‘வேற யாரும் கிடைக்கலையா?’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு மகனை பார்க்க அவரின் புறம் திரும்பினான் குருஆர்யன்.
“அப்பா வந்துடட்டுமா ஆரி?…” என்றார் வேகமாய் மகன் பார்வையில்.
“ஏன்? நீங்க அம்மா தானே? நீங்களும் தானே என்கிட்ட கல்யாணத்துக்கு பேசினீங்க?…” என்று கேட்க, கண்ணுக்குள் கருவிழி உருண்டது தமயந்திக்கு.
“நானா?…” என்றவர் கப்பென்று வாயை மூடினார்.
“என்ன நானா? நீங்க தானே? அந்த பொண்ணு நல்ல பொண்ணு, நாலாயிரம் தெரிஞ்ச பொண்ணு. பக்குவத்துல பட்டம் வாங்கின பொண்ணுன்னு பேசினீங்க? அப்பறம் என்ன?…” என்றான் வரிசையாக.
அமர முடியாமல் நாலாபக்கமும் தலை சுழல்வது போல மனபிரம்மை தமயந்தியிடம்.
“நான் தண்ணி குடிச்சிட்டு வரட்டுமா?…” என்று சொல்லிவிட்டு எழுந்தவர் வேகமாய் அந்த அறையிலிருந்து வெளியே ஓடினார்.
வீட்டில் யாருமில்லை. அனைவரும் அவரவர் பணி நிமித்தம் சென்றிருக்க தனியே சிக்கிக்கொண்டார் மகனிடம்.
திடீரென இப்படி பேசுவான் என்று நினைக்கவில்லை. திருமண விஷயத்தில் அவன் நடவடிக்கை பெரும்புதிராகவே இருந்தது.
வேண்டாம் என்று அத்தனை குதிகுதித்தவன் திடீரென அப்படி நடக்கவே இல்லை என்பதை போல சரி என்று சொல்லாமல் சம்மதித்த லட்சணமும், உடனே நனியிதழை சந்திக்க சென்றதும், அங்கே பரத்தை படுத்தியதுவரை அவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
“புள்ளையாம்மா பெத்திருக்கீங்க? மனுஷனை பாடா படுத்தறான். என்கிட்டையே இவ்வளோ பேசறான். பாவம் நதி? என்ன பேசினானோ தெரியலை…” என்று வீட்டில் புலம்பி தீர்த்திருந்தான் தம்பியை பற்றி.
மதுஸ்ரீ ஒருபுறம் பேச கீதா சிரிக்க என்று அதிலேயே இருக்க தமயந்திக்கு கவலை எல்லாம் நனியிதழ் பற்றி தான்.
“நதி என்ன சொன்னா? இவன் என்ன பேசினானாம்? எப்படியும் தன்மையா பேசிருக்க மாட்டான். பாவம் அவ…..” என்று சோர்வுடன் சொல்ல,
“அதானே. இவன் செஞ்சிருப்பான். அவ என்னைக்கு எதை சொல்லியிருக்கா. முகம் எப்பவும் போல தான் இருக்கு…” என்ற பரத்,
“ஆனா ஒருவிஷயத்துல ரெண்டும் சரியான ஜோடி. இவன் முகத்துலையும் எதையும் கண்டுபுடிக்கமுடியாது. நதி முகத்துலையும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது. என்னவோ போங்க…” என்றான்.
“ஹ்ம்ம், இவன் படுத்தற பாட்டுல என்ன சொல்லுவா?…” என்ற தமயந்திக்கு மட்டுமல்லாது குருஆர்யனை சேர்ந்தோரும் நதியிடம் ஆர்யா என்ன பேசினானோ என்ற கவலையில் இருந்தனர்.
அங்கே நடந்த விஷயமே வேறு என்று தெரியாமல் இவர்களுக்குள் ஒருவழியாகி இருக்க அடுத்த அதிர்ச்சியாக இருநாட்களில் குருஆர்யன் அடுத்த அதிர்வை தமயந்தியிடம் தலையில் இறக்கியிருந்தான்.
இப்போது தப்பித்து தண்ணீர் குடிக்கிறேன் என்று வந்தவர் வேகமாய் மதுஸ்ரீ, பரத், குருமூர்த்தி யாரையாவது வர சொல்லலாம் தன் போனை தேட அதுவும் கையில் இல்லை.
