ஆர்யா நனியிதழை அடுத்த உடையைமாற்றி வரும்படி ஒரு அறையை காண்பித்து அனுப்ப,
“அண்ணி, அக்கா யாரையாச்சும் கூப்பிடனுமே? இதெல்லாம் எடுக்கனும்…” என்றாள் அறை வாசலின் வெளியே நின்று.
“ஏன் நான் ஹெல்ப் பண்ணுவேனே? இதுக்கெதுக்கு அக்கா? எதை கழட்டனும்?…” என்று கேட்க ஜெர்க்காகி விட்டாள்.
“நானே பார்த்துக்கறேன். ஆளை விடுங்க…” என்றவளுக்கு அந்த ஆர்யனை சமாளிக்க முடியவில்லை.
அவசரமாய் அறைக்குள் நுழைந்துகொண்டவள் வேகத்தில் குருஆர்யன் முகத்தில் இளமுறுவல்.
மீண்டும் அந்த அறை கதவை அவன் தட்ட, கதவை திறந்தவள் ஆர்யாவை கண்டதும் அப்பட்டமாய் முறைப்பை காண்பித்தாள்.
“என்ன வேணும் உங்களுக்கு?…” என்று கேட்டு,
“எந்த ஹெல்ப்பும் வேண்டாம். நானே ரெடியாகிட்டு வந்து டோர் ஓபன் பன்றேன். நீங்க போகலாம்…” என்று சொல்ல,
“ஜ்வெல்ஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிடுவ. பட்…” என்று சொல்லியவன் பார்வையில் பட்டென்று கதவை சாற்றிவிட்டாள் நனியிதழ்.
“இவளை…” என்றபடி மதுவிற்கு அழைப்பு விடுத்தான் அவன்.
“என்னப்பா? நதியை கூப்பிட்டு போகனுமா?…” என்று அப்போது தான் மகனை உறங்க வைத்தபடி இருந்தவள் கேட்க,
“ஆமா, கிளம்பி வா…” என்று இருப்பிடம் சொல்லி வைத்தவன் ஆனந்திடம் மதுவை அழைத்து வர பணித்தான்.
சிறிதுநேரத்தில் மதுவும் வந்துவிட அவளை உள்ள உதவிக்கு அனுப்பிவிட்டு நகர்ந்துவிட்டான் ஆர்யா.
“இந்த லாங் கவுன் எப்போ பர்ச்சேஸ் பண்ணினது? டிஸைனர்கிட்ட இந்த மாடல் நாம குடுக்கவே இல்லையே?…” என்றாள் மது.
முழுநீள வெள்ளையில் உடை முழுவதும் கற்கள் பாதிக்கப்பட்டு கழுத்தில் ஆபரணம் இருப்பதை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.
“வாவ் நதி. பேசாம சங்கீத்க்கு இந்த ட்ரெஸ் நீ போட்டிருக்கலாம். வாரே வா. இது இந்த ஆரி ராஸ்கல் வேலையா தான் இருக்கும். சத்தமில்லாம. பாரேன்…” என்று பார்த்து பார்த்து ரசித்தாள் மது.
நனியிதழ் அந்த உடையை சுற்றிலும் பார்த்தபடி கண்ணாடி முன் நிற்க அதற்கேற்ற காதணியும் அதிலேயே தரப்பட்டிருந்தது.
“பக்காவா ரெடி பண்ணி வச்சிருக்கான்…” என மது சொல்ல மீண்டும் அவளின் எண்ணிற்கு அழைப்பு.
“ஹேர்ஸ்டெயில் மாத்த வேண்டாம் க்கா. நெத்தில ஒரு சின்ன ஸ்டோன் ஸ்டிக்கர் மட்டும் வைக்க சொல்லு. போதும். முடிஞ்சதும் கூட்டிட்டு வா. ஆனந்த் அங்க இருப்பான்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“இவன்கிட்ட என்னமோ இருக்கு பாரு. ஆனாலும் அந்த திமிர், மண்டைக்கனம் மட்டும் குறையாது…” என்று சொல்லி சிரித்தவள் நாக்கை கடிக்க,
“உங்க தம்பி நீங்க திட்டறீங்க. எனக்கென்ன?…” என்றாள் நனியிதழ் தானும் புன்னகைத்து.
