நிலவு மகள் தன் ஆட்சியை பூமியில் நிலை நாட்டிக் கொண்டிருந்த இதமான இரவு வேளையில் வெள்ளி நிலா வெளிச்சத்தில் வெள்ளை மாளிகையாக மின்னிக் கொண்டிருந்தது அந்த வீடு.
பெரும் தொழிலதிபர்கள் பலரும் வசிக்கும் மும்பையின் முக்கிய நகருக்குள் பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சி தந்த அந்த மாளிகையில் அழகிற்குச் சமமான ஆடம்பரமும் தேவையான அளவு இழைக்கப்பட்டிருந்தது.
இரண்டாள் உயரத்தில் பொன்னை உருக்கி ஊற்றிய நிறத்தில் மின்னிய இரு பெரிய வாயிற்கதவுகளில் தொடங்கி, கண்ணைப் பறிக்கும் அழகோடு காட்சி அளித்த தோட்டப் பகுதியும் கடந்து, பெரிதாக வீற்றிருந்த வீட்டின் உள்ளும் புறமும் சுவர்களில் கூட பளிங்குக் கற்களாலே ரசனையோடு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க, அவ்வீட்டின் அழகைக் காண்போரின் மனதில் எல்லாம் ‘ஆடை வடிவமைப்போடு சேர்த்து கட்டிடக்களையும் பயின்று இருப்பானோ அவ்வீட்டின் உரிமையாளன்?’ என்ற சந்தேகத்தையும் உதிக்கச் செய்தது.
அந்த மாளிகை அத்துணை பகட்டாய் இருந்தாலும் அவ்வீட்டை எழுப்பியவனோ, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது எப்பொழுதும் போல் இலகுவான இரவு உடையில் அவனுக்கென்று இருந்த படுக்கை அறைக்குள் மடிக்கணினியின் முன்னே அமர்ந்து ஆடைக்கான வடிவமைப்பு ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தான் சிபிரஞ்சன்.
போதும் போதும் மட்டும் பணமும் பொருளும் இருந்தாலும், சித்தெறும்பின் சுறுசுறுப்போடு காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்தில் பலவித பணிகளை பார்த்து விட்டு வந்தாலும் வீட்டிலும் சோம்பி இராது ஆடை வடிவமைப்பிலே தன் நிமிடங்களைக் கரைத்துக் கொள்பவனுக்கு ஒவ்வொரு படைப்புகளையும் உருவாக்கும் பொழுதும் மனதிற்குள் அப்படி ஒரு ஆனந்தம் கிடைக்க, தன் வேலையை மிகவுமே நேசிக்கத் தொடங்கி விட்டான் சிபிரஞ்சன்.
எந்த ஒரு வேலையையும் நேசித்துச் செய்யும் பொழுது அதன் மதிப்பே தனி அல்லவா… அந்த நேசிப்போடு கூடிய உழைப்பு தான் குறுகிய காலத்திலே அவனுக்கு இத்துணை பெரிய உயரத்தைக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது துளியும் மிகை இல்லை.
தன் மடிக்கணினியில் இருந்த செயலி ஒன்றில் ஒரு பெண்ணிற்கான விழாக்கால உடையை அவனுக்கே உரிய புதுமைகள் சில புகுத்தி நேர்த்தியாக வடிவமைத்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி மெல்ல அதிர்ந்து தன் இருப்பைக் காட்டியது.
அதில் கவனம் சிதறி அலைபேசியை எடுத்து உயிர்பித்தவன், “ம்ம்ம் சொல்லு சுதிர்.” என…
அந்தப்புறம் பேசிய அவனது காரியதரிசி சுதிரோ, “பாஸ்…
ரொம்ப நாளா நம்மகிட்ட வாலாட்டிட்டு இருந்தானே டேவிட். அவன் அவனோட சொந்த ஊருக்கே பெட்டியை கட்டிட்டானாம்” என்றான் குதூகலம் நிறைந்த குரலில்.
