“நீ சொல்லு ஆரி. என்ன நினைக்கிற நீ?…” என்ற தாயை பார்த்த ஆர்யா,
“சிம்பிள். என்னை எல்லாத்துக்கும் எதிர்பார்க்காம என் சூழ்நிலை புரிஞ்சுக்கிட்டு என்னோட வாழற ஒரு பொண்ணு. ஒவ்வொரு விஷயத்துக்கும் அவ என் பின்னாடி நிக்கக்கூடாது….” என்றவனை என்ன செய்தால் தகும் என்று பார்த்தார் தமயந்தி.
“நீங்க இங்க ஒன்னொண்ணுக்கும் அப்பாவை தேடறீங்க பாருங்க. அதுமாதிரி என் வொய்ப் ஒன்னுமில்லாததுக்கெல்லாம் என்னை தேடக்கூடாது. அவளா மேனேஜ் பண்ணனும். சும்மா என்னை இழுத்து பிடிக்கக்கூடாது. அப்பறம்…” என சொல்ல வந்தவன் சட்டென வாயை மூடினான்.
அனைவரும் அவன் பேசுவதை என்னவோ படம் பார்ப்பதை போல காண கண்டவன், பேச்சை நிறுத்திவிட்டு பல்லை கடித்தான்.
“ப்ச், எதுக்கு கூட கூட பேசிட்டு? வேற பொண்ணை பாருங்க. அவ்வளோ தான்…” என அயர்ச்சியுடன் குருஆர்யன் முடிக்க,
“என்னப்பா நீ?…” என்றார் தமயந்தி.
“என்ன என்னப்பா? அவங்கப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்க்கறளவு போயிருக்கு. இதுக்கு காரணமானவனை பத்தி வீட்டுக்கு சொல்லியிருக்கனுமா வேண்டாமா? நாமலாம் இல்லையா? எல்லாத்தையும் வளர விட்டுட்டு இங்க வரவும் பேசலாம்ன்னு அவங்கப்பா சொன்னாராம். இவளும் கேட்டுட்டு இருந்திருக்கா? இதுவே இன்னும் பெரிய பிரச்சனையாகி இருந்தா?…” என்றவனை ‘பார்த்தியா? என்று குருமூர்த்தி சுட்டி காண்பிக்க இன்னும் பயந்து பார்த்தார் மகனை.
குருமூர்த்தி மனதிற்கு தன் மகன் நனியிதழ் பக்கம் அவளுக்காக பார்த்து பேச பேச அவரின் முடிவு சரி தான் என்பதாக வலுப்பட்டது.
“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் நீங்க முடிவை மாத்திக்கலைன்னா எல்லாருக்கும் கஷ்டம். பார்த்துக்கோங்க…” என குருஆர்யன் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.
“ஹப்பா அந்த பொண்ணு தப்பிச்சிடுச்சு…” என்றான் பரத்.
“அடி வாங்குவடா நீ…” என பெரியமகனை கண்டித்துவிட்டு,
“இப்படி மாட்டேன்னு நிக்கிறவனை ஏன் வம்படியா கட்டிவைக்க பார்க்கறீங்க?…” என்றார் தமயந்தி.
“இதுக்காகவே தான் அந்த பொண்ணை கல்யாணம் பேசனும்ன்னு சொல்றேன். உனக்கு புரியலையா? பொண்ணு வேண்டாம்ன்னு சொல்ற காரணமா உன் பிள்ளை சொன்னது எல்லாம்? உப்பு பெறாத காரணம் அவ்வளவும்…” என்றவர்,
“உன் மகனுக்கு அவன் சொல்ற மாதிரி பொண்ணை கட்டி வச்சா இன்னும் அவன் அவனை மட்டுமே பார்த்துக்க வசதியா போகும். குடும்பத்தோட ஆசாபாசம் இருந்தா மட்டும் போதாது. அதை புரிஞ்சு நடந்துக்கலைன்னா என்ன மனுஷன்?…”
“சொல்ல போனா நதியை ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கான். எரிச்சலா இருந்தாலும் அவளுக்கு உதவனும்ன்னு போனான்ல. அதுதான் என் முடிவு இன்னும் உறுதியாக்குது. உண்மை என்னன்னா அந்த பொண்ணு கூடவே சுத்தனுமோன்னு பயப்படறான் உன் மகன்…” என்று சொல்ல அவர் சொல்லிய கோணத்தில் அப்போது தான் யோசித்தனர்.
