“உன்னை தான் பார்க்க வந்தேன். பரத் என்னவோ பண்ணனும்ன்னு மாமாவோட சேர்ந்து ப்ளான் பண்ணிட்டிருக்கான்…”
“என்ன ப்ளான்? எதை பத்தி?…” என்றாள்.
“என் ரூம் டெகரேஷன் பத்தி. எதையாச்சும் கொசகொசன்னு பண்ணிடாம. நான் சொல்லிட்டேன். ஆனாலும் கேட்கமாட்டான். நீ பேசிடு…”
“அப்போ ஒண்ணுமே பண்ண வேண்டாமா?…”
“முழுசா கேட்டுட்டு பேசுக்கா. இருக்கற எல்லா பூவையும் கொட்டிடாம…” என்றவன்,
“சரி நான் மாமாகிட்டையே சொல்லிக்கறேன். நீ அவரை கூப்பிடேன். கால் போகலை. எங்கன்னும் தெரியலை…”
“அப்பாவோட பேசிட்டிருந்தாங்க. இரு கூட்டிட்டு வரேன்…”
“இல்ல கால் அட்டன் பண்ண சொல்லு. போதும்…” என்று சொல்லும் பொழுதே அவன் முகமெல்லாம் சிவந்துவிட்டது.
“ஆரி…” என்று மது தம்பியின் முகத்தை பார்க்க,
“ப்ச், கிளம்பு. அவ வரா…” என்றான் அதட்டி.
“சரி சரி…” என்ற சிரிப்புடன் மது நகரவும்,
“சொல்லுங்க. கூப்பிட்டீங்க?…” என்றாள் நனியிதழ்.
“இதுதான் உன் நைட் வியரா?…” என்று அவளின் புடவையை பார்த்து கேட்கவும் அவள் விழிகள் விரிந்துகொண்டது.
“ஓகே ஓகே. அதுக்கு கூப்பிடலை. ஏன் அவ்வளோ சத்தமா என்னன்னு கேட்ட?…” என்றான் குருஆர்யன் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி.
“என் குரல் உங்களுக்கு கேட்கனுமே? எப்பவும் என் வாய்க்கிட்டையே…” என்றவள் அவனின் கள்ளப்புன்னகையில் வார்த்தைகளை நிறுத்த,
“ஹாங், ஹாங். என்ன சொன்ன? கேட்கலை…” என்றான் அவள் முகம் பார்க்க குனிந்து.
“இதுக்கு தான் சத்தமா பேசினேன். போதுமா?…”
“ம்ஹூம். பத்தாது….” என்று ரகசியமாய் சொல்லியவன்,
“வாய்க்கிட்ட காதை மட்டும் தான் வைக்கனுமா?…” என்று கேட்டு,
“ஸ்டாப் இட்…” என்று சங்கோஜத்துடன் அவள் நெளிய, அவளின் அந்த தடுமாற்றத்தை கண்டு ரசித்தவன்,
“அந்த ஸ்லீப்பர் செல் எங்கம்மாவா? அக்காவா?…” என்றும் கேட்டான்.
தான் சொல்லியவை எல்லாம் அவளின் காதிற்கு சென்றிருக்கிறதே. அது அந்த இருவரையும் தவிர வேறு யாரை கொண்டிருக்க முடியும்?
“இதை என்கிட்டயும் நீங்க சொன்னீங்க தானே? அதனால எனக்கு தெரிஞ்சா என்ன?…”
“உனக்கு தெரியக்கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே? யார் சொன்னதுன்னு நான் தெரிஞ்சுக்க கேட்டேன் இதழ். மத்தபடி அவங்க சொன்னது நிஜம். என் மைன்ட்செட் அதுவா தான் இருந்தது. சொன்னேன்…” என்றான் படாரென்று.
“அதனால தான் நானும் சத்தமா பேசினேன்…” என்றாள் நனியிதழ் அவனை போலவே அசராமல்.