ஆனந்த் அங்கே சற்று தள்ளி நின்றிருக்க அவர்களை பார்த்ததும் புன்னகைத்தான்.
“வாங்க மேம்…” என்று கடற்கரை பக்கம் நடக்க,
“என்ன ஆனந்த் பீச் சைட் போற?…” என்றாள் மது.
“ஜி அங்க தான் இருக்கார். அங்க தான் கூட்டிட்டு வர சொன்னார். விஷ்ணு ஸார், பரத் ஸார் எல்லாம் அங்க தான் இருக்காங்க…” என்றவன் ஆர்யா இருக்குமிடம் நோக்கி சென்றான்.
தூரத்தில் சிலர் மட்டும் குழுவாய் நின்றிருந்தனர். அவர்களிடமிருந்து சற்று தள்ளி பாதுகாப்பிற்கு இன்னும் பலர் நின்றிருந்தனர். ப்ரவனும், விஷ்ணுவும் தெரிந்தனர் அந்த கூட்டத்தில்.
ப்ரவன் நரசிம்மனை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டான். அவரை எவ்விதத்திலும் வேலை செய்யவோ, அலையவைக்கவோ கூடாதென்று.
உணவு நேரம் முடிந்து பெரும்பாலானோர் உறங்க சென்றிருக்க விஷ்ணு, ப்ரவன் பரத் ஆர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
வெள்ளை நிற பைஜாமா உடையில் இடையிடையே வெள்ளி நூல்கள் மின்ன அவன் திரும்பும் நேரம் அந்த உடுப்பின் வெகுமதியை உயர்த்தி காண்பித்தது.
“நதி வந்தாச்சு…” என்று ப்ரவன் சொல்லவும் குருஆர்யன் திரும்பி பார்க்க அவள் எங்கே அவனை பார்த்தாள்?
இவனிடம் இன்னும் எத்தனை நேரம் போட்டோவிற்கு நிற்கவேண்டுமோ என்று ஆயாசமாய் இருந்தது.
முதலில் இருந்த உற்சாகம் குறைந்து அயர்வை உணர்ந்தவள் கண்களை உறக்கம் வேறு கடற்கரையின் மிதமான காற்றினால் இழுத்து பிடிக்க ஆரம்பித்தது.
“பார்த்து வா நதி…” என்று மதுவும் அவளை பிடித்தபடியே வர நெருங்க நெருங்க தான் அங்கே போடப்பட்டிருந்த மேஜையும், அதனை சுற்றி வெள்ளையும், மெல்லிய மஞ்சளுமான நிறத்தின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பார்த்ததுமே ‘வாவ்’ என்றது அவளின் மனது. அப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பும், கவரும் விதமான அழகியலும்.
மதுவிற்கும் கூட அங்கே எதற்கு அந்த மேஜையும், அலங்காரமும் என்று புரியவில்லை. இதுவும் போட்டோ ஷூட் என்று தான் நினைத்தனர்.
“வா இதழ்…” என்றான் ஆர்யா.
பரத்தும், ப்ரவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள விஷ்ணுவும், மதுவும் அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தனர்.
‘எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லனுமா இவங்க?’ என்று உள்ளுக்குள் சங்கடப்பட்டுக்கொண்டே அவனுடன் செல்ல மேஜையில் அமர கூறினான் குருஆர்யன்.
“இன்னும் எவ்வளோ நேரம் எடுக்கனும்?…” என்று அவள் கேட்டும்விட,
“ஏன்? நாம இன்னும் டின்னர் கூட சாப்பிடலையே?…” என்றவன்,
“டைம் என்ன?…” என்று கேட்டான்.
“பின்றான்ல…” விஷ்ணு சொல்ல,
“எப்படி இம்புட்டுக்கு பின்றான்னு தான் நானும் யோசிக்கறேன்…” என்றான் பரத் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தபடி.