“கரெக்ட்டா சொன்னீங்க ப்பா. அன்னைக்கு என் மாமனாரை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டான். எவ்வளோ கோவம் தெரியுமா? அந்தளவுக்கு அவனை ஆவேசமா நான் பார்த்ததே இல்லை…” என்று மதுஸ்ரீ கூட சொல்ல,
“அட நீ வேற ஏன் மது? இதுல நதி இன்னும் என்ன சொன்னான்னு தெரியலை…” என்றார் தமயந்தி கவலையுடன்.
நதி மகனுக்கு பொருந்தி போவாளா என்ற யோசனையை விட அவன் கோபம் அவளை காயப்படுத்திவிடுமோ, கஷ்டபடுத்திவிடுமோ என்று தான் கவலைப்பட்டார் தமயந்தி.
எத்தனை தான் குருமூர்த்தி காரணம் சொன்னாலும் நதியின் குணமும், மகனின் குணமும் ஒத்து போகாதே. அதுவே அவரை தயங்க செய்தது.
“என்ன யோசிக்கிற நீ?…” என்று குருமூர்த்தி மனைவியிடம் கேட்க,
“ப்ச், விளையாட்டா உங்களுக்கு? ஆரி வேண்டவே வேண்டாம்ன்னு போய்ட்டான். அப்படியே அவன் சம்மதிச்சாலும் நதி சம்மதிக்கனுமே? அதுவும் அவங்கப்பாவுக்கும் ஆரிக்கும் ஒத்தே போகாது. இப்பவே நதியை இவ்வளோ பேசறானே இவன்? இதெல்லாம் சரிவருமா?…” கலக்கத்துடன் பார்த்தார்.
“அதனால தான் பண்ணி வைப்போம்ன்னு சொல்றேன். இவ்வளோ நேரம் மூச்சுப்பிடிக்க மேடைல அரசியல்வாதி பேசறமாதிரி எவ்வளோ சொன்னான் அந்த பொண்ணை பத்தி? இத்தனைக்கும் ஒருதடவை கூட நதி பேர் சொல்லலை. ஆனா எவ்வளோ புரிஞ்சு வச்சிருக்கான்? இதுலையே புரிய வேண்டாமா?…” என குருமூர்த்தி.
“புரிஞ்சு வச்சிருக்கானா? அவன் என்ன பிடிச்சா புரிஞ்சு வச்சிருக்கான்?…” தமயந்திக்கு அப்போதும் மனதில்லை.
“அவன் திமிர் அவனை யோசிக்க விடலை. அதுக்குன்னு நதியை அவன் விரும்பறான்னு சொல்லலை. ஆனா அவனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு கன்சர்ன் இருக்கு. அவளை பத்தி எல்லாமே தெரியுது. நதியால அவன் வாழ்க்கை மாறிடுமோன்னு ஒரு பயம். பிடிவாதம். அதனால நோ சொல்றான்…”
“அதுக்காக?…”
“ம்மா அப்பாவை சொல்லவிடுங்க…” என்று பரத் தாயின் கை பிடித்து அமரவைத்தான்.
“இங்க பாரும்மா தமயா, உன் சின்னமகன் குணத்துக்கு வேற யாரையும் லவ் எல்லாம் பண்ண போறதில்லை. இவன் எதிர்பார்க்கிற மாதிரி பொண்ணு பார்த்தா ஒன்னு ஒட்டுதல் இல்லாத ஒரு வாழ்க்கையா இருக்கும். இல்லையா பிரியவேண்டியதா இருக்கும்…” என்று சொல்ல,
“அபசகுணம். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே என்ன பேசறீங்க நீங்க?…” என்றார் தமயந்தி பதட்டமாய்.
