தாயிடம் சீராட்டிக்கொண்டிருக்க இந்த தருணத்தில் அவள் மனம் அதிகத்திற்கும் ஏங்கியது.
எத்தனை நாட்கள் உடன் இருந்தாலும் அது அனுஷாவிற்கு போதவில்லை. கணவனும் அருகில் வேண்டும். தாயின் அருகாமையும் வேண்டும் என்ற விதத்தில் யோசித்தவள் முகத்தில் புன்னகை.
நாளை தன் பெண்ணோ, பிள்ளையோ இப்படித்தானோ என்னும் தூரத்திற்கே யோசித்தாள் அனுஷா.
“கிளம்ப நேரமாகுது. ஆரி வந்தா என்ன வேணும்ன்னு கேட்டுட்டு சொல்லிட்டு கிளம்பனும்…” என்று தமயந்தி மகனின் வருகைக்காக காத்திருக்க ஆர்யாவும் வந்து சேர்ந்தான்.
“இன்னும் கிளம்பலையா?…” என்றவன் பார்வை வீட்டை சுற்ற,
“நீ வரவும் சொல்லிட்டு கிளம்ப தான் வெய்ட்டிங்…” என்றார் தமயந்தி.
“ரெண்டுபேர் மட்டுமா போறீங்க?…”
“ஆமாப்பா, அப்பா தான் ஊர்ல இல்லையே. நான் கூட நாளைக்கு அனுவை கூட்டிட்டு போகலாம்ன்னு பார்த்தேன். மருமகன் இன்னைக்கே வர சொல்லிருக்கார். அதுவுமில்லாம நாமளும் போய் பார்க்கனுமே?…” என்று சொல்ல,
“எனக்கு ஒரு ப்ளாக் காபி…” என்றவன்,
“உட்கார் அனுஷா….” என்று தானும் அமர்ந்தான்.
“சாப்பிடலையா ஆரி?…” என்றார் மகனிடம்.
“ஆபீஸ்ல சாப்பிட்டுட்டேன். மணி என்ன? இவ்வளோ நேரமா லன்ச் எடுக்காம இருப்பேன்?…” என்று கேள்வி எழுப்பினான்.
“ஹ்ம்ம், இருந்தாலும் அம்மா கேட்கனும்ல…” என்று காபி வரவும் மகனுக்கு எடுத்து தந்துவிட்டு,
“அனுஷா…” என மகளை அழைக்க,
“இருங்கம்மா…” என்றான் குருஆர்யன்.
‘என்னடா இது?’ என்று தானும் அமர, அவன் காபியை நிதானமாக பருகிவிட்டு எழுந்தவன்,
“போகலாம்…” என்று சொல்ல தமயந்திக்கு தலைசுற்றாத குறை தான்.
“நீயுமா வர?…” என்று அவர் கேட்க,
“பின்ன, பரத்தும் இல்லை. அப்பாவும் இல்லை. நீங்க மட்டுமா அனுவை கொண்டுபோய் விடுவீங்க? வாங்க…” என்று முன்னே நடக்க,
“இந்த மயக்கத்தோடவே வாங்க. போகலாம்…” என்று சிரிப்புடன் அனுஷா கிளம்ப ஸ்ரீநிவாசனின் வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வருவதற்கு ஒருமணி நேரம் முன்புதான் ஸ்ரீநிவாசன் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
குருஆர்யனை பார்த்ததுமே ஸ்ரீநிவாசன், ப்ரவன் இருவரும் அவனை அணைத்து நன்றி சொல்லி சில்லாகித்துவிட்டனர்.
“இட்ஸ் ஓகே…” என அதையும் மிதப்பாகவே அவன் எடுத்துக்கொண்டான்.
‘என்னால் முடிகிறது. என்னால் முடியுமே? அதனால் செய்தேன்’ என்று உள்ளுக்குள் அந்த எண்ணம் தான். அது ஒரு பெரிய விஷயமாகவே அவனுக்கு தெரியவில்லை.
இனி சின்ன சின்ன விஷயங்கள் கூட அவனை பெரிதாய் எதிர்பார்ப்புக்குள்ளாக்கும் என்பதால் தான் இப்போது பெரிய விஷயங்களும் அவனுக்கு கடுகளவாய் தெரிந்தது.
அவர்கள் வருகையில் நரசிம்மன் உறக்கத்தில் இருக்க நனியிதழை பார்த்தவன் அவளிடம் எதுவும் பேசவில்லை.
பேசும் நிலையில் இல்லை அவளுமே. முகத்தில் முன்பை போல் கள்ளமற்ற அந்த புன்னகை இல்லவே இல்லை.
கண்களை உணர்வுகள் எட்டாத ஒரு பாவனை. மெல்லிய சிரிப்புடன் மெலிந்து காணப்பட்டாள்.
