கூடவே, “பாஸ்… உங்களுக்கு மட்டும் எப்டி பாஸ் இதுபோல ஏடாகூடமா தோணுது?” என்றவன், “என்னோட அப்பாகூட எங்கம்மாக்கு அதெல்லாம் வாங்கிக் கொடுத்து நான் பாத்ததே இல்லை பாஸ். போயும் போயும் அதைப்போயா புருஷன்கிட்ட இருந்து பொண்டாட்டிங்க எதிர்பாப்பாங்க?” என்றும் சேர்த்துக் கூறினான்.
அதைக்கேட்டு அவனை சற்றே முறைத்தவன், “ய்யா சுதிர். இதப்போய் நாம வாங்கிக் கொடுக்கணுமா அப்டின்னு நினைக்கிற இடத்திலதான் ஒரு ஹஸ்பண்ட் தன் வைஃபோட தேவையை புரிஞ்சுக்காம தப்பு பண்றான்னு நினைக்கிறேன். என்னோட மும்மாகூட அப்பாகிட்ட ‘இதெல்லாம் வாங்கிட்டு வந்தா குறைஞ்சு போயிடுவீங்களான்னு’ சத்தம் போட்டதை நான் கேட்டிருக்கேன்.” என்றவன், “பாட்டி சொன்னது நிச்சயம் அதுவாதான் இருக்கும்.” என்றும் அடித்துக்கூற…
“இருக்குமோ?” என்று மலங்க மலங்க விழித்தவனும், “அப்டியே இருந்தாலும் அதப்போய் எப்டி பாஸ் நீங்க வாங்க முடியும்? அதும் இப்டி ஒரு வில்லேஜ் ல?” என்றான் பதிலுக்கு.
அக்கேள்வி அவனிடமும் எழுந்தாலும் தற்சமயம் வேறு வழியில்லையே என்று எண்ணியவன், “வாங்கித்தான் ஆகணும் சுதிர்.” என்று மட்டும் கூறி அருகில் இருந்த மளிகைக் கடையையும் நெருங்கி இருந்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் கடைக்கு வந்து விட்டானே ஒழிய, “ம்ம்ம் சொல்லுங்க அண்ணா. என்ன வேணும்?.” என்று கேட்ட கடைக்கார இளம் பெண்ணைப் பார்த்ததும், ஒரு பெண்ணிடம் இதை எப்படி கேட்பது என்கிற தயக்கமும் தடுமாற்றமும் அழைக்காமலே வந்து விட்டது சிபிரஞ்சனிற்கு.
இதுவரை அவனுக்கே அவனுக்காகக் கூட ஒரு பொருள் வாங்குவதற்கு கடைத் தெருவை நாடிச் செல்லாதவனின் இன்றைய நிலை மிகவும் சத்திய சோதனையாகத்தான் இருந்தது.
ஆடவனின் அந்த நிலை சுதிருக்கே தாள இயலாததாக இருக்க, கடைக்காரப் பெண்மணி மீண்டும் வினவவும், “அது வந்துமா…” என்று திணறியவன், “கடையில யாரும் ஆம்பிளைங்க இல்லியாமா?” என்று கேட்டான்.
அதில் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்தப் பெண்ணும் கடைக்குள் திரும்பி, “மாமோய். உன்னதான் கூப்பிடுறாங்க. வா” என்று தன் கணவனை அழைக்க…
“என்ன வேணும் சார்?.” என்று வந்து நின்றான் ஒரு இளைஞன்.
அவனைப் பார்ப்பதற்கும் படிப்பின் வாசனையே நுகராதன் போல இருக்க, “சுத்தம்…” என்று தலையை இடம் வலமாய் ஆட்டிக் கொண்டவன், “நாப்கின்ஸ் வேணும் தம்பி.” என்று மெல்லிய குரலில் கேட்க…
அவனுக்கோ அவன் கேட்டது புரியாது, “அதெல்லாம் இங்க இல்லிங்க.” என்றுவிட்டு உள்ளே செல்ல முயன்றான்.
அந்தக்கடை ஓரளவு அனைத்து பொருட்களும் கொண்ட பெரிய கடையாகத்தான் இருந்தது.
இவன் நேரத்திற்கு அவன் கேட்ட பொருட்களின் வகைகள் சற்றே உள்ளே அடுக்கப்பட்டிருக்க, அதை தமிழில் எப்படிக் கேட்பது என்று சில கணங்கள் ஒன்றும் புரியாது விழித்த சிபிரஞ்சன், “தம்பி ஒரு நிமிஷம்.” என்று அவனை நிறுத்தி விட்டு சட்டென்று அலைபேசியை எடுத்து கூகிலில் தட்டி அதன் படத்தை வரவழைத்திருந்தான்.
