“அவர் பெரிய ப்ரடியூசர். பார்க்கலாம். வாய்ப்பிருந்தா பண்ணலாம்…” என்று சொல்ல தூரத்தில் சிறு சலசலப்பு.
அனைவரின் கவனமும் அங்கே குவிந்தது. பவுன்சர்கள் இருவரிடம் இரு இளம்பெண்கள் என்னவோ சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் மறுத்து பேசினார்கள்.
குருஆர்யனுக்கு அவர்கள் தன்னை பார்க்கத்தான் முயல்கின்றனரோ என்று தோன்ற ஆனந்தை பார்த்தான்.
“வாட் ஹேப்பண்ட்?…” என அகில் எழுந்து செல்ல அதற்குள் அதில் ஒரு பெண் வேகமாய் பாதுகாப்பிற்கு நின்றவர்களை தாண்டிக்கொண்டு நுழைந்தாள் மாந்தளிர் வர்ண குர்தி அணிந்திருந்தவள்.
“ஆனந்த்…” என்று குருஆர்யன் பல்லை கடிக்க,
“நான் மேனேஜ் பன்றேன் ஸார். உங்க ஃபேன் கேர்ளா இருப்பாங்க போல…” என்று அவனும் செல்லும் முன் அகிலிடமும், கேமராமேனிடமும் அப்பெண் என்னவோ சொல்ல குருஆர்யன் காதில் எதுவும் விழவில்லை.
அவள் முகத்தில் அத்தனை பரபரப்பு. எதயோ அவசரமாய் சொல்லியவள் இதழசைவு மட்டுமே அவனுக்கு தெரிந்தது.
இத்தனைக்கும் அதிக தூரமும் இல்லை. சற்றே அருகில் தான் நின்றிருந்தான் குருஆர்யன்.
அகில் என்னவோ சொல்ல அப்பெண்ணின் பார்வை இப்போது ஆர்யாவிடம் வந்து மீண்டது.
“ஆனந்த்…” என்று குருஆர்யன் அழைக்க,
“ஸார் எதோ எமர்ஜென்ஸியாம். ஹாஸ்பிட்டல் போறாங்களாம். இதுதான் ஷார்ட் ரூட்ன்னு இந்த வழி வந்திருக்காங்க. திரும்பி போனா சுத்தாம்…” என்று சொல்ல ஆர்யா மறுக்கும் முன் அந்த பெண் தூரத்தில் ஸ்கூட்டியோடு நின்ற பெண்ணை கையசைத்து அழைத்து,
“தேங்க் யூ ஸார்…” என்றாள் அகிலிடம்.
பவுன்சர்கள் ஸ்கூட்டியில் நின்ற பெண்ணை உள்ளே அனுமதிக்கவும் அந்த பெண் வர,
“நதி, என்னால முடியலை. நீ ட்ரைவ் பண்ணு…” என்றாள் ஸ்கூட்டியை கொண்டுவந்த பெண்.
தலையசைத்து அவளை பின்னே நகர சொல்லி ஸ்கூட்டியை கிளப்பியவள் அகிலிடமும், சேனல் குழுவிடமும் தலையசைத்துவிட்டு நகர,
“ஹே நதி ஆர்யாடி…” என பின்னால் அமர்ந்திருந்த பெண் சத்தமாய் கூவி சொல்ல, அதில் முன்னிருந்தவள் பார்வை குருஆர்யனையும் தொட்டு மீண்டது.
அவள் பார்வை எவ்வித பாவனையையும், உற்சாகத்தையும், ஆச்சர்யத்தையும் காண்பிக்கவில்லை.
‘காதல் தேவன் சந்நிதி, காண, காண, காண’ என்ற பாடல் டீக்கடையில் மெலிதாய் ஒலிக்க அவனை கடந்து சென்றாள் நதி என்றழைக்கப்பட்ட நனியிதழ்.
ஆர்யாவின் பொறுமை பறந்திருந்தது. தான் நின்றுகொண்டிருக்க தன்னை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் என்ன செய்திருக்கின்றனர் என்ற எண்ணம் மேலோங்கியது.
