வெகுநாட்கள் கழித்து தங்கை பூப்பெய்திய செய்தியோடு, அதற்கு காரணமான சிபிரஞ்சனையும் அனைவரும் பாராட்டியதில் வேறு அப்படி ஒரு சந்தோசத்தில் திளைத்திருந்தாள் பெண்ணவள்.
தன் பேச்சை மீறி பேத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்று சற்று முன்னர் அப்படி ஒரு கோபத்தில் இருந்த பட்டம்மாளும், அவள் பூப்பெய்திய செய்தியைக் கேட்டதும் சினமெல்லாம் ஒதுக்கியவராய், மனோவின் விசேஷத்தை விமரிசையாக செய்வதற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட, அடுத்து வந்த ஏழு நாட்களும் விழாக்கோலம் பூண்டிருந்தது மதுரிமாவின் வீடு.
சுத்துப்பட்டில் இருந்த சொந்தபந்தங்கள் அனைவருக்கும் நேரிலே சென்று பூப்புனித நீராட்டு விழாவிற்கான அழைப்பை விடுத்தவர்கள் மனோவோடு சேர்த்து அனைவருக்குமே புதிய உடைகளும் எடுத்து இருக்க, மதுரிமா கூறாமலே சிபிரஞ்சனுக்கும் சேர்த்து உடைகள் எடுத்து இருந்தார் பட்டம்மாள் பாட்டி.
அதில், “பட்டு பேபி…” என்று துள்ளிக் குதித்து அவரை கட்டிக் கொண்டு முத்தங்கள் பதித்தவளுக்கு தானே சென்று நேரடியாக அவன் கையில் அவ்வுடையைக் கொடுக்க வேண்டும் என்று அப்படி ஒரு உந்துதல்.
வீடு முழுதும் பெண்கள் கூட்டமாக இருந்ததாலோ என்னவோ கடந்த நான்கு நாட்களாக குறிப்பாகச் சொல்லப்போனால் மனோரமா பூப்பெய்திய தினத்தில் இருந்தே சிபிரஞ்சன் உணவருந்துவதற்குக் கூட பெரிய வீட்டின் பக்கம் வந்திருக்கவில்லை.
உறவுகளின் அருகாமையில் அன்றைய நாளுக்குப் பிறகு அவனிடம் பேசும் வாய்ப்பும் அவளுக்குக் கிட்டாமலே இருக்க, உடையை கொடுக்கும் சாக்கிலாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என்று அப்படி ஒரு ஆவல் பெண்ணவளுக்கு.
அன்றும் அப்படித்தான், சிபிரஞ்சன் இரவு உணவை வேண்டாம் என்று கூறியிருந்ததால் சுதிர் மட்டும் வந்து சாப்பிட்டுச் சென்றிருக்க, இங்கே மதுவுக்கும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
‘ரஞ்சன் சார் ஏன் இப்போல்லாம் இந்த பக்கம் சரியா வர்றதில்லை’ என்ற யோசனையோடு ‘நைட் நேரம் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்’ என்ற கவலையும் சேர, அங்கிருந்த இரண்டு ஆப்பில் பழங்களை கழுவி எடுத்தவள், பாட்டி வாங்கிய உடையையும் மறு கையில் எடுத்துக் கொண்டு படப்பு வீட்டிற்கு விரைந்து இருந்தாள்.
அங்கோ படப்பு வீட்டிற்கு சற்றே தள்ளி தோட்டப்பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ பணி செய்து கொண்டிருந்தான் சிபிரஞ்சன்.
படப்பு வீட்டின் வாசலில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தோடு, தென்னை மர கீத்துக்களின் ஊடே புகுந்து வந்த வெண்ணிலவின் ஒளியும் ஆடவனை வஞ்சனையின்றித் தழுவி, அவன் முகத்தின் களையைக் கூட்டி இருக்க, அவைகளோடு போட்டியிட்ட தென்றல் காற்றும் ஆடவனின் சிகையோடு விளையாடி கண்களை மறைத்து அவன் வேலையைக் களைத்தது.
தன் வேலைக்கு இடையூரு செய்த போதும், காற்றின் அந்த விளையாட்டை அனுபவித்து ரசித்துக் கொண்டவன், இடது கை விரல்களை நான்காக விரித்து, முன்னே விழுந்த சிகையைக் கோதிவிட்டு வலது கரத்தால் தன் பணியையும் தொடர்ந்திருக்க…
விழிகளை அவனை விட்டு நகர்த்த இயலாது, நகர்த்த விரும்பாது ஆடவனையே பார்த்தபடி நின்று விட்டாள் மதுரிமா.
