“நான் தப்பா நினைக்கலை சம்பந்தி. சங்கடப்படாதீங்க…” என சொல்லிய ஸ்ரீநிவாசன்,
“தம்பியும் யோசிக்கட்டும். வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றோம்…” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு ப்ரவனை அழைத்து விஷயத்தை சொல்ல,
“கொஞ்சம் முன்னாடி தான் மாமா நம்ம டிவி ஸ்டேஷன்க்கு வந்திருந்தாங்கப்பா. வீட்டு மருமகன்ற முறைக்கு முதல்ல என்கிட்டயும், விஷ்ணு அண்ணாக்கிட்டையும் பேசிட்டு உங்ககிட்ட பேசனும்ன்னு சொன்னாங்க…” என்றவன்,
“அங்க இருந்து நேரா இங்க வந்திருக்காங்க. நான் வீட்டுக்கு வந்து பேசலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள மாமாவே வந்துட்டாங்க…” என்றான் ப்ரவன்.
“நதிக்கிட்ட சொல்லியாச்சா?…” என்று கேட்க,
“ஹாஸ்பிட்டல் போயிருக்காப்பா. ட்யூட்டி முடிஞ்சு வர நைட்டாகிரும்ல…” என்றார் சுஜாதா.
அனுஷா எதிலும் தலையிடாமல் இவற்றை கவனித்துக்கொண்டு மட்டும் இருந்தாள்.
“நீங்க என்ன நினைக்கறீங்க சித்தப்பா?…” என்று ப்ரவன் கேட்க,
“கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. யோசிப்போம்…” என்றார் நரசிம்மன்.
“இந்த நிதீஷ் பிரச்சனையால நதிக்கு உடனே செஞ்சு வைக்கனும்ன்ற மாதிரி எதுவும் நினைக்கறீங்களா?…” என்று கேட்டுவிட்டான் ப்ரவன்.
“ம்ஹூம். அப்படியெல்லாம் இல்லடா. என்னோட யோசனை எல்லாம் என் பொண்ணு கல்யாணத்துக்கு நான் நல்லபடியா இருக்கனுமேன்னு தான்…” என்றவர்,
“அந்த பையனை பத்தி பெருசா எனக்கு அபிப்ராயம் எல்லாம் எதுவுமில்லை. அதேநேரம் தப்பாவும் தெரியலை. நான் யோசிக்கிறது என்னன்னா, இந்த கல்யாணம் முடிஞ்சா நதியும் உங்களோடவே அங்க ஒண்ணா இருப்பாளேன்னு தான் மனசுல ஒரு ஆசை….” என்று சொல்லியவர் கண்கள் கசிந்து இருந்தது.
“என்ன சிம்மா?…” என ஸ்ரீநிவாசன் கலங்கிவிட,
“நிஜமா தான் சொல்றேன். இதுவே வெளில குடுத்தோம்ன்னா எனக்கு தெரியலை. சூழ்நிலை எப்படி ஆகுமோன்னு. நான் யாரையும் தப்பு சொல்லலை. ஆனா என் பொண்ணு எனக்கப்பறமும் உங்க எல்லாரோட ஒண்ணா இருப்பாளே? அதை தான் யோசிக்கறேன்…” என்றார்.
“சித்தப்பா இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இதுக்காக பொண்ணை குடுக்க முடியுமா? நாங்க எப்பவும் நதியை விட்டுடமாட்டோம்…” என்றான் ப்ரவன் வருத்தமாய்.
“நீங்க விட்டுடுவீங்கன்னு சொல்லலைடா. ஆனா ஒன்னொண்ணுக்கும் தனியா எடுத்தேறி போகவேண்டியது இல்லாம உங்க பார்வையில, பக்கத்துல, கைக்குள்ளவே இருப்பா இல்ல? அதுமட்டுமில்ல, அந்த குடும்பமும் நல்லமாதிரி. அதான் தப்பில்லையோன்னு தான் யோசிக்கிறேன்…” என்றார்.
“நீங்க ரொம்ப பயந்துபோய் இருக்கீங்க சித்தப்பா. உங்களுக்கு ஒண்ணுமில்லை. நீங்க நல்லா இருப்பீங்க. இப்பவே அவசரப்படவேண்டாம். நதி வரதுக்கு டைமிருக்கு. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருங்க…” என்றான் ப்ரவன் அவரின் கையை பிடித்து.
