வருடத்தின் இறுதி மாதங்களின் அதிகாலை வேளை எந்த அளவிற்கு குளிராக இருந்ததோ, அதைவிட சற்று அதிகமாகவே பிற்பகல் பொழுதில் ஆதவன் தன் சுல்லென்ற ஆக்கிரமிப்பை பூமி முழுதும் தீவிரமாக நிலைநாட்டிக் கொண்டிருக்க, நெற்றியில் முத்து முத்தாய் வியர்த்து வடிவதையும் பொருட்படுத்தாது சிறிதான சிந்தனையோடே அலங்காநல்லூரின் கடைவீதியை நோக்கி வியர்க்க விறுவிறுக்க சென்று கொண்டிருந்தான் சிபிரஞ்சன்.
அவன் நடைக்கு ஈடு கொடுக்க இயலாது ஓட்டமும் நடையுமாக அவன் பின்னோடு சென்று கொண்டிருந்த சுதிரும், “பாஸ்…” என்று அவனை பவ்யமாக அழைத்து,
“என்ன பொருள்னு சொன்னா ஆன்லைன்லயே வாங்கிக்கலாம்னு சொன்னதுக்கு தான் வேணாம்னு சொல்லிட்டிங்க. அட்லீஸ்ட் கார்லயாவது வந்துருக்கலாம்ல பாஸ். கப்பல் மாதிரி காரை வச்சிக்கிட்டு இப்டி உச்சி வெயில்ல சர்ட் எல்லாம் ஸ்வெட் ஆகுற அளவு நடந்து போகணும்னு உங்களுக்கு என்ன தலையெழுத்தா பாஸ்?” என்று கூறியபடியே கையில் இருந்த குடையை இன்னும் கொஞ்சம் அவனுக்கு வாகாக உயர்த்திப் பிடித்தான்.
வீடு, வீட்டை விட்டால் மகிழுந்து, மகிழுந்தில் இருந்து இறங்கினால் அலுவலகம் என்று அவன் செல்லும் இடமெங்கும் குளிர்சாதன வசதியிலே வாசம் செய்தவனின் இன்றைய வெட்டவெளி நடைப்பயணம் அந்த விசுவாசியின் விசுவாசத்தை வெகுவாகவே வெளிக்கொணர்ந்து இருந்தது.
சுதிரின் வார்த்தைகள் செவியில் விழுந்ததற்கு அடையாளமாக, ஒரு நிமிடம் நடையை நிறுத்தி அவனை திரும்பிப் பார்த்தவன், “நோட் திஸ் பாய்ன்ட் சுதிர். ஷிப் போல கார்ல சின்ன கடைத்தெருவுக்குள்ள போய் இறங்கினா நான் யாரு என்னன்னு எல்லாரும் ஸ்டடி பண்ண நினைப்பாங்க. அது மதுரிமாவுக்கு ஃபேவரா இருக்காது.” என்று மட்டும் கூறியவன் இன்னும் நடையில் வேகத்தை அதிகரிக்க…
“பாஸ்… இருந்தாலும் நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கக்கூடாது பாஸ். அவங்களை லவ் பண்ற ஸ்ரீ சாரே எனக்கென்னனு அங்க மும்பையில உக்காந்திருக்கப்போ உங்களால மட்டும் எப்டி பாஸ் இப்டி எல்லாம் யோசிக்க முடியுது?” என்று முழுக்க முழுக்க ஆதங்கக் குரலிலே கேட்டிருந்தான் சுதிர்.
அதற்கும் ஒரு நொடி நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தவன் வழக்கம்போல் ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து, “இப்டி கண்டதையும் பேசுறத விட்டுட்டு பாட்டிமா சொன்ன திங்ஸ் என்னனு திங்க் பண்ணுனா எனக்கு ஹெல்ப்பா இருக்கும் சுதிர்.” என்றுவிட்டு இன்னும் சில கணங்கள் நடந்தவன் ஒரு வழியாக கடைவீதியையும் நெருங்கி இருந்தான்.
அகலமும் அல்லாது குறுகலும் இல்லாது காட்சி அளித்த அலங்காநல்லூரின் முக்கிய வீதியில் சிறு சிறு இடைவெளிகளில் முளைத்திருந்த கடைகளில், காய்கறியில் தொடங்கி கறி வகைகள் வரை, இலை தலையில் தொடங்கி, இரும்புப் பொருட்கள் முதற்கொண்டு அனைத்தும் கூவி கூவி விற்பனைகள் செய்து கொண்டிருக்க, இன்று இருக்கும் கடைகள் எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் மாயமாய் மறைந்து விடப் போவதைப் போல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், முந்திக் கொண்டும் தாங்கள் கையில் வைத்திருந்த பைகளை நிரப்புவதில் குறியாக இருந்தனர் அந்த அலங்காநல்லூர் மக்கள்.
