“நல்லநேரத்துல கிளம்பனும்ன்னா நான் ஒருதடவை நீ ஒருதடவை தனித்தனியா உக்கார்ந்து சாப்பிட்டு கிளம்பறதா? வா வா. வந்து சேர்ந்து சாப்பிடு…” என்றான் குருஆர்யன் அதட்டலாக.
“ஒருநாள் ஒருபொழுது நம்மக்கிட்ட இதை சொல்லியிருப்பானா?…” தமயந்திக்கு அடுத்த பெருமூச்சு.
“இப்படி மூச்சு விட்டுகிட்டே இருக்கவேண்டியது தான். இந்த பசங்களே இப்படித்தான் ம்மா…” என்றாள் மது.
“என் பெரியப்புள்ளை அப்படி இல்லை…” என்று பரத்தை பாசமாக பார்க்க,
“நீங்க ஆரிய கூட நம்பிடலாம் த்தை?…” என்றாள் கீதா அவரிடம்.
“நான் அம்மா. எனக்கு நல்ல மகன்கள், நல்ல மருமகள்கள்….” மீண்டும் ஒரு பெருமூச்சு தமயந்தியிடம்.
“உன்னை தான சொல்றேன். வா….” என மீண்டும் நனியிதழிடம் ஆர்யா சொல்ல,
“இதை மட்டும் வச்சிட்டு வரேன்…” என்றாள் அவள்.
“ப்ச்…” என்று உறுமல் போல சொல்லிவிட்டு மனைவிக்கு தனக்கருகிலுள்ள இருக்கையில் பிளேட்டை திருப்பி வைக்க,
“ஆத்தே…” என்றார் தமயந்தி.
மகனின் செயலில் மயக்கம் தான் வந்தது. குருமூர்த்தியை அவர் பார்க்க ‘எப்படி?’ என்றார் அவர் நமுட்டு சிரிப்புடன்.
“வந்து உட்கார். எனக்கு வேற வேலை இல்லையா? ப்ரவன் வீட்டுக்கு போய்ட்டு நானும் வெளில போகனும்…” என்றான்.
“அதான் இவ்வளோ சொல்றான்ல நதிம்மா. தமயா வைப்பா. நீ உட்கார்…” என்றார் குருமூர்த்தி.
நதி கை கழுவிவிட்டு அவனருகில் அமர தமயந்தி கையில் பொங்கல் பாத்திரத்துடன் நேராக மகனிடம் தான் வந்தார்.
“சாப்பிட என் கூட உக்கார வைக்க இவ்வளோ சொல்லனுமா உனக்கு?…” என்றான் குருஆர்யன் நனியிதழிடம் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
பல்லை கடித்துக்கொண்டு அவன் பேசியவிதம் கேட்டு அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.
“அதான் வந்துட்டேனே? சாப்பிடுங்க. உங்களுக்கு இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கு…” என்றாள் அவள் சிரிப்புடன்.
“என்ன ஸ்பெஷல்? என்ன பண்ண?…” என்றான் குழைவுடன்.
குரல் குழைந்ததே தவிர முகம் அதே போல எதையும் காண்பித்து கொள்ளாத பாவனையுடன் தான் இருந்தது.
“அதை நான் வைக்கலாம்ன்னா நீங்க விடலை. அத்தை வைப்பாங்க…” என்று சொல்லியவள் வடையை பிட்டு சட்னியில் தோய்க்க, இன்னும் தமயந்தி பாத்திரத்தை கையில் தான் வைத்துக்கொண்டிருந்தார்.
“நீ செஞ்சியா? எனக்கா?…” என மனைவியிடம் கேட்டவன் மனம் துள்ள,
“என் முகத்துல என்ன இருக்கு ம்மா? வைக்க வேண்டியது தானே? சாப்பிட்டு கிளம்ப வேண்டாமா?…” என்றான் அதிகாரமாய்.
“வச்சுட்டேன்….” என்று சொல்லியவர் சட்டென கரண்டி நிறைய பொங்கலை எடுத்து அவனின் தட்டில் வைக்க பார்த்தவன் முகம் மாறியது.
“ப்ச், என்னம்மா? நான் தான்…” என குரலை உயர்த்தியவன், சட்டென வார்த்தைகளை விழுங்கிக்கொண்டவன்,
“என்ன இது?…” என்று தமயந்தியை அடக்கப்பட்ட சீற்றத்துடன் அஷ்டகோணலான முகபாவனையுடன் அவன் பார்க்க,
“நானில்ல. நதி தான் செஞ்சா. உனக்கு நேத்து புடிச்சதாமே?…” என்று சொல்லி, விட்டால் போதும் என்று அவர் நகர்ந்துவிட அனைவரின் பார்வையும் குருஆர்யன் மேல் தான் ஆர்வமாய்.
‘என்ன செய்ய போகிறானோ?’ என்று பார்த்தபடி அவர்கள் இருக்க இவ்விஷயம் தெரியாத ப்ரவனும், குருமூர்த்தியும் வேடிக்கை பார்த்தனர்.