தலையசைத்துவிட்டு சென்று படுத்தவர் மனமெல்லாம் இந்த நினைவு தான். யோசிக்க யோசிக்க அவருக்கு தன் முடிவின் உறுதி கூடத்தான் செய்தது.
ஆர்யாவிடம் கோபத்தை தவிர வேறு எதுவும் தவறாக தெரியவில்லை. அவனாக பொறுப்பெடுத்து செய்வதில் இருந்து தவறென்றால் யாராக இருந்தாலும் முன்னின்று கேட்பது வரை அவனின் பக்கமே அவரை சாய்த்தது.
மாலை எழுந்து வந்தவர் தெளிவாய் மிக தெளிவாய் சொல்லிவிட்டார் அவருக்கு இதில் முழு சம்மதம் என்று.
“நீங்க என்ன சொல்றீங்க?…” என்று சுஜாதாவிடம் அவர் கேட்க,
“எனக்கு முழு திருப்தி தான். இதுல என்ன சந்தேகம்? என் ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்டுல வாழ்ந்தா அதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க போகுது?…” என்று நனியிதழுக்கும் தான் தாய் என காண்பித்துவிட்டார் சுஜாதா.
“சரி நதிகிட்ட பேசிட்டு சொல்லுவோம்…” என்று பேசிக்கொண்டிருக்க கீதாவும் நனியிதழுடன் வந்து சேர கேட்டமாத்திரம் நனியிதழ் முகத்தில் ஒரு அதிர்ச்சி பாவனை வந்ததென்னவோ உண்மை.
அந்த அதிர்வை லாவகமாக மறைந்துக்கொண்டு தன் தந்தையை தான் அவள் முகத்துடன் அகமும் சேர்ந்து பார்த்தது.
நரசிம்மனின் முகமே அவரின் எண்ணத்தை படம்பிடித்து காண்பிக்க புன்னகைத்தாள்.
“உங்க விருப்பம்…” என்று ஒற்றை வார்த்தையில் நரசிம்மன் முகத்தில் மலர்ச்சியை கொண்டுவந்தவள் அவருக்கு இதில் எத்தனை சந்தோஷம் என்று கண்டுகொண்டாள்.
ப்ரவனுக்கு தான் இருமனதாக இருந்தது. முழுமனதாய் இதற்கு சம்மதித்தாளா என அறியவேண்டியதிருந்தது.
இன்னும் ப்ரவனின் அடிமனதில் தன் தங்கையை பணத்தை காரணம் காண்பித்து குருஆர்யன் தன் அலுவலகத்தில் வைத்து பேசியதை மறக்க முடியவில்லை.
ஏற்ற இறக்கங்கள் இருக்கும் இடத்தில் எப்படி அவள் நிம்மதியாக இருக்கமுடியும் என்று யோசித்தவனுக்கு மண்டை காய்ந்தது.
“ப்ச், நான் கேட்கறேன் ப்ரவன்…” என்று அவனின் புலம்பல் தாளாமல் கீதா பேச சென்றாள் நனியிதழிடம்.
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்த நனியிதழ் கீதாவின் வருகையில் தன் முகத்தை இயல்பாக்கிக்கொண்டாள்.
“மிஸ்டர் கீதா எப்போ வராங்களாம்? டாக்டர் கிளம்பாம இருக்கீங்க?…” என்றாள் வரவழைத்துக்கொண்ட கேலியுடன்.
“என்ன ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைப்போ? என்கிட்ட வேண்டாம் மகளே. வந்து உட்கார்…” என்ற கீதா,
“பரத்தை லேட்டா வர சொல்லியிருக்கேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் பேசனும்…”
“என் கல்யாண விஷயமாக்கா?…” நனியிதழ் சரியாக கேட்க,
“இதுல எல்லாம் விவரம் தான். ஆனா உனக்கு இதுல முழு சம்மதமா?…” என கீதா கேட்கவும் அதற்கும் சிரிப்பு தான் நனியிதழிடம்.
“ஏன் எல்லார் முன்னாடியும் தானே சொன்னேன்?…”
“நதி, நான் கேட்கிறதுக்கு இது பதில் இல்லை. ப்ச், நேரடியா பேசு. ஆரியை கல்யாணம் பண்ணிக்கிறதுல முழு விருப்பமா?…”
“ஹ்ம்ம், விருப்பம் தான்…” என்று சொல்ல அந்த வார்த்தை அத்தனை சாதாரணமாக வந்துவிடவில்லை.