“இப்ப நீ பன்றதும் அதுதான். இப்ப தானே அவன்கிட்ட சொல்லியிருக்கோம். நைட் வரட்டும்…” என்று அந்த பேச்சை நிறுத்திவிட்டார் குருமூர்த்தி.
இந்தநேரம் நனியிதழிடம் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையை அங்கே ஸ்ரீநிவாசன் வீட்டில் துவங்கி இருப்பார்கள் என்று தெரிந்தவருக்கு அவள் என்ன சொல்வாள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.
—————————————
நரசிம்மனின் முன்னால் நனியிதழ் அமைதியாக அமர்ந்திருக்க ப்ரவன் தங்கையின் கையை பற்றிக்கொண்டான்.
“உன் விருப்பம் என்னவோ அதை சொல்லு நதி. இப்டி உங்க இஷ்டம்ன்னு எல்லாம் சொல்லாத…” என கூற,
“நிஜமாவே உங்க இஷ்டம் தான் ண்ணா. நீங்க பார்க்கிற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் எனக்கு சம்மதம். இதைவிட வேற என்ன சொல்ல முடியும்? நீங்க எல்லாம் யோசிச்சு தானே முடிவுக்கு வந்திருப்பீங்க? என்னளவு இதை கொண்டுவரீங்கன்னா உங்களுக்குள்ள கலந்து பேசி முடிவெடுத்ததனால தானே?…” என்றாள் மென்னகையுடன்.
அவளை சுற்றி சுஜாதா, ஸ்ரீநிவாசன், கீதா, அனுஷா அனைவருமே அமர்ந்திருந்தனர்.
“நாங்க ஆர்யனை மாப்பிள்ளைன்னு சொல்றோம். உனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையா?…” என்று மீண்டும் ப்ரவன் கேட்க,
“ப்ளீஸ் ண்ணா, இதுதான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதான் சொல்லிட்டேனே உங்க விருப்பம்ன்னு…” என்றாள் சங்கடத்துடன்.
ஆனால் ப்ரவனுக்கு அதெல்லாம் போதவில்லை. என்னதான் ஸ்ரீநிவாசன், நரசிம்மன் இருவரும் பேசி ஆர்யனுக்கு சரி என்றாலும் தங்கையின் மனதை அறியவேண்டும் என்று முனைப்பாக இருந்தான்.
அவள் இப்படி உங்கள் விருப்பம் என்பதற்குமேல் ஒற்றை வார்த்தை கூட வேறு சொல்லாமல் இருக்க செய்வதறியாமல் பார்த்தான்.
இதற்குமேல் என்ன கேட்க முடியும்? அவளின் நிலை புரிந்ததும் மற்றவர்கள் அமைதியாக,
உடலளவில் வெகுவாய் தளர்ந்துவிட்டிருந்தார் நரசிம்மன். உயிர் பயம் அவரை சுழற்றியிருந்தது.
ப்ரவன் திருமணத்திற்கு வந்த பொழுது உடல்நிலை சரியில்லாமல் போனதிலே பதட்டத்துடன் இருந்தவருக்கு, இரண்டாவதாக இம்முறை வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகியிருக்க இன்னுமே பதறி தான் போனார்.
அத்தனை திடமாய் பேசுபவரின் பேச்சுக்கள் கூட தொய்ந்ததை போலிருந்தது. ஆர்யா பிரச்சனை செய்தபின் தணிகாச்சலம் நரசிம்மனிடம் பேச முற்பட,
“இனி இதுவிஷயமா மட்டுமில்லை, எதுக்குமே என்கிட்ட பேசவேண்டாம் நீங்க. இதோட இந்த பேச்சை நிறுத்திக்கோங்க. இல்லைன்னா உங்க மருமகன் பண்ணினதுக்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதிருக்கும்…” என்று சொல்லியதோடு நில்லாமல்,
“இப்படி கேஸ் குடுக்கறேன்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறவங்க மட்டுமில்லை, என் சம்பந்திவீட்டுலையும் கூட எங்களுக்கு ஆதரவா வந்து நிப்பாங்க. பார்த்தீங்க தானே நாங்க சொல்லாமலே அங்க யார் வந்து நின்னதுன்னு. ஜாக்கிரதை. இல்லை…” என்று சொல்லியவரின் எச்சரிக்கையில் தணிகாச்சலம் எச்சிலை விழுங்கினார்.