அதை அவன் முன்னே காட்டி,
“இது தான் வேணும் தம்பி.” என்றவனுக்கு தலையே கிறுகிறுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
அவன் காட்டிய படத்தைப் பார்த்த பின்னேதான், “ஓ பேடு (pad) வேணுங்களா…?” என்று இழுத்த கடைக்காரன், அவன் கேட்டதை எடுத்து கொடுத்து விட்டு, “இதெல்லாம் பொம்பளைக சமாச்சாரம். அவிகளையே வாங்கிக்க சொல்ல வேண்டியதுதானண்ணே. ஆம்பளைக நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” என்று அக்கறையும் பட்டுக்கொள்ள…
அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மனைவியும், “அய்ய நீ என்ன கண்டுக்காம இருக்கது பத்தாதுன்னு எல்லாரையும் உன்ன போலவே இருக்க சொல்றியா? அவருக்கு அவரு பொண்டாட்டி மேல ஏகப்பட்ட ஆசை போல. அதான் இதெல்லாம் வாங்கிட்டுப்போய் கொடுக்கிறாரு. உனக்கு ஏன்யா காண்டு.” என்று கணவனைத் திட்டியவள்…
சிபிரஞ்சனிடம் திரும்பி, “அண்ணே இவர் சொல்றதெல்லாம் கேட்காதீக எப்பவும் இதே போல இருங்க.” என்றவள் பொருளுக்கான பணத்தையும் தவறாது பெற்றுக் கொண்டாள்.
பட்டம்மாள் கூறிய இரு பொருட்களையும் யூகத்தின் அடிப்படையிலே ஒருவழியாக வாங்கி விட்டிருந்தவன், தன்னையே பார்த்திருந்த சுதிரையும் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுரிமாவின் வீட்டிலும் நுழைய…
அங்கோ ஆடவனை எதிர்பார்த்து வீட்டு வாயிலிலே நிலையாக நின்றிருந்தாள் மதுரிமா.
பெண்ணவளின் ஆழி போன்ற விழிகள் இரண்டும் நுழைவாயிலின் இரும்புக் கதவிலே நிலைத்திருக்க, வழக்கமான பழக்கமாய் செவியோர சிகையை இழுத்து பற்களுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தவள் அவன் தலையைக் கண்டதும், “வந்துட்டிங்களா ரஞ்சன் சார்…” என்று ஓடிச் சென்று அவன் முன்னே நின்று, “நான்தான் கடைக்குலாம் போகாதீங்க வந்துருங்கன்னு சொன்னேன்ல. பாட்டிதான் ஏதோ சொல்லிட்டாங்கன்னு நீங்க ஏன் போனீங்க?” என்று சற்றுமுன்னர் அலைபேசியில் போலவே அக்கறைப் பட்டவளைக் கண்டு அத்துணை நேரம் அவன் அனுபவித்து வந்திருந்த அசௌகர்யங்கள் எல்லாம் மாயமாய் மறைந்தது போன்ற உணர்வுதான் ஆடவனுக்கு.
கூடவே அவனது கலைந்து கிடந்த சிகையையும் நீர் முத்துக்கள் பூத்திருந்த நெற்றியையும் பார்த்து, “எங்க போனாலும் கார்ல போய்தானே ரஞ்சன் சார் உங்களுக்குப் பழக்கம். இன்னிக்கு ஏன் நடந்து போனீங்க? அதும் இவ்ளோ வெயில்ல சொல்ல சொல்ல கேட்காம போய் முகமெல்லாம் எப்டி வேர்த்து இருக்கு பாருங்க.” என்று வேகமாக ஓடி விசிறியையும் எடுத்து வந்து அவளே விசிறி விடத் தொடங்க…
விசிறியிலிருந்து வந்த காற்றோடு பெண்ணவளின் கரிசனமும் ஆணின் மனதில் குளிரும் பனியாய் இறங்கியதில் அவளையே விழி எடுக்காது பார்த்திருந்தான் சிபிரஞ்சன்.
சுற்றம் எதையும் உணராத இருவரும் வீட்டின் வாயிலில் வைத்தே ஏதோ ஒரு இனம் புரியா உணர்வில் ஆட்கொள்ளப்பட்டிருக்க, “மதுக்குட்டி… போதும் அவரை உள்ள அழைச்சிட்டு வா.” என்ற பட்டம்மாளின் வார்த்தைகள் தான் அவர்களை நடப்பிற்கு அழைத்து வந்தது.
