பாட்டியின் அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் குற்றத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே செல்ல, பெரியவர்களின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க இயலாதவனாய் இன்னுமின்னும் தலைகவிழ்ந்து நின்றிருந்தவன், “பாட்டிம்மா…” என்று திக்கலாக அழைத்து, “நான் நான் இங்க ஸ்ரீக்கு பதிலா வந்தது தப்புதான் பாட்டிம்மா. அன்னிக்கு இருந்த சூழல்ல எங்க மூனு பேருக்குமே வேற வழி தெரியல. தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி எங்க தப்பை மன்னிச்சு ஸ்ரீக்கும் மதுவுக்கும் கல்யாணத்தை நடத்தி வைச்சிடுங்க” என்று உள்ளே போன குரலிலே சொன்னான் சிபிரஞ்சன்.
அவனது அந்த இறுதி வார்த்தையில் மென்மேலும் ஆத்திரம் கொண்டவர்,
“எப்டி எப்டி தம்பிக்காகன்னு மும்பையில் இருந்து கிளம்பி வந்து என் பேத்திக்கு காதலனா எல்லாம் செய்வ. நடிப்புங்கற பேர்ல மது மதுன்னு உருகி உருகி அவளை நேசிப்ப. அவ மேல வச்ச நேசத்துக்காக உன் உயிர் வரை பணயம் வச்சி அவளை உன் மேல பைத்தியமா ஆக்கிட்டு கல்யாணம் மட்டும் தம்பிக்கு பண்ணி வைப்பியா? இப்டி பேச உனக்கு வெக்கமாயில்லையா?” என்று ஏகத்துக்கும் பொரிந்து தள்ளியவரைக் கண்டு…
உடல் தூக்கிப்போட்டு நிமிர்ந்தவன்,
“இல்லை பாட்டிம்மா. நீங்க நினைக்கிற போல மதுமேல எனக்கு எந்த பீலிங்க்சும் இல்லை. நான் நான் அவளை பிரண்டா தான் பாக்கறேன்.” என்று அவசரமாக மறுத்தவன், “அவளுக்காக குத்துப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்ததால என்மேல வந்துருக்க அப்பெக்சன்ல தான் அவளும் இப்டி எல்லாம் பேசுறா பாட்டிம்மா. இந்த மேரேஜ் முடிஞ்சுதுன்னா அவ நார்மல் ஆகிடுவா” என்று பாட்டியின் அருகில் நின்ற பெண்ணவளின் விழிகளைப் பாராமலே கூறினான் சிபிரஞ்சன்.
எங்கே பெண்ணவளின் அந்த விழிகளையும், அது தன்னிடம் கொட்டும் நேசத்தையும் பார்த்தால் மீளவே இயலாத சுழலுக்குள் சிக்கி தன் இரட்டையின் வாழ்வைச் சிதறி சின்னா பின்னமாக்கி விடுமோ என்று அஞ்சியவன் தன்னுடைய வார்த்தைகள் தன்னவளுக்கு எத்தனை பெரிய வலியை கொடுக்கும் என்பதை அறிந்தே அவ்வார்த்தைகளைக் கொட்டி இருந்தான்.
தன்னவனின் அந்தக் கூற்றிலும் தன்னை திரும்பிக் கூடப் பார்த்திராத ஆடவனின் செயலிலும் அவனையே அடிபட்ட பார்வை பார்த்து நின்றவளுக்கு அவள் விழிகளில் இருந்து மட்டும் கண்ணீர்த் துளிகள் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
பெண்ணவளுக்காவது அவளது துக்கத்தைக் குறைக்க கண்ணீர் என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஆணாகப் பிறந்த பாவத்திற்கு அழுகையில் கூட தன் மனவேதனையை மறைக்க இயலாது தவித்துப் போய் நின்றிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.
பட்டம்மாள் கூறியது போல் காதல் என்பது அழகான, புனிதமான உணர்வு மட்டும் இல்லை போலும்.
அதன் ஆழத்தை உணராது காலை வைக்க முயலுபவர்களுக்கு சிலநேரம் கொடுமையான வலிகளையும் பரிசாகக் கொடுத்து எட்ட நின்று சிரிக்கும் ஒரு நூதன குணமும் காதலுக்கு உண்டோ???
