அவன் வசித்த ஊருக்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்றார் போல் எப்பொழுதும் அடர்ந்த வண்ணத்திலே கால்சராயும், மிடுக்கான மேற்சட்டையும் அணிந்து இருப்பவன், இன்றோ இளம் மஞ்சள் வண்ண சில்க் காட்டன் சட்டையும் அதே நிறத்தில் சன்னக் கரை வைத்த சாம்பல் வண்ணத்தினாலான பருத்தி வேஷ்டியும் அணிந்து, ஆறடி உயரத்தில் கன கம்பீரமாக அந்த அறையில் இருந்த சிறு கண்ணாடியின் முன்னே நின்றவன், அதில் விழுந்த தன் விம்பத்தை பார்த்து தனக்குத் தானே, “நாட் பேட்…” என்று சொல்லிக் கொண்டான் சிபிரஞ்சன்.
அதைக்கேட்டிருந்த அக்கண்ணாடியோ, “ஏன்டா… என் கண்ணே பட்டுடும்போல இவ்ளோ அழகா இருந்துட்டு நாட் பேடா? என்ன இருந்தாலும் உனக்கு இவ்ளோ தன்னடக்கம் கூடாதுடா?” என்று தன்னாலே புலம்பத் தொடங்கியது.
அதன் புலம்பலை எல்லாம் சட்டையே செய்யாது, “மாடு பிடிக்கிறதுக்கு இவ்ளோ ஸ்மார்ட்டான ட்ரெஸ்ஸா மது?” என்று தலையை ஆட்டிச் சிரித்துக் கொண்டவன் தன் முழுக்கைச் சட்டையினை முட்டிவரை மடித்து விட்டு மீண்டும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து விட்டே அங்கிருந்து அகன்றான்.
பட்டம்மாள் பாட்டிதான் வீட்டினர் அனைவருக்கும் பொங்கலுக்கு புத்தாடைகள் எடுக்கும் பொழுது அவனுக்கும் அந்த உடையை எடுத்து இருந்தார்.
அன்று போலவே இன்றும் மதுரிமாவே அவனுக்கான உடையை தேர்ந்தெடுத்து வாங்கி இருக்க, பெண்ணவளின் அழகிய ரசனையில் அன்னிச்சையாக மலர்ந்த அதரங்களோடு ஆயத்தமாகிக் கிளம்பி இருந்தவன் வாயிலை நோக்கி எட்டு வைத்த சமயம் அவன் சட்டைப் பையில் இருந்த கைபேசியோ அவனது உடன்பிறப்பின் அழைப்பைக் காட்டி அதிர்ந்தது.
அதில் நின்று நிதானித்தவன் கைபேசியை எடுத்து உயிர்பிக்க, “ஹாய் சிபி… எப்டி இருக்க?” என்று திரையில் தோன்றினான் ஸ்ரீரஞ்சன்.
“பைன் ஸ்ரீ…” என்று அவனுக்கு பதில் கொடுத்தவன், “லெக் பெயின் எப்டி இருக்கு?” என்று வினவ…
“இப்போ பெயின் எதுவும் இல்லை சிபி. நேத்தே கட்டைப் பிரிச்சாச்சு.” என்று சொல்லிக்கொண்டவன் அப்பொழுது தான் சகோதரனின் உடையில் இருந்த மாற்றத்தைக் கவனித்து, “ஹேய் சிபி வாவ்டா…! இந்த காஸ்ட்யூம்ல அப்டியே அச்சு அசல் கிராமத்தான் போலவே இருக்க. சோ ஹாண்ட்சம்டா…” என்றவன், “இன்னிக்கு தான் காளையை அடக்குற டாஸ்க் வச்சுருக்குதுகளா அந்த வில்லேஜ் பீப்பில்ஸ்?” என்றான் சற்று சலிப்பான குரலில்.
