“என்ன? என்ன சமாளிக்கனும்? நான் அவனை பெத்தவ. அவன் பெரிய இவனா இருந்தா எனக்கு பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா?…” என பத்திரிக்கையுடன் கையை ஆட்டிக்கொண்டு தமயந்தி பேச,
“ம்மா…” என்ற சத்தத்தில் திடுக்கிட்டவர் அவன் தானோ என நினைத்து,
“வ்வா வாப்பா ஆரி…” என முகத்தை இயல்பாக்கிக்கொண்டே திரும்பினார் தமயந்தி.
திரும்பி பார்த்ததும் தான் ஒரு ஆசுவாச பெருமூச்சு. வந்தது அவரின் மூத்த மகன் குருபரதன். மருத்துவன்.
“பயந்துட்டீங்களா?…” என்று பரத் குறும்பாய் சிரித்து கண் சிமிட்ட,
“ஆமா, பயந்தாங்க. போடா…” என்ற தமயந்தி,
“மனுஷனாடா நீ? என்னை பார்த்தா எப்படி தெரியுது?…” என பாவமாய் கோபமுடன் கேட்டார்.
“பச்சப்பிள்ளை ம்மா நீங்க…” என்றவன்,
“வா க்கா, எப்போ வந்த?…” என்று மதுஸ்ரீ அருகில் அமர்ந்தான் குருபரதன்.
“சரி, நீங்க பேசிட்டிருங்க. நான் லஞ்ச் ரெடியான்னு பார்த்துட்டு வரேன். இப்ப அவன் வேற வந்திருவான்…” என சமையலறை பக்கம் சென்றார் தமயந்தி.
“இன்விடேஷன் வீட்டுக்கு வந்தப்போ நானும் சேர்ந்தே வந்துட்டேன் பரத். இன்னைக்கு நீ லீவ்ன்னு அம்மா சொன்னாங்க. அதான் வந்தேன்…” என்ற மதுஸ்ரீ,
“ம்மா, நான் பரத்தையும், அனுஷாவையும் கூட்டிட்டு போய்ட்டு வரேன்…” என்றாள் சத்தமாய் மதுஸ்ரீ.
“எங்கன்னு என்கிட்ட சொல்லாம ப்ளானா? அம்மா உள்ள போயாச்சு. அவங்களுக்கு கேட்டிருக்காது….” என்ற பரத் அங்கிருந்த பத்திரிக்கையை எடுத்து பார்க்க முகமெல்லாம் மகிழ்ச்சி பூக்கள்.
“உன் வெடிங் இன்விடேஷன் தான். அதுக்குன்னு உள்ள விழுந்துடாதடா…” என கேலி செய்த மதுஸ்ரீ,
“உனக்கும் அனுஷாவுக்கும் ஜ்வெல்ஸ் எடுக்கனும். உங்க ரெண்டுபேர் கல்யாணத்துக்கு கிப்ட் பன்றதுக்கு. அதான் இப்பவே கூட்டிட்டு போய் பார்த்துட்டு வான்னு அத்தான் சொல்லி அனுப்பினாங்க…” என்றாள்.
“இன்னும் நாள் இருக்கே. இப்பவே ஏன்?…”
“என்னடா விளையாடறியா? நாள் கம்மின்னா வேற வேலை இல்லையா? இப்பவே நம்மோட கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ஓரளவு முடிச்சு வைக்கனும். எனக்கும் டென்ஷன் இல்லாம இருக்கும்…”
“என்ன பெரிய கமிட்மென்ட்? அதிகபட்சம், ஒரு செயின், மோதிரம், பிரேஸ்லெட். இதுக்கு இவ்வளோ பில்டப்…” என பரத் கேலி பேச,
“ஆமாப்பா, நான் பிறந்தது வேணும்னா லைட்னிங் பிக்சர்ஸ் ஓனர் பொண்ணா இருக்கலாம். ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டது ஃபூட் பேக்டரி ஓனர் பையனை தானே? ஏதோ கடமைக்கு எங்களால முடிஞ்சது…” என்று படுநக்கலாக மதுஸ்ரீயும் சொல்ல,
“கொந்தளிச்சிடுவியே. அமைதியாகு. நீ என்ன எடுத்தாலும் எனக்கு ஓகே. உன் செலெக்ஷன் தெரியாதா என்ன?…” என்றவன்,
“கல்யாண பொண்ணு, வேற என்ன செய்வா? எந்த நேரமும் போனும் காதும் தான். ப்ரவன் கூட பேசிடிருக்கா. வரும்போதே பார்த்துட்டேன்…” என்று சொல்ல தமயந்தியும் வந்துவிட அப்படியே சில நிமிடங்கள் பேச்சுக்களில் சென்றது.