அதைக்கேட்டு, “இஸ் இட்?” என்று சுரத்தில்லாது கேட்டவனின் குரலே அவனுக்கு துணுக்கத்தைக் கொடுக்க, “பாஸ்ஸ்ஸ்” என்று இன்பமாக அலறியவன், “நினைச்சேன் பாஸ். நீங்கதான் ஏதாவது பண்ணிருப்பீங்கன்னு.” என்றவன், “ஆனா ஏன் பாஸ் இவ்ளோ நாளா அவனை விட்டு வச்சிருந்தீங்க?” என்றும் வினவ…
“இவ்ளோ நாளா பிஸ்னஸ்ல மட்டும் தான் இடைஞ்சல் பண்ணான். ஆனா நேத்து ஸ்ரீகிட்டயே வாலாட்டி பாத்துருக்கான்” என்று விளக்கம் கொடுத்தான் சிபி.
அதைக்கேட்டு, “அதானே பாத்தேன். ஸ்ரீ சார் மேலயே கை வச்சிட்டானா? அப்போ அனுபவிக்க வேண்டியதுதான்.” என்று தன்பாட்டில் கூறிக் கொண்டவன், “அப்புறம் பாஸ்… தமிழ்நாட்டுல லேண்ட் பாக்க சொல்லிருந்தீங்களே. நீங்க கேட்ட போல ஃபோர் பிளேஸஸ் லிங்க் மெயில் பண்ணியிருக்கேன் பாஸ். எல்லாமே நார்த் சைடுதான். எது ஓகே ன்னு பாத்திட்டிங்கன்னா டீலை முடிச்சிடலாம்.” என்றான் படு தீவிரமான குரலில்.
அதைக்கேட்டு, “அதுக்குள்ள பாத்திட்டியா?” என்றவன், “வாட் சீம்ஸ் பெட்டர் டு யூ?” என…
அவனும், “திண்டுக்கலை ஒட்டி ஹைவேய்ல இருந்த லேண்ட் ரொம்பவே பெட்டரா இருக்கு பாஸ். அங்க என்னோட பிரண்ட் ஒருத்தன் இருக்கான். அவனை நேர்லயும் போய் பாத்து போட்டோஸ் அனுப்ப சொன்னேன். லேண்ட் அண்ட் சர்ரௌண்டிங் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. ஆல் போட்டோஸ் உங்களுக்கு மையில் பண்ணிருக்கேன் பாஸ். நீங்க செக் பண்ணிட்டு சொல்லுங்க.” என்றும் கூறி முடித்தான் சுதிர்.
அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு, “ஐ (saw)சாவ் தெம் சுதிர். குட் ஜாப்.” என்றவன், “நீ நெக்ஸ்ட் என்ன பிராசஸ்னு பாரு. ஸ்ரீ கிட்டயும் கேட்டுட்டு பைனல் பண்ணிடலாம்.” என்று அலைபேசியை அணைத்தவன் அறைக்கதவு தட்டப்பட்ட சப்தத்தில், “வாங்க பொன்னிக்கா” என்று குரல் கொடுத்தான்.
அதைக்கேட்டு அறைக்குள் நுழைந்த மத்திய வயதுப் பெண்மணி ஒருவர்,
“தம்பி டின்னர் ரெடி ஆகிடுச்சு. சாப்பிட வர்றீங்களா?” என்று வினவ…
அவனோ, “அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்களா பொன்னிக்கா?” என்று கேட்டான்.
அதற்கு, “ம்ம்ம்…” என்று தலையை ஆட்டியவரும், “அப்பா அப்பவே வந்துட்டாங்க தம்பி. அம்மா இப்போதான் வந்தாங்க.” என்று கூற…
“ம்ம்ம்… நீங்க போய் எல்லாம் எடுத்து வச்சுட்டு அவங்களையும் சாப்பிட கூப்பிடுங்க நான் வரேன்.” என்று அனுப்பி வைத்தவன் கையில் இருந்த கடிகாரத்தில் மணியையும் பார்த்து விட்டு மடிக்கணினையையும் அணைத்து மூடினான்.