அதைக்கேட்டு, “ஸ்ரீ… பெரியவங்கள அப்டிலாம் சொல்லாதன்னு சொல்லிருக்கேன் ல. அவங்க எல்லாரும் மதுரிமாவோட ரிலேடிவ்ஸ். நாளைக்கு உனக்கும் உறவாகப் போறவங்க.” என்று அதட்ட…
அவனோ, “போ சிபி. இந்த வில்லேஜ் பீப்பீல்ஸாலதான் எனக்கும் ரீமாவுக்கும் இடையில இவ்வளவு பிராப்லம்ஸ். அவகிட்ட பேசியே ட்வென்ட்டி டேஸ் மேல ஆச்சு” என்று கூறினான்.
என்னதான் மதுவின் விடயத்தில் அவன் மீது இருக்கும் தவறை உணர்ந்து இருந்தாலும் கிராமத்து ஆட்களைப் பற்றிய அவன் எண்ணம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருந்தது.
மதுவோடு பேசமுடியாத வருத்தத்தில் அவன் அப்படிப் பேசுகிறான் என்று அந்த விடயத்தை ஒதுக்கி, “கூல்டவுன் ஸ்ரீ. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்” என்றவன், “இந்த ஊர்ல இன்னிக்கு ஜல்லிக்கட்டு திருவிழாவாம். அதுல விடுற காளையை தான் நான் மடக்கணுமாம். அதுக்குதான் கிளம்பிட்டு இருக்கேன்” என்றான் அவன் முந்தைய கேள்விக்கு பதிலாக.
அதை, “ம்ம்ம்…” என்று கேட்டுக் கொண்டவனும், “இந்த வில்லேஜ் பீப்பீல்ஸ் அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களா? இல்ல அவங்க வீட்டு மாட்டு கொட்டகைக்கு ஆள் எடுக்குறாங்களான்னே தெரியல. நல்லவேளை சிபி நாம ட்வின் பேபியா பொறந்தோம். இல்லன்னா என் கதி அதோ கதிதான். உனக்கு பதிலா நான் மட்டும் கிராமத்துக்குப் போயிருந்தேன் உங்க பொண்ணும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு ஒரே நாள்ள மும்பைக்கு ஃபிளைட் ஏறிருப்பேன்.” என்று புலம்பத் தொடங்கியவன் சட்டென்று நிறுத்தி, “சிபி… உனக்கும் இது போல விஷயம் எல்லாம் பழக்கம் இல்லிலடா. மேனேஜ் பண்ணிடுவியா? காளை உன்ன முட்ட வந்தா என்னடா பண்ணுவ?” என்று கவலை குரலில் பாசமலர் படமும் ஓட்டத் தொடங்கி இருந்தான் ஸ்ரீரஞ்சன்.
சகோதரனின் அந்தக் கூற்றில் அத்தனை தினங்கள் அவன் மீது இருந்த வருத்தம் கூட மறைந்து அழகான புன்னகையை உதடுகளுக்குக் கொடுத்தவன், “டோன்ட் ஒர்ரி ஸ்ரீ. மாடு பிடிக்கிறது பத்தி நிறைய நாள் ட்ரைனிங் எடுத்துருக்கேன். அதனால மேனேஜ் பண்ணிடுவேன். நீ ஃபீல் பண்ணாத. சீக்கிரமே மேரேஜ்க்கு சம்மதம் வாங்கிடலாம்.” என்று பலவாறு சகோதரனைத் தேற்றிவிட்டு அலைபேசியை அணைத்தவன் படப்பு வீட்டை விட்டு வெளியே வர…
அங்கோ, “காளையை அடக்கப் போகாதீங்க ரஞ்சன்.” என்று இமாலய தவிப்பையும் விழிகளில் தேக்கியபடி அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவன் சகோதரனின் காதலி மதுரிமா. இப்பொழுது அவன் காதலியாக.