பார்த்ததும் பார்வையை திருப்பிக்கொண்டவன் ஸ்ரீநிவாசனிடம் தான் நரசிம்மன் உடல்நிலையை பற்றி விசாரித்துக்கொண்டான்.
“சித்தப்பாவும் உங்ககிட்ட பேசனும்ன்னு சொன்னார். இங்க வரவும் பேசிக்கலாம்ன்னு நான் தான் சொன்னேன்…” என்று ப்ரவன் சொல்ல,
“இது ஒரு விஷயமே இல்லை. இதை ஏன் பெருசு பண்ணனும்? லீவ் இட்…” என்றான் பெருந்தன்மையாக.
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனுஷாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப அவளை தேடி வந்தவன், அங்கே அனுஷா இல்லாமல் திரும்பவிருக்க அதற்குள் நனியிதழ் கீதாவிடம் பேசியவற்றை கேட்டு சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டான்.
கண்கள் ரத்தமென சிவந்துவிட்டது அவன் கேட்டதில். நறநறத்த பற்களின் இடையே வரவிருந்த வார்த்தைகளை இருக்குமிடம் பொருட்டு அடக்கிக்கொண்டவன் சத்தமின்றி திரும்பினான்.
“என்னண்ணா கூப்பிட்டீங்களாம்…” என மேடிட்ட வயிற்றை பிடித்தபடி வந்தாள் அனுஷா.
“அம்மாவும் இப்பவே கிளம்பறாங்களா ண்ணா? இருந்துட்டு நைட் வரட்டுமே?…” என சலுகையாக சொல்ல அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் வயசென்ன அனு?…” என்றான் தங்கையிடம்.
“ண்ணா…” என்று அவள் புரியாமல் பார்க்க தமயந்தியும் என்னவென்று பார்க்க வந்தார்.
“நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை. இந்த வீட்டோட மருமக. ஞாபகம் இருக்குது தானே?…”
“இருக்கு ண்ணா…” என்றாள் என்னவோ சொல்ல போகிறான் என்று திகைத்து போய்.
“நம்ம வீட்டுக்கு நீ சின்ன பிள்ளை தான். ஆனா எல்லா இடத்துலையும் இல்லை. அதுக்கான பக்குவத்தோட பொறுப்போட நடந்துக்கோ. பொறுப்புன்னா குடும்பத்தையே நீ தலையில சுமக்கனும்ன்னு இல்லை. என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு அதை எப்படி சால்வ் பண்ணனும்ன்னு பார்க்கறது…” என்று சொல்ல,
“புரியலை ண்ணா…” என்றவளுக்கு என்னவோ போலானது.
“அது உன் கையில தான் இருக்கு. நீ சின்னப்பிள்ளையா இருந்தா உன்னை அப்படி தான் நடத்துவாங்க. எப்பவும் எதுவும் புரியாது…” என்றவன்,
“ஓகே இன்னொருநாள் இதை பத்தி பேசறேன்…” என்று வேகமாய் கிளம்பியவன் செல்லும் வழியிலேயே விஷ்ணுவிற்கும், மதுஸ்ரீக்கும் அழைத்துவிட்டான்.
“வீட்டுக்கு வாங்க. உங்க வீட்டுக்கு தான் போய்ட்டிருக்கேன்…” என்று இறுகிய குரலில் சொல்ல,
“என்னாச்சு ஆரி? எதுவும் பிரச்சனையா?…” என்றாள் மதுஸ்ரீ தன் தம்பியின் குரலை வைத்தே.
“மாமா, உங்கப்பா எங்க இருக்கார்? வீட்டுலையா? பேக்டரிலயா?…” என விஷ்ணுவிடம் கேட்க,
“பேக்டரில தான் ஆரி. என்ன விஷயம்?…” என்றான் அவன்.
“வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. முக்கியமான விஷயம்ன்னு சொன்னேனே?…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டான்.
தணிகாச்சலம் வீட்டில் அவரின் மனைவியும், தணிகாச்சலத்தின் தங்கையும் மட்டும் இருந்தனர். கூடவே மதுஸ்ரீயின் குழந்தையும்.
ஆர்யனை பார்த்ததும் அத்தனை சந்தோஷம் அவர்கள் மூவருக்கும். எப்போதாவது விசேஷம் என்றால் மட்டுமே அவனின் வருகை இருக்கும்.
இப்படி சொல்லாமல்கொள்ளாமல் எல்லாம் அவன் வந்ததில்லை. இப்போது வந்திருந்தான்.
அவனை உபசரிக்க அவர்கள் நினைக்க அந்த மனநிலையில் இல்லை குருஆர்யன்.