“போச்சு அதையும் அவன் ரூம்லயே வச்சுட்டேன்…” என்று தலையில் கைவைத்தவர் தன்னறைக்கு வேகமாய் வந்து வீட்டு எண்ணிலிருந்து குருமூர்த்திக்கு உடனே அழைப்பு விடுத்தார்.
“என்ன இந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டிருக்க தமயா? உன் போன் என்னாச்சு? உடம்புக்கு ஒண்ணுமில்லையே…” என அவர் அதற்குமேல் பதட்டமாக,
“அப்பாவும் பிள்ளையும் என்னை பேசவே விடமாட்டீங்களா?…” என்று அழமாட்டாத குறையாக குரலை உயர்த்த,
“ஆரி என்ன பண்ணான்?…” என்றுதான் அடுத்த கேள்வி.
இந்தளவுக்கு தமயந்தி டென்ஷன் என்றால் நிச்சயம் தன் இளையமகனால் அல்லாது வேறு யாரால் இருக்கமுடியும் என்று நன்கு அறிந்திருந்தார்.
“அப்பப்பா சின்னப்பிள்ளை தான் செஞ்சிருப்பான்னு எப்படி கரெக்ட்டா சொல்றீங்க? அந்தளவுக்கு இருக்கு அவன் சேட்டை…” என்றவர்,
“அனுஷா கால் பண்ணினா…” என்றார் தமயந்தி.
“அனு பேசினதுக்கும் ஆரிக்கும் என்ன சம்பந்தம்?…”
“கேள்வியா கேட்டீங்க அவ்வளோ தான். என்னை இங்க இருந்து உங்க கூட ஆபீஸ்க்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிருவேன். ஆமா…”
“சரி சரி. நான் கேட்கலை, நீயே சொல்லு…” என மனைவிக்கு பணிந்தார் குருமூர்த்தி.
“நீங்க எப்படி இருக்கீங்க? என் சொல் பேச்சு கேட்டு. இவன் எப்படி இருப்பானோன்னு தெரியலையே? நதி பாவம்ல?…” என்று பேசவேண்டியதை விட்டுவிட்டு தமயந்தி வேறு விஷயத்திற்கு தாவ,
“தமயா, இதை சொல்லத்தான் கால் பண்ணுனியா?…” என்றார் குருமூர்த்தி பொறுமையாக.
“ஆமா, சொல்லவந்ததை மறந்துட்டேன். நீங்க என்ன பண்ணுங்க. என் நம்பருக்கு போன் போடுங்க. அப்படியே இப்பவே வீட்டுக்கு கிளம்பி வாங்க. இவன் பொண்ணு பார்க்கனும்ன்னு சொல்லிட்டிருக்கான்…” என்று படபடவென பேச,
“சரி டென்ஷன் ஆகாதம்மா. நான் உன் நம்பருக்கு கூப்பிடறேன்…” என்றவர்,
“உன் மொபைலை ஆரி ரூம்ல வச்சுட்டியா?…” என்றார்.
“ம்ஹூம், ஆரியோட ஆபீஸ் ரூம்ல வச்சிட்டேன்…”
“அங்க எதுக்கு?…” என்றவர்,
“சரி நான் உன் நம்பருக்கு கூப்பிடறேன்…” என்று அழைப்பை துண்டிக்கவும் தான் நிம்மதியானது.
‘ஹப்பாடா. இனி இவராச்சு, இவனாச்சு. என்னவும் செய்யட்டும். என்னமோ எல்லாம் என்னை கேட்டு முடிவு பன்ற மாதிரி பில்டப் மட்டும் விடறது.’ என்று முகத்தை துடைத்துவிட்டு அறையில் இருந்த தண்ணீரை பருகியவர் வெளியே வர,
“அப்பா கூப்பிடறாங்க…” என்று அவரின் போனை நீட்டியபடி எதிர்பட்டான் குருஆர்யன்.
“ஆப்பாவா?….” என மகன் திடீரென வந்து நின்றதில் வாய் உளறியது தமயந்திக்கு.
“ஆப்பா இல்லை. அப்பா….” என்று திருத்தம் செய்தான் மகன்.