எங்கே அவளிடம் சென்று பேசினால் அவள் தன்னைப் போகவிடாது தடுத்துவிடக் கூடுமோ என்று எண்ணியவன், அவளைப் பார்த்து வெறுமனே கண்ணை மட்டும் சிமிட்டி விட்டு அங்கு ஆயத்தமாகி இருந்த உறவுகளோடு சேர்ந்து கொள்ள, “தயாராகிட்டீகளா பேரரே?” என்று கேட்டுக் கொண்ட சொக்கலிங்கமும் அவனோடு வாகனத்தில் ஏறி அமர, அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் வாடிவாசலில் இறங்கி இருந்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுவாகவே கிராமப்புறங்களில் எல்லாம் சற்று விமரிசையாகவே கொண்டாடி வருவர் கிராமத்து மக்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே.
அதிலும் ஜல்லிக்கட்டுக்கு பேர் போன அலங்காநல்லூர் பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டுத் திருவிழாவைப் பற்றி சொல்லவே தேவை இல்லாதபடிக்கு சுத்து பட்டில் இருக்கும் ஊர் மக்கள் அனைவரும் அலைகடலென அங்கு திரண்டு இருக்க, போட்டி நடக்கவிருக்கும் இடத்திலோ பலவித கூச்சல்களும் ஆரவாரங்களும் என்று செவிப்பறையைக் கிழித்தது.
ஜல்லிக்கட்டு நடப்போகும் பகுதி முழுக்க மணல் கொட்டி வைத்திருந்தவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேண்டி இரு புறமும் கட்டைகள் கொண்டு வேலிகளும் அமைத்து இருக்க, ஜல்லிக்கட்டுக்காக வேண்டியே தாங்கள் வளர்த்த மாடுகளை குளிக்க வைத்து, சந்தனம் தடவி, கொம்புகளைச் சீவி கூர்மையாக்கி அழைத்து வந்திருந்தனர் கிராமத்துவாசிகள்.
மட்டைப்பந்து விளையாட்டிற்கு கமென்ட்ரி சொல்லுவதைப் போல் அங்கு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேசையில் இருந்த ஒலிப்பெருக்கியில், “ம்ம்ம் ஜல்லிக்கட்டுல கலந்துக்கப் போற செல்ல குட்டிக எல்லாம் ரெடியாகி வந்துட்டாக, அவககிட்ட முட்டு வாங்கி மூலைல உக்காரப் போற வீராதி வீரனுக எல்லாம் எங்கப்பா?” என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய மனிதர்.
அவர் அருகில் அவருக்குத் துணையாக அமர்ந்திருந்த மற்றவரும், “ஏய் இரப்பா என்ன அம்புட்டு அவசரம். அலங்காநல்லூர் காளைககிட்ட நெருங்கறதுன்னா சும்மாவா. சாப்டு கீப்டு தெம்பா வரட்டும்பா” என்று மீசையை முறுக்கியவாரு பேசிக் கொண்டிருக்க, உள்பனியனும் வெள்ளை வேஷ்டியுமாக அங்கு களத்திற்குள் வந்து குதித்தான் வீரேந்திரன்.
சுத்தி இருந்த பொது மக்கள் அனைவருமே அவன் வந்து நிற்கவும்,
“இந்தா வந்துட்டாருல்ல அலங்காநல்லூர் சிங்கம்” என்று கைதட்டி ஆர்ப்பரிக்க, அதைக்கேட்டு அங்கு வாடிவாசலுக்கு பின்னால் சீறி கொண்டு நின்ற காளைகளை விடவும், இங்கு கூட்டத்தில் இருந்த அனைவரையும் பார்த்து சிலிர்த்துக் கொண்டு சிரித்தான் வீரா.
மதுரிமாவின் குடும்பத்தினர் அனைவரும் போட்டியைப் பார்க்கத் தோதுவாக கூட்டத்தினரை ஒதுக்கிக் கொண்டு முன்னே வந்து நிற்க, வீராவோடு சேர்த்து இன்னும் சில ஆண்களும் அங்கு களத்தில் வந்து குதிக்க, அவர்களைத் தொடர்ந்த சிபிரஞ்சனும் அணிந்திருந்த சட்டையைக் களைந்து அருகில் இருந்த சுதிரிடம் கொடுத்தவன், வேஷ்டியையும் மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்க ஆயத்தம் ஆகினான்.