பின்பு கையிரண்டும் மேலே தூக்கி பிடரியில் கோர்த்து தலையை இடம் வலமாக ஆட்டி சொடக்கு எடுத்துக் கொண்டவன் இருக்கையில் இருந்து எழுந்து நிற்க…
அதற்குள் கீழே இருந்து உரத்த சப்தங்கள் அவன் செவியை வந்து அடைந்தது.
அவனது பெற்றோர் தான் வழக்கம் போல் வாக்குவாதத்தை தொடங்கி இருந்தனர்.
அதில், “இவங்க ரெண்டு பேரும் திருந்தவே மாட்டாங்களா?” என்று ஆயாசமாக தலையை ஆட்டிக் கொண்டவன், குளியலறைக்குள் புகுந்து இயற்கை உபாதையும் முடித்து விட்டே கீழே இறங்கிச் சென்றான்.
கீழே மாடிப்படிகள் முடிவடையும் இடத்திற்கு வலது புறமாக உணவு மேசை இருக்க, அதில் பதார்த்தங்களை அடுக்கி கொண்டிருந்தார் பணிப்பெண் பொன்னி.
சிபியின் தாத்தா காலத்தில் இருந்தே அவ்வீட்டில் சமையல் தொடக்கம் அனைத்து வேலைகளையும் செய்து வருபவர்.
பணிப்பெண் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற லஜ்ஜை மட்டுமல்லாது, மகன் உணவுன்ன இறங்கி வந்ததையும் பொருட்படுத்தாது, “அவன் என் பையன். அவனுக்கு எப்டி நீங்க உங்களோட பிரண்ட் பொண்ண பேசி முடிக்க நினைப்பீங்க?” என்று தன் தாய் மொழியில் எதிரே நின்ற கணவனிடம் எகிரிக் கொண்டு சென்றார் சிபியின் அன்னை மாலினி.
அதைக் கேட்டு பல்லைக் கடித்த அவன் தந்தை ரகுபதியும், “அவன் உனக்கு மட்டும் பையன் இல்லை மாலி. எனக்கும் தான். அவனுக்கு பொண்ணு பாக்குற எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு” என்று கூற…
அதைக்கேட்டு ஏளனமாகச் சிரித்த மாலினியும், “அடடா…! அப்பாவோட கடமை எல்லாம் அப்டியே ஒன்னு விடாம செஞ்சு முடிச்சவரு நீங்க உரிமைய பத்தி பேச வந்துட்டீங்களாக்கும்” என்று பொரிந்து கொண்டே சென்றவர் தங்களுக்குத் திருமணம் ஆன புதிதில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் இழுத்துப் பேசத் துவங்கி இருந்தார்.
அதைக்கேட்டு மென்மேலும் ஆத்திரம் கொண்ட ரகுபதியும், “என்ன பத்தி பேசுறதுக்கு முன்ன நீ மொதோ ஒழுங்கான்னு யோசிச்சு பேசு மாலி. ரெட்டை பிள்ளைகளை பெத்து போட்டதோட சரி அதுகளுக்கு ஒரு வாய் சோறு ஊட்டிருப்பியா நீ. அதுகள சீராட்டி தூங்க வச்சிருப்பியா? லேடிஸ் கிளப், பிரண்ட்ஸ்ங்க வீடுன்னு, புருஷன் புள்ளைய மறந்து வீட்லயே தங்காம ஊர் சுத்தற நீயெல்லாம் என்ன பத்தி பேசாத.” என்று அவரும் ஏதேதோ பேசி மனைவியை மேலும் பத்ரகாளியாய் மாற்றிக் கொண்டிருக்க, அவர்கள் சாம்பாசனையைக் கேட்டபடியே விழிகளை மூடித் திறந்த சிபிரஞ்சன், “பொன்னிக்கா…” என்று உரக்க அழைத்தவன், “எனக்கு சாப்பாடு வேண்டாம் பொன்னிக்கா. நீங்க சாப்டு போய் படுங்க.” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் படிகளை நோக்கி எட்டு வைக்கத் துவங்கி இருந்தான்.
