“இது ஒரு சின்னவிஷயம் காருனேஷ். கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாமே?…” என்றார் தேனப்பன்.
“நோ ஸார். இந்த ப்ராஜெக்ட் நான் பன்றதா இருந்தா நான் சொன்னது தான் முடிவு…” என்ற காருனேஷ் ஆர்யாவை பார்த்துவிட்டு,
“இப்ப உங்க பேனர்ல நான் ஒரு படம் பன்றேன்னா டாப் டைரக்டர் எல்லாம் விழுந்தடிச்சு வருவாங்க எனக்காக. என்னோட கால்ஷூட் கிடைக்காம எவ்வளோ பேர் தவமிருக்காங்க. என் ஃபேன் பேஸ் வொர்த் தெரியும் தானே? மார்கெட் உள்ள குதிரை நான்…” என்று அத்தனை மிதப்பாய் பேசிக்கொண்டிருந்தான்.
தேனப்பனுக்கு அத்தனை வருத்தம் இதில். அவர் சொல்லித்தான் காருனேஷை குருஆர்யன் பரிசீலித்து பார்த்து அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாகும் பட்சத்தில் அவனை ஒப்புக்கொண்டது.
அதுவே காருனேஷிற்கு தலையிறக்கமாக போய்விட்டது. முன்னணி நாயகர்கள் பட்டியலில் அவன் முதல் இடத்தில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்க, ‘தன்னை இவன் பரிசோதிப்பதா?’ என்று முதலிலேயே உரசல் தான்.
அதன்பின் குருஆர்யன் செய்யும் யாவிலும் அவனின் பார்வை குறையை மட்டும் தான் பார்த்தது.
முதலில் திருப்பதியாக இருந்த கதைக்களம். இப்போது தன்னைவிட நாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் என்பதை சுட்டி காண்பித்து தனக்கான முக்கியத்துவத்தை கூட்டும்படி சண்டித்தனம் செய்தான்.
“இது கதாப்பாத்திரத்துக்கான கதை. கதாநாயகனுக்கான கதை இல்லை….” என சொல்லிவிட்டான் குருஆர்யன்.
“ஸோ வாட்? இப்பலாம் மாஸ் ஸீன் குடுக்கறதுல ஒவ்வொரு ஹீரோவும் போட்டி போட்டுட்டு இருக்காங்க. எனக்கான மாஸ் இதுல எதுவுமில்லை…” என்று காருனேஷ் கேட்க,
“அதை எடுக்க நிறையப்பேர் இருப்பாங்க. என்னோடது திரைக்கதையை நம்பி தான்…” என்று சொல்லிவிட அப்போதைக்கு எதுவும் செய்யமுடியாமல் அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் கரைச்சல்.
ஆர்யாவின் திருமணத்தின் முன் அந்த திரைப்படத்திற்காக எடுப்பட்ட காஸ்ட்யூம் டெஸ்ட்டில் காருனேஷ் கோபம் எல்லை கடந்தது.
“இதென்ன ஆர்யன் காஸ்ட்யூம் எதுவுமே எனக்கு சரியில்லை. எல்லாமே ஒரே போல இருக்கு. மோஸ்ட்லி எனக்கு யூனிபார்ம் மாதிரி தான். அதுவும் டல் கலர்ஸ். இது எனக்கு சூட்டாகவே இல்லை…” என்றான் அந்த உடுப்புடன் தன்னை கண்ணாடியில் பார்த்துவிட்டு.
“இது ஆட் ஷூட் இல்லை. சூட், கோட் குடுக்க. அண்டர் மிடில்கிளாஸ் பையனுக்கு எப்படி இருக்குமோ அப்படி தான் காஸ்ட்யூம் குடுக்கமுடியும்…” என்றுவிட்டான் அழுத்தமாய்.
“எனக்கும் அது தெரியும்? ஏன் பிராண்டட் ஷர்ட்ஸ் எவ்வளவு இருக்கு? நீங்க ஸ்டிச் பண்ணி அது ஒருபக்கம் ஏத்தி இறக்கி. ஓஹ் காட். என்னோட கேர்ள்ஸ் ஃபேன் எல்லாம்…” என்றவனின் பேச்சை அதற்கும் மேல் பொறுக்கமுடியாதவன்,
“ஸ்டாப் இட். இது என்னோட படம். அதுல நான் உருவாக்கற கேரேக்டர்ஸ் என் பார்வைக்கு எப்படி இருக்கனும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்…” என்று அனைவரின் முன்பும் குருஆர்யன் கத்தியிருக்க,
“நாலஞ்சு படம் ஹிட் குடுத்துட்டா பெரிய டைரக்டர்ன்னு நினைப்பா? எத்தனை படம் பண்ணி நான் ஹிட் குடுத்திருக்கேன் தெரியுமா?…” என்றான் காருனேஷ்.