அவன் கோதி அடக்கிய சிகையானது காற்றின் கலாட்டாவில் மீண்டும் மீண்டும் அவன் காந்தக் கண்களை வந்து மறைக்க, அப்பொழுதும் துளியும் சலிக்காது இவனும் திரும்பத் திரும்ப கோதியபடியே தன் வேலையையும் தொடர, அத்துணை ரம்யமாக இருந்த காட்சி அதை விட்டால் நாள் முழுவதும் கூட நின்று ரசித்திருப்பாள் போலும் பெண்ணவள்.
ஆனால் அவள் சூடி இருந்த மல்லிகை மணமானது காற்றோடு இணைந்து வந்து ஆடவனின் நாசியை நிறைத்ததோ… சட்டென நிமிர்ந்தவன் அங்கே மரத்தின் அருகில் நின்று தன்னையே பார்த்திருந்த பெண்ணைக் கண்டதும், “ஹேய் மது… நீ எப்போ வந்த… ஏன் அங்கையே நின்னுட்ட?” என்று உரக்கவே அழைத்திருந்தான்.
அதன் பின்னரே அவன் மீதிருந்த பார்வையை மாற்றிக் கொண்டவள், ‘என்ன செய்துட்டிருக்க மது நீ?. எத்தனையோ தடவ ஸ்ரீகூட இதுபோல வேலை செய்றத பார்த்திருக்க. ஆனா இப்டி உன்ன மறந்து ரசிச்சதில்லையே. இன்னிக்கு உனக்கு என்னடி ஆச்சு?’ என்று தன்னைத் தானே கடிந்தவாறு மெதுவாக அவனை நெருங்கினாள்.
அவள் நெருங்கி வருவதற்குள் மீண்டும் மடிக்கணினியில் புதைந்து செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவிட்டே நிமிர்ந்தவன், “வா மது. என்ன இந்நேரம், இந்தப்பக்கம் விசிட்?.” என்றவன், “வந்தது கூடத் தெரியாம ஏன் அங்கையே நின்னுட்ட மது?” என்றும் இலகுக் குரலில் வினவ…
அவள் அங்கேயே நின்றுவிட்டதற்கான காரணத்தை எண்ணி “அது அது… வந்து…” என்று திணறியவள், “நீங்க சின்ஷியரா ஒர்க் பண்ணிட்டு இருந்தீங்க. அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு” என்று ஒருவழியாக சமாளித்து வைத்தாள்.
அதைக்கேட்டு, “ப்ச் மது. உன்னோட வரவு எனக்கு எப்பவும் டிஸ்டர்பா இருக்காது.” என்று தலையை ஆட்டிக் கூறியவன், “சிட் மது. உக்காந்து இந்த டிசைன் எப்டி வந்துருக்குன்னு பாத்து சொல்லு” என்று கட்டிலின் ஓரத்தைக் காண்பித்தான்.
அவள் அமர்ந்ததும் மேசையில் இருந்த மடிக்கணினியை அவள் புறம் நகர்த்தி வைத்தவன், “மேரேஜ் ரிசப்ஷன்கான கவுன் ஒன்னு டிசைன் பண்ணேன் மது. எப்டி இருக்கு பாரு. ஏதும் சேஞ்சஸ் இருந்தா சொல்லு” என…
சற்று முன்னர் அவனை ரசித்தது போலவே அவன் செய்திருந்த வேலைப்பாட்டையும் அணுவணுவாக பார்த்து ரசித்தவள், “அஸ் யூஸ்வல் ரஞ்சன் சார். டிசைன் ரொம்பவே அழகா இருக்கு. ரிசப்ஷன்ல இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு பொண்ணு நின்னா மாப்பிள்ளை பொண்ணை விட்டுட்டு ட்ரெஸ்ஸை தான் பாப்பாரு” என்று மெலிதான சிரிப்பினூடே அவன் பணியை புகழ்ந்து பேசினாள் மதுரிமா.
பெண்ணவளின் அந்தக் கூற்றில் சட்டென்று சிரித்து விட்டவனோ,
“உனக்கு உன் பாஸ் மேல ஓவர் கான்பிடன்ஸ்னு தெரியும் மது. இருந்தாலும் இதெல்லாம் ரொம்பவே டூ மச்.” என்று மேலும் சப்தமிட்டுச் சிரிக்க…
“அப்டிலாம் இல்லை. நான் உண்மையை தான் சொன்னேன்” என்றவளும் அவனைப் பார்த்து அசடு வழிந்து சிரித்து வைக்க, அவள் முகத்தை விட்டும் விலக மறுத்தது ஆடவனின் விழிகள்.
அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடியே மணித்துளிகள் சில கரைந்திருக்க, சிறு சிறுமலோடு தன்னை மீட்டுக் கொண்டவன் அப்பொழுதுதான் அவள் கரத்தினில் இருந்த பையையும் கவனித்து,
“ஹேய் மது. இதென்ன கைல?” என்றான்.
அப்பொழுதுதான் அவளுக்கு தான் வந்த காரணமே நினைவில் உதிக்க,
“ஹான் சார். இது மனோவோட பங்சன்குன்னு பாட்டி உங்களுக்கு எடுத்து கொடுத்த ட்ரெஸ். நானே செலக்ட் பண்ணினேன். பிடிச்சிருக்கா பாருங்களேன்.” என்று விழிகள் மின்ன அவனிடம் நீட்டினாள்.
“ஓ… தேங்க்ஸ் மது” என்ற புன்சிரிப்போடு அதை வாங்கிக் கொண்டவனும் உடையை வெளியே எடுத்துப் பார்த்து விட்டு, “உன்னோட செலக்சன் எப்பவும் பெஸ்ட் தான் மது. நைஸ் ட்ரெஸ்” என்று சொல்ல…
“அப்போன்னா பங்க்சன் அன்னிக்கு இதையே போட்டுக்கறீங்களா?” என்று ஆவல் மின்னக் கேட்டாள்.
அதில் வாஞ்சையாக அவளைப் பார்த்தவனும், “நிச்சயம் போட்டுக்கறேன் டா” என்று கண்கள் சிரிக்கச் சொல்ல…
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ரஞ்சன் சார்” என்று முகத்தோடு அகமும் மலர நன்றி உரைத்தவள், “நீங்க மட்டும் அன்னிக்கு அதிரடியா மனோவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகாட்டி, அவ இன்னும் எவ்ளோ நாள் இந்த கஷ்டத்தை அனுபவிச்சிருப்பாளோ தெரியல? உங்களாலதான் இன்னிக்கு இந்த வீடே இவ்ளோ சந்தோசமா இருக்கு. சித்திக்கு தலை கால் புரியல. ஏன் எனக்கும்தான்” என்று பேசிக்கொண்டே சென்றவள்,
“பாட்டி உங்ககிட்ட நடந்துக்கறது எல்லாம் பொறுத்துட்டு நீங்க அகைன் அகைன் உதவி பண்ணிட்டே இருக்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு சார். இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு தான் தெரியல. என்கிட்ட இப்போதைக்கு தாங்க்ஸ் மட்டும் தான் இருக்கு ரஞ்சன் சார்” என்று முகம் விகசிக்கக் கூறினாள் மதுரிமா.
பெண்ணவள் பேசப்பேச நாட்டியமாடும் விழிகளையும், அகத்தின் மகிழ்வை அப்பட்டமாக எடுத்துக் கூறிய பளிங்கு போன்ற முக வடிவையும் சில நொடிகள் தனை மறந்து பார்த்து விட்டு சட்டென பார்வையை திருப்பிக் கொண்டவன்,
“ஃப்ரண்ட்ஸ்குள்ள இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் தேவையில்லை மது. மனோ உனக்கு மட்டும் சிஸ்டர் இல்லை எனக்கும் தான்” என்று சொல்ல…
“நான் நான் உங்களுக்கு ஃப்ரண்டா?” என்று விழிகளை இன்னும் ஆழியாய் விரித்தாள் பெண்ணவள்.
அதில், “ஊஃப்…” என்று இதழ்களை குவித்து ஊதிக் கொண்டவன்,
“வெறும் ஃப்ரண்ட் இல்லை மது. பெஸ்ட் பிரண்ட். அதனால நமக்குள்ள தாங்க்ஸ், சாரி இதெல்லாம் இனிமேல் சொல்லக்கூடாது. சரியா?” என்று அழுத்தமாக உரைத்தவன், “அப்றம் இந்த சாரையும் மூட்டை கட்டி வச்சுட்டு என்ன பேர் சொல்லியே கூப்பிடு மது.” என்றும் சொல்ல…
“நானா? உங்களையா? பேர் சொல்லிக் கூப்பிடுறதா? அச்சோ வேணாமே” என்று அலறியே இருந்தாள் மதுரிமா.