அதில் சுற்றியும் முற்றியும் பார்த்தவள் அப்பொழுது தான் மொத்தக் குடும்பமும் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே விலகி ஆடவனையும் ஏறிட்டுப் பார்க்க, அதற்குள் தன் பார்வையை மாற்றி இருந்தவனும், “ஹேய்… ஐம் ஓகே மது. வா உள்ள போகலாம்.” என்று விட்டு விறுவிறுவென்று உள்ளே சென்றிருந்தவன் பட்டம்மாளிடம் தான் வாங்கி வந்த பொருட்களையும் கொடுத்திருந்தான்.
அப்படி அவன் என்னதான் வாங்கி வந்திருப்பான் என்று அறிந்து கொள்வதற்காக வீட்டினர் அனைவருமே அங்கே கூடி இருக்க, பட்டம்மாளின் கண்கட்டாலில் அவன் வாங்கி வந்த பொருட்களை வெளியே எடுத்த சாரதாவின் பார்வை அளவில்லா ஆச்சரியத்தோடே சிபிரஞ்சனின் முகத்தில் படிய, அவர் எடுத்து வைத்த குண்டு மல்லியைப் பார்த்து, “இந்த குண்டு மல்லிய வாங்கித் தரத்தான் மும்பையில் இருந்து கிளம்பி வந்தியா பங்காளி?” என்று சிரிக்கவே தொடங்கி விட்டான் வீரா.
கூடவே அவன் வாங்கி வந்திருந்த மற்றுமொரு பொருளைப் பார்த்து, “அய்ய… இத என்னத்துக்கு வாங்கிட்டு வந்திருக்கான் இந்த மும்பைக்காரன்? சரியான கூறு கெட்டவனா இருப்பான் போல.” என்று வீராவின் அன்னையும் அனைவரின் காதுபடவே முணுமுணுத்துக் கொள்ள… எதையும் கூறாது அமைதியாக அனைத்தையும் பார்த்திருந்த பட்டம்மாள் பாட்டி, “உங்களைப் பத்தின என்னோட கணிப்பை பொய்யாக்கல நீங்க.” என்று சிபிரஞ்சனை சிறிதே மெச்சுதலாகப் பார்த்தவர்… “வீரா… இனிமேல் எது பேசுனாலும் இடம் பொருள் ஏவல் அறிஞ்சு யாரையும் கஷ்டபடுத்திடாம யோசிச்சு பேசு.” என்று வீராவையும் முறைத்துவிட்டு, “வர்ற பொங்கல் முடியற வரை அவர் இங்க இருக்கட்டும். அப்றம் என் முடிவை சொல்றேன்.” என்று பேத்தியிடமும் கூறிவிட்டு விரைந்து சென்று தன் அறைக்குள் நுழைந்து கொள்ள…
“அதகளம் பண்ணிட்டீக பேரரே.” என்று ஓடிவந்து சிபிரஞ்சனை இறுக அணைத்து இருந்தார் சொக்கலிங்கம்.
கூடவே, “அறுபது வருஷம் திருமண வாழ்க்கை வாழ்ந்த எனக்கே இதுவா அதுவான்னு சந்தேகமா இருந்துச்சு. ஆனா நீங்க அவ்ளோ பெரிய உயரத்தில இருந்தும் கொஞ்சமும் அலட்டல் இல்லாம கடைத்தெருவுக்கு போய் பட்டு சொன்னதை சரியா வாங்கிட்டு வந்துட்டீகளே.” என்று பாராட்டியவர், “மதுக்குட்டி உன்னோட தேர்வு எந்த விததத்துலயும் சோடை போகலைடா. உன்னோட அழகுக்கும் அறிவுக்கும் பொருத்தமானவரு பேரரு மட்டும்தேன். பட்டுவும் அதை சீக்கிரம் உறுதி செய்வா பாரு.” என்று பேத்தியின் தலையையும் தடவ, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாத வீராவும் அவன் அன்னையும் முகத்தை தொங்கப் போட்டு கொண்டு அவர்கள் வீட்டிற்குக் கிளம்பி இருந்தனர்.
பட்டம்மாள் சிபிரஞ்சனை பாராட்டிச் சென்றதில் மற்ற உறவுகளும் பற்பல வார்த்தைகள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இறுதியாக அவளை நெருங்கிய சாரதாவோ, “பாட்டி சொல்லி வாங்கினாலும் இது உனக்காக வாங்கப்பட்ட பூ மதுமா. வெறுமனே வாட விட்டுடாத” என்று அவன் வாங்கி வந்திருந்த பூச்சரங்களை மட்டும் எடுத்து வந்து மதுரிமாவின் கரங்களில் வைத்தார்.