“நாலஞ்சா இருந்தாலும் நான் குடுத்த அத்தனையும் ஹிட் தான். உன்னை மாதிரி. ப்ச், என் இஷ்டப்படி தான் என்னோட படத்தை நான் எடுப்பேன். இஷ்டமிருந்தா ஸ்டே. இல்லையா? கெட் லாஸ்ட்…” என்றுவிட்டு குருஆர்யன் கிளம்பியிருந்தான் அன்றைய வாக்குவாதத்தில் இருந்து.
அதனை இப்போது தயாரிப்பாளர் வரை கொண்டுவந்து பிரச்சனையை பெரிதாக்கியிருந்தான் காருனேஷ்.
குருஆர்யன் இத்தனை பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம் என்பதை போல தேனப்பன் பார்த்தார்.
காருனேஷிற்கு நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் தேனப்பனுக்கு எவ்வித ஐயமும் இல்லை.
ஆனால் இப்படி பிடிவாதம் பிடிப்பவனை என்ன செய்து சமாதானம் செய்ய என்று ஒருபுறம் யோசனை.
இதை எல்லாம் விட இனி குருஆர்யன் காருனேஷை வைத்து இயக்க ஒப்புக்கொள்ளவேண்டுமே?
நிச்சயம் இதில் எதுவும் நிகழ போவதில்லை என்றாலும் ஒரு முறை முயற்சி செய்து தான் பார்ப்போமே என நினைத்தார்.
ஆனால் வந்ததில் இருந்து காருனேஷ் பேசுவது எல்லாம் அபத்தம். ‘இயக்குனரை மாற்றி நான் சொல்பவரை போடு’ என்று நின்றான்.
குருஆர்யன் முன்னிலையிலும் அவன் வார்த்தைகள் வேகமாய் வந்துவிட ஏற்கனவே என்னவோ உள்ளுக்குள் அவனை எரித்துக்கொண்டிருக்க இந்த நேரத்தில் இந்த பிரச்சனையா என்று குமைந்துகொண்டிருந்தவன் ஆத்திரம் எல்லை கடந்தது.
திருமணமான மறுநாளே இப்படி ஒரு பிரச்சனை. தேனப்பன் அழைக்காமல் வேறு யாராவது அழைத்திருந்தால் வந்திருக்கபோவதில்லை.
ஆனால் காருனேஷ் இதனை வேண்டுமென்றே செய்திருக்க ஒரு முடிவுடன் வந்தாகிற்று.
“இப்ப என்ன தான் சொல்ற?…” என்றான் குருஆர்யன் கைகளை தூக்கி நெட்டிமுறித்தபடி.
“ஹலோ மரியாதை…” காருனேஷ் அப்படி முறைத்தான் அவனை.
“நீ என்ன பெரிய இவனா? உனக்கு மரியாதை? எடுக்கற படத்துல கதாப்பாத்திரமா மாறி அதுக்கு உயிர் குடுக்கறவன் தான் நடிகன். நீ ஷோக்கேஸ் பொம்மையா வைக்க கூட லாயக்கில்லாதவன். உனக்கு மரியாதையா? போடா டேய்…” என்று சொல்ல,
“என்னை பார்த்து டேய்?…” காருனேஷ் பிபி எகிறியது.
“உன்னை பார்த்து தான் டேய். என்ன இப்போ?…” குருஆர்யனின் அந்த தொனியில் காருனேஷ் முகம் ஜிவுஜிவுத்தது.
“ஆர்யன், நான் சொல்றேன்…” என்று தேனப்பன் கையை பிசைய,
“நீங்க அவர்கிட்ட சொல்றதா இருந்தா என்னை கூப்பிட்டிருக்கவே கூடாது தேனப்பன் ஸார். அதை சாட்டவுட் பண்ணியிருக்கனும். என்னையும் வச்சுட்டு பேச சொல்லிட்டு இப்ப என்னை காம் பண்ண பார்க்கறீங்க?…” என்று சுள்ளென்று அவன் கேட்க அவரின் முகமே மாறிவிட்டது.
“என்ன ஆர்யன், மிரட்டற மாதிரி பேச்சு போகுது? இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் நான்…” என்றான் அவன்.
“நீ பயந்தா எனக்கென்ன? பம்மினா எனக்கென்ன?…” என்று அவ்விருக்கை விட்டு எழுந்தான் குருஆர்யன்.
“தென்?…” என்று தேனப்பனை பார்க்க,
“சால்வ் பண்ண தான் கூப்பிட்டேன் ஆர்யன். ஆனா…” தேனப்பன் திணற,
“சால்வ் எல்லாம் ஆகாது. என்னால இந்தாளுக்கிட்ட நடிக்க முடியாது…” காருனேஷ் விடைத்துக்கொண்டு நின்றான்.