“ம்ஹூம். இனி பேசாத. எப்பவும் பேசற உன் வாய்ஸ் அப்படியே இருக்கட்டும்…” என்றவன் அவளின் பார்வையின் பாஷையில்,
“நான் உன் கிட்டவந்து கேட்டுக்கறேன். எனக்கு அதனால பிரச்சனை எதுவுமில்லை…” என்றான் அவன் விதித்ததை அவனே உடைத்து.
“யூர் விஷ்…” என்று மட்டும் சொல்லிவிட்டு சன்னமான சிரிப்புடன் நனியிதழ் அங்கிருந்து நகர குருஆர்யன் பார்வை அவளை பின்தொடர்ந்தது.
அனைத்தும் புதிதாய், வித்தியாசமாய், சிலிர்ப்பாய் என்னென்னவோ எண்ணங்கள் உள்ளுக்குள் இம்சையாய் அலைபாய்ந்தது.
அதன்பின் அவளை காண முடியவில்லை. குருஆர்யன் மற்றவர்களுடன் வந்தமர்வதும், அழைப்பு வந்தால் பேசிவிட்டு வருவதுமாய் இருக்க சிறிது நேரத்தில் வீடு அடங்க ஆரம்பித்தது.
மதுவும், கீதாவும் மட்டும் சிரிக்கும் சத்தம் கேட்க போன் பேசியபடி வந்த குருஆர்யன் மாடிக்கு செல்ல போக,
“ஆரி இருப்பா. இன்னும் டைம் இருக்கு. இப்பவே ஏன் போற?..” என்றார் தமயந்தி மகன் மேலே செல்வதை பார்த்ததும்.
“ம்மா…” என்று அவரின் பெரிய சத்தத்தில் கோபமும், சங்கடமுமாய் பார்த்தான்.
“இல்ல மேல…” என்றவர் மேலும் பேசும்முன் ஒன்றும் சொல்லாமல் இறங்கி கீழிருந்த தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான் அவன்.
“என்னம்மா? என்ன இது?…” என்றாள் மது.
“இல்ல மது அங்க மாப்பிள்ளையும், பரத்தும் இருக்காங்க. அதான்…” என்றவருக்கு என்னவோ போலாகிவிட்டது.
“சரி விடுங்க. அவன் சங்கடப்பட்டு போறான். அதுவும் இவ்வளோ சத்தமாவா பேசுவீங்க? நல்லவேளை எல்லாரும் தூங்கிட்டாங்க….” என்று கடிந்துகொண்டாள்.
நேரம் நெருங்கியிருக்க குருஆர்யனை அழைக்க யாரும் அறைக்குள் சென்றால் அவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.
தானே வருவதாய் சொல்லி வந்தவர்களை அனுப்பிக்கொண்டே இருக்க தமயந்திக்கு பயம் பிடித்துக்கொண்டது.
“அத்தை முதல்ல நதியை அனுப்புவோம். அப்பறம் ஆரி போன் கால் முடிச்சிட்டு போய்ப்பார்…” என்ற கீதா நனியிதழை அழைத்து செல்ல அறையில் அவனில்லாமல் அவள் மட்டுமே.
உள்ளே நுழைந்ததும் சுகந்தமான நறுமணம் அறையை நிறைக்க ஆழ்ந்து சுவாசித்தபடி இன்னும் உள்ளே சென்றாள்.
அவனின் அறை அவ்வளவு நேர்த்தியாய் அதிக பொருட்கள், புகைப்படங்கள் எதுவுமில்லாமல் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது.
அதிகமான புத்தகங்கள், புகைப்படங்கள், இல்லை ஓவியங்கள் இப்படி என்னென்னவோ அவள் யோசித்து வைத்திருக்க சுற்றிலும் சுவரும், அதில் கடிகாரமும் ஒரே ஒரு புகைப்படம் அவனின் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே இருந்தது.
