இப்போதும் சோர்வுடன் வந்தமர்ந்தவர் மாடியை பார்க்க அவரின் பார்வையை உணர்ந்து,
“அவன் கீழ டிஸ்கஷன் ரூம்ல தூங்கறான். இன்னும் எழுந்துக்கலை போல…” என்றார் தமயந்தி.
“ஓஹ், சரி வரட்டும்…” என்றவர் தலையை பிடிக்க,
“எதுவும் பிரச்சனையா?…” என்றார் தமயந்தி கணவரிடம்.
“ஹ்ம்ம்…” என்றவர் அனுஷாவை பார்க்க அவள் கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
“ப்ரவன் எதுவும் சொல்லலையாம்மா?…” என்ற குருமூர்த்தியின் கேள்வியில் அவள் மௌனமாக, பரத்தும் வந்துவிட்டான்.
அப்போது தான் அவனுக்குமே விஷயம் தெரிந்திருக்கும் என அவன் முகம் பார்த்தே புரிந்து போனது.
“கீதா தான் பேசினா…” என்றான். குருமூர்த்தி அனுஷாவிடம் பேசியதை கேட்டதனால் தானாகவே கூற,
“என்னன்னு சொல்லுங்கப்பா. இப்படி அமைதியா இருந்தா படபடன்னு வராதா?…” மதுஸ்ரீ டென்ஷனாகிவிட்டாள் இந்த சூழ்நிலையை கண்டு.
“எல்லாம் உன் சின்ன தம்பி செய்யற வேலை…” என்ற குருமூர்த்தி பரத்தை பார்க்க,
“ஆரி டைரக்ட் பண்ணின மூவிக்கு இப்ப நேஷனல் அவார்ட் கிடைச்சதே. சிறந்த நடிப்புக்கு அந்த ஹீரோயினுக்கும், சிறந்த இயக்குனருக்கு ஆரிக்கும். அதுக்கு இண்டர்வ்யூ பண்ண ப்ரவனோட சேனல்ல இன்வைட் பண்ணியிருக்காங்க. ஆரி நோ சொல்லியிருக்கான் போல…” என்றான்.
தமயந்தி அனுஷாவிடம் ‘அப்படியா?’ என கேள்வியாய் பார்க்க ‘ஆமாம்’ என தலையசைத்தாள் அனுஷா.
“லாஸ்ட் ஒன் வீக்கா அவன் அவார்ட் வாங்கினதுல இருந்தே நிறைய சேனல் கேட்டுட்டு தான் இருக்காங்க. அவன் தான் நோ சொல்லிட்டே இருக்கான். நேத்து அத்தான் பேசறப்போ கூட சொல்லியிருப்பான் போல?…” என மதுஸ்ரீ தம்பிக்கு பரிந்து பேசி வர,
“இப்ப பிரச்சனை அது இல்லம்மா மது. எந்த சேனலுக்குமே இண்டர்வ்யூ குடுக்கலைன்னா வேற. ஆனா இவன் ப்ரவன் சேனலுக்கு ஆப்போஸிட் சேனலுக்கு இன்னைக்கு ஈவ்னிங் அப்பாயிண்மென்ட் குடுத்திருக்கான்…” என குருமூர்த்தி சொல்ல,
“வாட்?…” என திகைத்துவிட்டாள் மதுஸ்ரீ.
அந்தநேரம் ஆர்யா கதவை திறந்துகொண்டு விசிலடித்தபடி வெளியே வர அனைவரிடத்திலும் சட்டென அமைதி.
அவள் முகத்தில் அத்தனை வாட்டம். காதலித்தவன், கணவனாக போகிறவன் மனம் வருந்தி ஆற்றாமையுடன் பேசியிருக்க உள்ளுக்குள் அமிலம் சுரந்தது.
காதலித்த இத்தனை வருடங்களில் அவளிடம் முதன்முதலில் முகம் காண்பித்திருந்தான் ப்ரவன்.
அதில் அவள் அச்சத்தில் இருக்க உணவு இறங்குமா என்றெல்லாம் தெரியவில்லை.
“என்ன அனுக்குட்டி?…” என பரத் தங்கையிடம் வந்தவன்,
“நீங்க போங்கப்பா, நான் கூட்டிட்டு வரேன்…” என தகப்பனை அனுப்பினான்.
“நீங்க போங்கண்ணா. சாப்பிடுங்க. எனக்கு பசிக்கலை…” என்று பரத்திடம் சொல்ல,
“ப்ரவன் ரொம்ப கோபமா பேசிட்டாரா?…”
“அப்படின்னும் சொல்ல முடியாது. ஆனா நல்லாவும் பேசலை. வெடிங் கார்ட்ஸ் வந்திருச்சுன்னு சொல்ல தான் கால் பண்ணேன். அவாய்ட் பண்ணினார். சரி வேலையோன்னு நினைச்சேன். திரும்ப அவரே கூப்பிட்டு பேசினார்…” என சொல்லி முடிக்கும் முன் கண்ணில் நீர் திரையிட்டுவிட்டது.
“அட என்னடா இது? இதுக்கு போய் அழுதுட்டு. உன் அண்ணி கூட தான் என்கிட்ட இந்த விஷயத்தை சொன்னா. ஆனா வருத்தமா கூட இல்லை. இப்படியாம் அப்படின்னு ஒரு இன்பர்மேஷன்…” என்றவன் முகத்தில் புன்னகை.
