ஒரு மாதத்திற்குப் பிறகான புதன்கிழமை காலை அதிகாலை வேளையில்,
“மீனாட்சி கல்யாண வைபோகமே…
சீதா கல்யாண வைபோகமே…
ராமா கல்யாண வைபோகமே…
கௌரி கல்யாண வைபோகமே…”
என்ற பாடல் வரிகள் நாதஸ்வர இசையோடு இணைந்து அந்தக் கோவிலின் கோபுரத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க…
அலங்காநல்லூர் கிராமத்தில் ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த மதுரிமாவின் குலதெய்வம் கோவில் சுற்றி நான்கு திசைகளிலும், பச்சை பசேலென்ற வயல் வெளிகளுக்கு மத்தியில் மிகவும் கம்பீரமாகவே வீற்றிருந்தது.
தமிழ் மரபின் பாரம்பரிய முறைப்படி, கோவிலைச் சுற்றிலும் பல வண்ண கோலங்கள், மாவிலைத் தோரணங்கள், வாழைமரங்கள், மலர் சரங்கள் கொண்டும் கண்ணைப் பறிக்கும் வகையாய் திருமண விழாக்கோலம் பூண்டு இருக்க… கோவில் பிரகாரம் முழுதும் உறவுகளும் நண்பர்களும் என்று மக்கள் கூட்டத்தால் நிறைந்து விட்டு இருந்தது.
உள்ளே கடவுள் சந்நிதியில், அமைக்கப்பட்டிருந்த மண மேடையில், யாகக்குண்டத்தில் அக்கினி வார்க்கப்பட்டு பீடமும் போடப்பட்டிருக்க, அதன் இடப்பக்கம் புரோகிதர் ஒருவர் அமர்ந்து மாங்கல்யதானத்திற்கு முன்னே செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களை செய்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டிய பெரிய மண்டபத்தில் வந்திருந்த விருந்தினர்களுக்கு எல்லாம் அறுசுவை உணவுகளும் தயாராக இருந்தது.
சிலு சிலுவென்ற ஈரப்பதம் நிறைந்த தென்றல் காற்றும் அதனுடன் கலந்திருந்த மேளதாள வாத்தியங்களின் இசையொலியும் அவ்விடத்தை சொர்க்கலோகம் போலே மாற்றிவிட்டிருக்க, அதை மென்மேலும் ரம்யமாக்கியபடி வெண்ணிறப்பட்டு வேஷ்டி சட்டையில் கண கம்பீரமாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து பெரியவர்கள் கூறிய வேலைகளை எல்லாம் இன்முகமாகவே செய்து கொண்டிருந்தான் ஸ்ரீரஞ்சன்.
ஆம் ஸ்ரீரஞ்சன் தான்.
முப்பது நாட்களுக்கு முன்னால் நடந்து முடிந்த களேபரத்தில் தான் காதலித்த பெண்ணவளை அண்ணனுக்காக விட்டுக் கொடுத்ததோடு நில்லாது அடுத்து வந்த நாட்களிலும் பெரியவர்களோடு இணைந்து அவர்களின் திருமண வைபத்தை விரைவிலே நடத்துவதற்கான ஆயத்தங்களும் செய்து இதோ இன்று திருமண நிகழ்வுகளில் ஓடியாடி வேலையும் செய்து கொண்டிருந்தான்.
அன்று ஸ்ரீரஞ்சன் தங்களிடம் பேசிவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் சிபிரஞ்சனையும் அழைத்துக் கொண்டு அவனைத் தேடி ஓடிய மதுரிமா, “என்ன மன்னிச்சுடுங்க ஸ்ரீ. என்ன சமாதானம் சொன்னாலும் நான் உங்களுக்கு இப்டி ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்துருக்கக் கூடாது. என்ன மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்று அவன் முன்னே கையைக் கூப்பி மன்னிப்பும் வேண்டியிருக்க, பெண்ணின் அந்தச் செயலில் அதுவரை இருந்த மன இறுக்கம் கூட மெல்ல மெல்லக் கரைந்து அவளையே வாஞ்சையாக பார்த்திருந்தான் ஸ்ரீரஞ்சன்.