சிபியின் அந்தக் கூற்றில் தான் நடப்பையே உணர்ந்து சண்டையை நிறுத்தியவர்கள், “அய்யோ சிபி டியர். என்னப்பா இது சாப்பிட வந்துட்டு சாப்பிடாம போற. மும்மா உனக்காக தான் இவ்ளோ சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன்” என்று தன் தாய் மொழியில் கூறி ஓடிச் சென்று மகனின் கையைப் பற்றி நிறுத்தினார் மாலினி.
அதைக்கேட்டு கண்ணை எட்டாத முறுவலோடு அங்கிருந்த சுவர் கடிகாரத்தை நோக்கிவிட்டு அன்னையையும் ஏறிட்டவன், “எனக்காக சீக்கிரம் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மும்மா.” என்றவன், “ஆனா நீங்க போட்ட பைட்லயே மை ஹங்ரி இஸ் கோயிங்க் ஆன்.” என்று கூறியவனைக் கண்டு குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார் மாலினி.
மகன் மனைவியைத் திட்டியதில் ஏகத்துக்கும் குஷியான ரகுபதியும்,
“அப்டிச்சொல்லு சிபி. வேலை முடிச்சி சோர்ந்து வர்ற புள்ளைக்கு வீட்ல இருந்து ஒருவாய் சோறு போட துப்பில்லை. இவள்ளாம் உரிமையை பத்தி பேச வந்துட்டா. மேனாமினுக்கி.” என்று சந்தடி சாக்கில் தன் ஆதங்கத்தையும் கொட்டிய தந்தையை நோக்கி,
“ப்பா…” என்று ஒரு கண்டன பார்வை வீசியவன், “மும்மாவை விடுங்க. இன்னிக்கு ஃபேஷன்சோவோட லாஸ்ட் டேட். ஹெவி ஒர்க் இருக்கும். ஹெல்ப்கு வாங்கன்னு நைட்டே சொல்லிருந்தேன்ல. ஏன் வரல நீங்க?” என்ற மகனின் கேள்வியில் இப்பொழுது தலையை தரையில் புதைத்துக் கொள்வது ரகுபதியின் முறையாகிப் போனது.
இருவரையும் ஒரு சேர நோக்கி ஒரு பலமான முறைப்பைச் சிந்தியவன் பெற்றோராகிப் போனவர்களை கடியவும் இயலாது, “வாங்க சாப்பிடலாம்” என்று மட்டும் கூறி நாற்காலியில் சென்று அமர…
மகன் சாப்பிட அழைத்ததிலே அனைத்தும் மறந்து வேகமாக ஓடிச் சென்று உணவு மேசையில் அமர்ந்தனர்.
மூவரும் அமரவும் அதற்காகவே காத்திருந்த பொன்னியும் அவர்களுக்கு உணவைப் பரிமாற, உணவில் கை வைக்கும் முன் நண்பனை பார்க்கச் சென்ற இரட்டையின் நினைவு வந்து, ஸ்ரீக்கு அழைத்து பேசிவிட்டே சாப்பிட ஆரம்பித்தான் சிபிரஞ்சன்.
