ஆர்யாவின் வரவில் அவனின் அலுவலகத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக நேராக தன்னறைக்கு சென்றவன் தனது உதவியாளனை அழைத்தான்.
“சேனல்ல இருந்து வந்துட்டாங்களா?…” என தனது கை கடிகாரத்தை பார்த்தவன் ஆனந்திடம் கேட்க,
“இப்போ தான் கால் பண்ணினாங்க ஸார். பத்து நிமிஷத்துல வந்திடுவாங்க….” என்றான் அவன்.
“அந்த பிளேஸ்ல எல்லாம் ஓகே தானே? எந்த தொந்தரவும் இருக்காதே?…”
“நோ ஸார். பக்காவா ரெடி. அந்த வீதில நாம ரீச்சாகற டைம்ல பவுன்சர்ஸ் வந்திருவாங்க. லோக்கல் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணியாச்சு. அப்படியே அந்த டீஸ்டால்ல கூட உங்களுக்கு குடுக்கவேண்டியது பக்காவா ரெடி. நம்மாள் ஒருத்தன் அதுக்குள்ள இருப்பான்…”
“பப்ளிக்…”
“அதை பவுன்சர்ஸ் பார்த்துப்பாங்க. ஆல்மோஸ்ட் அந்த வீதி மட்டும் லாக் பண்ணினா மாதிரி தான் இருக்கும். நம்ம டீம் மட்டும் தான் இருப்பாங்க…”
ஆனந்த் வரிசையாக சொல்ல சொல்ல தலையசைத்த ஆர்யாவின் கைகள் எதையோ எழுதியபடி இருந்தது.
அவ்வப்போது அவனுக்கு புதிதாய் தோன்றும் விஷயங்களை எழுதிவைத்துக்கொள்வது அவனின் வழக்கம்.
இப்போதும் அதை செய்துகொண்டிருந்தாலும் ஆனந்தின் பேச்சுக்களிலும் கவனம் இருந்தது.
“நாம இங்க இருந்து கரெக்ட் டைம் புறப்படனும். அவங்ககிட்ட திரும்பவும் சொல்லிடு ஆனந்த். சொன்ன டைம்க்கு எனக்கு இண்டர்வ்யூ முடிச்சிடனும்…” என்று கூற,
“ஓகே ஸார்…” என்று பவ்யமாய் சொல்லிவிட்டு வெளியே வந்தான் ஆனந்த்.
“என்ன ஆனந்த், முகத்துல இவ்வளோ டென்ஷன்?…” என்று ஆர்யாவின் மேனேஜர் அவனிடம் கேட்டார்.
ஆனந்திற்கு அடுத்ததாக ஆர்யாவின் படம் சம்பந்தமான வேலைகளை கவனித்துக்கொள்வது மேனேஜர் தாமோதரன்.
“வழக்கம் போல தான். இவர் எப்ப என்ன செய்வார்னே தெரியலை தாமுண்ணே. திடீர்ன்னு மார்னிங் கால் பண்ணி கன்பார்ம் பண்ண சொல்றார் ஸார். எனக்கு ஒருநிமிஷம் ஒன்னும் புரியலை. நான் கூட ப்ரவன் ஸார் சேனலோன்னு நினைச்சேன். ஆனா இதை எதிர்பார்க்கவே இல்லை…”
“நானும் தான். சம்பந்தியாக போறாங்க. ஆனா இப்படி போட்டி சேனலுக்கு இண்டர்வ்யூ தரேன்னு நிக்கிறாரேன்னு யோசிச்சேன்….” என தாமோதரன் சொல்லிக்கொண்டிருக்க அதற்குள் அந்த சேனலில் இருந்து அழைப்பு.
“வந்துட்டாங்க போல. நான் ரிஸீவ் பண்ணிட்டு வரேன்…” என்று ஆனந்த் கீழே இறங்கி சென்றான் வேகமாய்.
வந்தவர்களை அழைத்துக்கொண்டு மேலே வந்த ஆனந்த் ஆர்யாவிற்கும் அழைத்து சொல்லி இருவரை அவனின் அறைக்குள் அழைத்து வந்தான்.
“ஸார், இவர்தான் இண்டர்வ்யூ பன்ற ஆங்கர், இவர் டைரக்டர்…” என்று இருவரை அறிமுகப்படுத்த,
“ஹலோ…” என்று எழுந்து நின்று கை குலுக்கினான் குருஆர்யன்.
“இப்ப தான் ஆனந்த் சொன்னார். இண்டர்வ்யூ லொகேஷன் வேறன்னு…” என்று தொகுப்பாளர் பேச,
“ஒரு சேஞ்ச்…” என்றான் ஆர்யா அவரிடம்.