சில மணி நேரங்கள் முன்பு அவள் சிபியை நேசிப்பதாகக் கூறிய பொழுதில் அத்துணை சினம் கொண்டு அவளை ஏசியவனுக்கு இக்கணம் இந்தநிமிடம் அவள் அவனுக்குச் செய்தது கூட மிகவும் சிறிதான தவறாகவே தோன்றி இருந்தது.
அன்று சில மாதங்கள் முன்னர் மும்பையில் தன் காதலை உரைத்த பொழுது அவளது தாத்தா பாட்டியை எண்ணியோ என்னவோ அந்தக் காதலை ஏற்கவே மாட்டேன் என்று மல்லுக்கட்டியவள் தான் அவள்.
அன்றைய நாளில் அவனுக்கும் ஏற்காத ஒன்றை ஏற்க வைக்கும் ஆர்வம் மிகுந்திருந்தமையால் அவளைத் தொடர்ந்து தொந்தரவு செய்து தன் காதலை ஏற்க வைத்திருந்தான் ஸ்ரீரஞ்சன்.
அவள் அன்று தயங்கித் தயங்கி தன் காதலை ஏற்றுக் கொண்ட பொழுதையும் இன்று அவள் சிபியுடன் இழைந்து இருந்த தருணங்களையும் ஒப்பீடு செய்து பார்த்தால் அவள் சற்று முன்னர் கூறி அழுதது போல் இத்தனை தினங்கள் தன் மீது அவளுக்கு இருந்தது நேசமே இல்லையோ என்றுதான் தோன்றியது.
கூடவே “சரி. அவளுக்குத்தான் இல்லை. தனக்குமா?” என்ற கேள்வியும் முளைத்தாலும் அதற்கான பதிலைத் தேடி இனி எந்த பிரையோஜனமும் இல்லை என்று சிறு வலியுடனே உணர்ந்து கொண்டவன், “இல்லை ரீமா. தப்பு செஞ்சவங்களை விட ஒரு தப்பு நடக்கிறதுக்கு தூண்டுகோலா இருக்கவங்க மேலதான் தப்போட விகிதம் எப்பவும் அதிகமாகும். அப்டிப் பார்த்தா உங்க ரெண்டு பேரையும் கம்பெல் பண்ணி லவ்வர்ஸா நடிக்க அனுப்புன நான்தான் பெரிய குற்றவாளி. மன்னிப்பு கேக்கணும்னாலும் நியாயப்படி நான்தான் கேக்கணும். ஆனா இந்த விஷயத்துல நாம மாறி மாறி மன்னிப்பு கேட்கிறத விட்டுட்டு, இதுவரை நடந்த எல்லாத்தையும் மறந்து உங்களோட மேரேஜ்கு நீங்க ரெடி ஆகறதுதான் அந்த குற்ற உணர்வுல இருந்து என்னை கொஞ்சமாச்சும் மீட்கும். ப்ளீஸ் ரெண்டு பேரும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோங்க” என்று முடித்து விட்டவனை, “ஸ்ரீ… வெரி வெரி சாரிடா… அதைத்தவிர என்கிட்ட வேற வார்த்தைகள் இல்லை ஸ்ரீ” என்று அவனை ஆரத் தழுவி விடுவித்தான் சிபிரஞ்சன்.
சகோதரனின் அந்த அணைப்பில் நெகிழ்ந்தவனும், “இவ்ளோ நேரம் ரீமா கண்லயிருந்து வாட்டர் பால்ஸ் விட்டாங்க. நெக்ஸ்ட் நீ விடப் போறீயா என்ன? டேய் அண்ணா அப்டி ஏதும் பண்ணிடாத. பாக்க சகிக்காது” என்று கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைப் பூத்து அவர்களையும் அனைத்தும் மறந்து சிரிக்க வைத்திருந்தவன் இன்று இக்கணம் திருமண நாள் வரையிலும் கூட அந்த சிரிப்பை வாடவிடாது வைப்பதற்காக அவனே அனைத்தும் முன்னால் நின்று செய்து கொண்டிருக்கிறான் என்றால் அது துளியும் மிகை இல்லை.
இதுதான் முடிவு என்று மனதால் ஏற்று வலிகளை எல்லாம் ஜீரணித்துப் புதைத்தப் பின்னர் அதை செயலாய்ப் பார்ப்பது அப்படி ஒன்றும் ஆடவனுக்கு பெரிய வலியைத் தந்து விடவில்லை போலும்.