“ஹ்ம்ம் பயந்துட்டீங்க. நான் நம்பிட்டேன்…” என்று கிண்டல் பேசியவன்,
“ரூம்ல சொன்னேனே ம்மா. அனுஷா கால் பண்ணின விஷயமா. அதை தான் பேசனும்….”
“ஆனா அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்களோ?…”
“அப்போ நீங்களும் அனுஷாவுக்கு குழந்தை பிறந்த பின்னாடி என் கல்யாண விஷயம் பேசியிருக்கனும்…” என்றான் உடனே.
“உங்கப்பா தானே பேசினாங்க?…”
“நீங்களும் தான கூட இருந்தீங்க. எனக்கு அம்மாவாச்சே. அப்ப யார்கிட்ட சொல்லுவேன் நான்?…” என்றதும் அவர் விழிக்க,
“நான் சொல்றது சரி தானே?…” என்று கேட்கவும் தலையாட்டினார்.
‘இதை ஒன்னை சொல்லியே நம்மளை ஆஃப் பன்றான். இந்த மனுஷன் வேற ஒத்தையில விட்டுட்டு போய்ட்டாரு’ என்று மகனின் முகத்தை பார்த்தபடி எதையும் முகத்தில் காண்பிக்காமல் அமர்ந்திருந்தார்.
“நீங்க சொல்றபடி கணக்கு பார்த்தா எனக்கு நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ஷூட்டிங் ஆரம்பிச்சிடும். ஷூட் பாதி நார்த் சைட்ல. மீதி ஹிமாச்சல் பிரதேஷ்ல. தாலி கட்டின கையோட கிளம்பிடவா நான்?…” என்றவன்,
“சப்போஸ் அதுக்கு முன்னாடியே ஷூட் ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை அமைஞ்சா படம் முடியறவரைக்கும் என்னால கல்யாணம் கூட பண்ண முடியாது. இன்னும் ஆறுமாசம் தள்ளி போகும். அப்போ என்னோட மைன்ட்செட் எப்படி இருக்குமோ இந்த ப்ரப்போசல்ல…” என்று தமயந்தியின் தலையில் தீயை வைக்காத குறை தான் அவன் பேசியது.
“நல்லா யோசிச்சுக்கோங்க. அப்பறம் உங்க இஷ்டத்துக்கு எல்லா விஷயத்துலையும் நான் வளைஞ்சு குடுக்கமாட்டேன். என்னவோ பெத்தவங்க சொல்றீங்களேன்னு கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். பார்த்துக்கோங்க…” என்றான் கையை விரித்து.
“என்ன ஆரி இப்படி பேசற?…” என்றார் தமயந்தி.
“என்ன ஆரின்னா? நான் உண்மையை தானே சொல்றேன். இதுக்கு மேல என்ன செய்ய? உங்களோட ஆசையை நிறைவேத்த நான் தணிஞ்சு வந்திருக்கேன். ஆனா நீங்க அப்படி நினைக்கலையே ம்மா. சும்மா இல்லாம அந்த வீட்டுலையும் சம்மதம் சொல்லி அவங்களையும் எதிர்பார்க்க வச்சுட்டீங்க நீங்க…”
“யாரு நானு?…”
“நீங்களே தான் ம்மா…” என்றான் அடித்து சத்தியம் செய்யாத குறையாக.
‘அடப்பாவி மகனே, விட்டா இந்த கல்யாணம் நடக்காம போனா அதுக்கு காரணமே நான் தான்னு சொல்லுவான் போல?’ என்று அரண்டு பார்த்தார்.
“அதனால வீட்டுல பேசிட்டு எனக்கு சொல்லுங்க. பொண்ணு பார்க்க வரதா வேண்டாமான்னு….” என்றவன்,
“அப்பறம்மா, அன்னைக்கு மறக்காம மது அக்கா மாமனார் வீட்டுக்கும் விஷயத்தை சொல்லிருங்க. அவங்களும் வரட்டும். என்னமோ பேசனும்ன்னு சொன்னாங்களாம் என் மாமனார்கிட்ட. என்னன்னு நானும் பார்க்கறேன்…” என்றவனை பார்த்து மானசீகமாய் நெஞ்சை பிடித்துவிட்டார் தமயந்தி.