பின் வந்தவர்களுக்கான முதல்நிலை உபசரிப்பு நடைபெற்றது. முதற்கட்ட அறிமுக பேச்சுவார்த்தையாக அவனின் அலுவலக அறையில் சில கேள்விகள் கேட்கப்பட்டு பதில் வாங்கிக்கொண்டனர்.
அந்த அறையில் ஆர்யா வாங்கிய விருதுகள், அவனின் ஆரம்பப்பயணம் என எல்லாம் அங்கிருந்த புகைப்படங்கள் என சிலவற்றை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.
வரவேற்பு அறையில் நின்று அடுத்த ஓரிரு கேள்விகள் என ஆரம்பித்து ஆர்யாவின் காரில் சில பேச்சுக்கள் என்று தொடர்ந்து அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பகுதிக்கு வந்திறங்கினார்கள்.
அந்த விஸ்தாரமான வீதி மிகவும் அமைதியாகவும் மாலை வெயிலின் இதத்தோடும் இருந்தது.
மஞ்சள் சரக்கொன்றை மரம் வீதியில் வரிசையாக நின்றிருந்தது. காரிலிருந்து இறங்கியதும்,
“அங்க ஒரு ஷாட் எடுத்திடலாம்…” என்ற இயக்குனர் ஆர்யனை நிற்க வைத்தும், சில அடிகள் நடக்கவைத்தும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.
அதன் பின் அவனுடன் அடுத்தடுத்த கேள்விகள் துவங்க பேசிக்கொண்டே அவர்கள் முன்னேறி நடக்க அந்த டீக்கடையின் அருகில் வந்து நின்றனர்.
வட்டமேஜை போடப்பட்டு ஓரிருவர் அங்கே தேனீர் அருந்தியபடி அமர்ந்திருக்க ஆர்யாவுக்கும், கேள்வி எழுப்புவருக்கும் இருக்கை அங்கே போடப்பட்டது.
அங்கே நின்றவர்கள் ஆர்யாவிடம் வணக்கம் சொல்வதும், அவர்களிடம் அவன் ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் என்றிருக்க அதையும் வீடியோவில் பதிந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பிரமிப்பை உண்டாக்கும் வகையில் தான் அந்த காட்சி அமைப்புகள் இருந்தது.
‘எத்தனை எளிமையான இயக்குனர்? இப்படி மக்களோடு மக்களாக கலந்து பழகுகின்றானே என்ற எண்ணத்தை ஆணித்தரமாய் விதைக்க கூடிய விதமாக தான் இருந்தது.
அனைத்துமே திட்டமிடப்பட்டது என்பது மக்களின் பார்வைக்கு செல்ல போவதில்லை என்பது தான் மெய்யிலும் மெய்.
அங்கிருந்தவர்களுக்கு டீ வழங்கப்பட அதனை பருகியபடி அவரின் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லலானான் குருஆர்யன்.
“அரசியல் வாரிசு மாதிரி சினிமா வாரிசு. இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? ஏனா தயாரிப்பாளர் மகனா தான் நீங்களும் இந்த பீல்ட்ல நுழைஞ்சிருக்கீங்க. அந்த ஷேடோ உங்களையும் தொடர தானே செய்யுது?…” என்றவரின் கேள்விக்கு அமர்த்தலாக புன்னகைத்தான் குருஆர்யன்.
“ப்ரடியூசர் பையன், நெப்போட்டிசம்ன்னு ஈஸியா சொல்றாங்க. யார் உழைப்பையும் தட்டிப்பறிச்சு நான் முன்னேறலை அகில். என் திறமைக்கு மட்டும் தான் இங்கே மதிப்பு. அதனால தான் இப்ப இந்த இடத்துல நிக்கறேன். யாரையும் பிடிச்சு தள்ளிவிட்டு அவங்க இடத்துல நான் நிக்கலை….” என்றான்.
அவன் குரல் இலகுவாய் இருந்தாலும் வார்த்தையின் தகிப்பை அனைவராலும் உணரமுடிந்தது.
“என்னோட இந்த வளர்ச்சி மத்தவங்களுக்கு கஷ்டம்ன்னா அதுக்கு நான் எதுவும் பண்ணமுடியாது. எதுவுமே செய்யமுடியாதுன்ற சூழ்நிலையில அவங்க கையிலெடுக்கற டேக் இந்த நெப்போட்டிசம்…” என்றவன்,
“தயாரிப்பாளர் மகன்றதனால அறிமுகங்கள் கிடைக்கும். இந்த துறைக்குள்ள வேணும்னா நுழைய முடியுமே தவிர ஜெயிக்கிறதெல்லாம் என் கையில தானே? என் கிட்ட அந்த திறமை இல்லைன்னா நான் இயக்குனர் குருஆர்யன் இல்லை. வெறும் தயாரிப்பாளர் குருமூர்த்தியோட மகன்ற அடையாளம் மட்டும் தான்…” என்றான்.