அதை கவனித்து மகனை பெருமையாகப் பார்த்த ரகுபதியும் உணவுன்னுவதை நிறுத்தி,
“சிபிகண்ணா…” என்று ஆரம்பித்தவர், “உனக்கும் ஸ்ரீக்கும் ஒரே வீட்ல பிறந்த சிஸ்டர்ஸ பொண்ணு பாத்துருக்கேன் பா. என் பிரண்ட் ரமணனோட டாட்டர்ஸ்தான். நல்ல தமிழ் பேமிலி. பொண்ணுகள ரொம்ப ஹோம்லியா வளத்துருக்கான். நீ மட்டும் ஓகே ன்னு ஒரு வார்த்தை சொல்லு நாளைக்கே வரச் சொல்லிடுறேன்” என்றவரை, “உங்க பட்டிக்காட்டு புராணத்தை எல்லாம் வேற எங்கையாச்சும் கொண்டே வச்சுக்கோங்க. என் பசங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு பார்க்கணும்னு எனக்குத் தெரியும்.” என்று குஜராத்தியில் இடைமறித்த மாலினி, “சிபி டியர்…” என்று மகனின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
அமர்ந்ததோடு நில்லாது சற்று முன் மேசையில் வைத்த தன் கைப்பையில் இருந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் எடுத்துக் காட்டியவர், “இது எங்க லேடிஸ் கிளப் செகரட்டரியோட பொண்ணு “ஸ்வேதா” சிபி. MBA முடிச்சிருக்கா. ரொம்ப மாடர்ன். உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. பிடிச்சிருக்கா பாரு. பேசி முடிச்சுடலாம். உனக்கு முடிச்சி சிக்ஸ் மந்த் கழிச்சு ஸ்ரீக்கு பாத்துக்கலாம். ஒரே வீட்ல இருந்து சிஸ்டர்ஸ்லாம் வேணாம் சிபி. ட்ராஜிட்டி பண்ணுவாங்க” என்று கணவனையும் ஒரு வெட்டும் பார்வை பார்த்தவாறே கூற…
இன்னும் தங்களது திருமண உறவையே சரிவர செலுத்தத் தெரியாத அன்னையையும் தந்தையையும் மாறி மாறி பார்த்த சிபிரஞ்சனுக்கு, தன்னை திருமணம் செய்யக் கூறும் பெற்றவர்களை எண்ணி சிரிக்கத்தான் தோன்றியது.
அதில், “ஊஃப்…” என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன், எதுவும் கூறாமலே கை கழுவி எழுந்து கொள்ள…
அவன் கூடவே எழுந்த மாலினியும், “என்ன சிபிமா அம்மா கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லாமப் போற?” என்றார் ஆதங்கம் வழியும் குரலில்.
தன் பேச்சில் குறுக்கிட்ட மனைவியின் பேச்சில் ஏற்கனவே கடுப்பில் இருந்த ரகுபதியும், “அவன் ஒன்னும் சொல்லலைன்னா அவனுக்கு நீ காட்டுன பொண்ண பிடிக்கலைன்னு அர்த்தம் மாலி. அது கூட உனக்குப் புரியலையா?” என்று மனைவியைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவர், “ஏன் சிபிகண்ணா நான் சொன்ன வரன நாளைக்கு மீட் பண்ணி பேசுறியாப்பா?” என்று கிடைத்த வாய்ப்பை விடாது வினவினார்.
அதில் அவர்கள் புறம் திரும்பி இடம் வலமாக தலையை ஆட்டிக் கொண்டவன், “ஐம் நாட் இன்ட்ரெஸ்ட்டட் திஸ் கமின்ட்மென்ட்ஸ் டாட்.” என்று கூறியவன் இரண்டு எட்டு வைக்கும் முன்னவே தம்பியோடு சேர்த்து மதுரிமாவின் ஞாபகமும் வர, “ஸ்ரீயும் உங்களோட ஆசைக்கு எல்லாம் செட் ஆக மாட்டான். அதனால எங்க ரெண்டு பேத்துக்குமே பொண்ணு பாக்குற வேலைய விட்டு கம்பெனிக்கு வந்து ஏதாவது போஸ்டிங்க் எடுத்துக்கோங்க.” என்று இருவருக்கும் பொதுவாகவே உரைத்தவன் அறைக்கு விரைந்து கதவையும் அடைத்துக் கொண்டான்.
சிபிரஞ்சன் மற்றும் ஸ்ரீரஞ்சன் இருவரின் பெற்றோரும் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு சமூகத்தில் பிறந்து வளர்ந்து காதலித்து மணம் புரிந்து கொண்டவர்கள்.
