“ஈவ்னிங் நாம இங்க இருந்து வீட்டுக்கு கிளம்பவும் பண்ணிக்கலாம்….” என்று சொல்லி,
“பார்த்துக்கோங்க…” என எழுந்து சென்றான் அவன்.
“ப்பாஹ்…” என்றான் ப்ரவன் சத்தமாகவே.
“இப்ப வர சொல்றேன் மாப்பிள்ளை…” என்று ப்ரவனிடம் என்னவோ சொல்ல வந்த தமயந்தி அவனிடம் கூறி செல்ல,
“அப்பாவையா?…” என்று திகைத்து பார்த்தான் ப்ரவன்.
“அண்ணா உங்களை மாப்பிள்ளை கூப்பிடறாரு…” என்று அதற்குள் ஸ்ரீநிவாசனிடம் சென்று சொல்ல,
“என்ன ப்ரவன்?…” என வந்தார் ஸ்ரீநிவாசன்.
“நீங்க பேசிட்டிருங்க. அனுஷாவுக்கு டயர்டா இருக்குன்னு ரூம்ல இருக்கா. ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வராளாம். மொபைல் என்கிட்ட இருக்கு மாப்பிள்ளை…” என்று சொல்லிவிட்டு சென்றார் தமயந்தி.
அவரின் வேகம் கண்டு புன்னகையுடன் தலையசைத்த ப்ரவன் ஸ்ரீநிவாசனை பார்த்து சிரிக்க,
“என்னடா, என்ன கூப்பிட்ட? இப்ப சிரிக்கிற?…” என்றவர்,
“ஆமா இங்க என்ன பன்ற? கெஸ்ட் எல்லாம் கவனிக்காம?…” என்றார்.
“அட இருங்கப்பா. நான் உங்களை கூப்பிடவே இல்லை. ப்பாஹ்ன்னு ஒரு எக்ஸைட்மென்ட்ல சொன்னேன். அதை அத்தை கேட்டுட்டு உங்களை கூப்பிடறேன்னு நினைச்சுட்டாங்க….” என்று சொல்லி சிரித்தான்.
“ஓஹ், சரி சரி…”
“ஆனா வந்ததும் நல்லதா போச்சு….” என்று ஆர்யா சொல்லியதை அவரிடம் கூற,
“மாப்பிள்ளை சொன்ன மாதிரியே செய்யேன். சரியா தானே சொல்லியிருக்கார்…” என்றார் ஸ்ரீநிவாசன்.
“இயக்குனருக்கு எப்படி இதெல்லாம் தெரியுது பாருங்களேன்?…” என்று வியந்து சொல்ல,
“கத்துக்கோ ப்ரவன். கிரியேட்டிவ் திங்கிங் வளர்த்துக்கறது தப்பில்லையே…” என்று மகனின் தோளை தட்டிக்கொடுத்தவர்,
“போஸ்ட் பன்றதுக்கு முன்னாடி ஒருவாட்டி மாப்பிள்ளைக்கிட்ட கேட்டுக்கோ….” என்றும் சொல்லிவிட்டு சென்றார்.
அதற்குள் நனியிதழை சாப்பிட அழைத்து செல்லும்படி குருஆர்யனிடம் மது வந்து சொல்ல,
“மாமாவையும் கூப்பிடுக்கா. சேர்ந்தே போயிடலாம். கொஞ்சநேரமா அவரை காணுமே?…” என்றான் அவன்.
“ப்ச், அதை ஏன் கேட்கிற? நிதீஷை பார்க்க போயிருக்கற மாமாவை அங்கவச்சு கண்டபடி பேசி வெளில போங்கன்னு சொல்லிட்டானாம் நிதீஷ். ரொம்ப முரட்டுத்தனமா நடந்திருக்கான். வீட்டுக்குள்ள விடமாட்டேன்னு சொல்லி. அவர் இப்போ அவரோட ப்ரென்ட் வீட்டுல இருக்கார். அதான் பேசிட்டிருக்காங்க…”
“ஓஹ்…” என்றான் குருஆர்யன்.
“என்ன ஓஹ்…”
“வேற என்ன சொல்ல?…”
“என்ன ஆரி இப்படி சொல்ற?…”
“ப்ச், அது அவர் அவரோட தங்கச்சி பையன். இதுல நான் என்ன சொல்ல? அவனை தேடி போக சொல்லி யாரும் சொல்லலையே? அப்போ அவங்க தான் சமாளிக்கனும். இல்லைன்னா தான் நீயும், மாமாவும் இருக்கீங்களே?…” என்றான் கிண்டலுடன்.
“வேற வழி. சொல்ல சொல்ல கேட்காம கிளம்பி போனார். இப்ப அசிங்கப்பட்டு நிக்கறார். பெத்த பிள்ளைக்கும் மேல பாசத்தை கொட்டி குடுத்து இப்ப தாங்கமுடியாம அழுதுட்டு இருக்கார் அங்க…” என்ற மதுஸ்ரீ,
“நிதீஷ் இனி இங்க வரவே மாட்டானாம். யாரும் தேவையில்லையாம். ரொம்ப நோகடிச்சு பேசியிருக்கான் மாமாவை. விஷ்ணு இப்பவே கிளம்பி வாங்கன்னு மாமாவை சத்தம் போட்டுட்டு இருக்கார்….” என்று கூற,
“சரி, நீ போய் மாமாவை போய் கூட்டிட்டு வா….” என்று அனுப்பினான் குருஆர்யன்.