ஆறு வயதில் எடுத்திருப்பார்கள் போலும். கைகளை கட்டிக்கொண்டு காலை அகற்றி வைத்தபடி அப்போதே அவனிடம் அந்த மிடுக்கு காணப்பட்டது.
“ஓஹ் கூடவே வளர்ந்தது போல?…” என்று சிரித்துக்கொண்டவள் திரும்பி பார்க்க படுக்கை முழுவதும் வெள்ளை மலர்கள்.
அதுவும் முல்லையும், மல்லிகையும் காம்பின்றி இதழ்கள் மட்டுமே பிரித்து மெலிதாய் தூவப்பட்டிருந்தது.
வேறு எந்த அலங்காரமும் இல்லை அதில். பார்த்தபடி அமர்ந்தவள் லேசாய் சாய்ந்து நேரம் சென்றதில் அப்படியே சரிந்து அயர்வில் உறங்கியும் போனாள்.
அவனின் வருகையை எதிர்பார்த்திருந்தவளுக்கு உறக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி ஒரு சோர்வு.
இங்கே குருஆர்யன் சுழல்நாற்காலியில் அமர்ந்தவாக்கில் விரலால் நெற்றியை தேய்த்துக்கொண்டிருந்தான்.
“இன்னும் எவ்வளோ நேரம்டா இங்கயே இருப்ப நீ?….” என்று பரத் வர,
“நீ இன்னும் தூங்கலையா?…” என்றான் சலிப்புடன் குருஆர்யன்.
“அநியாயம் பண்ணாத ஆரி. அம்மா நாங்க உன் ரூம்ல டெக்கரேஷன்ல இருக்கோம்ன்னு தான் சொன்னாங்க. என்ன ஒரு வேகத்துல சொல்லிட்டாங்க. உனக்கு தெரியாதா?…” என்று கேட்க,
“ப்ச், எனக்கு கால் வந்ததேன்னு அதுல இருந்தேன். அம்மா என்ன சொன்னாங்க?…” என்றான் அவன் தெரியாததை போலவே.
“என்ன சொன்னாங்கன்னு கேட்டா கவனிக்கலையான்னு நீ கேட்கற? ப்ச், ஒரு போன், அந்த டென்ஷன்ல இருக்கேன்…” என்றான் வேண்டுமென்றே.
“அப்படியா ஹப்பா. அப்ப சரி. நீ உன் ரூம்க்கு போ. நதி அப்பவே போயாச்சு. இப்பவே மணியை பாரு…” என்று பரத் சொல்லவும்,
“நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு…” என்று சொல்லியவன் எழுந்து யாரையும் பார்க்காமல் மாடிக்கு செல்ல தமயந்திக்கு அப்போது தான் உயிரே வந்தது.
“ம்மா, நீங்க வேற இவ்வளோ பயந்துக்கிட்டு. அவன் நீங்க என்ன சொன்னீங்கன்னு என்னை கேட்கறான். காதுலையே விழலை போல. ஏதோ போன்ல டென்ஷன்….”
“அப்படியா? இப்பதான் நிம்மதியா இருக்கு. இவனை வச்சுக்கிட்டு கேட்டானா இல்லையான்னு நான் வேற இவ்வளோ நேரம் பதறிட்டேன். நல்லவேளை கேட்கலை…” என்று சொல்லிவிட்டு உறங்க சென்றார் தமயந்தி.
இதையெல்லாம் கடந்து தன்னறை கதவை திறந்துகொண்டு வந்தவன் பார்வை நேராக நனியிதழ் மீது தான் படிந்தது.
பார்த்ததும் அதுவரை முகத்திலிருந்த கடுமை எல்லாம் பனியாய் கரைந்து போக கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தான்.
வேஷ்டியை மடித்து கட்டியபடி அவளருகில் வந்து பார்தத்தவன் முகத்தில் இப்போது ஒரு விரிந்த புன்னகை.