அப்படி ஒரு சுழலுக்குள் தன்னையும் மீறிச் சிக்கித் தவிக்கும் அந்த ஆடவனை அவர் பங்கிற்கு மென்மேலும் உறுத்து விழித்த பட்டமாளும், “என்ன சொன்ன, என்ன சொன்ன இந்தக் கல்யாணம் நடந்தா என் பேத்தி சரி ஆகிடுவாளா? உன் தம்பியை மட்டுமில்ல. உன்னைத்தவிர வேற யாரைக் கட்டிக்கிட்டாலும் அவ உயிரில்லாத ஜடமாதான்டா இந்த மண்ணுல உலாத்துவா. அவ மட்டும் இல்லை. அவளோட அன்பும் அருகாமையும் இல்லைன்னா அவள நெனச்சு நெனச்சு ஏங்கி நீயும் உன்னோட உயிரை விட்டுடுவடா.” என்று சினத்திலும் ஆற்றாமையிலும் அவனை ஒருமையில் விளித்துப் பேசிய மனைவியைக் கண்டு, “பட்டு… பொறுமைமா” என்று அவர் கையைப் பற்றி அவரைச் சாந்தப்படுத்த முயன்றார் சொக்கலிங்கம்.
அதில் சற்றே தன்னை நிதானித்துக் கொண்டவரும், “பின்ன என்ன மீசைக்காரரே. நீங்க என்ன மொதோ மொதோ பொண்ணு பாக்க வந்ததுல இருந்து இப்போ இந்த நிமிஷம் வரை என்ன எப்டி ஒரு நேசத்தோட பாக்குறீகளோ அதே பார்வை கொஞ்சம் கூடக் குறையாம இவன் நம்ம பேத்தியைப் பாக்குறப்போ எல்லாம் நான் உணந்துருக்கேன். ஆனா இவன் அதெல்லாம் மறைச்சு தம்பிக்காக பெரிசா தியாகம் பண்ண பாக்குறான் மீசைக்காரரே.” என்று கணவனிடம் கூறியவர் மீண்டும் சிபிரஞ்சனின் புறம் திரும்பி, “இந்த விஷயத்துல தப்பு மூனு பேரு பேர்லயும் இருந்தாலும் இத முன்ன நின்னு நடத்தி வச்ச உனக்கு தான் இதை சரி செய்யுற பொறுப்பு அதிகமா இருக்கு.” என்றவர்,
“நான் அப்போ சொன்னதை தான் இப்போவும் சொல்றேன். என்னப் பொருத்தவரை என் பேத்திக்கு பொருத்தமான ஆளும், அவ உயிருக்கும் மேல நேசிக்கிற ஆளும் நீதான். நீ மட்டும் தான். உன்னையே நினைச்சு உருகி தவிக்கிற என் பேத்திக்கு ஒரு வழி சொல்லிட்டு நீ எங்க வேணா போய்க்க” என்றும் கூறி தனக்குப் பின்னே நின்றிருந்த மதுரிமாவை இழுத்து சிபிரஞ்சனின் முன்னே நிறுத்தி இருந்தார் பட்டம்மாள் பாட்டி.
அத்தனை நேரமும் அவர் பின்னே நின்று ஊமையாக அழுது கொண்டிருந்தவளுக்கு பட்டம்மாளின் அந்தப் பேச்சிலும் அனைவரின் முன்னேயும் கூனிக் குறுகி நின்றிருக்கும் தன்னவனையும் பார்க்க இயலாது கேவல் எல்லாம் அழுகையாக வெடிக்க, “பாட்டீ…” என்று அவர் கரத்தைப் பற்றிக் கொண்டவள்,
“எல்லாத் தப்புக்கும் நான் தான் பாட்டி காரணம். அவரு அவரு எந்தத் தப்பும் பண்ணலை பட்டு பேபி. நான்தான் என்னோட நிலையை மறந்து மனசை அவர்மேல அலைபாய விட்டுட்டேன். என்ன தண்டனைனாலும் எனக்கு கொடுங்க பாட்டி. ப்ளீஸ் அவரை அவரை எதுவும் சொல்லாதீங்க பாட்டி. ப்ளீஸ் உங்களை கெஞ்சிக் கேக்குறேன் பட்டு பேபி. அவரை ஒன்னும் சொல்லாதீங்க. நான் ஸ்ரீயையே கல்யாணம் கட்டிக்கிறேன்” என்று முகத்தை மூடித் கதறத் தொடங்கியவளைக் கண்டு அவளை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்த பெரியவர்கள் இருவருக்குமே உடல் முழுதும் நடுங்கத் தொடங்கியது.