பெரிய பெரிய நகரங்களைப் போல் உணவுப் பொருட்களை வாங்கி மாதக் கணக்கில் குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைக்காமல் தினம் தினம் கிட்டும் சிறு வருவாயை வைத்து அன்றாடம் விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்கி ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்துபவர்கள் தேனீக்களைப் போல் அந்தப் பகுதி எங்கும் சுறுசுறுப்பாக சுற்றி வர, “என்ன சுதிர் இது? இவ்ளோ கிரௌடா இருக்கு? இந்த கூட்டத்துக்குள்ள போய்தான் நாம திங்க்ஸ் வாங்கணுமா?” என்று மலைப்பாகவே வினவினான் சிபிரஞ்சன்.
அதில் அவனை கவலையாகப் பார்த்தவனும், “பாஸ் இது வில்லேஜ்ல இருக்க உழவர்கள் சந்தை பாஸ். சுத்தி இருக்க ஊர்கள்ள உற்பத்தி ஆகுற பொருட்கள உற்பத்தியாளர்களே நேரடியா விற்பனை செய்ற இடம். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மாதிரி விவசாயிக கிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கி கண்ட வரியும் போட்டு, பிளாஸ்டிக் கவர்ல அடைச்சு பொதுமக்கள்ட்ட குதிரை விலைக்கு விக்காம, விதச்ச கூலியும், அறுவடை செலவும் போக, சிறு லாபம் வந்தாப் போதும்னு கம்மி விலைக்கு பொருட்களை சேல் பண்ணுவாங்க.” என்று கிராமத்துச் சந்தைகள் பற்றி அவனுக்குத் தெரிந்த விபரத்தைக் கூறினான் சுதிர்.
அவன் கூறியது அனைத்தும் கவனமாகக் கேட்டிருந்த சிபியும், “அப்போ… பெரிய பெரிய ஷாப்பிங் மால்ஸ்ல போய் வாங்குறதை விட இப்டிப்பட்ட இடத்தில பொருள் வாங்கறதுதான் பைய்யர்ஸ்கு(buyers) பெனிபிட்னு சொல்றியா?” என்று வினவ…
“எக்ஸாட்லி பாஸ். இந்த முறை பரிவர்த்தனை பைய்யர்ஸ்கு மட்டும் இல்லை செல்லர்ஸ்கும் அவங்க பொருளுக்கு அவங்களே விலை நிர்ணயிக்கிற வாய்ப்பு கிடைக்கும். அப்டி கிடைச்சு அது லாபகரமா இருந்தா அவங்க அடுத்த உற்பத்திய இன்னும் சிறப்பா செய்வாங்க. ஒரு நாட்டோட வளமே தொழிலாளிகளோட முன்னேற்றம் தானே பாஸ்.” என்று வந்த வேலையை மறந்து இருவரும் தொழில் பற்றிய பேச்சுக்களில் இறங்கி இருந்தனர்.
அவன் தனக்கு கீழ் வேலை செய்யும் காரியதரிசி தானே என்ற சிறு அலட்சியம் கூட இல்லாது அவன் கூறிய விபரங்கள் அனைத்தும் பொறுமையாக கேட்டு சில நொடிகள் யோசித்தவன், “அப்போ ஓகே சுதிர். நாம ஸ்டார்ட் பண்ணப்போற நியூ பிரான்ஞ்ச்கு தேவைப்படுற திங்க்ஸ் எல்லாம் இப்டி சின்ன சின்ன செல்லர்ஸ் கிட்ட இருந்தே பை பண்ணிடு. பொருள் க்வாலிட்டிய மட்டும் செக் பண்ணிட்டு அதோட மார்க்கெட் ரேட் கொடுத்தே எல்லாம் வாங்கிடு சுதிர்.” என்று நொடியில் தொழில் பற்றிய முடிவையும் எடுத்து விட்டிருந்தான்.
இதுதான் அவன். தனக்கு வேண்டிய பொருள் கிடைத்தால் மட்டும் போதும் என்று எண்ணாது, தன்னால் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணமும் அவனிடம் எப்பொழுதும் இருப்பதுவே.
ஒருவரின் பொருளாதாரத்தை வைத்து எந்த ஏற்றத் தாழ்வும் காட்டாது முழுக்க முழுக்க திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பவன் அவன்.
