அந்த அறையிலிருந்து கதவை திறந்து வெளியே வந்து நின்றவள் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க, பார்வை குருஆர்யனை சந்தித்தது.
புடவை தலைப்பை நீவிக்கொண்டே நின்றவளை பார்த்து என்னவென்று தலையசைத்து ஆர்யா கேட்க, ஒன்றுமில்லை என்று தோளை குலுக்கினாள் நனியிதழ்.
பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்கிற எந்தவித பரபரப்போ, பதட்டமோ இல்லாமல் வெகு இயல்பாய் வந்தவள் அங்கிருந்தவர்களை பார்த்து புன்னகைக்க ‘என்னடா?’ என்றானது அவனுக்குள் அந்தநிமிடத்தின் உணர்வு.
“நதி இன்னும் நேரமிருக்கு…” என்ற சுஜாதா,
“கீதா உள்ள கூட்டிட்டு போ…” என்று மகளிடம் சொல்லி அனுப்பினார்.
“எல்லாம் வீட்டு மனுஷங்க தானேன்னு வந்துட்டா….” என்று சுஜாதா சொல்லி சிரிக்க,
‘வாயை திறந்தால் தானே?’ என்று பசை போட்டு ஒட்டியதை போல அமர்ந்திருந்தார் அவர்.
“பொண்ணு போயிருச்சுன்னு சொன்னேன்…”
“எல்லாம் புரியுது. பொண்ணை தான் உனக்குன்னு பேசிட்டியே. போயிருச்சு தான். சந்தோஷமா?…” என்றவருக்கு உடனே கிளம்பி செல்லவிடாமல் மகனின் பாசம் அவரை கட்டுப்படுத்தியது.
எங்கே தான் கிளம்பி சென்று மகன் தன் உறவையே வேண்டாம் என்று சொல்லிவிட்டால்?
இத்தனையிலும் நிதீஷின் குடைச்சல் வேறு அவரை பாடாய் படுத்தியது. அவன் விழித்திருக்கும் நேரம் இவரை உறங்கவிடுவதில்லை.
‘என் மேல பாசமே இல்லைல?’ என்று கேட்டு அவன் ஒருபக்கம் நிம்மதியில்லாமல் ஓடவிட்டான்.
வெறுமனே இன்னும் நரசிம்மனை பார்த்து பேசவில்லை என்பதற்கே அத்தனை கேள்வி கேட்பவனிடம் இன்னும் நனியிதழ், ஆர்யா திருமணம் பற்றி சொல்லியிருக்கவில்லை தணிகாச்சலம்.
சொன்னால் எப்படி நடந்துகொள்வானோ என்றிருந்தது. அத்தனை பயம் எதுவும் செய்துகொள்வானோ என்று.
இங்கே வரவைத்து பக்குவமாக எடுத்து சொல்லலாம் என்று ஒருபுறம் நினைத்தாலும், அவனையே வரவைத்து நரசிம்மனிடம் மன்னிப்பை கேட்கவைத்து பார்க்கலாம் என்று ஒருபுறமும் அவரின் மனம் அடித்துக்கொண்டது.
ஒருவேளை நேரில் பார்க்கையில் நிதீஷின் தோற்றமும், பேச்சும் அவர்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தால்?
“வாய்ப்பில்லை…” என்றான் குருஆர்யன்.
“ஹங், என்ன?…” என்று தணிகாச்சலம் நினைவிலிருந்து மீண்டு கேட்க,
“நீங்க இப்ப சொன்னது தான். வாய்ப்பில்லை…”
“நானா? சொன்னேனா?…” என்றவருக்கு ‘சத்தமாக பேசிவிட்டோமோ?’ என்ற அச்சம் பிறக்க குருஆர்யனை பார்த்தார்.
“பாரு பாரு. எப்படி நிக்கறான்னு. தனியா பொண்ணுக்கிட்ட பேசனும்ன்னு சொல்லி போனவன் மாதிரியா இருக்கான்?…” என்ற தமயந்தி,
“கல்யாண மாப்பிள்ளைன்னா முகத்துல எப்படி ஒரு பூரிப்பு இருக்கனும்? இவன் நிக்கிற தினுசை பாரேன்? விரைப்பா, முறைப்பா. ம்ஹூம் இவன் தேறமாட்டான். நதி பாவம்…” என்று அவர் அதே புராணம் பாட,
“முதல்ல சாப்பிடுங்க நீங்க…” என்று பரத் அழைத்து சென்றான் அவரை.
ஆனால் அங்கே குருஆர்யன் பேச்சில் நனியிதழ் முகத்தில் புன்னகை பூக்கள் கூத்தாடியது.
பன்னீர் ரோஜா இதழ் நிறமும், அதன் இலை துளிர்களின் நிறமும் கலந்த பட்டுப்புடவையில் பெரிதாய் அலங்காரங்கள் இன்றி அவனை அள்ளிக்கொண்டது அவளின் தோற்றம்.
“அநியாயத்துக்கு கொஞ்சம் அநியாயமா தான் இருக்க நீ…” என்றான் நனியிதழை மேலிருந்து கீழ் பார்த்தபடி குருஆர்யன்.
“வாட்? கம் அகைன்?…” நனியிதழ் கேட்க,
“இதை நான் கேட்கனும். என்கிட்ட நீ கொஞ்சம் சத்தமா பேசுன்னு சொன்னேன்…” என்று அவளருகில் நெருக்கம் காண்பித்து வந்து நின்றான் அவன்.
இதுவரை எப்படியோ, இந்த நொடி அவனின் இந்த உரிமை பார்வை அவளுள் கலந்தோடி உறவாடியது.
“உன் மேக்கோவரை சொன்னேன். நாட் பேட். இப்போ கேட்டுச்சா?…” என்றான் இன்னும் அருகில் வந்து.
“ஐ க்னோ. கேட்கவும் செஞ்சது…” என்றவள் சட்டென விலகாமல் மூச்சடைத்தாலும் அப்படியே நின்றாள்.