அவன் காளையை அடக்க ஒப்புக் கொண்ட நாளில் இருந்தே கதி கலங்கிப் போயிருந்த சுதிருக்கோ அங்கு கொம்பு சீவி நிறுத்தப்பட்டிருந்த பலஊர்களைச் சேர்ந்த காளைகளைப் பார்த்ததும் வயிற்றிர்க்குள் குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளும் குறுக்கே புகுந்து ஓட, “பாஸ்…” என்று சிபியின் கரத்தைப் பற்றிக் கொண்டவன், “எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு பாஸ். போயும் போயும் ஒரு பெண்ணுக்காக உங்க உயிரையே பணயம் வைச்சு இவ்ளோ ரிஸ்கான போட்டில கலக்கணுமா?.” என்று அழுதுவிடுவது போலவே கேட்டான்.
அவன் கேட்ட தோரணையிலே அவன் அன்பை உணர்ந்து வழக்கமான சிரிப்பைச் சிந்தியவன், “நம்ம உயிரானவங்களுக்கு உதவாம அந்த உயிர் நம்மகிட்ட இருந்து என்ன பிரயோஜனம் சுதிர்?” என்று அங்கு தன்னையே பார்த்திருந்த மதுரிமாவைப் பார்த்தவன் வேலியைத் திறந்து கொண்டு விறுவிறுவென்று அந்தப்புறம் சென்று இருந்தான்.
அவன் களத்தினுள் இறங்கி நிமிட நேரம் கழித்தே அவன் கூறிச் சென்ற வார்த்தைகளை உள்வாங்கி உணர்ந்து கொண்டவன், “பாஸ்… இப்போ என்ன சொல்லிட்டுப் போறாரு? ரீமாவை அவரோட உயிர்னு சொல்றாரா? அப்போ ஸ்ரீசார்க்கு வெறும் ****தானா?” என்று ஏடாகூடமாக எண்ணியவன், “இருக்கு தரமான சம்பவம் இருக்கு” என்று புலம்பியபடியே போட்டியை கவனிக்க ஆயத்தம் ஆகினான்.
சிபிரஞ்சன் களத்தில் வந்து குதிக்கவும் அவனை ஏளனமாகப் பார்த்த வீரா, “என்ன பங்காளி வாடிவாசல் வர தைரியமா வந்துட்ட” என்றவன், “இது கடைவீதிக்கு போய் சாமான் வாங்கற போல சாதாரண சமாச்சாரம்னு நினைச்சியோ? ஜல்லிக்கட்டுப்பு. கொஞ்சம் அசந்தா உயிருக்கே சேதாரம் ஆகிடும்ல பாத்துக்கோ” என்று மிரட்டல் போலவே சொன்னான்.
அவனைப் பார்த்தும் தன் அக்மார்க் புன்னகையை உதிர்த்தவன், “எனக்கு மதுவோட சந்தோசத்தை விட உயிர் ஒன்னும் பெரிசில்லை பங்காளி. உனக்கு என்கூட மோத பயமா இருந்தா நீ வேணா போட்டில இருந்து விலகிக்க” என்றவன் கீழே குனிந்து அந்த மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக் கொள்ள…
“ஹேய் ஹேய் காளை வருது, காளை வருது…” என்ற கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பைத் தொடர்ந்து வாடிவாசலின் உள்ளே இருந்து காளைகள் வெளியேறத் துவங்கியது.
புளியங்குளம் காளை, பர்கூர் காளை, உப்பளச்சேரி காளை என்று ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த காளைகளும் அடுத்தடுத்து வந்த வண்ணமும், வீரர்கள் அவற்றைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்ற வண்ணமும் இருக்க, அப்படி சில நிமிட நேரங்கள் ஒரு குறிப்பிட்ட கோட்டிற்குள் காளையை நிறுத்தி வைத்தவர்களுக்கு சிறு சிறு பரிசுகளும், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருந்தது.