அப்படித்தான் அவனிடம் விஷயத்தை விவரமாக சொல்லியிருந்தாள் கீதா. அலட்டிக்கொள்ளாத பாங்கும், பக்குவமும் தான் அவளிடம் அவனை ஈர்த்த ஒன்று.
“இது ஃபேமிலி, இதுல பிஸ்னஸ் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டேன் பரத். அவங்கவங்களுக்குன்னு சுயவிருப்பம் இருக்கும். இதை பேமிலி கமிட்மென்ட்டுக்காக விட்டுக்கொடுக்க முடியாது. எனக்கு பிடிக்காது. பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்…” என்றிருந்தாள் பளிச்சென்று.
அனுஷா இன்னும் தெளியாமல் இருந்தாள். காரணமே இன்றிய ஒரு பயம் அவளுள் எழுந்து நின்றது.
“முதல்ல நீ சாப்பிட்டு அனு. மத்ததை அப்பறமா யோசிக்கலாம்…” என்று தங்கையை சமாதானம் செய்துகொண்டே அவளை அழைத்து வர,
“எந்த சேனலுக்கு இண்டர்வ்யூ குடுக்கனும் என்னன்னு நான் தானப்பா டிஸைட் பண்ணனும். ஃபேமிலி, ரிலேட்டிவ்ஸ்ன்னு ஹேஷ்டேக் இருந்தா அவங்களுக்கு முன்னுரிமை குடுக்க இது ஸ்கூல் அட்மிஷனா?…” என பேசிக்கொண்டிருந்தான் ஆர்யா.
“ஆரி, என்ன இது?…” பரத் கடிந்து பார்க்க,
“என்னோட பதில். இந்த சேனல் அப்ரோச் எனக்கு பிடிச்சிருந்தது. ஓகே சொல்லனும்ன்னு தோணுச்சு, சொன்னேன்…” என்றவன்,
“என்னோட பிரபஷன்ல நான் தான் முடிவெடுக்க முடியும். இதுக்குள்ள ஏன் குடும்பத்தை கொண்டு வராங்க?…” என குருமூர்த்தியிடம் ஆரம்பித்து அனுஷாவிடம் திரும்பியவன்,
“ப்ரவன் என்ன சொன்னார்? அவர் சேனலுக்கு நான் இண்டர்வ்யூ குடுக்கனும்ன்னு சொன்னாரா? இல்லை அதெப்படி அங்க குடுக்க போச்சுன்னு ஹார்ஷா பேசினாரா…” என்றான் ஆர்யா.
அவன் கேட்டவிதத்தில் அனுஷா வாயை இறுக்கமாய் மூடிக்கொள்ள, மதுஸ்ரீ தலையில் கைவைத்துவிட்டாள்.
“அதெல்லாம் யாரும் எதுவும் பேசலை. விஷயம் கேள்விப்பட்டு அப்பாவா தான் கேட்டிருக்காங்க உன்கிட்ட….” என்றான் பரத்.
“ஓகே, நான் கிளம்பறேன்…” என்று உணவை முடித்துக்கொண்டு அவன் எழுந்து சென்றுவிட குருமூர்த்தி அதற்கு மேல் உண்ணாமல் அவரும் அறைக்கு சென்றுவிட்டார்.
“இதுக்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா உங்கப்பா தான். அவனை முன்னால விட்டு, முன்ன நிப்பாட்டி நிப்பாட்டி இப்ப அதுவே பழகிருச்சு. இப்ப ஒன்னும் செய்யமுடியாம நிக்கிறார் பாரு…” என்றார் தமயந்தி ஆற்றாமையுடன்.
“என் சின்னமகன் என்ன செஞ்சாலும் சரின்னு கைதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணினது யாராம்?…” என மதுஸ்ரீ முறைக்க,
“பிள்ளைங்க தெளிவா இருந்தா பெத்தவங்களுக்கு சந்தோஷமா தானே இருக்கும்…” என சமாளித்தார் தாயாய்.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை…” என்ற மதுஸ்ரீ,
“எல்லாரும் முதல்ல இந்த விஷயத்துல ஆரியை குறையா பார்க்கறதை நிறுத்துங்க. ப்ரவன் சேனல் அப்படின்றதால தான இன்னைக்கு இவ்வளோ யோசிக்கிறோம். இதுவே வேற யாரோடதா இருந்தா தலையிட்டிருப்போமா? ஆரி சொல்ற மாதிரி இதுல ஏன் குடும்பத்தை இழுக்கனும். விடுங்க…” என்றாள்.
“இங்க பாரு அனுஷா, இப்ப ஒன்னொண்ணுக்கும் ப்ரவன் என்ன சொல்லுவாங்க, ப்ரவன் வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சா எங்கண்ணன் எனக்காக செய்ய கூடாதான்னு தோண ஆரம்பிச்சிரும். உனக்காக அவன் உறவா என்னவேணா செய்யலாம். இது அப்படி இல்லை…”
தங்கையிடம் மதுஸ்ரீ கண்டிப்புடன் பேச பரத்திற்கும் அப்படித்தான் தோன்றியது.
அனுஷா தான் அதனை பெரிதாய் நினைத்துக்கொண்டிருந்தாள். அதுவும் முதல்தடவை ப்ரவனின் அலட்சியமும், பட்டுக்கொள்ளாத பேச்சும் அவளை தடுமாற செய்திருந்தது.