“வாங்க கீழ போவோம்…” என்று திரும்பியவள் நகரும் முன் மின்னலாய் அவள் இதழ்களை உரசிவிட்டு குருஆர்யன் நகர்ந்து செல்ல, இமைக்கும் நொடியில் நடந்துமுடிந்த முற்றுகையில் சிலையாய் நின்றுவிட்டாள்.
படிக்கட்டுவரை நடந்து சென்றவன் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்திருக்க மீண்டும் திரும்பி பார்த்தான்.
நின்ற இடத்திலேயே அப்படியே திகைத்து நின்றிருந்தாள் நனியிதழ். பார்த்தவனின் இதழ்களில் விரிந்த புன்னகை வந்தமர்ந்தது.
மீண்டும் அவளை நோக்கி வந்தவன் விழிகள் அவளை மொத்தமாய் தனக்குள் வாரிக்கொள்ள நனியிதழ் முன் சொடுக்கிட்டு இருவிரலால் அவள் கன்னத்தில் கோடிழுத்துவிட்டு மெல்ல தட்டினான்.
“ப்ச், யாராவது பார்த்திருந்தா? ஒருநிமிஷம் ஷாக்காகிருச்சு…” என்றவள் சட்டென அவனின் கையை தட்டிவிட்டு வேறு யாரும் உள்ளனரா என்று பார்க்க,
“உன்னை கீழே கூப்பிட்டாங்களே? போகலையா?…” என்றவனின் நமுட்டு சிரிப்பில் லேசாய் முறைத்தவள்,
“உங்களை அப்பறம் வச்சிக்கறேன்…” என்று கீழே செல்ல போக,
“இப்பவும் ஃப்ரீ தான்…” என்றான் அடங்காத ஆசையுடன்.
“ஃப்ரீயா வேண்டாம். பிஸியா இருக்கும்போது சொல்றேன்…” என்று அவனை சீண்டிவிட்டு செல்ல சிரிப்புடன் தானும் உடன் இறங்கிவந்தான்.
“சாப்பாடு ரெடி. உட்காருங்க…” என சுஜாதா சொல்லவுமே உள்ளே எல்லாவற்றையும் பார்த்தவள்,
“மது அண்ணி…” என்று அவளை அழைத்துக்கொண்டு வந்து,
“இதுல எதெல்லாம் உங்க தம்பி சாப்பிடுவாங்க?…” என்றாள்.
“இப்பவும் நான் மாத்தி சொன்னா?…” மதுஸ்ரீ கிண்டலாய் வேண்டுமென்றே கேட்க,
“உங்க தம்பிக்காக இல்லை. எனக்காகவே நீங்க மாத்தி சொல்லமாட்டீங்க. சொல்லுங்க, சொல்லுங்க…” என்று மதுவை கேட்கவும் சிரித்துக்கொண்டே அதில் இருந்தவற்றில் சிலதை காண்பிக்க,
“ஹப்பா, நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க போங்க…” என்று அயர்ச்சியாய் தலையசைத்தாள் நனியிதழ்.
சாப்பிடும் நேரம் அவனுக்கு முன்பே இது வேண்டாம், அது வேண்டாம் என்று அவளே அவன் உண்ணாத உணவுகளை தவிர்க்க ஆச்சர்யமாய் பார்த்தான் குருஆர்யன்.
“என்கிட்ட கேட்கவே இல்லையே?…” என்று அவளிடம் கிசுகிசுத்தான்.
“ஃப்ரீயா இருக்கறவங்கட்ட கேட்க முடியாதே?…” என்று கேலியாக நனியிதழ் கூற,
“பிஸியா நான் வேணும். அதானே?…” என்றான் உணவை மென்றபடி.
“ஆமா…” என்றவள் பதில் சொல்ல,
“ஓகே, ஒரு நாலு நாள் ரெண்டுபேருமே பிஸியாகிடலாம்…” என்றவனின் பதிலில் அவள் என்னவென பார்த்து,
“அப்படின்னா?…” என்றாள்.
“அப்படின்னா அப்படித்தான். இப்ப நான் ஃப்ரீ. பதில் சொல்லமுடியாது. முடிஞ்சா நான் பிஸியா இருக்கும் போது நீ பதில் சொல்லேன். பார்ப்போம்…” என்றவன் அடுத்து அவள் கேட்டதற்கு எதற்கும் பதிலளிக்கவில்லை.
சாப்பிட்டு முடித்து அனைவரும் சென்று அமர ப்ரவனிடம் பேசிக்கொண்டிருந்த குருஆர்யனுக்கு குடிக்க மோர் கொடுத்தனுப்பினார் தமயந்தி.