தாங்கள் காதலிக்கும் சமயத்தில் பெரிதாகத் தெரியாத இருவரின் குணமும், பழக்க வழக்கங்களும் திருமணத்திற்கு பிறகு பூதாகரமாகத் தெரிய தொட்டதுக்கெல்லாம் சண்டை பிடிக்கத் துவங்கியவர்களைக் கண்டு பெரும் கவலை கொண்ட சிபியின் தாய் வழித் தாத்தா, பேரன்கள் இருவரையும் தன் பொறுப்பில் எடுத்து அவர்களை சிறப்பாக படிக்க வைத்து தன் தொழிலிலும் புகுத்தி இருந்தார்.
பேரன்கள் இருவரும் தொழிலில் கால் பதித்த சமயம், தன் உடல்நிலை குன்றுவதை உணர்ந்து கொண்டவர், பொறுப்பில்லாத மகளையும் மருமகனையும் சிறிதும் பொருட்படுத்தாது தன் சொத்துக்கள் அத்தனையும், தன் இரு பேரன்களுக்கும், அவர்கள் மணம் புரிந்து கொள்ளும் அவர்களின் மனைவியருக்கும் தான் என்று உயிலும் எழுதி வைத்தவருக்கு அவரது இளம் வயதுத் துடிப்பை அப்படியே பிரதிபலிக்கும் சிபிரஞ்சனின் மேல் அளவில்லா நம்பிக்கையும் இருந்தது.
அவனும் அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக தன்னோடு சேர்த்து சகோதரனையும் வழி நடத்த, அதைக் கண்ணார கண்டு விட்டே நிம்மதியாக உயிரை நீத்து இருந்தார் பெரியவர்.
அதன்பிறகு தொழில் துறைகளோடு பொறுப்பில்லா பெற்றோரின் பொறுப்பும் அவன் வசமாகிப் போக, அன்றிலிருந்து இன்று வரை உழைப்பு ஒன்றே தாராக மந்திரமாகக் கொண்டு இரட்டையின் உதவியோடு அனைவரும் வியக்கும் வகையில் உயர உயர பறந்து கொண்டிருப்பவனுக்கு, ஸ்ரீயைப் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பெண்கள், காதல், கல்யாணம் என்று எதிலும் நாட்டம் இல்லாது போனாலும், தன் சகோதரனுக்குக் கிட்டும் மண வாழ்க்கையாவது சிறந்த முறையில் அமைய வேண்டும் என்கிற பேராவல் மட்டும் அவன் உள்ளத்தைக் குடைந்தது.
அந்த அக்கறையில் தான் சமீப நாட்களில் தம்பியின் மனம் கவர்ந்தவள் என்கிற முறையில், மதுரிமாவை தன் அலுவலகப் பணியாள் என்றும் பாராமல் சற்று முன்னர் சகோதரன் கூறியவுடன் அவள் இருப்பிடத்தில் அவளை விட்டுச் செல்ல சம்மதித்தான் சிபிரஞ்சன்.
ஆனால் பெரிதாக இல்லாவிடினும் ஸ்ரீயின் செயலில் சிறிதளவு ஏமாற்றத்தோடு நின்றிருந்தவளுக்கு
ஸ்ரீயிடம் போல் நட்பாக இல்லாது முதலாளி என்ற மரியாதையோடே பழகி இருந்த சிபியுடன் எப்படி பயணம் செய்வது என்று ஆயாசமாக இருந்தது.
அவன் அழைத்துப் போகிறேன் என்று கூறியும் வாகனத்தில் ஏறாது சற்றே தயங்கி நின்றவள், “டூ யூ நீட் எனி ஹெல்ப், கெட் இன் டூ தி கார் ரீமா?” என்ற ஆடவனின் ஆழ்ந்த குரலில், “ந்நோ சார்…” என்று வேகமாக வாகனத்தின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள் மதுரிமா.
அவள் ஏறி அமர்ந்ததும், “புட் ஆன் யுவர் சீட் பெல்ட்.” என்று மட்டும் கூறிவிட்டு வாகனத்தைக் கிளப்பியவன் அவளது தங்கும் இடம் வந்து அவளை இறக்கி விடும் வரையிலும் கூட அவளிடம் வேறு எதுவுமே பேசவில்லை.