அப்படி ஒரு குணம் இருப்பதால் தான் அவனால் இப்படி ஒரு கிராமத்தில் வந்து, யாரோ ஒரு பெண்ணிற்காய் சிரமங்களையும் மேற்கொள்ள முடிகிறதோ என்னவோ??? அது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
அவன் சில நொடிகள் யோசித்ததிலே இப்படி ஏதாவது சொல்லக்கூடும் என்று அறிந்தே இருந்த சுதிரும், “ஓகே பாஸ். அப்டியே செய்றேன்.” என்று வேகமாக தலையை ஆட்ட…
“ம்ம்ம் குட்.” என்று அவன் தோளில் தட்டியவன், “இப்போ பாட்டி சொன்ன பொருளை முதல்ல வாங்கணும் சுதிர். ஒரு ஹஸ்பண்ட் ஒயிப்கு ஆசைப்பட்டு வாங்கி கொடுக்கற பொருள் என்னவா இருக்கும்?” என்று சப்தமாகவே யோசிக்க…
அச்சமயம் அவனது கைபேசி மெதுவாக இசைந்து மதுரிமாவின் அழைப்பைக் காட்டியது.
சற்றுமுன்னர் வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது தன்னை தவிப்பாகப் பார்த்திருந்த பெண்ணவளின் பார்வையிலே, அவள் அழைப்பை எதிர்பார்த்து இருந்தவன், சிறு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு, “சொல்லு மது?” என்று கைபேசியை செவியில் வைக்க…
அந்தப்புறம் அவளோ, “ப்ளீஸ் ரஞ்சன் சார். பாட்டி ஏதோ தெரியாம உங்ககிட்ட திங்க்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க. நீங்க எதுவும் வாங்க வேண்டாம். வீட்டுக்குத் திரும்பி வந்துடுங்க. பாட்டிகிட்ட நான் சொல்லிக்கறேன்.” என்று பேசிக்கொண்டே சென்றவளின் குரலும் அளவில்லாத தவிப்போடே வெளிவந்தது.
ஏனோ பெண்ணவளின் அத்தவிப்பு ஆடவனின் முகத்தில் புன்னகையைத் தான் உற்பத்தி செய்திருக்க, கன்னங்கள் சுருங்க மெலிதாக சிரித்துக் கொண்டவன், “மது…” என்று அழுத்தமாக அழைத்து அவள் பேச்சை நிறுத்தியிருந்தான்.
கூடவே, “ரிலாக்ஸ் மதுரிமா. இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு நீ இவ்ளோ டென்ஷனா பேசுற?” என்றவன், “பாட்டி இப்போ கொடுத்துருக்க டாஸ்க்ல எனக்கு எந்த பிராப்லமும் இல்லை. சொல்லப்போனா, இன்னிக்கு கிடைக்கிற எக்ஸ்பீரியன்ஸ் வச்சு நாளைக்கு எனக்கு வரப்போற ஒயிப்கிட்ட நான் பெஸ்ட் ஹஸ்பன்ட்டா நடந்துக்கலாம் இல்லியா? அதுக்காகவாச்சும் இதை நான் சரியா செய்யணும்னு நினைக்கிறேன். அதனால நீ இவ்ளோ பீல் பண்ணலாம் தேவையே இல்லை.” என்றும் கூறிவிட்டு கைபேசியை அணைத்தவனை,
‘அடி ஆத்தி… நம்ம பாஸ்தானா இது?’ என்பது போல் ஏற இறங்க பார்த்திருந்தான் சுதிர்.
காதல், திருமணம், பெண்கள், இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே எட்டிக்காயை கடித்தது போல் முகத்தைச் சுளிப்பவன், திடீரென்று தன் எதிர்கால மனைவியைப் பற்றி பேசினால் அவனும்தான் என்ன செய்வான் பாவம்.
வாய்க்குள் ஈ நுழைவதைக் கூட உணராது தன் முகத்தையே ஆவென பார்த்திருந்த சுதிரின் முன்னே கையை ஆட்டிய சிபி, “என்ன சுதிர். என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?” என்றான். ஒருவித உற்சாகம் வழியும் குரலில்.
அதில் இன்னும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவன், “எனக்கு எதுக்கு பாஸ் வம்பு. என்ன கேட்டாலும் எப்டியும் சிரிச்சு தான் மலுப்பப் போறீங்க” என…
அதைக்கேட்டு உரக்க நகைத்தவனும், “புரிஞ்சிகிட்டா சரி.” என்றுவிட்டு, “சரி வா. போய் ஜாஸ்மின் வாங்கலாம்.” என்று முன்னே நடந்தான்.
