நிமிட நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, “ஹேய் புதுப்பையனை மாடு முட்டிடுச்சுப்பா. மாட்டைப் புடிங்கப்பா” என்ற பலவித குரல்களுக்கு மத்தியில் காளையின் கொம்பில் இருந்து கைபற்றிய பரிசோடே இடையைப் பற்றிக் கொண்டு மண்ணில் சரிந்திருந்தான் சிபிரஞ்சன்.
அதைப் பார்த்ததும் மதுவின் குடும்பத்தினரோடு சுதிரும் சேர்ந்து வேலியைத் திறந்து கொண்டு ஓடிஇருக்க, அதற்குள், “அய்யோ ரஞ்சன்…” என்ற கதறலோடே ஆடவனை நெருங்கியிருந்தவள், அவனைத் தன் மடியிலும் தாங்கி இருந்தாள் மதுரிமா.
பெண்ணின் அந்தக் கதறலில் அந்த நிலையிலும் அவன் விழிகளில் ஒரு ஒளிவட்டம் வந்து செல்ல, “மது…” என்று அவள் முகத்தை வருடியவன் தன் கையிலிருந்த பரிசையும் அவள் கரத்தினில் ஒப்படைத்து விட்டு அப்படியே மயக்க நிலைக்கும் செல்லத் தொடங்கினான்.
அதில், “ரஞ்சன்…” என்று மென்மேலும் கதறியவள்,
“பாட்டி, தாத்தா, என் ரஞ்சனைக் காப்பாத்துங்க” என்று பெருங்குரலெடுத்துக் கத்த, மதுவின் அந்தக் கதறலில் அங்கிருந்த அனைவருக்குமே உயிர் கூட்டை விட்டு வெளியில் வந்து துடித்தது.
அதற்குள் நிலைமையைக் கையிலெடுத்த போட்டியின் பொறுப்பாளர்களும், சுதிரும் சேர்ந்து “எல்லாரும் விலகுங்க.” என்று சிபியைத் தூக்கி வந்து அங்கு அவசர உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கிடத்தினர்.
அங்கு அவனுக்கு முதலுதவி மட்டுமே செய்ய முடிந்த மருத்துவர்கள், ரத்தம் அதிகம் வெளியேறாத படிக்கு கட்டு மட்டும் போட்டு விட்டு உடனே பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பணிக்க, அங்கு ஆபத்து உதவிக்கென்று நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்தி மூலமே அடுத்த அரைமணி நேரத்தில் மதுரையின் மிகப்பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான் சிபிரஞ்சன்.
சிபிரஞ்சனைக் கொண்டு வந்த வாகனத்திலே மது மற்றும் சுதிரோடு பாட்டியும் தாத்தாவும், வேறொரு மகிழுந்தில் மற்றவர்களும் வந்து இருக்க, வருகிற வழி முழுதும், “ரஞ்சன்… எந்திரிங்க ரஞ்சன் ப்ளீஸ்” என்று கத்தி துடித்தபடி வந்த பேத்தியைக் கண்டு பட்டம்மாளும் சொக்கலிங்கமும் ஆடித்தான் போயினர்.
சிபியை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்த சில நிமிடங்களிலே அவனுக்கு வைத்தியம் பார்க்க துவங்கி விட்ட போதும், “தாத்தா பாட்டி, சித்தி, மனோ” என்று அழுது அரற்றிய மதுரிமாவைத் தேற்றும் வழி தெரியாது விழி பிதுங்கி நின்றவர்கள் சிபிரஞ்சனை எண்ணியும் கலங்கிப் போய் அமர்ந்து இருந்தனர்.
அவனை வைத்தியத்துக்கு உட்படுத்தி நான்கு மணி நேரங்கள் கடந்தும் கூட மருத்துவர்கள் புறமிருந்து எந்த அறிவிப்பும் இல்லாது இருக்க, இங்கு மதுரிமாவின் புலம்பலும் அதிகரித்து கொண்டே செல்ல, “அவருக்கு எதுவும் ஆகாதுல்ல பாட்டி. அவர் நல்லபடியா பொழச்சி வந்துருவார் இல்ல தாத்தா?” என்று தங்களைக் கலக்கமாக பார்த்த பேத்தியைக் காண இயலாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, எப்பொழுதும் எதற்கும் கலங்கி இராத பட்டம்மாளே பேத்தியோடு சேர்ந்து கணவனைத்தான் தவிப்பாகப் பார்த்து வைத்தார்.