“தண்ணி மட்டும் குடுங்க அத்தை. வேற எதுவும் வேண்டாம். எல்லாரும் வந்திடட்டும்…” என்றவன் தணிகாச்சலத்தின் தங்கையிடம் அவர் மகன் நிதீஷை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
சாதாரண பேச்சுக்கள் போல் தான் இருந்தது ஆர்யன் பேசியவை எல்லாம். ஆனால் உள்ளர்த்தம் புரியவில்லை அவர்களுக்கு.
மதுஸ்ரீ மருத்துவமனையிலிருந்து கிளம்பி இருக்க விஷ்ணு என்னவென்று அழைத்து கேட்டான்.
“எனக்கும் தெரியலை. அவன் எதுவும் சொல்லலையே. எதுக்கும் மாமாகிட்ட கேளுங்க…” என்றவள் தான் வந்துகொண்டிருப்பதாய் சொல்ல,
“அப்பாவும் விளம்பரம் சம்பந்தமா எதுவும் இருக்கும் போலன்னு சொல்றார். அவருக்கும் வேற எதுவும் தெரியலை…” என்றான் விஷ்ணு.
“அப்படின்னா ஏன் இப்படி கூப்பிடனும்?…” என்றவளுக்கு தம்பியின் குரலிலேயே அவன் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பது தெளிவாய் தெரிந்தது.
அதனால் கணவனும், மாமனாரும் செல்லும் முன் தான் சென்றுவிடவேண்டும் என்று நினைத்து வாகனத்தை செலுத்த அவள் செல்லும் முன் அவர்கள் சென்று சேர்ந்திருந்தனர்.
குழந்தை அங்கே இல்லை. ஆனால் மற்ற அனைவரும் இருக்க தணிகாச்சலத்தின் முன் குருஆர்யன் கோபத்துடன்,
“நிதீஷ் நம்பருக்கு கால் பண்ண சொன்னேன் நான்…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“ஆரி என்னாச்சு?…” என்று வேகமாய் மதுஸ்ரீ ஓடி வர,
“ப்ச், இருக்கா…” என்றவன் தணிகாச்சலத்தை பார்க்க,
“இது என்ன பெரிய விஷயம்ன்னு நீங்க…” என்றார் அவர் அலட்சியமாக.
“ப்பா என்ன பண்ணி வச்சிருக்கீங்க?…” என்ற விஷ்ணு,
“நான் கால் பன்றேன் ஆரி…” என்று நிதீஷின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க அவன் எடுத்ததும்,
“நிதீஷ்…” என விஷ்ணு சொல்லும் பொழுதே ஆர்யன் கை நீட்டியிருந்தான் போனை வாங்குவதற்கு.
“என் மச்சான் ஆரி பேசறான், உன்கிட்ட பேசனுமாம்…” என்று சொல்லி போனை தந்ததும்,
“ஏன்டா ராஸ்கல், ஒரு பொண்ணுக்கு உன் ப்ரப்போசல்ல இஷ்டம் இல்லைன்னா ப்ரெண்ட்ஸா பழகி பார்ப்போம். பிடிக்கலைன்னா கல்யாணம் வேண்டாம்ன்னு பழக கூப்பிடுவியா நீ? உன்னோட லிமிட் க்ராஸ் பண்ணி பேசியிருக்க? அறிவில்ல?…” என்று கோபத்தை அடக்க முற்படும் குரலில் அவன் கேட்க அனைவருமே அதிர்ந்து பார்த்தனர்.
அங்கே ஆர்யனை நிறுத்துவார் யாருமில்லை. தணிகாச்சலத்தை தான் அனைவருமே ‘இது எதற்கு?’ என்பதை போல பார்க்க தன் வீட்டிலேயே நாட்டாமை செய்து தன்னையே எத்தனை பேசிவிட்டான் என கொதித்து பார்த்தவர்,
“ஏன் ஆரி உனக்கு இவ்வளோ கோபம்? அந்த பொண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு ஐடியால இருக்கியா என்ன?…” என்று வாசல்வரை சென்றவனை நக்கலாய் கேட்டு நிறுத்த,
“மாமா என்ன பேசறீங்க நீங்க?…” என்றாள் மதுஸ்ரீ பதட்டமாக.
இவ்வளவு நேரம் அவன் கோபத்தை அடக்கும் வகைதெரியாமல் அவனை மன்றாடி கிளப்பியிருக்க, கிளம்பியவனின் கையை பிடித்து இழுப்பவரை என்ன சொல்ல என அவள் விழி பிதுங்கியது.
“அதனால உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?…” என்றான் வெகு இலகுவாக குருஆர்யன்.
“பிரச்சனை இருந்தாலும் அதைபத்தி எனக்கு கவலை இல்லை. உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க…” என்றவனின் எச்சரிப்பில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.