திருமணம் என்ற பேச்சும், இவன் மாப்பிள்ளை என்ற குறிப்பிட்டாலும் அவளுள் எவ்வித ஆசையையும் எழுப்பவில்லை. எதிர்பார்ப்பை வகுக்கவில்லை.
இன்னும் உள்ளுக்குள் தடதடக்கும் ஓசை தான். தன்னிடம் புன்னகைத்து எதுவும் பேசியிருக்கிறானா என்ற தேடல் தான்.
புன்னகைத்து என்ன? நல்லவிதமாய் ஏதேனும் பேசியுள்ளானா என்பதே அங்கே கேள்விக்குறியாகிற்றே.
“உனக்காக என் அண்ணன் மது அக்கா மாமனார்கிட்ட சண்டை போட்டிருக்கார் தெரியுமா?…” என அன்று அனுஷா பெருமையாய் பேச,
“அப்பாவி அண்ணி. உங்க அக்கா வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு முந்திகிட்டு போய் சமரசம் பண்ணியிருக்கார் உங்கண்ணன். இந்த உள்குத்து தெரியலையே உங்களுக்கு…” என்று அனுஷாவை அன்று அத்தனை கேலி செய்திருந்தாள் நனியிதழ்.
அந்த விஷயத்தில் கூட அவளால் அவன் செய்ததை தனக்காக என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அப்படி இருக்க அவனுடன் திருமணமா? என்று யோசிக்கையில் தலை தட்டாமாலை சுற்றியது.
ஆனால் காண்பித்துக்கொள்ளவில்லை. நரசிம்மனின் எண்ணத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
“கல்யாணம் முடிஞ்சாலும் நீ கீதா கூட, ப்ரவன் கூடவே தான் இருப்ப. எல்லாம் ஒண்ணா தான் எல்லா விசேஷமும் கொண்டாடுவீங்க இப்ப மாதிரியே…” என்று வெள்ளையாய் சிரித்தவரின் உள்ளம் மகளுக்கு விளங்கியது.
அவரின் ஆசையும், ஆவலும் புரிய மெலிதாய் புன்னகைத்துக்கொண்டாள் நனியிதழ்.
“என்ன நதி நான் கேட்டுட்டே இருக்கேன்? நீ என்ன யோசிக்கிற?…” என்ற கீதா,
“கிட்டத்தட்ட சித்தப்பாவும், ஆரியும் ஒரே கேட்டகிரி. ஆரிக்கும் கோபம் கண்மண் தெரியாம வரும் நதி….” என்றாள்.
“எனக்கு இது ஒன்னும் புதுசில்லையே கீதாக்கா. சொல்ல போனா அப்பாக்கிட்ட ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதனால உங்க கொழுந்தனை பார்த்து எனக்கொண்ணும் பயமில்லை. ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவோம்…” என்றாள் கண்சிமிட்டி.
“அப்போ ஓகே தானா?…”
“என்ன ப்ரவன் அண்ணா கேட்க சொன்னதா? இத்தனை தடவை கேட்கறீங்க?…” என்றவள்,
“ஏற்கனவே சொல்லிட்டேனே க்கா. அதோட அப்பாவோட முடிவு தான் எனக்கு எப்பவும். அவர் சந்தோஷம் தான் என் விருப்பமும். இதுல செகென்ட் தாட்க்கு வேலை இல்லை…” என்றாள் தெளிவுடன்.
“ஓகே ஓகே. ரொம்ப ரொம்ப சந்தோஷம். என் கூடவே நீ இருக்க போறான்னா இதைவிட வேற என்ன வேணும் எனக்கு? எனக்கு உன்னோட விருப்பமும், தெளிவும் தெரியவேண்டியதிருந்தது. தெரிஞ்சுக்கிட்டேன். அங்க வா. சும்மா கலக்குவோம்…” என்று சொல்லி ஹைபை அடித்துக்கொண்டனர்.
ப்ரவனும் வந்து பேச்சில் கலந்துகொள்ள விஷயம் உடனடியாக குருமூர்த்தியிடம் சொல்லப்பட்டது.
அவருக்கு அத்தனை சந்தோஷம். மறுநாள் தமயந்தியுடன் வீட்டிற்கு வருவதாக சொல்லிவிட்டு வைத்தார் குருமூர்த்தி.