“நான் அமைதியா போறேன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதை புரிஞ்சு யோசிச்சு நடக்கலைன்னா பாதிப்பு உங்களுக்கு தான். நான் முடிவெடுத்தேன், அப்பறம் எவன் சொன்னாலும், எவன் என் கால்ல விழுந்தாலும், நீங்களா இருந்தாலும் மனசு மாறமாட்டேன். பார்த்துக்கோங்க…” என்று வைத்துவிட்டார்.
இதைவிட அசிங்கம் வேறு உண்டா என்றானது தணிகாச்சலத்திற்கு. யாரிடமும் இந்த விஷயத்தை அவர் சொல்லவில்லை.
நரசிம்மனுக்கு ஆறவில்லை. கொஞ்சம் அடங்கி போனால் மீண்டும் ஆரம்பிக்கிறாரே இந்த மனிதர் என்று அத்தனை கோபம்.
“இது காலை சுத்தின பாம்பு மாதிரி இருக்கும் போல ஸ்ரீநி…” என்றார் தன் அண்ணனிடம்.
“என்ன செய்யனும்ன்னு பார்ப்போம். ரொம்ப பண்ணினா அடுத்து என்னன்னு மாப்பிள்ளை, ஆர்யன்கிட்ட, சம்பந்திக்கிட்ட பேசிப்போம்…” என்று சொல்லியிருக்க அடுத்த இரு நாட்களில் குருமூர்த்தியே வீடு தேடி வந்துவிட்டார் அவர்களை பார்க்க என்று.
அனுஷாவின் வளைகாப்பு சம்பந்தமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்க அவர் வந்ததோ நனியிதழ், ஆர்யன் திருமண விஷயம்.
முதலில் நரசிம்மனுக்கு மனதே இல்லை. குருமூர்த்தி வற்புறுத்தவில்லை என்றாலும் அவரின் ஆவல் அந்த பேச்சிலேயே தெரிந்தது.
“நல்லா யோசிங்க. நீங்க முடிவுக்கு வந்த பின்னாடி பிள்ளைங்கட்ட சொல்றதா வேண்டாமான்னு பார்த்துக்கலாம். அதுக்குன்னு நான் கட்டாயப்படுத்தமாட்டேன். உங்க விருப்பம் என்னவோ அதுதான்…” என்று சொல்லிவிட்டார் தன்மையாக.
“அப்பறம் பரத் கல்யாணத்துல ஆரி நடந்துக்கிட்டதை வச்சு அவனை தப்பா நினைக்காதீங்க. கொஞ்சம் கோபக்காரன். மத்தபடி நியாயம் தெரிஞ்சு நடந்துக்கறவன்…” என்று மீண்டும் மகனின் நல்ல பக்கத்தை திறந்த குருமூர்த்தி,
“என் வீட்டுல எனக்கப்பறம் நான் இல்லைன்னா தடுமாறாம குடும்பத்தை பொறுப்பெடுத்து நடத்தறவன்னா அது ஆரி தான்…” என்றவர் ஸ்ரீநிவாசனை பார்த்து,
“அதுக்குன்னு பரத் குறைவுன்னு நான் சொல்லலை. அவன் ரொம்ப சாப்ட். அமைதியான பையன். ஆனா ஆரி அப்படி இல்லை. எனக்கு எல்லா பிள்ளைங்களும் உசத்தி தான். ஒன்னு தான். ஆரியை இந்த கோபத்தை வச்சு எடைபோட வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்று முடித்தார்.