“ம்மா, அப்பா வந்தாச்சு…” என அனுஷா ஓடி வந்தாள்.
“அதுக்குள்ள பேசி முடிச்சிட்டியா?…” என மதுஸ்ரீ கிண்டலாய் தங்கையை பார்க்க,
“அக்கா…” என்றவள் மேலும் பேசும்முன் குருமூர்த்தி வேகநடையிட்டு உள்ளே வந்தார்.
வரும்பொழுதே அங்கே வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளில் அவர் பார்வை படிந்தது.
முகத்தில் அயர்வும், ஒருவித எரிச்சலும் பரவி இருக்க மூத்தமகள் வருகை கண்டு புன்னகையுடன் அவளை விசாரித்தார்.
“குழந்தையை கூட்டிட்டு வரலையா மது?…” என குருமூர்த்தி மகளிடம் கேட்க,
“இன்னைக்கு ஸ்கூல் ப்பா. ஈவ்னிங் ட்ரைவர் கூட்டிட்டு வருவார்…” என்றாள் மதுஸ்ரீ.
அனுஷா அமைதியாக நிற்க பரத் அவசரமாய் ஒரு அழைப்பு என எழுந்து சென்றான்.
“ஹ்ம்ம், பார்த்துட்டு தான் இருக்கேன்…” என ஒன்றை மட்டும் எடுத்து பார்த்தவர்,
“அனு, உனக்கும், உன் அண்ணனுக்கும் ஓகே தானே?…” என இளையமகளிடம் கேட்க,
“ஓகே ப்பா…” என்பதற்குள் அனுஷா திணறி போனாள்.
எப்போதும் குருமூர்த்தி கண்டிப்பு தான். அதில் பெரிதாய் கடுமை இருந்ததில்லை. ஆனால் இந்த திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அந்த கடுமை அவரிடம் வெளிப்பட்டது.
நடக்கவிருப்பது அவளின் காதல் திருமணம். அதனை பெரியவர்கள் சம்மதத்துடன் நடத்திக்கொள்ள சிரமப்பட்டு தான் போனாள் அனுஷா.
லைட்னிங் பிக்சர்ஸ் என்னும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் அவருடையது.
குடும்பத்தின் அடுத்த தலைமுறை அதனை கையிலெடுப்பார்கள் அவர் நினைத்திருக்க மூத்த இரு பிள்ளைகளான மதுஸ்ரீயும், பரத்தும் மருத்துவத்துறையின் ஈர்ப்பால் தனி வழியை தேடிக்கொண்டனர்.
கடைக்குட்டி அனுஷா எடிட்டிங், அனிமேஷன் & கிராபிக்ஸ் சம்பந்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க, அதற்கு முழுமுதற்காரணம் அவரின் மூன்றாம் மகன். குரு ஆர்யன்.
அந்த வீட்டில் அவனுக்கவனே பெரிய மனிதனாய் வளர்ந்தவன். தன்னை வளர்த்துக்கொண்டவன்.
குருமூர்த்திக்கு அடுத்தபடியாய் அந்த வீட்டின் முடிவுகளை மாற்றும் அதிகாரம் மிக்கவன்.
தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தின் நிழலில் நிற்காமல் தனக்கென வழியில் தன்னை செலுத்தி சாதித்தும் கொண்டவன்.
