“அடுத்த கதைக்கான ப்ராசஸ் போகுதுல. அவன் பிஸியாம். சண்டே பொண்ணு பார்க்க வரானாம்…”
“முடிவே பண்ணிட்டானா?…”
“அதை மட்டுமா முடிவு பண்ணான்? கல்யாணம் எப்பன்னும் பார்த்து சொல்றான். நான் என்ன செய்ய? நான் அம்மாவா?…” என்றதும் குபீரென சிரித்துவிட்டார் குருமூர்த்தி.
“ஆரிக்கு கல்யாணம் பேசினதுல இருந்தே இந்த டவுட் உனக்கு…”
“சிரிக்கவா செய்யறீங்க? என்னால அவன்கிட்ட அதட்டவே முடியலை. பாயிண்டா பேசறான். எப்படி போனாலும் அங்க முட்டுக்கட்டை போடறான். நான் சொல்றதுக்கு அவன் ஒரு கேள்வி கேட்டா என்னால பதில் சொல்லவே முடியலை….” என்றவர் வழக்கம் போல,
“இவன்கிட்ட நதி எப்படி சமாளிச்சு போவா? பாவம் அவளுக்கு இவனை மாதிரி பேச தெரியாதே? எனக்கு அவளை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு…” என்றார் விடாமல் தமயந்தி.
“ப்ச், அதெல்லாம் நதி பார்த்துப்பா. ஆரியும் பார்த்துப்பான். நீ இதையே சொல்லாம நடந்ததை சொல்லு…” என்றவர் வசதியாக அமர்ந்தார்.
“சம்பந்தி வீட்டுல வளைகாப்பு வைக்கறதை பத்தி பேசிருப்பாங்க போல? நாம ஏழாம் மாசம் நடத்தனும்ன்னு சொன்னோம்ல. அதனால அடுத்தடுத்து விசேஷம் வைக்காம குழந்தை பிறக்கவும் அடுத்து கல்யாணத்தை வச்சுப்போம்ன்னு பேசறதா அங்க கலந்திருக்காங்க. அதை இவ போன் பண்ணி இல்ல இல்ல, ஆரி அவளுக்கு போன் பண்ணி அங்க என்ன நிலவரம்ன்னு கேட்டப்போ சொல்லியிருக்கா அவ…”
“சரி அவங்க சொல்றதும் சரிதான். கல்யாணம்ன்னா உடனே செஞ்சிடறதா? கொஞ்ச நாள் ஆகும்…”
“இதான், இதைத்தான் நானும் சொன்னேன். என்னை வாயடைச்சுட்டானே?…” என்று கன்னத்தில் கைவைக்க,
“என்ன தான் சொல்றான்?…”
“என்ன சொல்லலைன்னு கேளுங்க. இந்த கல்யாணத்தை நடத்தறதா இருந்தா வளைகாப்பு முடியவும் அனுவோட டெலிவரிக்குள்ள பண்ணிடறதாம். வளைகாப்போட நிச்சயதார்த்தத்தையும் ஒரே நாள் வச்சிடலாமாம். நாளை கடத்த வேண்டாமாம்…” என்றவர்,
“இன்னொன்னு சொன்னானே? குழந்தை பிறந்துட்டா அதுக்கு புண்ணியாதானம்ல இருந்து ஏழெட்டு மாசம் ஆகிடுமாம். அனுவை அவங்க வீட்டுக்கு அனுப்பறதுன்னு அடுத்தடுத்து இருக்குமாம். அதனால அவ்வளோ காலம் கடத்த வேண்டாமாம்…” என்று சொல்லி குருஆர்யன் பேசியதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்து,
“மாமனாருன்னானே பார்க்கலாம்? நான் அப்படியே ஷாக்காகிட்டேன். நல்லவேளை எனக்கு ஒன்னுமாகலை. இந்த பையன் எப்படி எல்லாம் பேசறான் தெரியுமா? விட்டா கல்யாணம் நடக்கலைன்னா அதுக்கு முக்கிய குற்றவாளி தமயந்தின்னு என்னை நடுவீட்டுல நிக்க வச்சிருவான் போல?…” என்றார்.
கேட்க கேட்க அடக்கமாட்டாமல் குருமூர்த்தி சிரித்துவிட அதற்கும் தமயந்தி முறைத்தார்.
“அவன் சொல்றது சரிதானே? நீ அம்மா. அதான் உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டான்…”
“பொறுப்பா இது? அவன் என்னை கோர்த்துவிட்டிருக்கான். இப்ப சம்பந்திக்கிட்ட என்னன்னு சொல்ல? அவங்களுக்கும் ஒரு அவகாசம் வேணும்ல? கல்யாணத்தை எப்ப நடத்தனும்னு நினைச்சிருப்பாங்க இல்ல?…” என்றார் தமயந்தி.