சந்தோஷத்தில் இரவு குருஆர்யன் வீடு வரும்வரை ஒருவரும் உறங்கவில்லை. அவனிடம் பேசவேண்டும் என காத்திருந்தனர்.
ஏற்கனவே தன் அலுவலக அறையில் அமர்ந்து இந்த யோசனையில் தான் சுழன்றான் குருஆர்யன்.
“பிடிக்கலைன்னா அதை மட்டும் சொல்லாம என்னென்ன பேசிட்ட நீ? அதுவும் பேரன்ட்ஸ் அக்கா, அண்ணா முன்னாடி. காதுல வாய் வைக்கறேன்னு…” என்று சொல்லிக்கொண்டவன்,
“என்ன நினைச்சிருப்பாங்க என்னை பத்தி? உளறி கொட்டற நீ?…” என்று அவனாகவே பேசிக்கொண்டிருக்க ஆனந்த் வந்து கதவை தட்டினான்.
அதன்பின்னரே வீட்டிற்கு கிளம்பினான் அவன். அதுவரை ஹாலில் தனக்காக உறங்காமல் அமர்ந்திருந்தவர்களை கண்டதும் தேங்கி நின்றவன் குருமூர்த்தியை பார்த்தான்.
“என்ன முடிவு செஞ்சிருக்க ஆரி?…” என்றார் குருமூர்த்தி.
“எதை பத்தி?…” வேண்டுமென்றே தெனாவெட்டாக அவன் கேட்க,
“ஓஹ் ஞாபகமில்லையோ? அதான் மதியம் பேசினேனே?…” என்றார் மீண்டும் அழுத்தமாய்.
“நானும் பதில் சொல்லிட்டேன்….” என்று அதைவிட அழுத்தமாய் அவனும் சொல்ல மற்றவர்கள் என்ன நடக்குமோ என்று பார்த்திருந்தனர்.
“சம்பந்தி வீட்டுல பேசினாங்க. நதிகிட்டையும் பேசிட்டாங்க…” என்று நிறுத்தி மகனின் முகம் பார்க்க குருஆர்யன் முகத்தில் எவ்விதமாற்றமும் இல்லை.
“அவங்க எல்லாருக்கும் சம்மதமாம்…”
“எல்லாருக்கும்ன்னா?…” புருவம் உயர்த்தினான் மகன்.
“எல்லாருக்கும் தான். நதிக்கும் தான்….” என்று சொல்ல அவன் முகத்தில் இப்போதும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எதுவும் சொல்லாமல் அவன் நகர போக தமயந்தி மகனை நிறுத்திவைத்தார் அங்கேயே.
“என்னன்னு சொல்லாம போற ஆரி? உங்கப்பா அங்க பேசி முடிச்சிருக்காங்க. நீ இன்னும் பதில் சொல்லலை…” என்று சொல்ல, ஆர்யா குருமூர்த்தியை அழுத்தமாய் பார்த்தான்.
“ப்ச், அதான் முடிவு செஞ்சுட்டீங்க இல்ல? அப்பறம் என்ன சும்மா தொண தொணன்னு?…” என்றவன்,
“என்னமோ செய்ங்க….” என்று கோபமாய் சொல்லி செல்ல, தமயந்தி கண்களை அகல விரித்தார்.
“கடவுளே…” என்று நிற்க முடியாமல் சோபாவில் தளர்ந்து அமர்ந்தார்.
“அத்தை…” என்று கீதா அவரை பிடிக்க பரத் அவருக்கு தண்ணீரை கொண்டுவந்து நீட்டினான்.
“இவன் இப்ப சரின்னு சொன்னானா? வேண்டாம்ன்னு சொன்னானா?…” என்று அப்பாவியாய் அவர் கேட்க குருமூர்த்தி முகத்தில் புன்னகை.
“சம்மதிச்சிட்டானா?…” என்று மருமகளை பார்த்த தமயந்தி கீதாவின் சிரிப்பில்,
“இவன் மத்தியானம் எவ்வளவு பேச்சு தெரியுமா கீதா? சம்மதம்ன்னு கூட சொல்லாம சுத்தல்ல விடறான் பாரேன். எப்ப என்ன செய்வான்னே தெரியலையே? கடவுளே…” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அவர் புலம்புவதற்கு உச்சமாய் மறுநாள் காலை நனியிதழை காண மருத்துவமனைக்கு சென்றுவிட்டான் குருஆர்யன்.