ஆழ்ந்த அயர்ந்த உறக்கத்தில் நனியிதழ். அவன் வந்ததை கூட உணரமுடியாமல் சீரான சுவாசத்துடன் படுத்திருக்க அவனின் விழிகள் அங்குலம் அங்குலமாய் அவளை கண்களுக்குள் சுருட்டிக்கொண்டது.
சிலநொடிகள் நின்று நிதானமாய் பார்வையிட்டு விழிகளால் படர்ந்து விரவி எழுந்தவன் சிறு தலையசைப்புடன், இதழோரம் துடித்தடங்கும் புன்னகையுடன் அறையின் விளக்கை அணைத்து மெல்லிய வெளிச்சத்தை படரவிட்டான்.
சத்தம் காட்டாமல் வந்து அவளருகே படுத்தவன் கைகள் அவளிடையை தழுவி தனக்கு நெருக்கமாய் அழுத்தம் கூட்டி இழுக்க,
“ம்மா…” என்று பதறி விழித்தாள் நனியிதழ்.
“ஹேய் இதழ், இட்ஸ் மீ….” என்றவனின் கரகரப்பான குரல் கொஞ்சமும் அவளை விலகவிடாத இறுக்கத்துடன் அவனின் வலிந்த கரங்கள்.
“ஊஃப், என்ன இது விளையாட்டு?…” என்று தலையை மட்டும் திருப்பி பார்த்தவளுக்கு மூச்சடைத்தது அவனின் நெருக்கமும் மூச்சுக்காற்றும்.
இருவருக்கும் இடையிலான சின்ன இடைவெளியில் அவர்களின் சுவாசக்காற்று ஒன்றையொன்று கோர்த்துக்கொள்ள சட்டென முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
“பயந்துட்டியா?…” மெல்லிய குரலில் கேட்டவன் சிரிப்பில் கலந்திருந்த சங்கேத பாஷை அவளை சிலிர்க்க செய்ய,
“ம்ஹூம்…” என்றாள் இன்னும் மெலிதாகிவிட்ட சின்ன குரலில்.
“பேசு இதழ். பதில் சொல்லனும் நீ…” என்றான் அவளை மொத்தமாய் தன் பக்கம் திருப்பி.
“ப்ச்…” என்று நனியிதழ் சப்தமெழுப்ப,
“கேட்கலை…” என்று சொல்லியவன் காதுமடல் அவளின் இதழ்களை தீண்டி உரச,
“சொன்னேனே, எனக்கு கேட்கலைன்னா என்ன செய்வேன்னு…” என்றவன் பேச்சுக்குரல் அவளின் கழுத்தில் படர்ந்து சூடேற்றியது.
அவனுக்கு சரிக்கு சரி வார்த்தையாட முடியாமல் புத்தம்புது உணர்வில், அவன் அருகாமையில் திண்டாடிக்கொண்டிருந்தாள் நனியிதழ்.
“கேட்கலைன்னா காதை வைக்கலாம். அப்போ நீ பேசலைன்னா?…” என்றவன் அவள் முகம் நிமிர்த்தி ஐவிரல் கொண்டு கன்னம் தாங்கியவன் பூவாய் அவளை தன் மீது சாய்த்து அவள் இதழ்களையும் தாங்கிக்கொண்டான்.
முத்தம், மோட்சம் பெற்று இருவரின் இடைவெளிகளை தகர்த்தது. அன்பின் வெளிப்பாடு. ஆராதிப்பின் ஆரம்பம் அங்கே கோலோச்ச ஆரம்பித்தது.
ஷணங்களின் நினைவூட்டலில் சின்ன சின்னதாய் ஒரு இளைப்பாறுதல். மீண்டும் மீண்டும் முற்றுகையிடல்.
மெல்ல விலகி அந்த அறையில் நிறைந்திருந்த வெளிச்சத்தில் அவள் முகம் பார்க்க விழிமூடி அவன் தோளில் சரிந்தாள் பெண்ணிதழ்.