“ஸாரி ஸாரி ஆர்யன். மெடிக்கல் எமர்ஜென்ஸி போல. அதான்…” என்று அகில் சொல்ல,
“நோ இஷ்யூஸ்…” என்று மனதின் புகைமூட்டத்தை முகத்தில் காண்பிக்காமல் புன்னகைத்தவன்,
“டைம் ஓவர்…” என்றான் அதே புன்னகையுடன் அகிலை பார்த்து ஆர்யன்.
பதறி பார்த்தனர் சேனல் குழுவினர். கேமராமேன் என்ன என்று எட்டி பார்க்க ஆனந்த் கையை பிசைந்தான்.
“இல்லை ஆர்யன், அந்த பொண்ணுங்க திடீர்ன்னு வந்ததால தான். ஓகே இப்ப முடிஞ்சிரும் ப்ளீஸ்…” என அகிலும், இயக்குனரும் கேட்க,
“என்னோட அடுத்த ப்ரோக்ராமை நான் சேஞ்ச் பண்ண முடியாதே? எனக்காக வெய்ட் பண்ணுவாங்க. நான் முதல்லையே சொன்னேன் தானே?…” என்றவனை செய்வதறியாமல் பார்த்தனர்.
“ஓகே, ஒரு ஃபுல்ஃபில்லா இண்டர்வ்யூ குடுக்காம போக எனக்குமே தோணலை. உங்களுக்காக இருக்கேன்…” என அவர்களின் பதட்டத்தை கூட்டி, திணறவைத்து போனால் போகிறது என்பதை போல பெரியமனது செய்து அடுத்த கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தான்.
அவனின் பேச்சில் அகமகிழ்ந்து தான் போயினர் சேனல் குழு. தங்களுக்காக இத்தனை பெரிய உயரத்தில் இருப்பவன் இறங்கி வருகிறானே என்று அவர்களுக்கு புல்லரித்தது.
மேலும் ஓரிரு கேள்விகள் கேட்ட பின்பு வழக்கமாய் கேட்கப்படும் அந்த கேள்விக்கு வந்து சேர்ந்தனர்.
“உங்க கல்யாணம் எப்போன்னு தெரிஞ்சுக்கலாமா? இதை உங்க ரசிகைகளும் எதிர்பார்ப்பாங்க…” என்று கேட்க அழகாய் ஒரு புன்னகை.
பார்த்தவர்களுக்கு கதாநாயகனே என்று தோன்றியது அவனின் பார்வையும், புன்னகையும், முக வசீகரமும்.
“பண்ணிக்கலாம். இப்போ தான் என்னோட வீட்டுல ரெண்டு கல்யாணம் முடிவாகி இருக்கு. நல்லபடியா முடியும். அடுத்து என் கல்யாணம் தான். கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லி தான் பண்ணுவேன்…” என்றான் கண்சிமிட்டி புன்னகைத்து.
ஒருவழியாய் பேட்டியை முடித்துக்கொண்டு புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்ப குருஆர்யனும் புறப்பட்டான் அங்கிருந்து.
காரில் ஏறியவன் எதுவும் பேசாமல் அலுவலகம் நோக்கி செல்ல ஆனந்திற்கு அவனின் அமைதியில் பயந்து வந்தது.
தன் அறைக்குள் நுழையும் வரை மட்டுமே அந்த அமைதி முகம் அவனிடம். உள்ளே வந்ததும் ஆனந்தை வைத்து வாங்கிவிட்டான்.
“ஒரு ரூட் கிளியர் கூட பண்ணி வைக்க முடியாதா உனக்கு?இண்டர்வ்யூ எடுக்கும் போது எந்த இரிட்டேஷனும் ஆகக்கூடாதுன்னு தானே சொன்னேன். ஏன் நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் வழியா திருப்பிவிட முடியாதா? அந்த பவுன்சர்ஸ் இதை கூட சமாளிக்கலைன்னா எதுக்கு அவங்க?…” என கிழித்துவிட கந்தலாய் வெளியே வந்தான்.