அதில், “ஜாஸ்மின்னா? மல்லிப்பூவா பாஸ்?” என்று மென்மேலும் அதிர்ச்சியாகியவன்,
“பாஸ்… கண்டுபிடிச்சிட்டிங்களா… எப்டி பாஸ் ?” என்று அவன் பின்னோடே ஓட…
“நம்மளை சுத்தி இருக்க ஆல் லேடிசோட ஹேர் உம் பாரு சுதிர். ஏஜ் டிஃப்ரன்ட் இல்லாம எல்லாரும் ஃபிளார் வச்சுருக்காங்க. அப்போ பாட்டி சொன்ன முதல் திங்க் இதான்னு தோணுது.” என்றவன் எதிரே இருந்த பூக்காரப் பெண்ணிடம் சென்று, “சிஸ்டர்… பூ கொடுங்க.” என்று கேட்டான்.
அவன் கூறியது போலவே சுற்றியும் முற்றிலும் பார்த்த சுதிரும், ‘இவருக்கு மட்டும் எப்டி இதெல்லாம் தோணுது?’ என்று சிந்தித்தபடியே அவனோடு இணைய, அந்த பூக்கரப்பெண்ணோ, “மொட்டாவா, இல்ல மலந்ததா தம்பி?” என்று கேட்க…
ஆண்கள் இருவரும் பேந்த பேந்த விழித்தனர்.
அவர்களின் திருதிரு பார்வையை வைத்தே, “மொதோ தரம் பூக்கடப் பக்கம் வாரீகளோ?” என்று யூகித்தவர், “சரி… பூவு பொஞ்சாதிக்கா அம்மாவுக்கா?” என்று வேறு ஒரு கேள்வியைக் கேட்க…
அதைக்கேட்டு, “பொஞ்சாதியா?” என்று மென்மேலும் அதிர்ந்து சிபியைத்தான் ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான் சுதிர்.
அதில் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவனும், “அவங்க அப்டி கேட்டா நீ ஏன்டா என்ன இப்டி பாக்குற?” என்றவன், “பூ… ஃபிரண்டுக்குங்க. அதாவது ம்ம்ம்” என்று யோசித்து, “தோழிக்கு.” என்று கூற…
அவனை ஏற இறங்கப் பார்த்தவரும், “தோழின்னா… காதலிதானே? அப்போ மொட்டாவே கொடுத்துடுறேன்.” என்று நீட்டி முழக்கியவர் ஐந்து முழம் குண்டுமல்லிப் பூவை அளந்து அவன் கரத்தினில் வைத்தார்.
அந்த காதலி என்ற வார்த்தையில், மீண்டும் திகைத்த சுதிர், ‘இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ?’ என்று எண்ணியபடி சிபியைப் பார்க்க, அவன் பார்வை புரிந்தும் அதை பெரிதாக எடுக்காதவன் மல்லிப் பூவிற்கான பணத்தையும் அப் பெண்மணியிடம் நீட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பின்னர் அந்தப்பூவை தான் கொண்டு வந்த பைக்குள் பத்திரப் படுத்தியவன், “சுதிர்… பாட்டி சொன்ன நெக்ஸ்ட் திங்க்ஸ் என்னவா இருக்கும்னு உனக்கு ஏதும் கெஸ் இருக்கா? லேடிஸ்கு ரொம்ப நெஸ்ஸசரியா தேவைப்படுறது?” என்று வினவ…
அத்துணை நேரமும் சிபியைப் பற்றிய சிந்தனையிலே இருந்தவனும், “ஒன்னுக்கு நாலு பொண்டாட்டி வச்சிருக்க ஆம்பளைங்களுக்கே அதெல்லாம் தெரியுமோ என்னவோ? நானே கட்ட பிரம்மச்சாரி என்ன கேட்டா எப்படி பாஸ் தெரியும்.” என்றான் சற்றே சலிப்பான குரலில்.
சகோதரனின் காதலி என்றாலும் கடந்த மூன்று வருடங்களாய் அவனிடம் பணி செய்யும் ஒரு கிராமத்துப் பெண்ணிற்காக, தன் முதலாளி அவன் உயரம் எல்லாம் மறந்து இத்துணை மெனக்கெடுவதை அவனால் அத்துணை சுலபமாக ஏற்க இயலவில்லை போலும்.
அவளை காதலிப்பவனும் நாளை மணம் புரியப் போகிறவனும் வேறு ஒருவனாக இருக்க, கஷ்டங்களை மட்டும் இவன் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று முழுக்க முழுக்க அவன் மீதான அன்பும் அக்கறையுமே அந்த விசுவாசியின் குரலில் சலிப்பாய் வெளிவந்தது.
ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டியவனோ, சிறு புன்னகையோடே அவன் பதிலை ஒதுக்கி, தீவிர சிந்தனையில் இறங்கி இருந்தவன் சுதிரின் செவியில் எதையோ கூற… “அதுவா?” என்று அலறினான் சுதிர்.