திடீரென தன்னிடம் நீட்டப்பட்ட பூவை கரத்திலும், அதை வாங்கி வந்தவனை விழிகளிலும் நிறைத்தபடியே பாவையவள் பேசும் மொழியற்று நின்றிருக்க, பெண்ணவளின் விழி வீச்சைத் தாளாது, அன்னிச்சையாக பின்னங்கழுத்தை வருட தொடங்கி இருந்தன சிபிரஞ்சனின் கரங்கள்.
அச்சமயம் அவனைப் பார்த்த சொக்கலிங்கமும், “அடடே பேரரே. புதுசா கடை கண்ணிகெல்லாம் போயிட்டு வந்ததுல உடம்பெல்லாம் வலிக்குதோ? வாங்க பேரரே வந்து ஓய்வு எடுங்க. தாத்தா தைலம் தடவுறேன்.” என்று அவனை அவன் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அவன் தலை மறையும் மட்டும் அவனையே பார்த்து நின்றவள் கையிலிருந்த குண்டுமல்லிப் பூக்களோடே அடிமேல் அடிவைத்து தனதறைக்குள் நுழைய, உச்சஸ்தாதியில் அலறிக் கொண்டிருந்தது பெண்ணவளின் கைபேசி.
கைபேசி ஒலியில் சற்று எட்டுக்களை எட்டிப் போட்டவள் பூக்களை வலக்கரத்திற்கு மாற்றிவிட்டு இடது கரத்தால் அதை உயிர்பித்து செவியில் வைக்க…
அந்தப்புறம் ஸ்ரீரஞ்சனோ, “ஹாய் ஸ்வீட்ஹார்ட்… ஹவ் ஆர் யூ பேபி?” என்று குழைவாய் நலம் விசாரித்தான்.
ஏனோ அக்குழைவில் மலரவேண்டிய பெண்ணவளின் முகம் அப்பட்டமான பிடித்தமின்மையைத் தத்தெடுக்க, “ஃபைன் ஸ்ரீ.” என்று சுரத்தே இல்லாமல் பதில் கொடுத்தவள் கையில் இருந்த மல்லிச்சரங்களை பார்த்தவாறே, “உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்?” என்று சொன்னாள்.
அதில் முகம் பிரகாசிக்க புன்னகைத்துக் கொண்டவனும்,
“ம்ம்ம் கேளு பேபி. நீயா இப்டி பேசி எவ்ளோ நாளாச்சு?” என்று சொல்ல…
அடுத்தகணம் அவள் பாட்டி சற்று முன்னர் சிபியிடம் கூறியதை ஸ்ரீயிடம் கேள்வியாகக் கேட்டிருந்தாள்.
அதைக்கேட்டு, “ஹாஹாஹா” என்று சில நொடிகள் சிரித்துவிட்டு, “பொண்ணுங்களுக்கு பெரிசா என்ன தேவை இருக்க போகுது பேபி? வீடு, கார், பங்கலோவ், கோல்டு, அப்றம் டைமன்ட்.” என்றவன், “நம்ம கல்யாணம் மட்டும் முடியட்டும் ஸ்வீட்ஹார்ட் உன்ன டைமன்டாலே குளிப்பாட்டிடுறேன்.” என்றும் சேர்த்துக்கூற…
பெண்கள் பற்றிய ஸ்ரீயின் அந்த கீழான மதிப்பீட்டில் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொண்டவள், “ரொம்ப தலைவலியா இருக்கு ஸ்ரீ அப்புறம் பேசுறேன்.” என்று அவன் பதிலுக்கு கூட காத்திராது அலைபேசியை அணைத்து இருந்தாள் மதுரிமா.
கூடவே சொல்லொணாத ஏமாற்றம் ஒன்றும் அவள் நெஞ்சினோரம் பரவ, தன் கரத்தில் இருந்த மல்லிச்சரங்களை அன்னிச்சையாக அணைத்துக் கொண்டவளுக்கு,
“இது உனக்கானது மதுமா” என்ற சிற்றன்னையின் கூற்றும் செவியில் ஒலித்து, ‘இது உண்மையிலே தனக்கானதாக இருந்திருக்கக் கூடாதா???’ என்ற ஏக்கத்தையும் விழியோரம் பரவச் செய்தது.