மனைவியின் அந்தப் பார்வையிலே அவர் தவிப்பை உணர்ந்து கொண்ட சொக்கலிங்கமும் பேத்தியோடு சேர்த்து மனைவியையும் அணைத்துக் கொண்டவர், “என் பேரரு உருவத்துல சிங்கம், குணத்துல தங்கம், அந்தத் தங்கத்துக்கு எந்த எந்த குறையும் ஆண்டவன் கொடுக்க மாட்டான். யாரும் பயப்படாதீக” என்று அவர்களோடு சேர்த்து தனக்குமே தைரியம் சொல்லிக் கொண்டவர், “எங்க பேரர நல்லபடியா காப்பாற்றி கொடு மீனாட்சியம்மா” என்று கடவுளிடம் தஞ்சம் அடைந்த வேளை… அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்து வெளியே வந்தார் மருத்துவர் ஒருவர்.
மருத்துவரைப் பார்த்ததும் அனைவரும் அடித்து பிடித்து எழுந்து அவரை நோக்கி விரைந்தவர்களுக்கு, “ஹி இஸ் ஃபைன். அவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்று அவர் கூறிய செய்தியைக் கேட்டப்பின்னர் தான் ஒவ்வொருவரின் இதயமும் சீராக இயங்க, அந்த நேரத்தில் அவர்கள் இருந்த மனநிலைக்கு கடவுள் போன்றே தோற்றம் அளித்தார் அந்த மருத்துவர்.
அதில் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட சொக்கலிங்கமோ “ரொம்ப ரொம்ப நன்றிங்கய்யா” என்று மருத்துவரின் கரத்தைப் பற்றிக் கொள்ள, “இட்ஸ் மை டூட்டிங்க” என்ற மருத்துவரோ,
“அவரோட இடுப்புல கத்தி ஆழமா இறங்கி இருந்தாலும் உள் உறுப்புகள் ஒன்னும் சேதாரமாகலை. அதான் இவ்ளோ ரத்தம் போயும் ஹி இஸ் வெரி பைன்.” என்றவர், “இன்னும் டூ அவர்ஸ்ல அவரை நார்மல் வாடுக்கு மாத்திடுவாங்க அப்புறம் போயி ஒவ்வொருத்தரா பாருங்க” என்று விட்டு அங்கிருந்து அகல, “கத்தியா????” என்று ஒருவரை ஒருவர் அதிர்ந்து போய் பார்த்தனர் அங்கிருந்த அனைவருமே.
இத்துணை நேரமும் சிபியை மாடு முட்டியதாக எண்ணி இருந்தவர்களுக்கு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகக் கூறவுமே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
மருத்துவர் கூறிச் சென்றதையே அசைப்போட்டிருந்த பட்டம்மாளும், “மாடு பிடிக்கிற இடத்தில கத்திக்கு என்ன வேலை” என்று தீவிர யோசனையில் இறங்கியவர் மகனை அழைத்து வீராவை அழைத்து வரக்கூற, வீராவோடு சேர்ந்து அவன் அன்னையும் ஊரிலே இல்லை என்ற செய்திதான் பட்டம்மாளுக்கு வந்து சேர்ந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் அத்தனை துள்ளிக் கொண்டு திரிந்தவர்கள் ஜல்லிக்கட்டு முடிந்த உடனே தலைமறைவு ஆகிவிட்டதை அறிந்து நடந்ததை ஊகித்துக் கொண்டவர், ‘இத்துணை தினங்கள் பாம்புக்குதான் பால் வார்த்து இருந்தேனா? அந்தப் பையனுக்கு மட்டும் ஏதோ ஒன்று ஆகி இருந்தால் என் பேத்தியின் நிலை என்னவாகி இருக்கும்?’ என்று கணவரின் கையை பற்றிக்கொண்டு அப்படியே அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விட்டார் பட்டம்மாள் பாட்டி.
தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் கவனித்து இருந்தாலும் எதற்கும் எதிர்வினை ஆற்றத் தோணாது கண்ணாடித் தடுப்பிற்குள் எட்டிப் பார்த்தவாறே இருந்த பேத்தியின் நிலையிலே அவள் சிபிரஞ்சனின் மீது எந்த அளவிற்கு நேசம் வைத்துள்ளாள் என்று நன்றாக உணர்ந்து கொண்டவருக்கு வீராவின் மேல் அப்படி ஒரு ஆத்திரம் எல்லையைக் கடந்தது.