“கேட்டுச்சா இதழ், டைம் என்ன?…” என்று கேட்டபடி கடற்காற்றில் அலைபாய்ந்த சிகையை கோதியபடி புன்சிரிப்புடன் ஆர்யா கேட்க,
“நான் வாட்ச் கட்டலை…”
“ஓஹ்….” என்றவன்,
“மாமா டைம் என்ன?…” என்று கேட்டான் விஷ்ணுவை பார்த்து.
“என்னடா நடக்குது இங்க?…” என்று பரத் இன்னும் நடந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.
ப்ரவன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். வீட்டினர் சொல்லியதேற்கேற்ப இருவரும் திருமண பந்தத்தில் இணைவதாக இருந்தாலும் உள்ளுக்குள் ஆர்யாவின் மேல் ஒரு பதட்டம் இருந்துகொண்டே தான் இருந்தது.
ஆனால் இப்போது இந்த நிகழ்வு அவனின் அனைத்து வருத்தங்களையும் துடைத்துவிட்டது.
“மச்சான்…” என்று பரத்தை தூக்கி ப்ரவன் சுற்ற,
“அடேய் இருங்கடா. என்ன நடக்குதுன்னே தெரியமாட்டிங்குது. இதுல இவன் வேற…” என்ற பரத்,
“என் கையை கிள்ளேன் க்கா…” என்றான் மதுவிடம்.
“அவன் உதைப்பதற்குள் ஓடிடு. நாங்களே இப்பத்தான் அவன் உருப்படியா என்னவோ பன்றான்னு நினைச்சா நீ நம்பமுடியலைன்ற….” என்றவள்,
“அவங்களுக்கு கொஞ்சம் ப்ரைவேசி குடுங்க. தள்ளி வாங்க…” என்றாள்.
“உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? பாரு வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கறாங்க. இதுல நான் பார்க்கறதுல அவங்க பிரைவேசி கடலுக்கு போகுதோ?…” என்று பொங்கினான் பரத்.
“கூட பிறந்தவன் பிறந்தநாள் தெரியலை. நீ பேசற?…” விஷ்ணு கேலி பேச,
“தேதி குறிச்சிட்டு வந்தன்னைக்கு நைட்ல அம்மா, அப்பா சொன்னாங்க. எனக்குமே அப்போ தான் தெரிஞ்சது. ஆனா எங்க? அடுத்தடுத்து விசேஷம், வேலைகள்ன்னு இதை மறந்தே போய்ட்டோம்…” என்ற மது,
“இதுவரைக்கும் இவ்வளோ கிராண்டா எல்லாம் அவன் செலிபரேட் பண்ணினதே இல்லை. வீட்டுல கேக் கட் பண்ணினாலும் நான் என்ன சின்ன பிள்ளையான்னு அவனே சத்தம் போடுவான். அம்மா கோவிலுக்கு போவாங்க. அன்னைக்கு தேதிக்கு நிறைய அன்னதானம், பூஜைன்னு செய்வாங்க. அவ்வளோ தான்…” என்றாள்.
அவள் சொல்லுவதை போல பிறந்தநாள் என்ற ஒன்று பின்னுக்கு சென்று விரைவில் திருமணம், அது எவ்வித குறையுமின்றி நடந்தேற வேண்டும் என்பதில் தான் அனைவரின் கவனமும்.
இதில் குருஆர்யனுமே அனைவரின் கவனமும் திருமணத்தில் இருக்கும்படியே பார்த்துக்கொள்ள வேறு ஞாபகம் ஏது?
விருந்தினர்கள் அழைப்பு, ஏற்பாடுகள் எல்லாம் பிசிறின்றி உள்ளதா என்று இப்படி அனைவரும் அதிலேயே தான் சுழன்றனர்.
அதை தான் ஆர்யாவுமே நினைத்தான். வேறு யாரின் மூலமும் தன் பிறந்தநாளை நனியிதழ் அறிந்துகொள்ள கூடாதென்று.
அவன் நினைத்ததை போலவே எல்லாம் நடந்தேற வெற்றி புன்னகை அவன் முகத்தில் தாண்டவமாடியது.