அதுவரை, ‘ஸ்ரீரஞ்சனுக்கும் தனக்கும் இருக்கும் சமீபகால பழக்கத்தைப் பற்றி அவன் தன்னிடம் ஏதேனும் கேட்பானோ? அப்படிக் கேட்டால் என்ன பதில் கூறுவது?’ என்ற சிறிதான சிந்தனையில் இருந்தவள், “குட் நைட் ரீமா.” என்று மட்டும் கூறி அவன் விடைபெற்றுச் செல்லவும் தான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள்.
அந்த ஆசுவாசம் கொடுத்த துள்ளலில் ஏதோ பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி, தான் தங்கி இருக்கும் விடுதி அறைக்குள் வந்து படுக்கையில் அமர்ந்தவளின் அலைபேசி “பட்டு பேபி” என்ற வீடியோ அழைப்பைக் காட்டி ஒளிர்ந்தது.
அதில் முகம் கொள்ளாப் புன்னகையோடே அலைபேசியை உயிர்பித்தவளை, “மதுக்குட்டி…” என்ற முதிர்ந்த குரலால் வாஞ்சையாக அழைத்து அலைபேசி திரையில் தோன்றினார் சொக்கலிங்கம். மதுரிமாவின் அப்பாவைப் பெற்ற தாத்தா.
தொடு திரையில் தன் தாதாத்தாவைப் பார்த்ததும், “கடா மீசை…” என்று கூவிய பேத்தியின் அழைப்பில் பக்கவாட்டில் திரும்பி மனைவியைப் பார்த்து சப்தமாக சிரித்தவர், “எப்டிடா இருக்க மதுக்குட்டி?. நேரநேரத்துக்கு சாப்ட்ரியா? தூங்கரியா? அப்றம் உன்னோட வேலைலாம் எப்டி போவுது குட்டி?” என்று விசாரிப்பில் இறங்கி இருந்தார்.
அவர் கேட்டதற்கெல்லாம், “ம்ம்ம் ஆச்சு மீசை. சூப்பரா போகுது.” என்று தலையை ஆட்டி ஆட்டிப் பதில் கூறியவள், “நீ எப்டி இருக்க கடாமீசை? உன் பட்டு எப்டி இருக்கு? வீட்ல சித்தப்பா சித்தி, மனோ, மகி, பிங்க்கி எல்லாரும் நல்லா இருக்காகளா?” என்று சிறியவளும் அடுக்க, அவள் அடுக்கிய உறவுகளில் சிலரும் அடுத்த அரைமணி நேரம் வரிசையாக திரையில் தோன்றி மதுரிமாவோடு உரையாடுகிறோம் என்ற பெயரில் அந்த அலைபேசியையே, “டேய் போதும்டா. என்னால முடிலடா” என்று கதற வைத்து இருந்தனர்.
அவர்களின் வழக்கமான இம்சையில் அலைபேசி அலறிக் கொண்டிருந்ததையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாதவள், “ஏ… புள்ள மனோ. பிங்க்கி ஏன்டி கொஞ்சம் இளச்சாப்புல இருக்கு? அதுக்கு கறியும் சோறும் வைக்கிறியா? இல்லியாடி?” என்று தன் சித்தப்பா மகளின் கையில் இருந்த போமேரேனியனைக் காட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதற்கு அவளும், ‘இங்க மனுசருக்கே திங்க சோறு இல்லியாம். இதுல நாய்க்கு கறியும் சோறும் வைக்கணுமாம்.’ என்று நொடித்துக் கொண்டவள், “அதெல்லாம் வைக்கிறேன் வைக்கிறேன்.” என்று சலிப்பாய் சொல்ல…
அதற்குள், “பொய் பொய். அம்மா பிங்கிக்குன்னு கொடுக்குற பிரியாணில கூட பீஸ் எல்லாம் இவளே சாப்பிட்டுடுறா மதுக்கா.” என்று மனோவின் தம்பி மகிழன் அலைபேசியை எட்டிப் பார்த்துக் கூறினான்.