“தமயா ஆரி சொல்றதும் வாஸ்தவம் தானே? இப்பவே அவன் ரொம்ப பிஸி. ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டா படம் முடிக்கிற வரை அவனை பார்க்கறதே அபூர்வம். அதான் சீக்கிரம் முடிச்சு வைங்கன்னு சொல்றான். இதைவிட ஒரு பையன் வெக்கத்தைவிட்டு என்னன்னு சொல்லுவான்?…” என சிரிப்புடன் குருமூர்த்தி.
“அவன் பிடிச்சு தான் ஓகே சொல்றான்னு சொல்றீங்களா?…” என்ற தமயந்தி,
“ஆனா அதுலயும் இவன் பாருங்களேன் மது மாமனாரை இன்வைட் பண்ண சொல்றான். வேணும்னே சொல்ற மாதிரி இருக்கு…” என்றதும் குருமூர்த்தியின் முகம் மாறியது.
“மதுவும் சொன்னா என்கிட்ட. சம்மந்தியை பார்த்து பேசனும்ன்னு சொன்னாராம் தணிகா சம்பந்தி. அவர் ஏன் இவ்வளோ தூரம் பிரச்சனை பன்றார்ன்னு தெரியலை…” குருமூர்த்தி யோசனையாக,
“இப்ப இவனுமே பிரச்சனை பண்ணட்டும்ன்ற மாதிரியே பேசறான். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மாப்பிள்ளை இதால வருத்தப்பட்டா?…”
“அதை மது பார்த்துப்பா தமயா. இன்னொன்னு மாப்பிள்ளைக்கு நம்மளை ஆரியை எல்லாம் நல்லா தெரியும். அதைவிட மாப்பிள்ளையோட அப்பாவை இன்னும் நல்லா தெரியும். நீ வருத்தப்படாத…”
“அப்போ பேச போற அன்னைக்கு கல்யாணத்தை வைக்கிறதை பத்தியும் பேசிடலாம்ன்னு சொல்றீங்களா?…”
“ஆமா, பேசுவோம். அப்பவும் அவங்க அதே முடிவுல இருந்தா, அதாவது அனுஷாக்கு குழந்தை பிறக்கவும் கல்யாணம் செய்யனும்ன்னு இருந்தா அப்போ என்ன முடிவு பண்ணன்னு யோசிப்போம்…” என்றார் குருமூர்த்தி.
“அப்ப ஆரி?…”
“அதை அப்பறம் பார்ப்போம். அதுக்காக கட்டாயப்படுத்தவா முடியும்?…” என்ற குருமூர்த்தி,
“நம்ம வீட்டுல கடைசி கல்யாணம். அங்கயும் அப்படித்தான். நதி சம்பந்திக்கு ஒரு பொண்ணு. அரக்கப்பரக்க கல்யாணம் செய்ய முடியாது. பரத் கல்யாணத்தை விட பெருசா தான் பண்ணனும்ன்னு நான் நினைச்சிருக்கேன்….” என்றார் அவர்.
“ஹ்ம்ம், சரி…”
“ஆமா, உன் பையன் காலையிலையே கிளம்பி போனானே? எப்போ வந்தான் வீட்டுக்கு?…”
“வரும்போதே அனுஷாகிட்ட பேசிட்டு தான் வந்தான். அவ லைன்ல இருக்கும் போதே அம்மா உள்ள வாங்கன்னு கூப்பிட்டு போய் பேச்சா பேசினான். இவனுக்கு பதில் சொல்றதுகுள்ள?…” என்று தலையை உலுக்கிக்கொண்டார்.
“விடுவிடு, கல்யாணமானா எல்லாம் சரியாகிடும்…”
“என்னத்த சரியாகவோ? இன்னொரு தமயந்திய இந்த வீடு தாங்குமா?…”
“நீ பயந்தவ தான்?…” குருமூர்த்தி கேலி பேச,
“ம்க்கும், அப்படியே உங்கள மாதிரி அவன். என்ன ஒன்னு நீங்க என் பேச்சை கேட்பீங்க. நான் அவன் பேச்சை கேட்பேன்…” என்று சொல்ல இன்னும் சிரிப்பு பொங்கியது குருமூர்த்திக்கு.
ஒருவழியாய் வீட்டில் பேசி அந்த ஞாயிறு பெண்பார்க்க வருவதாக ஸ்ரீநிவாசன், நரசிம்மனிடம் பேசிவிட்டனர்.
“சம்பிரதாயமா வராங்க. அப்படியே வளைகாப்புக்கும் நாள் குறிக்கிறதை பத்தி பேசவும் வராங்க…” என்றார் ஸ்ரீநிவாசன்.
“அந்த தணிகாச்சலம் வேற வராராம். அன்னைக்கு வந்து எதாச்சும் பேசட்டும். இருக்கு…” என்றான் ப்ரவன் கை முஷ்டியை மடக்கியபடி.