ஆடவன் மேல் எத்துணை நேசம் வைத்திருந்தால் அவள் அவனுக்காக அவனையே விட்டுக் கொடுக்கிறேன் என்பாள் என்று விழியில் தோன்றிய வலியோடு பேத்தியையே பார்த்து இருந்தவர்கள் ஒருவரின் கரத்தை ஒருவர் பற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர்.
பின் விழிகளையும் இறுக்க மூடி திறந்து ஆவேசமாக அவளை நெருங்கி இருந்த பட்டம்மாளோ, “நீ பேசாத மது. எல்லாம் உன்னாலதான். செய்றது எல்லாம் செஞ்சிட்டு இப்போ வந்து அழுதா எல்லாம் சரியாகிப் போச்சா?” என்று பேத்தியை நோக்கி அடிப்பதற்காக கரத்தையும் ஓங்கி இருந்தார்.
ஆனால் அதற்குள், “பாட்டீ…” என்று கத்தி அவளைத் தன் புறம் இழுத்துக் கொண்டவன், “நான் நான் உங்கமேல அளவுக்கு அதிகமான மரியாதை வச்சிருக்கேன் பாட்டிம்மா. இன்னொரு அடி அவமேல விழுந்துச்சுன்னா நான் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்று விழிகளில் கோபம் கொப்பளிக்கக் கூறியவன், “மதுமா…” என்று சட்டென அவளை இழுத்து இறுக அணைத்தும் கொண்டான்.
அணைப்பு என்றாலும் அப்படி ஒரு அணைப்பு.
என்னவள் இவள். இவள் மேல் கை வைக்க அவளை வளர்த்தவர்களான உங்களுக்குக் கூட உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லியது போன்றதொரு இறுகிய அணைப்பு.
அணைத்ததோடு நில்லாது , “பாட்டி அடிச்சாங்களாடி அம்மு? என்னால தானே எல்லாம். சாரிடி. சாரிடி. நான் நான் உன்ன விட்டு போயிருக்கக் கூடாது. உன் ரஞ்சனை மன்னிச்சுடுடி அம்மு” என்று சற்று முன்னர் பட்டம்மாள் அறைந்ததால் இன்னுமே சிவந்து கிடந்த பெண்ணவளின் கன்னத்தையும் மென்மையாக வருடிக் கொடுத்தவன் அங்கிருந்த தண்ணீரையும் எடுத்து பெண்ணவளுக்குப் புகட்டி அவளை ஆசுவாசம் செய்ய, அவளும் தாய்ப் பறவையின் சிறகுக்குள் பதுங்கி இருங்கும் சிறு குஞ்சாக, “ரஞ்சன் ரஞ்சன்” என்று அவன் பரந்த மார்பில் பதுங்கிக் கிடந்தாள்.
சற்று முன்னர் அவள் மேல் நேசமே இல்லை என்று சொன்னவன், இக்கணம் சுற்றி அத்துணை நபர்கள் நின்றிருந்தும் இம்மியும் யோசியாது, ‘தன்னவள் இவள்’ என்பது போல் அவளை அணைத்து ஆற்றுப்படுத்தியவன் நொடிக்கு நொடி இறுகிக் கொண்டே சென்ற அவனது அணைப்பினாலும், அம்மு அம்மு என்ற கொஞ்சல் மொழிகளாலும் தன் உள்ளத்தின் காதலதை அனைவரின் முன்னிலும் பட்டவர்த்தனம் செய்திருந்தான்.
தவறு செய்து தாயிடம் அடி வாங்கிய சேயை அந்தத் தாயே இறுக்கி அணைத்து ஆற்றுப்படுத்துவது போல் பார்ப்பதற்கே அத்துணை அழகாக இருந்த அவர்களின் அந்தக் காதல் காட்சியை அனைவரும் சிறு நிம்மதிப் பெருமூச்சோடு பார்த்திருக்க, கூடவே வெற்றிப் புன்னகையும் கலந்து அவர்களை நோக்கிய பட்டம்மாளோ லேசாகத் தொண்டையைச் செருமி அவர்களை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தவர்,
“என் பேத்தி மேல நீங்க வச்சிருக்கிறது காதல்தான் தெரிஞ்சுக்கறதுக்கு இதைவிட சிறந்த காட்சி யாருக்கும் தேவையில்லை” என்றவர்,
“நீங்க உங்க தம்பியோட கால்ல விழுவீகளோ, இல்லை பங்காளி சண்டை போட்டு ஜெயிப்பீகளோ. அவ கழுத்தில தாலின்னு ஒன்னு ஏறுனா அது நீங்க கட்டுறதாதான் இருக்கும். உங்களுக்கு உங்க தம்பிதான் பிரச்சனைன்னா நானும் என் மீசைக்காரரும் எங்க பேத்திக்காக அவரு கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கக் கூடத் தயாரா இருக்கோம்.” என்று கூறியவரின் பேச்சில், “பாட்டி… வேணாம் பாட்டீ. நான் பண்ண தப்புக்கு நீங்க ஏன் பாட்டி இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று அலறி அடித்து ஓடி அவரை அணைத்துக் கொண்டு மீண்டும் கதறத் தொடங்கினாள் மதுரிமா.