அல்லது அப்படி அவனே தன்னைத் தானே நம்ப வைக்க முயன்றானோ என்னவோ??? அவனே அறிவான்.
சிபிரஞ்சனின் உடல்நிலை நன்கு தேற வேண்டும் என்பதாலே ஒரு மாதம் கழித்து வந்த ஒரு சுபயோக சுபதினத்தில் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கி இருந்தவர்கள் ஆடை வகைகளுக்கு காஞ்சிபுரத்தையும், அணிமணிகளுக்கு தூத்துக்குடியையும், உணவு வகைகளுக்கு கும்பகோணத்தையும் தேர்ந்தெடுத்து இருக்க, முக்கூடல் சங்கமத்தில் திளைத்திருந்தது அந்த திருமண வைபவம்.
கோவிலின் உள்ளேயே இருந்த அறைகள் இரண்டில் சிபிரஞ்சனும், மதுரிமாவும் மணமக்களுக்கான ஒப்பனைகளில் ஆயத்தமாகிக் கொண்டிருக்க… மதுவின் உறவுகள் எல்லாம் தங்கள் வீட்டுச் செல்லப்பெண்ணின் திருமண நிகழ்வுகளில் காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிக் கொண்டிருக்க, சிபிரஞ்சனின் கூற்றிற்கு இணங்க ஸ்ரீரஞ்சனே நேரில் சென்று அழைத்து வந்திருந்த இரட்டையரின் பெற்றோரோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் கோவில் பிரகாரத்தின் ஒரு மூளையில் அமர்ந்துவிட்டு இருந்தனர்.
இத்தனை வருடங்கள் தங்களுக்குக் கீழ் பணி செய்த ரீமாவை மகன் தங்களுக்கு மருமகளாக்கப் போவது அவர்களுக்கு இம்மியும் பிடிக்கவில்லை என்று அவர்கள் முகமே அப்பட்டமாக எடுத்துக் கூற, “இவன் இப்டி ஒரு வில்லேஜ்ல வந்து கல்யாணம் செய்வான்னு தெரிஞ்சிருந்தா உங்க பிரண்ட் பொண்ணையே அவனுக்கு கட்டி வைங்கன்னு நான் எப்பவோ விட்டுக் கொடுத்துருப்பேன் ரகு” என்று அவர் தாய்மொழியில் அங்கலாய்ப்பு செய்து கொண்டிருந்தார் சிபியின் அன்னை மாலினி.
அதற்கு ரகுபதியும், “ஆமா மாலு. எங்க ஊரை விட படு மோசமான கிராமமா இருக்கு. போயும்போயும் நம்மகிட்ட வேலை பாத்த பொண்ணைப் போய் இவன் மேரேஜ் பண்றானே. இதுக்கு பதிலா இவ்ளோ நாளா இருந்த போல கல்யாணமே வேணாம்னு இருந்திருக்கலாம்” என்று வழக்கத்திற்கு மாறாக மனைவிக்கு ஒத்துப் பேசியவர், “எப்பாடு பட்டாவது சீக்கிரம் ஸ்ரீக்காச்சிம் நம்ம ஸ்டேட்டஸ்ல இருக்க ஒரு பொண்ணைப் பாத்து முடிச்சு வைக்கணும் மாலு.” என்று சொன்னார்.
அதைக்கேட்டு அவரும், “எஸ் எஸ் ரகு கண்டிப்பா. இல்லன்னா அவனும் நாளைக்கு பக்கத்து வில்லேஜ்ல இருந்து வேற யாராவது ஒரு கன்ட்ரி ப்ரூட்டை இழுத்துட்டு வந்து நிப்பான்” என்று பேசிக் கொண்டிருக்க…
“அத்த… மாமா இந்தாங்க காஃபி” என்று அவர்களை அழைத்தபடி அவர்கள் முன்னால் வந்து நின்று இருந்தாள் மனோரமா.