கேள்வி கேட்டவனுக்குமே அதிலிருந்த நியாயம் புரிந்தது. ஆனாலும் பரவலாக பேசப்படும் பேச்சுக்கள் இதுதானே?
“இப்ப நீங்க இண்டர்வ்யூ எடுக்கறது இயக்குனர் குருஆர்யனையா? இல்லை தயாரிப்பாளர் மகன்றதனாலையா?…” என்ற கேள்விக்கு,
“கண்டிப்பா குருஆர்யன் அப்படின்ற தனிப்பட்ட மனுஷனை தான். அதுவும் தேசிய விருது வாங்கியிருக்கீங்க. உங்களோட இந்த ‘கனல் தாரகை’ படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. கண்டிப்பா உங்களை அந்த டேக்லைன்ல நிறுத்த முடியாது ஆர்யன்…” என்றார் பேட்டி எடுப்பவர்.
“இனி இந்த இண்டர்வ்யூ பார்க்கிறவங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன். உங்களோட ரசிகர்களுக்கும் புரியும். புரியாதவங்களுக்கும் புரியவச்சிடுவாங்க…” என்றும் அவர் சொல்ல,
“யாருக்கும் யாரையும் புரியவைக்க வேண்டாம். அது என் வேலை இல்லை. என் படத்தோட கதாப்பாத்திரங்களை வேணும்னா நான் என் இஷ்டப்படி வளைக்கலாம். வடிவமைக்கலாம். அது திரைக்கதைக்காக மட்டும். மக்கள், ரசிகர்கள் எல்லாம் அப்படி இல்லை….” என்ற ஆர்யா,
“இந்த விஷயம்ன்னு இல்லை. எதுவா இருந்தாலும் அவங்கவங்களுக்கு யோசிக்கிற பக்குவம் வேணும். அது தானா தான் வளரும். யாரும் சொல்லி வளர்றது இல்லை…” என்றான் தெளிவுடன்.
“வாவ் ஆர்யன். உங்களோட படங்களை போல, அதிலிருக்கற வசனங்களை போலவே இப்பவும் நச்சுன்னு சொல்லிட்டீங்க…” என கை தட்ட,
“திரைப்படம், திரைக்கதை வேற. அது நாம காண்கிற கனவு மாதிரி. நிஜமில்லை. போல்டான கதாப்பாத்திரத்துல நடிக்கிறவங்க நிஜமாவே அப்படி தான் இருப்பாங்கன்னு நாம எதிர்பார்க்க முடியாது. இதுக்கு நானும் விதிவிலக்கில்லை. இதை கை தட்டலுக்காக சொல்லலை…” என்றான் குருஆர்யன்.
பேட்டி எடுப்பவருக்குமே அவனின் இந்த பதில் ஆச்சர்யம் தந்தது. அந்த துறையில் இருந்துகொண்டு அதை பற்றியே இப்படி ஒரு பதில் தருவது திகைப்பளிக்க தான் செய்தது.
குருஆர்யன் அதிகத்திற்கும் பேட்டிகள் கொடுத்ததில்லை. கொடுத்தவற்றிலும் நறுக்கென்ற பதில்கள் தான்.
“வாவ் ஆர்யன். நெக்ஸ்ட், எப்படி கனல் தாரகை மாதிரி ஒரு திரைக்கதைக்கு புதுமுக கதாநாயகியை தேர்ந்தெடுத்தீங்க?….” என்றவருக்குமே அந்த தேர்வில் வியப்பு.
அதில் நாயகியாக நடித்திருப்பவள் புதுமுகமட்டுமல்ல, பெரிதாய் அழகென்பதும் இல்லை. ஆனால் அந்த விழிகளும், முகபாவங்களும் தான் அங்கே அளப்பறியா வரவேற்பை பெற்றது.
அந்த கதாப்பாத்திரம் பற்றியும், திரைப்படம் பற்றியும் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகம் மொத்தமும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் இன்றளவும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
முன்னணி நாயகிகள் கூட வெளிப்படையாகவே இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று சொல்லும்படியான படைப்பு அது.
“நடிப்புன்னு இல்லை சில வேலைகளுக்கு பாதி தெரிஞ்சவங்க, முழுசா தெரிஞ்சவங்களை விட எதுவுமே தெரியாதவங்களை நம்மோட எதிர்பார்ப்புக்கு எத்தவிதமா மோல்ட் பண்ணிடலாம். இந்த படத்தின் அறிமுக நாயகியும் அப்படித்தான்…” என்றவன் மீண்டும் எழுந்து நின்றான்.
இன்னும் ஓரிரு கேள்விகள் தான் எஞ்சி இருந்தது. இதோ முடிந்துவிடும் என்றிருக்க,