பெண்ணவளின் இன்றைய பேச்சும் செயலும், பார்வையும் அவனிடம் ஏதேதோ சாகசங்களை நிகழ்த்தி விட முயல, “நீதான். என்னைத்தான். இனிமேல் பேர் சொல்லித்தான் கூப்பிடணும்” என்று அவளைப் போலவே கூறியவன், அவள் மீண்டும் ஏதோ கூற வருமன், “நான் உன்னோட பாஸ் மது. இட்ஸ் மை ஆர்டர்” என்று குறும்பு கூத்தாடக் கூறியவனை…
சில கணங்கள் தனை மறந்து பார்த்தவளும், “அப்போன்னா நீங்களும் எவ்ளோ ஒர்க் இருந்தாலும் நைட் நேரம் சாப்பிடாம இருக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணுங்க. நைட்ல சாப்பிடாம இருந்தா யானை பலம் குறைஞ்சுடுமாம். தாத்தா சொல்லிருக்காங்க. அதான் உங்களுக்காக ஆப்பில்ஸ் எடுத்துட்டு வந்தேன். இதையாவது இப்போ சாப்பிடுங்க” என்று கையிலிருந்த பழங்களையும் அவனிடம் நீட்டினாள் பெண்ணவள்.
பொறுப்பில்லாத பெற்றோர்களைப் பெற்று தாத்தாவின் கண்காணிப்பில் தன் இரட்டைக்கும் வழிகாட்டியாய் வாழ்ந்து வந்தவனிடம் அவன் அன்னை கூட அவனது உணவைப் பற்றிய கவலை கொண்டதாக அவனுக்கு ஞாபகமே இருக்கவில்லை.
ஆனால் இந்தப் பெண்ணானால் தன்னை நன்றியாலே நனைய வைக்கிறாள், தான் உண்ணாது இருப்பது தாளாது பழங்களைக் கொண்டு வந்து தருகிறாள். என்னை என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறாள் என்று மதுரிமாவின் அக்கறையில் மென்மேலும் உருகிக் கரைந்தவன், “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மது…” என்று ஆப்பில்களோடு அவள் கரத்தினையும் பற்றிக் கொண்டவன் “என்னோட தாத்தாக்கு அப்றம் உன்கிட்டதான் நான் ஒரு நெருக்கத்தை உணர்றேன் மது” என்று நெகிழ்ந்த குரலில் சொன்னான்.
ஆடவனின் அந்த திடீர் செயலில் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று அறியாது நொடிகள் சில அப்படியே அமர்ந்து இருந்தவளின் அமைதி கண்டே தன் செயலை உணர்ந்து சட்டென அவள் கரத்தினை விட்டவன், “சாரி சாரி சாரி மது.” என்று தவறு செய்தவனாக பெண்ணவளின் முகத்தை ஏறிட…
“ப்ச் பரவாயில்லை ரஞ்சன் சார். கொஞ்சம் முன்ன நீங்க தானே சொன்னீங்க. நாம பெஸ்ட் ஃபிரண்ட்னு. அப்டி பெஸ்ட் ஃபிரண்ட்டா இருக்கவங்க இப்டி தொட்டத்துக்கெல்லாம் சாரி கேக்க மாட்டாங்க” என்று அவனோடு சேர்த்து தனக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
பின் ஏதோ ஞாபகம் வந்தவளாய், “உங்களுக்கு ஒன்னு தெரியுமா?, என்னோட அப்பாவும் உங்களைப் போலத்தான் சின்ன புள்ளைல என்ன தூக்கி கொஞ்சும் போதெல்லாம் என் கையை இறுக்கமா பிடிச்சிக்குவாங்க. அப்றம் அவங்க கன்னத்துல வச்சு அழுத்தி கைக்கு முத்தமும் கொடுப்பாங்க.” என்று இறந்து போன தந்தையைப் பற்றி கூறத் தொடங்கியவள், “ஆனா அப்போல்லாம் அவங்க மீசையும் தாடியும் குத்துதுன்னு நான் அவங்களை அப்டி செய்யவே விடாம அம்மாகிட்ட ஓடிடுவேன்” என்று சற்றே கரகரத்த குரலில் முடித்தவளைக் கண்டு, “மது…” என்று மீண்டும் அவள் கரத்தைப் பற்றியவன், “ஹேய் மது என்னடா… உன் பேரண்ட்ஸ ரொம்ப மிஸ் பண்றியா?” என்றான் மென்மையான குரலில்.