நிதீஷின் அரைவேக்காட்டுத்தனம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தான் தான். அந்த பயத்தில் தான் தணிகாச்சலம் திருமணம் நெருங்கியநேரம் அங்கே கிளம்பி சென்றது.
தங்களின் திருமண விஷயம் கேள்விப்பட்டு கிளம்பிவர எவ்வளவோ பிரயத்தனங்களை நிதீஷ் மேற்கொள்ள, ஓரளவு அங்கே தனக்கு தெரிந்தவர்களை கொண்டு சமாளித்திருந்தான் குருஆர்யன்.
தணிகாச்சலமும் அங்கே இப்போது சென்றிருக்க அவரின் நிலை குறித்து எவ்வித வருத்தமும் இல்லை. அதனை மண்டையில் ஏற்றிக்கொள்ளவும் இல்லை.
திரும்பி தனக்கு பின்னால் கீதாவுடன் பேசிக்கொண்டிருந்த மனைவியை பார்த்தான்.
அத்தனை அயர்ச்சியிலும் அவள் முகத்தில் மின்னும் சந்தோஷமும், இதழ்களில் உறைந்திருந்த புன்னகையும் குருஆர்யனுக்கு உள்ளூர என்னவோ செய்தது.
“ம்க்கும்…” என்று அவன் தொண்டையை செரும அவள் திரும்பவில்லை.
ஆனால் கண்டுகொண்டாள். வேண்டுமென்றே திரும்பாமல் அமர்ந்திருக்க அவளின் விழியோர சுருக்கத்திலும், ஓரப்பார்வையால் தன்னை காண்பதிலும் இதழ்மடித்து புன்னகையை அதக்கியவன்,
“ஸ்நாப்…” என்று சொல்லி நனியிதழ் இருக்கையின் பின்னால் சென்று நின்று அவளின் தோள்களில் இரு கைகளையும் ஊன்றி லேசாய் குனிந்து பார்த்தான்.
“ஹேய்…” என்றவள் அவனின் விரல்களின் அழுத்தத்தில் அப்படியே அமர்ந்துவிட,
“ஓஹ்…” என்ற சந்தோஷ கூச்சல்கள் கிளம்பியது.
“எப்புட்ரா…” என்றான் பரத் தம்பியை பார்த்து.
“எங்க எங்கம்மா?…” என தமயந்தியை வேறு தேட, அவர் எங்கே அங்கிருந்தார்?
விருந்தாளிகளை கவனித்து அனுப்புவதில் ஒரு இடத்தில் கூட நிற்கவில்லை தமயந்தி.
எங்கு பார்த்தாலும் இருந்தார். அதே நேரம் எங்கேயும் நிற்பதில்லை. இப்படி பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார்.
மீண்டும் குடும்பமாய் சில புகைப்படங்கள். சின்ன சின்ன விளையாட்டுகள் என்று ஒவ்வொன்றையும் நினைவுகளுக்காய் சேமித்துக்கொண்டனர்.
“எந்த கேம் சொன்னாலும் முதல்ல அவனுக்கு அது ஓகே வான்னு கேட்டுட்டு அப்பறம் விளையாடறத பாரேன் க்கா. நாம மட்டும் இவன் ரெடி பண்ணின எல்லாம் செஞ்சோம் தானே?…” தம்பியின் அழிச்சாட்டியம் தாளாமல் பரத் மதுவிடம் சொல்ல,
“என்னைக்கு அவன் நாம சொல்றதை செஞ்சிருக்கான். விடு விடு…” என்றாள் சிரிப்புடன்.
ஒருவழியாக அனைத்து சடங்குகளும், சம்பிரதாயங்களும் அங்கே முடித்து உறவுகளுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
ஸ்ரீநிவாசன் வீட்டிற்கு சென்று பால் பழம் உண்டுவிட்டு குருமூர்த்தி வீட்டிற்கு வர மாலையாகிவிட்டது.
நனியிதழிடம் இடையிடையே பேசிக்கொண்டாலும் முழுதாய் அவனால் நேரம் ஒதுக்கமுடியவில்லை.
என்னவோ அவன் ஒருவனே அனைத்து பொறுப்பையும் தூக்கி சுமப்பதை போல இரவு வரை பரபரப்புடனே தான் இருந்தான் குருஆர்யன்.
“இவனுக்கு இப்ப என்னவாம்? அதான் நாம பார்க்கோம்ல?…” என்று குருமூர்த்தியே அயர்ந்து போனார்.
“விடுங்க அவன் கல்யாணத்துல எல்லாம் அவனே பண்ணனும்ன்னு நினைக்கான் போல?…” தமயந்தி சொல்ல,
“இதுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணு. அப்பறம் அவன் பேசினான்னு வந்து நில்லு…” என்றவர்,
“இப்ப எங்க அவன்?…” என்றார்.
“மேனேஜர்கிட்ட பேசிட்டிருக்கான். வந்துருவான்…”
“சரி, சம்பந்தி வீட்டுல உள்ளவங்களை பாரு…” என்று மனைவியை அனுப்பி வைத்தார் குருமூர்த்தி.
சொந்தங்கள் அனைவரும் சுற்றி இருக்க நனியிதழ் கீதா, அனுஷாவுடன் அமர்ந்திருந்தாள்.
மது சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருக்க தமயந்தியும் அவர்களோடு வந்துவிட்டார்.
“அனு நீ நதி கூட இரு. வந்திடறேன்…” என்று எழுந்து சென்ற கீதா என்னவென கேட்க,
“நைட் சடங்குக்கு நேரம் குறிச்சு வாங்கியாச்சு. பத்தரை மணிக்கு…” என்றார் சுஜாதா.