பட்டம்மாளின் அந்தப் பேச்சிலும் பெண்ணவளின் கதறலிலும் மென்மேலும் தவித்துத் துடித்து, “இல்லை பாட்டி…” என்று அவர்களைத் தடுத்தவாறு முன்னே வந்து நின்றவன் அப்பொழுது தான் அங்கு அறை வாயிலில் நின்று தங்களையே வெறித்திருந்த ஸ்ரீரஞ்சனையும் கவனித்து, “ஹோ காட்… எனக்கு ஏன் இந்த சோதனை?” என்று அப்படியே தரையில் கால்கள் மடங்க அமர்ந்து முகத்தினையும் மூடிக் கொண்டு குழுங்கத் தொடங்கினான் சிபிரஞ்சன்.
பெரியவரின் அந்தப் பேச்சிலும் இளையவர்களின் அளவில்லாத தவிப்பிலும் அவர்களைப் பார்த்திருந்த உறவுகள் அனைவருக்க்கும் கூட உள்ளம் கலங்கிப்போய் தான் இருந்தது.
பெண்ணவளின் கதறலையும் சகோதரனின் தவிப்பையும், பெரியவர்களின் பெருந்தன்மையையும் விழி எடுக்காது பார்த்து இருந்தவனுக்கும் தன்னுடைய சுயநலத்தால் விளைந்த ஒரு முட்டாள்தன்மான செயல் எத்துணை தூரம் அனைவரையும் பாதித்து இருக்கிறது என்பதை உணர்ந்து இதயம் பாறாங்கல்லாய் கணக்கத் தொடங்கியது.
அக்கணமதைத் தாளாது அப்படியே விழிகளை இறுக்க மூடி நின்றுவிட்டவன் உதடுகளை அழுந்தக் கடித்து பெரிதான ஜீவ மரணப் போராட்டமே நடத்தி முடித்து எதையோ ஜீரணிக்க முயன்று வெற்றி கண்டவனாய் தன்னையே பார்த்து இருந்த பெரியவர்களை நோக்கி எட்டு வைத்துச் சென்றிருந்தான் ஸ்ரீரஞ்சன்.
தன்னுடைய காதலைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத கையாளாகாதவனாய் அவன் இதுவரை இருந்திருக்கலாம். ஆனால் தன் சகோதரனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்று அழுது கரையும் பெண்ணவளை வலுக்கட்டாயமாக தன்னவளாக ஆக்கிக் கொள்ளும் அளவு அவன் ஒருபோதும் தரம் இறங்கிப் போய்விடவில்லை.
தன்னையே நோக்கி இருந்த பெரியவர்களை எட்டும் முன்னதாகவே எடுத்துவிட்ட உறுதியான முடிவோடு அவர்கள் முன்னால் சென்று நின்றவன், “மன்னிக்க முடியாத தப்பு பண்ணினதும், மன்னிப்பு கேக்க வேண்டியதும் நீங்க இல்லை கிரேண்ட்பா. நான்தான்” என்று அவர்கள் முன்னால் உடல் விரைக்க நின்றவன், “பிறந்த இடத்தையும் காசு பணத்தையும் வச்சி ஒரு பொண்ணோட மதிப்பை எடை போட்டு அவளுக்காக கிராமம் வரை வரணுமாங்கற என்னோட திமிரும் சுயநலமும் தான் இப்போ நடக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் மூல காரணம். பணத்தாலயும் பகட்டாலையும், அது தந்த கர்வத்தாலையும் எதை வேணா சாதிச்சிடலாம்னு நினைச்சிருந்த எனக்கு உண்மையான காதலுக்கு முன்ன மத்தது எல்லாம் அற்பமான விஷயங்கள்னு உணர வச்சிருக்கு மதுவோட இந்த மாற்றம்.” என்று வலியோடு கூறியவன், “நீங்க சொன்ன போல உங்க பேத்திக்கு பொருத்தமான ஆளு நிச்சயம் நானில்லை கிரேண்ட்மா. மதுவுக்கு மட்டுமில்ல வேற எந்த பெண்ணுக்கும் என்னால சிபியளவுக்கு ஒரு நல்ல காதலனா இறுக்க முடியுமான்னு தெரியலை. அதனால அதனால அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்க. நான் நான் விலகிப் போயிடுறேன்” என்று கை கூப்பிக் கூறிவிட்டு மெல்ல எட்டுக்களை வைத்து சிபிரஞ்சனின் அருகில் நெருங்கி வந்தான் ஸ்ரீரஞ்சன்.