பெண்ணவள் என்னவோ மாம்பழ வண்ணப் பட்டுப் பாவாடை தாவணியும், அதற்குத் தோதான அணிமணிகளும் அணிந்து தேவதை போலத்தான் தோற்றம் அளித்தாள். ஆனால் காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் போல் அந்த ஊரின் மேல் உள்ள பிடித்தமில்லாத தன்மையில் அவளையும் அற்பமாகப் பார்த்து வைத்தவர், “ஏய்… பொண்ணே… என்ன அத்தை சொத்தைன்னுட்டு. உன் அக்கா இவ்ளோ நாளா எங்ககிட்ட வேலைதான் பாத்தான்னு மறந்து போச்சா? மரியாதையா மேடம்னு கூப்பிடு.” என்று அதட்டல் போட்டவர், “எனக்கு காஃபிலாம் வேணாம். போய் காம்ப்ளான் எடுத்துட்டு வா” என்று ஏதோ பணிப்பெண்ணிடம் வேலை ஏவுவது போல் குற்றேவல் புரிந்தார் மாலினி.
அவர்கள் தன் அன்புள்ள அத்தானின் பெற்றோர் என்பதற்காக மட்டுமே அன்னையின் கூற்றின் பேரில் அவர்களுக்கு குளம்பியை விளம்ப வந்திருந்த மனோரமாவோ அவரது வரைமுறை இல்லாத பேச்சில் அவரை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “நீங்க சொல்றபடியே
என் அக்கா உங்ககிட்ட வேலை பாத்தவளா இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க குடும்பத்துக்கே அவதான் எஜமானி. அதனால கொஞ்சம் பாத்து பேசுங்க அய்த்த” என்று கூற…
“என்ன பொண்ணே பாக்க சின்ன பொண்ணா இருக்கன்னு அமைதியா பேசுனா வாய் ரொம்பத்தான் நீளுது” என்று எழுந்து நின்றார் மாலினி.
அதற்கு அவள் பதில் கூறும் முன்னவே அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்ரீரஞ்சன் அவர்களைப் பார்த்து விட்டு,
“வாட் ஹேப்பன் மும்மா?” என்று அவ்விடம் வந்து சேர்ந்து இருக்க,
ஆடவனைப் பார்த்ததும் மனோரமா கூற வந்த வார்த்தைகள் எல்லாம் தொண்டைக் குழியிலே அமிழ்ந்து போக, சட்டென தலையைக் குனிந்து கொண்டாள் மனோரமா.
ஆடவனோ அதை எல்லாம் சிறிதும் கருத்தில் ஏற்காது அன்னையிடம் மீண்டும் என்னவென்று வினவ…
மாலினியும்,
“அது ஒன்னும் இல்லை ஸ்ரீ பேட்டா. இந்த சின்னப்பொண்ணு என்ன அத்தைன்னு கூப்பிட்டது எனக்கு பிடிக்கல. அதான் அப்படி கூப்பிடாதேனு சொல்லிட்டு இருந்தேன்” என்றவர், “அப்றம் மும்மா காம்ப்ளான் தவிர வேற எதுவும் குடிக்க மாட்டேன்ல. ஆனா இந்த பொண்ணு பாரு காஃபியை கொண்டு வந்திருக்கு” என்று சிறு பிள்ளை போல் குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.
எப்பொழுதும் மனைவியின் இது போன்ற அலப்பறையில் எரிச்சல் படும் ரகுபதியும், பெரியமகன் மேல் கொண்ட மனத்தாங்களில் எதையும் கண்டு கொள்ளாது அமர்ந்திருக்க,
அன்னையின் அந்தக் கூற்றில் அருகில் இருந்த மனோரமாவை சட்டென்று திரும்பிப் பார்த்தான் ஸ்ரீரஞ்சன்.
அத்துணை நேரம் தலைகுனிந்து நின்றிருந்தவளும் அப்பொழுதுதான் நிமிர்ந்து ஆடவனை ஏறிட்டு நோக்க, இருவரின் விழிகளும் நொடிநேரம் தழுவி விட்டு மீண்டது.
போவதும் வருவதுமாக அவன் கிராமத்தில் வாசம் செய்த கடந்த ஒரு மாத காலத்தில் அவள் மதுவின் தங்கை என்றும் அவள் பெயர் மனோரமா என்பதையும் அறிந்திருந்தவன், “ஹேய் மனோரமா… சாரி ஃபார் த ட்ரபிள். மும்மாக்கு தமிழ் வேர்ட்ஸ்லாம் அவ்ளவா தெரியாது. அதனால நீ இனிமேல் ஆன்டினு கூப்பிடு. ஓகே?” என்று மட்டும் கூறிவிட்டு அன்னையிடம் திரும்பியவன், “என்னோட வாங்க மும்மா. நான் உங்களுக்கு காம்ப்ளான் ரெடி பண்ண சொல்றேன். நீங்களும் வாங்க டேட் அப்டியே டெம்பில்லும் சுத்தி காட்டுறேன்.” என்று அவன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.