அன்று பெரிய நியாயவாதி போல் ஜல்லிக்கட்டில் ஜெயித்தால் பெண்ணை விட்டுத் தருவதாகக் கூறிவிட்டு இன்று யாருக்கும் அறியாது அவன் உயிரையே பறிக்க நினைத்திருக்கிறானே. இவனுடைய பேச்சை நம்பி இத்துணை தினங்கள் சிபியை வாட்டி வதைத்து விட்டோமே என்று கை கால்கள் எல்லாம் விரைத்துப் போய் அமந்திருந்தார் பட்டம்மாள் பாட்டி.
நடந்ததை எல்லாம் பார்த்ததில் மனைவியின் நிலையை உணர்ந்து கொண்ட சொக்கலிங்கமும், “பட்டு பதட்டப்படாம இருமா. அதான் பேரருக்கு ஒன்னும் ஆகலியே. அவரு மொதோ கண்ணு முழிச்சு பேசட்டும். அப்றம் என்ன செய்யணு யோசிக்கலாம்” என்று மனைவியை சாந்தப் படுத்தியவர், “பேரரு சீக்கிரம் முழிச்சுடுவாரு மதுக்கண்ணு. அழாதடா” என்று பேத்தியின் தலையையும் வருடிவிட்டு சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
அப்படியே பலவித உணர்வுக் குவியல்களோடு நேரமும் மெல்ல நகர, அதற்குள் சிபியை தனி அறைக்கு மாற்றி இருந்த செவிலியர்கள் வந்து அவன் கண் விழித்து விட்டதாகக் கூறிச் செல்ல, மருத்துவர் ஒவ்வொருவராக போய் பார்க்கக் கூறியதையும் மறந்து குடும்பத்தினர் அனைவருமே ஒன்று சொன்னார் போல் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
அப்பொழுது தான் செவிலியர் உதவியுடன் மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவனை நோக்கி, “பேரரே…” என்று முந்திக்கொண்டு ஓடியிருந்த சொக்கலிங்கமோ, “இப்போ எப்டி இருக்கு பேரரே? கொஞ்சம் பாத்து சூதனமா இருந்துருக்கக் கூடாதா?” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டு ஆதங்கமாகக் கேட்க, மற்றவர்களும் பல பல வார்த்தைகள் மூலம் அவன் உடல் நிலையை பற்றி கேட்டு தங்கள் அன்பாலே அவனைக் குளிப்பாட்டத் தொடங்கினர்.
அவர்கள் அன்பில் நெகிழ்ந்தவாறே சற்றே மெலிந்த குரலில் அனைவருக்கும் பதில் கொடுத்தவனின் விழிகள் மட்டும் தன்னையே விழியால் பருகியிருந்த பெண்ணிடமே நிலைபெற்று நின்றது.
தங்களைச் சுற்றி அனைவரும் இருந்ததாலோ, அல்லது அத்துணை நேரம் அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று தவித்து இருந்தவளுக்கு முற்றும் முழுதாக எழுந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் என்று எண்ணினாளோ????
அனைவரையும் முந்திக் கொண்டு அவனருகில் நெருங்கி இருந்தாலும் அவனை விழிகளால் மட்டுமே நிறைத்து, அவனது உடல் நலனை மனதிற்கு உணர்த்திக் கொண்டிருந்தவளின் பார்வையின் தவிப்பைச் சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கிக் கொண்டவனும், இமைகளை மூடித் திறந்து தான் நன்றாக இருப்பதாக பெண்ணவளுக்குத் தெரிவித்தான்.
எத்துணை நேரம் என்றே தெரியாது, சுற்றி இருப்பவர்களையும் கவனியாது விழிகள் நான்கும் பிணைந்த வாக்கிலே இருக்க, ஒட்டு மொத்தமாய் இத்துணை நபர்கள் அறைக்குள் வந்து ஆடவனை தொல்லை செய்யவும் அங்கிருந்த செவிலிப் பெண்ணோ யாராவது ஒருவர் மட்டும் அவனோடு இருக்குமாறு கூற…
“எங்க பேரர்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இப்போ கிளம்பிடுவோங்கமா.” என்று கூறியபடியே முன்னே வந்தார் பட்டம்மாள் பாட்டி.
