினார்.
அவ்வுறுமலிலே அரண்டு போன இளம் பெண்கள் மூவரும் அச்சத்தோடு அவ்விடத்திலே நின்று விட, ஓரளவு இப்படி ஒரு சூழலை எதிர்பார்த்தே வந்தவன், “ஒரு நிமிஷம் பாட்டிம்மா” என்று விட்டு அதிர்ந்து நின்ற சாராதாவை நோக்கியவன், “ட்ரீட்மென்ட் பண்ணதுல மனோ ரொம்ப சோர்வா தெரியுறா ஆன்டி. அவளை உள்ள கூப்டு போய் சாப்பிட வைச்சு படுக்க வைங்க. டாக்டர் கொடுத்த டேப்லட்சையும் மறக்காம கொடுத்துடுங்க” என்று அன்னையும் மகளையும் உள்ளே அனுப்பி விட்டே பெரியவரின் புறம் திரும்பியவன் “சொல்லுங்க பாட்டி.” என்றான்.
அதில் இன்னுமே ஆத்திரமாகியவர், “என்ன சொல்லணும் நான்?. என் வீட்டுக்குள்ள வந்து என்ன பண்ணிட்டிருக்க நீ? என் பேத்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போற உரிமையை யாரு கொடுத்தா உனக்கு?” என்று அவனை எடுத்தெறிந்து பேச…
“ஒரு சின்ன பொண்ணு பிரச்னைல இருக்கப்போ அவளுக்குத் தேவையான உதவிய செய்யறதுக்கு நான் மும்பைல இருந்து வந்திருக்கணும்னோ அவளுக்கு உரிமையானவனா இருக்கணும்னோ அவசியம் இல்ல பாட்டிமா. இத நீங்க எப்பயோ செஞ்சிருக்க வேண்டியது. நீங்க செய்யாததால நான் இன்னிக்கு செய்ய வேண்டியதா போயிடுச்சு. இதுவே டூலேட்னு டாக்டர் சொன்னாங்க” என்று நிதானமாகவே விளக்கம் கூறினான்.
ஆடவனின் அந்த நிதானமே, பெரியவரை குற்றவாளி போல் சித்தரிக்க முயல, ‘மும்பைக்காரன் ரொம்பல்ல சீன் போடுறான்’ என்று பல்லைக் கடித்த வீரா, “உனக்கு என்ன மனசுல பெரிய இவன்னு நினைப்பாடா? அம்மாச்சியோட பேச்சை மீறி மனோ புள்ளைய ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போனதில்லாம அவுகளையே எதித்து வேற பேசுற?” என்று வழக்கம்போல் அவனை அடிக்கப் பாய்ந்தான்.
அவன் நல்லநேரத்திற்கு சிபிரஞ்சன் சுதிரை வேறு ஒரு வேலையாக வெளியில் அனுப்பி இருக்க, அவன் இல்லை என்பதை உறுதி செய்து விட்டுத்தான் வீரா அவனை நோக்கிக் கையை சுழற்ற…
“பேசிக்கிட்டு இருக்கப்போ கை நீட்டுற பழக்கத்தை இன்னும் விடலியாப்பா நீ?” என்று நொடியில் வீராவைப் பிடித்து இழுத்திருந்தார் சொக்கலிங்கம்.
அதற்குள், “மாமா…” என்ற அதட்டலோடு அவர்களுக்கு இடையில் வந்திருந்த மதுரிமாவும், “அவங்க மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேணாம் மாமா” என்ற எச்சரிக்கையோடு சிபியை மறைத்து நின்று இருக்க…
சொக்கலிங்கம் மட்டும் வீராவை பிடித்திருக்காவிட்டால், நிச்சயம் அவனது கைகள் அவள் கன்னத்தினை பதம் பார்த்திருக்கும் என்று உணர்ந்த சிபி,
“ஹேய் மது… என்ன செய்ற நீ” என்று தன் முன்னே நின்றவளை தோளைப் பற்றி இழுத்ததில் நிலை தடுமாறியவள் ஆடவனின் பரந்த நெஞ்சில் மோதி நின்றாள்.