அன்று போலவே இன்றும் அவன் சென்ற வழியை விட்டு விழிகளை விலக்க இயலாது நின்று இருந்தவளுக்கு யாருக்கும் தெரியாது அவன் விழிகளில் ஒளிந்து கிடக்கும் மெலிதான சோகமதில் சிறிதே நெஞ்சை அடைப்பது போல் இருக்க, அவன் தன்னை மனோரமா என்று முழு பெயர் கூறி அழைத்ததைக் கூட பெரிதாக எடுக்காது அவன் முதுகையே பாவமாகப் பார்த்திருந்தாள் மனோரமா.
பெண்ணவள் அப்படி பார்த்துக் கொண்டு நிற்கும் பொழுதே அங்கு மணமேடையின் பக்கம் இருந்து,
“நாழி ஆகிடுத்து பொண்ணையும் பையனையும் அழைச்சிண்டு வாங்கோ” என்று ப்ரோகிதர் குரல் கொடுக்க, இவள் அடித்து பிடித்து தமக்கையின் அறை நோக்கி ஓடினாள்.
அங்கோ சாரதா மற்றும் அழகுக்கலை நிபுணிகளின் உதவியுடன் மதுரிமா மணமகள் அலங்காரத்தில் தேவதையான ஜொலித்திருக்க,
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு மதுக்குட்டி” என்று அவள் கன்னம் வழித்து திருஷ்டி கழித்த பட்டம்மாள் பாட்டியும் அதை ஆமோதித்துக் கொண்ட சாரதாவும் அவளை கையைப்பற்றி மணமேடை நோக்கி அழைத்துச் செல்ல, “மதுக்கா…” என்று ஓடிச்சென்று தமக்கையின் கரத்தைப் பற்றிக் கொண்டவளின் பார்வை மட்டும் அவ்வப்பொழுது ஆடவனைத் தீண்டியபடியே இருந்தது.
பூப்போன்ற பெண்ணவள் அன்னமென நடந்து மணமேடையை அடைவதற்குள்ளாகவே,
வெண்ணிற பட்டுவேஷ்டியும் அதே வெண்மையில் பட்டினால் ஆன சட்டையும் அணிந்து, தாமரை மொட்டுக்களால் கோர்க்கப்பட்ட மாலையானது கழுத்தை நிறைக்க, “பட்டு வேஷ்ட்டி சட்டையில ரொம்ப ரொம்ப கம்பீரமா இருக்கீங்க பேரரே” என்ற சொக்கலிங்கத்தின் புகழ்ச்சியோடும் ஆண்கள் புடைசூழ மணமகனுக்கே உரிய கம்பீரக் களையோடும் மணமேடையில் வந்து அமர்ந்தான் சிபிரஞ்சன்.
ஆடவன் வந்து அமர்ந்ததுமே அங்கிருந்த ஐயர் அவனுக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்க, அவனும் அதை அப்படியே திருப்பி உச்சரித்தபடி அவர் கொடுத்ததை எல்லாம் வாங்கி யாககுண்டத்தில் போட்ட வண்ணம் இருக்க, உறவுகள் புடைசூழ அடிமேல் அடி வைத்து மணமேடையை நெருங்கி இருந்தாள் மதுரிமா.
உடல் முழுக்க அஜந்தா வண்ணத்தில், நீலநிற ஜரிகையினாலான மிகப்பெரிய பாடர் வைத்த அழகான பட்டுபுடவை பால் வண்ண மேனியாளை பாந்தமாய்த் தழுவி இருக்க.. நெற்றியில் தொடங்கி, காது, கழுத்து, கை, இடுப்பு என்று அனைத்திலும், மரகதக் கற்கள் பதித்து செய்த நகைகளை அவள் மேனி முழுக்கப் பூட்டி இருக்க… செந்தாமரை மொட்டுக்களால் தொடுக்கப்பட்ட மாலை, அவள் கழுத்தை அலங்கரித்து இருந்தது.