சகோதரனின் அந்த தளர்ந்து போன நடையிலே அவன் உள்ளம் நைந்து துடித்துக் கொண்டிருப்பதை தன் உள்ளத்தில் உணர்ந்தவன், “ஸ்ரீ… வேணான்டா…” என்று கெஞ்சும் பார்வையோடு அவன் கரங்களைப் பற்ற…
அவனைப் பார்த்தும் வலிமிகும் புன்னகை ஒன்றை உதிர்த்தவன், “அதைத்தான் சிபி நானும் சொல்றேன். உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிற பொண்ணு எனக்கு வேணான்டா.” என்று அவன் கரத்தினை அழுத்திக் கொடுத்தவன், “எந்த ஒரு உறவும் நேசமும் நம்ம பக்கத்திலேயே இருக்க வர அதோட அருமை நமக்கு தெரியறதில்லை சிபி. அது நம்ம விட்டு ரொம்ப தூரம் விலகிப் போனப்பின்ன தான் அந்த இழப்போட வலி எவ்ளோ பெருசுன்னு நமக்குத் தெரிய வருது. அப்டி ஒரு இழப்புக்கு நீயும் காரணம் ஆகிடாத. நான் அன்னிக்கு பண்ண தப்பை இன்னிக்கு நீயும் பண்ணிடாத. ஒரு பொண்ணோட நேசம் ரொம்பவே விலைமதிக்க முடியாதது. அது இப்போ உன் கை சேர ஏங்கிட்டு இருக்கு. என் மேல இருக்க பாசத்தால அதை கை நழுவ விட்டிடாத சிபி.” என்று மிகப்பெரிய நெடும் மூச்சு ஒன்றை இழுத்து விட்டு மதுவிடம் சென்றவன் அவள் கையைப் பற்றி அழைத்து வந்து சிபியின் கரத்தோடு சேர்த்து வைத்து, “ரீமாக்கு பொருத்தமானவன் நீதான் சிபி. ப்ளீஸ் கட்டிக்கோடா.” என்றும் கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறி இருந்தான் ஸ்ரீரஞ்சன்.
மதுவின் விசயத்தில் அவன் செய்தது மிகப்பெரிய தவறாக இருந்தாலும், தன் தவறை உணர்ந்து வருந்திய நொடி அந்த தவறுக்கு உண்டான தண்டனையாகவே பெண்ணவளை அவள் நேசிப்பவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு கலங்கிய கண்களோடும் கலங்கமில்லாத உள்ளத்தோடும் அங்கிருந்து சென்றவனை வீட்டினர் அனைவருமே நன்றி உணர்வோடு பார்த்திருக்க, அவன் சென்று மறைந்தும் கூட விழிகளை அவன் வழியில் இருந்து திருப்ப இயலாது சிலையென நின்றிருந்த மனோரமாவிற்கோ ஏன் என்றே தெரியாது அவள் விழிகளில் இருந்து கண்ணீரும் இதழ்களில் புன்னகையும் ஒருங்கே உற்பத்தியாகியது.
அது தன் தமக்கையின் வாழ்வு சீர்பட்டு விட்டதால் தோன்றிய மகிழ்ச்சியா? அல்லது ஆடவனின் விட்டுக்கொடுத்தலால் எழுந்த பிரமிப்பா? அவளே அறியாள்.
ஏதோ ஒரு இனம் புரியா உணர்வில் அவள் இதழ்களின் புன்னகை இன்னுமின்னும் நீளமாக, அந்த புன்னகை கொடுத்த இதத்தினூடே, “மதுக்கா…” என்று ஓடிச் சென்று தமக்கையை இறுக அணைத்துக் கொண்டவள் தன்னுடைய அக்காளையும் அத்தானையும் வாழ்த்து மழையில் நனைய வைத்திருந்தாள் மனோரமா.