தன் நெஞ்சில் வந்து மோதியவளை கையைப் பற்றி நிற்க வைத்தவன் திரும்பி, “ஹேய் இடியட். அறிவில்ல உனக்கு? இப்படித்தான் அவசரப்பட்டு கையை நீட்டுவியா? உன்னோட மூர்க்க அறையை தாங்கிருப்பாளா மது?” என்று அடிக்குரலில் உறுமியவாறு வீராவின் கன்னத்தில் அறையப் போனவன், சற்றே பயந்து பின் வாங்கிய வீராவின் முகத்தைப் பார்த்து கையை கீழே இறக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அதற்குள் பாட்டியிடம் திரும்பி இருந்த மதுரிமாவும், “அவர் அப்டி என்ன தப்பு பண்ணினார்னு அவரை இப்டி நிக்க வச்சு கேள்வி கேக்கறீங்க பட்டு பேபி? அவர் மனோவுக்கு நல்லது தானே செஞ்சிருக்கார்.” என்று பாட்டியிடமே எகிறிக் கொண்டு செல்ல…
மதுரிமாவிடமிருந்து அப்படி ஒரு சினத்தை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்தே இருக்கவில்லை.
ஆனால் அக்கணம் சிபிரஞ்சனைத் தவிர வேறு எதுவுமே பெண்ணவளின் சிந்தையில் இல்லை போலும்.
“நான் காதல் கத்திரிக்காய்னு மனசு அலைபாய விட்டது என்னோட தப்புன்னா என்ன என்ன வேணா பண்ணுங்க பட்டு பேபி. ஆனா தொட்டதுக்கெல்லாம் அவரை கூடத்துல நிறுத்தி வச்சு கேள்வி கேட்கிறதும், மாமா அவரை அடிக்கப் பாக்குறதும் கொஞ்சம் கூட நல்லா இல்லை” என்று தொண்டை அடைக்கக் கூறியவளைப் பார்த்து…
“சபாஷ்… அவ்ளோ தூரம் ஆகிடுச்சா. மொளைச்சு மூனு இலை விடாத பச்சை மண்ணு நீயி. யாரோ ஒருத்தனுக்கு ஏத்துக்கிட்டு என்னயவே எதுத்து பேசுறியா?” என்று ஒரு மாதிரி இறுகிய குரலில் கேட்டார் பட்டம்மாள்.
அக்குரலில் இருந்த இறுக்கத்தை பெண்ணவள் உணர்ந்தாளோ இல்லையோ, விபரம் அறியாத சிறு பிள்ளையில் இருந்து அவளுக்கு அனைத்துமாய் இருக்கும் அந்த பெரியவரின் தவிப்பை அவர் பார்வையிலே உணர்ந்து கொண்டவன், “மது…” என்று அழைத்து, “பாட்டிமாகிட்ட நான் பேசிக்கிறேன் மது. நீ உள்ள போ.” என்றான்.
அதைக்கேட்டு இன்னும் சற்று அவனை நெருங்கி வந்து நின்றவள், “ம்ஹும்… உங்களை தனியா விட்டு நான் போகமாட்டேன்.” என்று சிறு பிள்ளையாய் தலையை ஆட்ட…
“மது… நான் சொன்னாக் கேக்க மாட்டியா நீ?” என்று அழுத்தமாகக் கேட்டவன், அவளை செல்லமாக முறைத்து வைத்தான்.
சுற்றி அத்தனை பேரும் நின்றிருந்தும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது பேசியவர்களைக் கண்டு, “நம்ம பேரரும் பேத்தியும் காதல் பண்றதுல நம்மளையே மிஞ்சிடுவாக போலயே பட்டும்மா” என்று தன் மனைவியின் செவியில் முணுமுணுத்துக் கொண்ட சொக்கலிங்கத்தை…
“மீசைக்காரரே…” என்று அதட்டிய பட்டம்மாள் கண்களை கோலிக்குண்டாய் உருட்ட…
அச்சமயம், “ஆ அம்மா…” என்ற அலறல் சப்தம் மனோவின் அறையில் இருந்து வெளிவந்து இருந்தது.
அதில் பெண்கள் அனைவரும் அடித்துப் பிடித்து அறைக்குள்ளே நுழைய, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “அம்மா வயிறு ரொம்ப வலிக்குதும்மா. முடிலமா” என்று கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள் மனோரமா.
