“சரி போய் தூங்குங்க. நேரமாகிருச்சு…” என்று விஷ்ணு சொல்லவும்,
“குட்நைட்…” என்றாள் நனியிதழ் ஆர்யாவிடம்.
“அது தூங்கறவனுக்கு. போ…” என்று சொல்ல,
“நான் எனக்கு சொன்னேன்….” என்று அவனிடம் கிண்டலாய் பதில் பேசியவள்,
“குட்நைட் தூங்கறவங்களுக்கு தானே சொல்லுவாங்க. நான் தூங்க போறேன்…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்று சொல்லி தலையசைக்க,
“பேசிட்டே நின்னா இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிரும். அப்பறம் இதே ட்ரெஸ்ல தான் தாலி கட்டிக்கனும்…” என்று மது அவளை அழைத்து சென்றாள்.
அவர்கள் சென்றதும் விஷ்ணு, ப்ரவன், பரத்துடன் அவ்விடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணிகள் எவ்வண்ணம் உள்ளன என்று பார்வையிட கிளம்பினான் குருஆர்யன்.
அந்த இருநாட்களுக்கு மட்டும் பொதுமக்கள் நடமாட அங்கே தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதில் ஊடகவியலாளர்கள் எல்லாம் குவிந்திருந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அனைவருமே கையில் விதவிதமான கேமராக்களுடன் பாதுகாப்பு தடுப்பிற்கு வெளியில் தான் சுற்றிவந்தனர்.
உறங்காமல் கூட செய்தி சேகரிக்க அங்கே இருந்தவர்கள் குருஆர்யன் வருவதை கண்டு சப்தம் எழுப்பியதோடு அதையும் தங்கள் கேமராவில் பதிந்துகொண்டனர்.
“பர்மிஷன் இல்லாம போட்டோஸ் எடுக்காதீங்க…” என்று பவுன்சர்ஸ் எச்சரிக்க,
“நாங்க உங்க சர்க்கிள்குள்ள வரவே இல்லையே?…” என்று குதர்க்கம் பேசி அந்த நேரம் சுட சுட செய்தியாக குருஆர்யன் புகைப்படத்தையும், பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தவற்றை அதிக தெளிவில்லாமல் இருந்தாலும் அந்த காட்சியையும் வலைதளத்தில் பதிவேற்றினார்கள்.
வாழ்த்து செய்திகள் ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என்னும் வகையான அதிருப்தி செய்திகளுமே வந்துகொண்டு தான் இருந்தது.
“கவர்மன்ட் கிட்ட பர்மிஷன் வாங்கி தானே பன்றாங்க. அதுக்கான பேமென்ட் வேற சுளையா கைமாத்தி இருக்காங்க…” என்று விமர்சனங்கள் இருவிதமாகவும் வந்துகொண்டிருந்தது.
விடியலை நெருங்கும் நேரம் இன்னும் அந்த சுற்றுவட்டாரம் பரபரப்பை கூட்டிக்கொண்டது.
முதலமைச்சர் தலைமையில் திருமணம். தென்னிந்திய திரைப்பட உறுப்பினர்களின் முக்கியமான நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று அனைத்து துறையிலிருந்து திருமணத்தை சிறப்பிக்க வந்துவிட்டனர்.
அனைவரையும் வரவேற்று திருமணம் நடக்குமிடம் அழைத்து செல்ல தனி தனி ஆட்கள், அவர்களை கவனிக்க இன்னொரு குழு என்று பிரமாண்டத்திற்கும் பிரமாண்டம் தான்.
ஒருபக்கம் ராஜ உபசாரமும், காலை உணவுகளும், வருபவர்களுக்கு வரவேற்பு பானங்களும் என்று கவனிப்புகள் உயர்தரம்.
மதிய உணவிற்கு விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. சைவம், அசைவம் என ஒவ்வொரு பதார்த்தத்திலும் பலவகைகள்.