ஆமாம் பட்டம்மாள் பாட்டிதான்.
எப்பொழுதும் கணவன் அப்படி அழைத்தாலே ஏகத்துக்கும் முறைப்பவர் இக்கணம் அதே பேரர் என்ற விளிப்போடு ஆடவனை நெருங்கி இருந்தார்.
அத்துணை நேரம் அவர்கள் அனைவரும் அவனுக்காகத் தவித்து இருந்ததை பார்த்ததாலோ என்னவோ, “சீக்கிரம் பேசிட்டு கிளம்பிடுங்கமா. அப்றம் டாக்டர் வந்தா என்னதான் திட்டுவாரு” என்றுவிட்டு செவிலிப் பெண்ணும் அங்கிருந்து வெளியேற…
“பேரரே…” என்று அவன் கையைப் பற்றிக் கொண்ட பட்டம்மாளும் பேத்தியைப் போல பார்வையாலே அவன் உடல்நிலையை ஆராய்ந்தவர்,
“உங்களை கத்தியால குத்தினது யாரு பேரரே?” என்று தான் கேட்டிருந்தார்.
அதில் அதிர்ந்து அவரைப் பார்த்தவனும், “இல்லை பாட்டிமா. மாடுதான்” என்று ஏதோ சொல்லவர…
“பொய் சொல்லாதீக பேரரே. எனக்குத் தெரியும் மாடு உங்களை முட்டலைன்னு. டாக்டரும் இது கத்திக்குத்து தான்னு சொல்லிருக்காரு” என்று அவன் பேச்சை தடுத்து இருந்தவர், “வீராதான உங்க மேல கையை வச்சது? சொல்லுங்க? எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுப் பிள்ளை மேலயே கையை வச்சிருப்பான் அந்தப் பொடியன். ராஜசேகரு உடனே வண்டிய எடுடா போலீஸ் ஸ்டேஷன்கு” என்று ஏகத்துக்கும் கர்ஜித்தார்.
கூடவே இருந்து குழி பறித்தது போன்ற வீராவின் செயலை அவரால் சிறிதும் ஜீரணிக்க இயலவில்லை.
பெரியவரின் அந்த உறுமலில் அங்கிருந்த குடும்பத்தினருக்கே ஏகமாய் உதறல் எடுக்க, “இல்லை பாட்டிமா. ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று அவரை அடக்கியவனோ,
“இத அப்டியே விட்டுடலாம் பாட்டிமா. போலீஸ் கேஸ்லாம் எதுவும் வேணாம்” என்றான் தன் வழக்கமான நிதானத்தோடே.
அதில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவரும், “ஏன் அப்டி சொல்றீக பேரரே? எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கான். அவனை அப்டியே விடச் சொல்றீகளா?” என்று அடக்க முடியாத ஆதங்கத்தோடே வினவ…
“அப்டியே விடச் சொல்லலை பாட்டிமா. ஆறப்போடச் சொல்றேன்” என்றவன், “இப்போ போலீஸ் கேஸ் அது இதுன்னு போனா எதனால பகைங்கற கேள்விக்கு கண்டிப்பா மதுவையும் உள்ள இழுக்கற மாதிரி இருக்கும். அதுல எனக்கு உடன்பாடு இல்லை பாட்டிமா. எக்காரணம் கொண்டும் மதுவோட பேர் கூட தப்பா பேசப்படுறத நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொன்னான்.
ஆடவனின் குரல் முழுதும் பெண்ணவளுக்கான நேசம் நேசம் நேசம் மட்டுமே அளவில்லாது கொட்டிக்கிடந்தது.