ஏற்கனவே பீதியில் இருந்த சாரதா மகள் வயிறுவலியால் துடிப்பதைப் பார்த்ததும், “அய்யய்யோ… அத்தை பேச்சை மீறி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதுல தான் பிள்ளைக்கு ஏதோ ஆகிருச்சு போல” என்று புலம்பத் தொடங்க…
“சாரதா…” என்று அவரை அடக்கிய பட்டம்மாளோ பேத்தியை ஒரு நொடி கூர்மையாகப் பார்த்துவிட்டு அவர் செவியில் ஏதோ உரைத்தார்.
அதில், “அத்தை…” என்று கூவியவர், “வலிய செத்த பொறுத்துக்கிட்டு என்னோட வாடா” என்று மகளை குளியல் அறைக்குள் அழைத்துச் சென்றவர் சில நிமிடங்களில் திரும்பி வந்து, “அத்தை… உங்க பேத்தி சமைஞ்சிட்டாத்தை.” என்று புன்னகையும் கண்ணீரும் கலந்த குரலில் அவரைக் கட்டிக் கொண்டு அழுதார் சாரதா.
விழிகளை மூடித் திறந்து மருமகளை வாஞ்சையாக அணைத்துக் கொண்டவரும், “இது சந்தோசப்பட வேண்டிய பொழுது சாரதா. அழாம ஆக வேண்டியதைப் பாரு.” என்றுவிட்டு வெளியே வந்தவரின் விழிகள் அங்கிருந்த சிபிரஞ்சனின் மேல் தான் அழுத்தமாகப் படிந்து இருக்க, “என்னமோ இருக்கு இந்தப் பையன்கிட்ட” என்றும் மனதிற்க்குள் சொல்லிக் கொண்டார்.
சில நொடிகளில் மனோரமா பூப்பெய்தி விட்ட செய்தி குடும்பத்தினர் அனைவருக்கும் பகிரப்பட, அனைவர் முகத்திலும் மனதிலும் அப்படி ஒரு சந்தோசம் பொங்கிப் பெறுகியது.
மனோவிற்கு செய்ய வேண்டியதைச் செய்து முடித்த சாரதாவும், கணவரையும் அழைத்து வந்து சிபிரஞ்சனுக்கு நெகிழ்ந்த குரலில் நன்றி உரைத்துச் செல்ல…
“பேரரே…” என்று ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்ட சொக்கலிங்கமும், “நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்னு எனக்கு அப்போவே தெரியும் பேரரே. ஏன்னா நீங்க என் பேத்தியோட தேர்வாச்சே” என்று வழக்கம் போல் சிலாகித்துக் கொண்டவர், “பட்டும்மா” என்று மனைவியிடம் ஓடினார்.
பெரியவரின் அந்தப் பேச்சில் தான் சட்டென்று நிமிர்ந்தவன் மதுரிமாவை எங்கென்று பார்க்க, அப்பொழுது தான் சிற்றன்னையோடு சேர்ந்து மனோவிற்கு உதவி விட்டு வந்தவளும் அவனைத்தான் பார்வையாலே பருகியபடி வந்து கொண்டிருந்தாள்.
இத்துணை தினங்கள் போல் அல்லாது ஏதோ ஒரு வித்தியாசம் பெண்ணவளின் பார்வையில்.
அவன் விழி வழியே நுழைந்து, அவன் இதயத்தையே தடுமாறச் செய்வது போன்ற பெண்ணின் அந்தப் பார்வை, அவன் விழிகளையும் இமைக்க விடாது செய்திருக்க, அவள் அவனை நெருங்குவதற்குள்ளாக, “மதுப்புள்ள…” என்று அவள் உறவுகள் எல்லாம் வரத் தொடங்கவும் வேறு வழியில்லாது வெறும் தலையசைப்போடு அவனிடமிருந்து விலகிச் சென்றிருந்தாள் மதுரிமா.
தன்னை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவள் உறவுகளோடு செல்லவும் அமைதியாக அங்கிருந்து வெளியேறியவனும் படப்பு வீட்டை நோக்கிச் சென்று இருந்தான்.