வார்த்தையில் வடிக்க இயலாத பொலிவில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த பெண்ணவளின் அழகில் அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்த சிபிரஞ்சனின் உதடுகளோ உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரத்தையே சட்டென்று நிறுத்தி விட்டிருக்க, முதல் முறை அவளை இத்துணை பெரிய அலங்காரத்தில் பார்த்தவன் நொடிகள் சில திண்டாடித்தான் போனான்.
அதிலும் அவளுக்கு தான் தயாரிக்கும் ஆடைகள் மேல் உள்ள ஈர்ப்பை அறிந்திருந்தவன், தங்கள் திருமணத்திற்கு அணியப் போகும் பெண்ணவளின் உடைக்கான வேளைப்பாட்டை அவனே பிரத்தியேகமாக வடிவமைத்து அனுப்பி இருக்க, அவன் கூறிய வண்ணக் கலவையில் அட்சரம் பிறழாது ஆயத்தமாகி வந்திருந்த புடவையிலும், மணப்பெண்ணிற்கான சிறப்பு அலங்காரத்திலும் தேவதையென தோற்றம் அளித்தவளை இன்றுதான் முதன் முதலாய்ப் பார்ப்பது போல் பார்த்து இருந்தவனின் கரமும் யாககுண்டத்தின் முன்னால் அப்படியே அந்தரத்தில் நின்று இருந்தது.
சுற்றி இருந்த அத்துணை நபர்களின் விழிகளும் இன்றைய விழா நாயகர்களான தங்கள் மீதுதான் இருக்கும் என்பதனைக் கூட மறந்தவனாய், “என்னோட மதுவா இது? இன்னைக்கு என்ன இவ்ளோ கார்ஜியஸா இருக்கா? சேரில ரொம்பவே பெரிய பொண்ணாத் தெரியறா?” என்று அவன் விழிகள் மொத்தம் தன்னை நெருங்கி விட்டிருந்த பெண்ணவளின் தலை முதல் கால்வரை பார்வையாலே கபளீகரம் செய்து கொண்டிருந்தது
அதைப்பர்த்த ஐயரோ, “மாப்பிள்ளை பிள்ளையாண்டா, பொண்ணை அப்றம் பாத்துக்கலாம். பூஜையை மொதோ முடிங்க” என்று சொன்னவரின் கூற்றில் அந்தரத்தில் நின்று இருந்த கரங்கள் கையில் இருந்த பொருட்களை சட்டென யாககுண்டத்தில் போட்டாலும் அவன் விழிகள் மட்டும் இன்னும் அவள் மீதே நிலைத்திருந்தது.
மணப்பெண்ணிற்கே உரித்தான வெட்கமும், நாணமும், பதட்டமும், கூடவே தங்கள் திருமணம் முடிவான சூழலை எண்ணிய சிறிதான கலக்கத்திலும் தலை நிமிராது அவன் அருகில் சென்று அமர்ந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பாராமலே அவன் பார்வையின் வீச்சை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் சென்று அமரவும் அவள் தோளோடு நன்றாக ஒட்டி அமர்ந்தவன், “ஃபேஸ் ஏன் டல்லா இருக்கு அம்மு. ஆர் யூ ஓகே?” என்று லேசாகச் சாய்ந்து அவள் செவியோரம் வினவியவனின் அன்பில் அவளையும் மீறிக் கொண்டு அவள் இதழ்கள் மெலிதாக விரிய, அதைப் பார்த்தப் பின்பே நேராக நிமிர்ந்து அமர்ந்தான் சிபிரஞ்சன்.
பெண்ணவளும் மனையில் அமர்ந்ததும் சில நிமிடங்கள் அவள் கரத்திலும் ஏதேதோ கொடுத்து பூஜை செய்ய வைத்த ப்ரோகிதர், பின் அங்கிருந்த பெரியவர்களைப் பார்த்துவிட்டு தாலியை எடுத்து அனைவர் முன்பும் காட்டிவிட்டு அவன் புறம் நீட்டியவர், “மாங்கல்யம் தானம் பண்ணுங்கோ” என்று சொன்னார்.
அதைக் கையில் வாங்கியவனும், அவள் கழுத்தில் கட்டாது அங்கிருந்த சுதிரை நிமிர்ந்து பார்க்க, அவனும் தன் கரத்தில் வைத்திருந்த மதுரிமாவுடைய பெற்றோரின் புகைப்பத்தை அவர்கள் முன்னே கொண்டு வந்து வைத்தான்.