“அடுத்து வரப்போறது காங்கேயம் காளைப்பா. பொல்லாத காளை. அந்த காளையை அடக்கி அது கொம்புல இருக்க பரிசை யாரு எடுக்குறாங்களோ அவகளுக்கு தான் இந்த வருஷம் வீராதி வீரன் பட்டம்” என்ற ஆரவாரத்தோடு அடுத்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சிபிரஞ்சனும் வீராவும் ஒருவரை ஒருவர் தீப்பொறி பறக்க பார்த்து விட்டு சிறிது மணலை அள்ளி கைகள் இரண்டிலும் தேய்த்துக் கொண்டனர்.
ஐந்தடி உயரத்தில் கருமை நிறமும், சாம்பல் வண்ணமும் கலந்த நிறத்தில், துடித்துக் கொண்டிருக்கும் திமிலோடு காங்கெயம் காளை ஒன்றும் வாடிவாசலில் இருந்து திமிறிக் கொண்டு ஓடிவர, அதன் வாலையும் திமிலையும் பிடித்து அதை நிறுத்த முயன்றான் சிபியை முந்திக் கொண்ட வீரா.
ஆனால் அந்தக் காளையோ தலையை ஆட்டி அவனைக் கீழே தள்ளிவிட்டு அந்த ஜல்லிக்கட்டு களம் முழுக்க அரண்டு மிரண்டு ஓடி ஆட்டம் காட்ட, களத்திற்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்திருந்த பொதுமக்களுக்கே அக்காளையின் தோற்றமும், சீற்றமும் விழிகள் முழுதும் பீதியைக் கிளப்பியது .
கீழே விழுந்திருந்த வீரா மண்ணைத் தட்டிவிட்டு எழுந்து மீண்டும் காளையை நெருங்கி வர, அதற்குள் மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த கயிறைப் பிடித்து இழுத்து அதை நெருங்கி இருந்த சிபியோ அதன் திமிலையும் அமுக்கிக் கொண்டு கொம்பை நோக்கிக் கையை நகர்த்தினான்.
அதைப்பார்த்த வீராவும் ஆவேசம் கொண்டு காளையை நெருங்கியவன் சிபியின் கரத்தைப் பற்றித் தடுக்கப் பார்க்க, அவன் பிடியோ உடும்பாக இருந்தது.
வீரா சிபி இருவரும் காளையின் இருபுறமும் நின்று அதன் கொம்பில் இருக்கும் பரிசை எடுக்க முனைய, சிபியிடமிருந்து இப்படி ஒரு போட்டியை எதிர்பார்த்து இராத வீராவும், அளவுக்கதிகமான வெறியோடே சிபியோடு போட்டியில் இறங்கினான்.
ஆனால் அவனுக்கு வெற்றிக்கான வாய்ப்பையே வழங்காத சிபிரஞ்சனோ மூச்சை இழுத்துப் பிடித்தபடி மாட்டின் பின்னோடே ஓடியவன் ஒரு கட்டத்தில் கொம்பில் மாட்டியிருந்த பரிசை கைபற்றிய நொடி, அவன் இடையில் இருந்து குபுகுபுவென்று உதிரம் கொட்ட ஆரம்பித்து இருக்க, “புதுத் தம்பிய மாடு முட்டிடுச்சு” என்ற கூக்குரலைத் தொடர்ந்து ஒரு கையில் பரிசையும், மறு கையில் இடையையும் பற்றிக் கொண்டு விழிகளில் மதுரிமாவையும் தேக்கியபடி மண்ணில் சரியத் தொடங்கினான் சிபிரஞ்சன்.
அவன் பரிசை கைப்பற்றி விட்ட சந்தோசத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்ட மதுவின் குடும்பத்தினர், அடுத்த கணமே ரத்தக் களறியாகி மண்ணில் சரிந்த சிபியைக் கண்டு அலறியடித்து ஓடியிருக்க, அனைவரையும் முந்திக் கொண்டு ஓடிய மதுரிமாவோ, “பாட்டி தாத்தா என் ரஞ்சன காப்பாத்துங்க…” என்று ஆடவனின் கழுத்தோடு கட்டிக் கொண்டு கதறத் தொடங்கினாள்.