“சாப்பிடுங்க…” என்றாள் நனியிதழ் அவனிடம்.
“ஹாங்…” என்றவன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்க,
“இன்னைக்கு ஊட்டி எல்லாம் விடமுடியாது. நீங்களே சாப்பிடுங்க…” என்று சிரிப்புடன் சொல்லியவள் தன் உணவை உண்ண,
“இவ வேற…” என்றான் முணுமுணுப்பாய் தலையில் கை வைக்காத குறையாய்.
“இப்படி மாமியார் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும் நதி. பார்த்தியா அத்தையை? எங்க உன் கிரெடிட் அவங்களுக்கு போய்டுமோன்னு எவ்வளோ பதட்டம்?…” என்றான் விஷ்ணு அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அப்போது தான் கணவனின் தயக்கத்தையும், மற்றவர்களின் கவனத்தையும் கவனித்தாள் நனியிதழ்.
நனியிதழ் இதனை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு சில உணவுகள் பிடிக்காதென்பதை அவன் ஒதுக்கத்திலிருந்து கவனித்தவள் தான்.
முதல்நாள் தன்னிடம் அத்தனை வம்பு செய்து அவன் வாங்கி உண்டிருக்க அத்தனை பிடித்தம் போல என்றுதான் ஆசையுடன் அவள் செய்தது.
தன் கையினால் வாங்கி உண்ண அவன் அடித்த குட்டிக்கரணங்கள் எல்லாம் தெரிந்திருந்தாலும் தெரியாததை போலவே கடைசி வரை வம்படித்து அவனே கேட்கும்படி செய்த பின் தான் அதனை அவள் ஊட்டியது.
ஆனாலும் மழைக்கால கூதல்காற்றை போல மனதை நிறைக்கும் ரசனை பொழுதுகள் அவை.
‘வெட்டி வீம்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று உள்ளுக்குள் சிரித்தவள் இப்போது என்ன செய்ய போகிறானோ என்று பார்த்தாள்.
“அட, நீ வாய மூடு மது…” என்ற தமயந்திக்கு கஷ்டமாக இருந்தது மகன் அமர்ந்திருப்பது.
முதல்நாள் போல இன்றும் அதனை எடுத்து சாப்பிட ஆரியால் சுத்தமாக முடியவில்லை.
தனக்கென அவள் முதன்முதலில் செய்தது. வேண்டாம் என்று விலக்கி வைக்க முடியாமல் தவித்தவன் தவிப்பை வீட்டினரின் கேலி பார்வை கோபத்திற்கு தள்ள பார்த்தது.
‘செய்யும் போதே சொல்லவேண்டியது தானே இவங்க? எல்லார் முன்னாடியும் படம் காமிக்க பார்க்கறாங்களே?’ என்று உள்ளுக்குள் கருவியவன் விரல்கள் அதனை தொட்டு பார்க்கவில்லை.
அனைவரின் பார்வையையும், குருஆர்யனின் அமைதியையும் பார்த்த நனியிதழ் அதனை தானே எடுத்துக்கொள்ள பார்க்க,
“ஆரி உனக்காக நதி ஆசைப்பட்டு முதல்தடவை செஞ்சிருக்கா. சாப்பிடுப்பா…” என்றார் குருமூர்த்தி மகனிடம்.
அவளுக்கு பதில் எதுவும் தரவில்லை. ஒரு கையில் பொங்கலை விண்டு வாயில் அவன் போட்டுவிட்டு அடுத்ததை எடுக்க, அதற்குள் நனியிதழ் எடுத்து உண்டுவிட்டாள்.
“போதும்…” என்று மட்டும் சொல்லியவள் வேறு யாரையும் பார்க்காமல் எழுந்து கையை கழுவிவிட்டு அறைக்கு சென்றுவிட குருஆர்யனும் அதற்குமேல் உண்ணவில்லை.
தானும் எழுந்துவிட்டவன் யாரையும் பாராமல் கையை கழுவிவிட்டு திரும்ப தமயந்தி திகைத்து போனார்.
“ஆரி…” என மதுஸ்ரீ அழைக்க,
“நீங்க சாப்பிடுங்க. நான் போய் கூட்டிட்டு வரேன்…” என சொல்லியவன் விறுவிறுவென நடந்துவிட்டான்.
“என்னம்மா?…” என்ற தமயந்திக்கு என்னவோ போலானது.
“என்ன பண்ணிருக்கீங்க? ஏன் தமயா அவனுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் வச்ச?…” என்றார் குருமூர்த்தி கண்டிப்புடன்.
“இல்லப்பா, நதி தான் செய்யனும்ன்னு…” என்ற மதுவை முறைத்தவர்,
“நீ என்ன சின்ன பிள்ளையா மது? நதி சொன்னா நீ சொல்லவேண்டியது தானே? என்ன விளையாட்டு இது?…” என்றவர் அவர்களை கண்டித்தாலும் மகனின் செயல்பாட்டில் திகைத்து தான் போயிருந்தார்.