“இப்ப அந்த ரெண்டு பொண்ணுங்க க்ராஸ் பண்ணி போனதால பெருசா என்னாகிருச்சு? ஜஸ்ட் கால்மணி நேரம் லேட்டாகிருச்சு. அதுலயும் அடுத்த கால்மணி நேரம் இவர் நான் கிளம்பறேன்னு அவனுங்களுக்கு பிபியை ஏத்திவிட்டு சமாதானம் செய்யவச்சு என்னம்மா ரிவெஞ்ச் எடுத்துட்டார்…” என பாத்ரூமினுள் வந்து முகத்தை மூடிக்கொண்டு சத்தமின்றி முணுமுணுத்தான் ஆனந்த்.
சில நொடிகள் தான். உடனே தன்னை சரி செய்துகொண்டு வெளியே வந்தவன் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
———————————————–
அந்த மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்ததுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தேடியபடி,
“பார்க்கிங் அந்த சைட்ன்னு நினைக்கறேன். நான் பார்க் பண்ணிட்டு வரேன். நீ உள்ள போ சபிதா…” என்றாள் நனியிதழ்.
“சீக்கிரம் வா. நான் உள்ள இருக்கேன்…” என சபிதா உள்ளே சென்றுவிட வாகனத்தை நிறுத்திவிட்டு தானும் பின்னால் சென்றாள் நனியிதழ்.
“இதோ இவ தான் டாக்டர் ப்ளட் டோனர்…” என்று சபிதா சொல்ல,
“வாம்மா…” என்று மருத்துவர் நனியிதழை உள்ளே அழைக்க,
“அப்பா கால் பண்ணினா இங்க இருக்கேன்னு சொல்லிரு சபி. ப்ளட் குடுக்கறதை சொல்லவேண்டாம். வீட்டுக்கு போய்ட்டு சொல்லிக்கலாம். இல்லைன்னா இங்க கிளம்பி வந்திருவாங்க எல்லாரும்…” என்றவள் நர்ஸ் அழைத்து சென்ற அறைக்குள் நுழைந்தாள்.
சரியானநேரத்திற்கு நனியிதழால் ரத்ததானம் செய்யப்பட அவசர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பத்து வயது சிறுவனை காப்பாற்ற முடிந்தது.
சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு சிறுவனின் பெற்றோரிடம் பேசிவிட்டு சபிதாவுடன் வீடு திரும்பினாள் நனியிதழ்.
“நாளைக்கு எத்தனை மணிக்கு கோவிலுக்கு போறீங்க நதி?…” என சபிதா கேட்க,
“காலையில அஞ்சு மணிக்கு இங்க இருந்து புறப்படனும்ன்னு சொன்னாங்க. கிளம்பிட்டு மெசேஜ் பன்றேன்…”
“ஒரு கல்யாண வீடு. நீ பிஸியா இருப்ப. கல்யாண பத்திரிக்கை வச்சு சாமி எல்லாம் கும்பிட்டுட்டு ப்ரீயாகிட்டு மெதுவாவே என்னை கூப்பிடு. என்ஜாய்…” என்ற சபிதா,
“ஆமா, நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் வராங்களா என்ன?…” என்று கேட்க,
“ம்ஹூம், நாங்க மட்டும் தான். அவங்களை இன்வைட் பண்ணலை. சாமி கும்பிடறது தானே? இதுக்கு ஏன்? ஓகே, டைமாச்சு. நீ கிளம்பு சபி…” என்றாள் நனியிதழ்.
தோழியை அனுப்பிவிட்டு கேட்டை திறந்துகொண்டு தோட்டம் தாண்டி நடந்து வந்தவள் உள்ளே நுழைய குடும்பம் மொத்தமும் திருமண பத்திரிக்கைக்கு மஞ்சள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தது.
“ஹப்பாடா பொண்ணு வந்துட்டா…” என்ற குரலில் நனியிதழ் முகத்தில் மென்னகை.