இயக்குனர் குருஆர்யன். அவனின் நெருங்கிய வட்டாரத்தில் ‘ஜி’ என்று நட்பாகவும், மரியாதையாகவும் அழைக்கப்படுபவன்.
ஐந்து படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவன்.
‘ஆர்யா சொன்னா சரியா இருக்கும். ஆர்யாட்ட கேட்போமே. ஆர்யா எப்படி இதுக்கு சொல்யூஷன் சொல்லுவான். அவன் தான் ஹேண்டில் பண்ணுவான். அவனால தான் முடியும்’ இப்படியான வார்த்தைகள் அவனின் மிதப்பை அதிகப்படுத்தி இருந்தது.
எப்போதும் குருமூர்த்தி குடும்பத்தின் முடிவுகளை பிள்ளைகளுடன் கலந்தாலோசிப்பது உண்டு.
அது அவரின் பாணி. பிள்ளைகளிடம் பக்குவம் வளரும். வசதி இருப்பினும், திரைத்துறையில் இருந்தாலும் இப்படித்தான் நம் குடும்பம் என அப்போது தான் உணர்ந்து வளருவார்கள் என்று வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் அவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்வதுண்டு.
சில தடுமாற்ற நேரங்களில் தயங்காமல் அவர்களுக்கு என்ன தோன்றுகிறது என ஆலோசனை கேட்பதுவும் உண்டு.
இதில் பெரும்பாலான நேரங்கள் ஆர்யனே விடையாகி இருப்பான். அதில் தட்டிக்கொடுத்து பெற்றவர்கள் பூரிக்க, அந்த பெருமிதத்தை வெளிகாட்டிக்கொள்ளாத மிதப்பான ஒரு பார்வை தான் வெளிப்படும் அவனிடம்.
முன்பு அதனை அமைதி என நினைத்திருக்க வளர வளர அவனின் அந்த ஆளுமை குடும்பத்தினரை அவனருகில் சகஜமாய் நெருங்க விடுவதில்லை.
அளவான புன்னகை தான் அவன் முகத்தில் வரும். என்னவோ அந்த வீட்டையும், அந்த பெற்றவர்களையும் அவன் தான் பார்த்துக்கொள்வது போல.
அதில் பாதி உண்மையும் இருந்தாலும், வீட்டினரும் அதன்போக்கிலேயே சென்று அதனை முழுவதும் உண்மையாக்கினார்கள்.
இதோ குடும்பத்தின் அடுத்த இரு திருமணம். இதனை குருமூர்த்தியிடம் பேசி சம்மதிக்க வைத்து இத்தனை தூரம் கொண்டுவந்தது ஆர்யனே.
அனுஷா ப்ரவன் திருமணம் காதல் திருமணம். ட்ரீம்ஸ் டிவி சேனலின் நிர்வாகி ஸ்ரீநிவாசதேவ்வின் மகன் ப்ரவன். மகள் கீதாலக்ஷ்மி.
அனுஷாவின் திருமணத்திற்கு பேச்சுக்கள் ஆரம்பித்து அதன் முடிவில் கீதாவை பெண் எடுத்து அனுஷாவை பெண் கொடுப்பதாய் முடிவானது.
பரத், கீதா இருவருக்குமே இதில் எந்தவித மறுப்புகளும் இல்லை என்பதால் அவர்களின் முழுமனதுடன் இந்த திருமணம் முடிவாக, இரு திருமணத்தையும் சேர்த்து நடத்துவதே இரு குடும்பங்களும் முடிவு செய்துகொண்டனர்.
இந்த திருமண பத்திரிக்கைகள் தேர்வு முதற்கொண்டு அனைத்திலும் அவனின் தலையீடு தான்.
இன்றுவரை அவன் இயக்கிய படங்களில் ஒன்றை கூட லைட்னிங் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை.
அதில் குருமூர்த்திக்கு ஆதங்கம் இருந்தாலும் எப்படியும் இதனை தனக்கு பின் எடுத்து செல்லப்போவது அவனாக மட்டுமே இருக்கும் என்று மனதார நம்பினார் குருமூர்த்தி.