நரசிம்மன் வாயடைத்து போயிருந்தார் இவற்றை எல்லாம் பார்த்து. நிச்சயமாக இவ்வளவு தூரம் விமர்சையாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அவர்.
விமர்சை என்னும் வார்த்தை மிக குறைவு. அப்படி அரசகுமாரன் திருமணம் போல் நடைபெற மனதும், முகமும் கலங்கி போயிருந்தது சந்தோஷத்திலும், இதை பார்த்து பூரிக்க தன் மனைவி இல்லையே என்னும் ஏக்கத்திலும்.
ஸ்ரீநிவாசன், குருமூர்த்தி இருவரும் அவரை தனியே விடவே இல்லை. தங்களுடனே நிறுத்தியிருந்தனர்.
முகூர்த்தநேரம் நெருங்க மாப்பிள்ளையாய் மிடுக்கான தோற்றத்தில் அமர்ந்திருந்தான் குருஆர்யன்.
“அந்த முகத்துல தான் அப்படிங்கற ஆணவம். ஆனாலும் அதுவும் நல்லா தான் இருக்கு…” சொல்லிக்கொண்டார் மருமகனை பார்த்து.
இத்தனை பேரை இழுத்துக்கட்டி இவ்வளவு செய்பவனிடத்தில் இது இல்லாமலா என்று தான் தோன்றியது.
ஆக்கப்பிறந்தவன் ஆளுமையுடன் தானே இருக்கவேண்டும் என்று மருமகனை பார்வையால் தொடர்ந்துகொண்டே இருந்தார்.
“சிம்மா நதி வந்தாச்சு பாரு. என் பொண்ணு எவ்வளோ அழகுல…” என்று ஸ்ரீநிவாசன் சொல்ல மகளின் பக்கம் பார்வை திரும்பியது.
ராஜகுமாரி தான். நெக்குருகி போனார் மகளின் தோரணையில். தேரென நடந்து வருபவளின் மீதான ஆர்யாவின் பார்வை மையலுடன் படிந்து மூழ்கியது.
“முதல்ல பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ நதி…” என்று சுஜாதா சொல்ல,
“எல்லாரோட கால்லயும் தனிதனியா விழவேண்டாம். இங்க தான நிக்கறாங்க. ஒரேதா விழுந்து எந்தி…” என்று தமயந்தி மருமகளை சொல்லவும், ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டவளுக்கு சுற்றியிருக்கும் கூட்டம் பார்க்கவே அடிவயிறு சுருண்டது.
எப்போதும் எதற்கும் பயமில்லை என்றிருந்தவளுக்கு அந்த பிரமாண்டம் அச்சுறுத்தலை காண்பித்தது.
கீதா, ப்ரவன் திருமணம் இப்படி ஒரு உணர்வை தரவில்லை. அவர்கள் வழியில் திருமணம் என்றாலும் வித்தியாசமாய் தெரியவில்லை.
ஆனால் இந்தநிமிடம், இத்தனை பிரமாண்டம், மனிதர்கள், பாதுகாப்பு எல்லாம் பயப்பந்தை சாற்றியது அவளுள்.
அனைவரின் பார்வையும் தன்னை துளைக்க வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
முகத்தில் மெல்லிய சிரிப்பு மட்டும் தான் ஒட்டியிருந்தது. சந்தோஷத்தை தாண்டிய அச்சம்.
எல்லாவற்றிற்கும் மேல் தாயின் அருகாமையை அதிகத்திற்கும் தேடியது அவளின் மனது.
ஐந்து வயதிலேயே அவர் தவறி இருந்தாலும் நரசிம்மனிடமிருந்து தாயின் ஞாபகங்கள் ஏராளம் மகளை வந்து சேர்ந்திருந்தது.
ஒவ்வொரு நாளும் அவரின் பேச்சுக்கள் இன்றி பொழுது கழிந்ததில்லை. ஆனால் இப்போது பெரிதாய் ஒரு தேடல்.
“நதிம்மா…” என்று அவளின் தோளில் கைவைத்த சுஜாதாவை திரும்பி பார்த்தவள்,