அவனிடமிருந்து இப்படி ஒரு கூற்றை எதிர்பாராது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் சிபிரஞ்சனையும் பிரமிப்பாக நோக்க,
அவர்கள் பார்வை எல்லாம் சட்டை செய்யாதவனோ, “அதுவும் இல்லாம அவன் மதுவுக்காக மட்டும் தான் இப்டி ஒரு காரியத்தை பண்ணிருப்பான். மதுபோல ஒரு பொண்ணு கை நழுவிப்போனா யாராலையும் தாங்கிக்க முடியாது பாட்டிமா.” என்று அவள் புறம் புறம் திரும்பி ஒரு ஆழ்ந்த பார்வையைச் செலுத்தியவன், “அவன் இவ்ளோ நாளா மதுவை மனசுல நினைச்சுட்டு இருந்ததுக்கு நீங்களும் ஒரு வகைல காரணம் தான். அத்தோட அவன் உங்களுக்குப் பேரன் முறைவேற. அதனால அவன் செஞ்ச தப்ப பெருசு பண்ணாம நீங்க அவனைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைங்க. அதான் நம்ம ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் நல்லது பாட்டிமா” என்று மூச்சு விடாது பேசி முடித்தவனின் வார்த்தையில் இருந்த நியாயம் ஒரு நியாயவாதியான பட்டம்மாள் பாட்டிக்கும் முற்றிலும் சரி என்றே தோன்றியது.
வீராவின் விடயத்தில் தவறு தன் மேலும் உள்ளதே. தான் ஆரம்பத்திலேயே வீராவின் ஆசையை கிள்ளி எறிந்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டு தன் பேத்திக்கு வந்தே இருக்காது என்று தன் தவறையும் உணர்ந்து கொண்டவர்
ஒரு குடும்பத்தின் பெரியவர்களான தங்களுக்கு கூட தோன்றாததை யோசித்துப் பேசிய சிபியையும், அவனது ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்பட்ட மதுவின் மீதான நேசத்தையும்
மெச்சுதலாகப் பார்த்திருந்தார் பட்டம்மாள் பாட்டி.
அப்படியே நிமிடங்கள் பல மௌனத்திலே கழிய, பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் கணவரையும் பார்த்துக் கொண்டவர், “ராஜசேகரு…” என்று மகனை அழைத்து, “நாளைக்கே நம்ம ஜோசியரைப் பாக்க ஏற்பாடு பண்ணு. கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல விசேஷம் ஒன்னு நடத்த வேண்டி இருக்கு” என்று விட்டு சிபியிடமும் தலையசைத்துக் கொண்டவர் மதுவை மட்டும் சிபிக்குத் துணையாக விட்டுவிட்டு மற்றவர்களோடு வெளியேறி இருந்தார்.
இத்துணை நேரம் அவள் அழுது கரைந்திருந்ததைப் பார்த்ததாலோ என்னவோ எப்படியும் சிபியை தனியே விட்டு அவள் இப்போதைக்கு வீடு வரமாட்டாள் என்று ஊகித்துக் கொண்டவர், சுதிரோடு தன் மகனையும் ஆண் துணைக்கு வைத்து விட்டு மற்றவர்களோடு வீட்டிற்குச் சென்று விட, ஏதாவது தேவை என்றால் கூப்பிடுமாறு சிபியிடமும் மதுவிடமும் கூறிவிட்டு ஆண்கள் இருவரும் வெளியே வராண்டாவிற்கு வந்து நடந்தேறிய அசம்பாவிதம் பற்றி உரையாடலைத் தொடங்கி இருந்தனர்.
பூட்டிய அறைக்குள் தனித்து விடப்பட்டிருந்த சிபிரஞ்சனுக்கும் மதுரிமாவிற்கும் அனைவரும் வெளியேறிச் சென்றதை உணர்ந்தும் கூட இருவருக்கும் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாகத் தெரியவில்லை.
எங்கே கண்ணைச் சிமிட்டினால் கூட எதிரில் இருப்பவர்கள் மறைந்து விடுவார்களோ என்று அஞ்சியவர்கள் போல் இருவரின் பார்வையும் அடுத்தவரிடமே நிலை பெற்று நின்று இருக்க, தலை முடி எல்லாம் களைந்து அழுது வீங்கிய முகத்தோடு ஏதோ பசித்திருப்பவன் உணவை பார்ப்பது போல் தன் முகத்தையே பார்வையால் பருகி இருந்த பெண்ணவளின் தோற்றத்திலே அவள் நிலையை உணர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து அவளை நோக்கி நீண்டது ஆடவனின் வலிய கரங்கள்.
அவன், “வா” என்பது போல் வலக் கரத்தை நீட்டவும், அதற்காகவே காத்திருந்தார் போல், “ரஞ்சன்…” என்ற கூவலோடு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் பாய்ந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டவள், “ரஞ்சன் ரஞ்சன்…” என்ற கேவலோடே அவன் முகம் முழுதும் தன் இதழ்களையும் பதிக்கத் தொடங்கி இருந்தாள்.