அதைக்கேட்டு, “ச்சீ நாய்க்கு வச்ச பீச சாப்பிட நான் என்ன உன்ன போல நாயாடா?” என்று மனோரமா தம்பியிடம் சண்டைக்குத் தயாராக…
“ஏய் மனோரமா… போனை இங்க குடுத்துட்டு அக்காவும் தம்பியும் அங்கிட்டு போய் சண்டை போடுங்க. எப்போ பாரு ரெண்டு பேருக்கும் வழக்கு தான்.” என்று அவளிடமிருந்து அலைபேசியைப் பறித்து திரையில் தோன்றி இருந்தார் பட்டம்மாள். மதுரிமாவின் தந்தையைப் பெற்றவர். சொக்கலிங்கத்தின் மதிப்பு மிக்க சொத்தாக இருப்பவர்.
அதில், ‘மனோனு மட்டும் சொன்னாப் பத்தாதா. மனோரமான்னு இழுத்துதேன் சொல்லோணுமா?’ என்று பட்டம்மாள் அறியாது இதழ்களை சுழித்து விட்டு மனோ என்கிற மனோரமா அந்த இடத்தை விட்டு அகல…
தொடுதிரையில் பாட்டியுடைய முகத்தைப் பார்க்கவும் மகிழ்ச்சியோடே சிறிதான மரியாதையும் வந்து சேர, “ஹாய் பட்டு பேபி… எப்டி இருக்கீங்க?” என்றாள் மதுரிமா.
பேத்தியின் அந்த அழைப்பில் புன்னகையோடு சிறு முறைப்பையும் பூசி, “பெரியவுகள பேர் சொல்லி கூப்பிடாதன்னா கேக்க மாட்டியா மதுக்குட்டி?” என்றவர் அவளது நலனையும் விசாரித்து விட்டு அழைப்பிற்கான பேச்சை தொடங்கியவர், “நானும் தாத்தாவும் உனக்கு கல்யாணம் பேசலாம்னு முடிவு பண்ணிருக்கோம் குட்டி. வர்ற பொங்கலோட உனக்கும் 22 வயசு முடியுதுல்ல. அதனால சீக்கிரம் பரிசம் போட்டிடலாம்னு பாக்குறோம். வர்ற திங்களுக்குள்ள ஊருக்கு வந்து சேருடா.” என்று அவர் பாட்டில் பேசிக்கொண்டே செல்ல…
அதைக்கேட்டு, “பாட்டீ…” என்று அலறியவள், “என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அ, அவசரம் பாட்டி?” என்று திணறலாகவே மறுத்திருந்தாள்.
சிறியவளின் அந்தத் திணறலிலே, யோசனையாய் புருவத்தைச் சுருக்கியவர், “உனக்கு என்ன நேத்து தான் சமஞ்ச பச்சபுள்ளனு நினைப்பா மதுகுட்டி? நம்ம பரம்பரைல வந்த எந்தப் பொண்ணுமே இருபது வயசு தாண்டுற வர ஒத்தையா நின்னது இல்லை. ஆனா நீ படிப்பு வேலை லட்சியம்னு ஏதேதோ சொன்னதால தான் நாங்க உன்ன அவ்ளோ தொலவுக்கு அனுப்பி வைச்சோம். இப்போ கல்யாணம் பண்ணாம வேற எப்போ பண்ணப்போற?” என்று கேள்விகளை அடுக்கினார் பாட்டி.
அதில் சிறிதே குற்ற உணர்வோடு, அவரைப் பார்த்தவளும், “அது வந்து பாட்டி. என்ன என்ன மன்னிச்சுடுங்க. நான் நான் இங்க மும்பையில என்னோட பாஸை காதலிக்கிறேன். அவரையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.” என்று விழிகளை இறுக்க மூடி படபடவென்று விஷயத்தைக் கூறி இருக்க…
அவளையே பார்த்திருந்த பட்டம்மாளோ பதில் எதுவும் கூறாமலே அலைபேசி அழைப்பை துண்டித்து இருந்தார்.