ஆடவனின் அக்கேள்வியில் சட்டென கண்கள் கலங்கி, “ஆம்…” என்று தலையை ஆட்டியவள், “நான் என்னோட அப்பா அம்மா கூட இருந்தது ரொம்பவும் சார்ட் பீரியட் தான் ரஞ்சன் சார். ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் என்மேல வச்சிருந்த பாசம் அளவில்லாதது.” என்றவள்,
“அவங்களுக்கு மேரேஜ் ஆகி ஃபைவ் இயர்ஸ் கழிச்சுதான் நான் பொறந்தேன்னு என்ன அவ்ளோ செல்லமா வளத்தாங்க. நான் ஆசைப்பட்ட உடனே அடுத்த செகண்ட் அப்பா அதை என் கண்ணு முன்ன கொண்டு வந்து வைப்பாங்க. ஆனா எனக்குதான் அவங்க கூட இருக்க கொடுத்து வைக்கலை” என்று சொன்னவள், “ஆனாலும் நான் ப்ளஸ்ட் சைல்டு தான் ரஞ்சன் சார். கடவுள் என் பேரண்ட்ஸ என்கிட்ட இருந்து பறிச்சுகிட்டாலும், என்னோட தாத்தா பாட்டி மூலமா என்ன ப்ளஸ்ட்(blessed) பண்ணியிருக்காரு. எனக்கு கிடைச்சிருக்க போல உறவுகள் நிச்சயம் வேற யாருக்கும் கிடைச்சிருக்குமானு தெரியல. அந்த வகையில் நான் லக்கி தான். அப்டிப்பட்டவங்க மனசு கோணிடக் கூடாதுன்னுதான் ஸ்ரீயை இங்க அழைச்சிட்டு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவர்தான் என்ன புரிஞ்சிக்கவே இல்லை.” என்று தன் மன உணர்வுகளை எல்லாம் ஆடவனின் முன்னே கொட்டிக் கவிழ்த்து இருந்தாள் பெண்ணவள்.
ஏனோ காதலன் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்ரீயிடம் கூட இதுவரை இப்படி எல்லாம் பேசியதில்லை அவள்.
ஆட்டமும் பாட்டமும், நண்பர்களும் கேளிக்கைகளும் தான் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடையாளம் என்று எண்ணம் கொண்டவனுக்கு அவளின் பெற்றோர் குடும்பம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாது இருந்தாலும், அவளுக்குமே அவன் தன்னவன், தான் சார்ந்த விஷயங்களை அவனிடம் பகிர வேண்டும் என்று ஒரு கணம்கூட தோன்றியதே இல்லை.
ஆனால் அதுபோல எந்த தயக்கமும் இல்லாது, மிக மிக இயல்பாக சிபிரஞ்சனிடம் அனைத்தும் கூறி முடித்தவளை இன்னுமின்னும் அதிசயம் போல பார்த்து இருந்தவன், அங்கிருந்த நீரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவளுக்குமே அது தேவையாக இருக்க, உடனே வாங்கி அருந்தி முடித்தவளும், “தாங்க்ஸ் அண்ட் சாரி ரஞ்சன் சார். என்னோட சோகக்கதை எல்லாம் சொல்லி உங்க மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்” என…
“ந்நோ மது…” என்று உடனே மறுத்தவன், “இதுவரை உன் வாழ்க்கைல நடந்து முடிஞ்ச எதையும் என்னால மாத்த முடியாது. ஆனா இனிமேல் உன்னோட ஒவ்வொரு நிகழ்வுகள்ளையும் அது வெற்றியோ, தோல்வியோ, மகிழ்ச்சியோ, துக்கமோ எதாயிருந்தாலும் அதை சேர் பண்ற ஒரு ஃப்ரண்டா, வெல்விஷரா நான் இருப்பேன் மது. அதை நீ எப்பவும் மறந்திடாத” என்றான் பூப்போல வருடிச் செல்லும் குரலில்.
அதைக்கேட்டு மென்மேலும் உருகியவள், “தேங்க்யூ சோ மச் ரஞ்சன் சார்” என்று மீண்டும் மீண்டும் நன்றி உரைக்க…
“கொஞ்சம் முன்ன என்ன சொல்லிட்டு நீ இப்போ எல்லாம் மறந்துட்ட மது.” என்றவன், “நீ ஃபஸ்ட் சார்னு சொல்றத நிறுத்திட்டு என்ன ரஞ்சன்னு பேர் சொல்லிக் கூப்பிடு. அப்போதான் நாம ஃபிரண்ட்ஸ்னு நம்ம ரெண்டு பேருக்குமே ஞாபகம் இருக்கும்” என்று ஏகமாய் அதட்டியவன் குரலோடு…
“ம்ம்ம்…” என்று ஏகாந்தமாய் சென்று சேர்ந்தது பெண்ணவளின் சிணுங்கள் கலந்த மௌன மொழிகள்.
அம்மௌனங்கள் எல்லாம் வார்த்தைகள் எடுக்கும் போதும் அவர்களிடம் நிலைத்திருக்குமா அவ்வேகாந்தம்???