“இந்தாங்க மோர்…” என்று நனியிதழ் நீட்ட, வேண்டுமென்றே திரும்பவில்லை அவன்.
“மோர்…” என்று மீண்டும் சொல்ல ப்ரவன் மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டு,
“கேட்டுச்சு. ஆனா கேட்கலை….” என்று அவனுக்கு கண்ணை காண்பித்துவிட்டு வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்க,
“எவ்வளோ நேரம் நதி கையிலையே வச்சிருப்ப? அதான் அவங்க பேசிட்டிருக்காங்க இல்ல? நீ கூப்பிட்டு எடுத்து குடு…” என்றான் நரசிம்மன்.
“சரிங்கப்பா…” என்றவள் கையில் தம்ளரை எடுத்து,
“உங்களுக்கு தான். பிடிங்க…” என்று நீட்ட, அப்போதும் அவன் வாங்கவுமில்லை. திரும்பவும் இல்லை.
“என்ன நீ? மொட்டையா என்னங்க என்னங்கன்னு? என்னம்மா நதி? முறை சொல்லி கூப்பிட வேண்டாமா?…” நரசிம்மன் டென்ஷனாகிவிட்டார் மகளின் செய்கையில்.
‘அப்படி சொல்லுங்க மாமனாரே. இதை சொல்ல இவ்வளோ நேரம்? ஒரு பாவான்ற அழைப்புக்கு இந்த பாடா?’ என்று கண்ணை மூடி ஆயாசமாய் தலையசைத்துக்கொண்டவன் மனைவியை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“உங்களுக்கு தான். வாங்கிக்கோங்க…” என்றவள் அவனின் பார்வையையும் கண்டுகொள்ள ‘அழைப்பேனா’ என்பதை போல் பார்த்தாள்.
“ஆமா என்ன சொல்லி கூப்பிட சொன்னாங்க உங்கப்பா?…” என்றான் தெரியாததை போல அவளிடம்.
ப்ரவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது ஒன்றுமறியாததை போல ஆர்யா கேட்டதில் வியப்பும் கூடவே எழுந்தது.
‘இவனுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?’ என்பதை போல தான் பார்த்திருந்தான் சந்தோஷமாய்.
“உங்க தக்கலை வீட்டை பராமரிக்கிறவங்களுக்கு ஒரு கால் பண்ணி நாங்க வரோம்ன்னு சொல்லி வீட்டை ரெடி பண்ண சொல்லுங்க…” என்றான் அவரிடம்.
“நாங்கன்னா?…” என்று தமயந்தி புரியாமல் கேட்க,
“நானும், என் வொய்பும். ரெண்டுபேரும் இப்ப தக்கலை கிளம்பறோம்…” என்றான் குருஆர்யன் தடாலடியாக.
“என்ன?…” என்று நரசிம்மன் மட்டுமல்லாது அனைவருமே திகைப்புடன் பார்க்க,
“சர்ப்ரைஸ். எனக்கே இப்ப கொஞ்சம் முன்னாடி தான் தெரியும் ஆர்யன் கேட்கும் போது…” என்றான் ப்ரவன்.
“இதென்ன இப்படி திடீர்ன்னு?…” நரசிம்மன் தடுமாறி பார்த்தார்.
முன்பே சொல்லியிருந்தால் அதுவேறு. அங்கே எல்லாம் ஏற்பாடு செய்திருக்கலாம். இப்போது இப்படி சொல்கிறார்களே என செய்வதறியாமல் நின்றார்.
“என்ன ஆரி, முதல்லையே சொல்லியிருக்கலாமே? ரிசப்ஷன் வேற இருக்கே?…” என்று குருமூர்த்தி சொல்ல,
“எனக்கு அங்க போகனும்ன்னு தோணுது. சொல்லபோனா…” என்று பேச இருந்தவன் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான்.
அதில் உள்ளுக்குள் அடக்கமுடியா எரிச்சல். முன்பை போல நினைத்ததை பேசிவிட முடியவில்லை. யோசித்து பேசவேண்டிய அவசியம்.
மாமனார் தான் அங்கே அழைத்து சென்றிருக்க வேண்டும். அதுதான் அவர்கள் வீடு. அதை கூற தொண்டை வரை வந்துவிட்ட வார்த்தைகளுக்கு தடைபோட்டான்.
பார்வை மனைவியை தீண்ட அவளும் அதிர்வில் தான் இருக்கிறாள் என்று புரிந்துபோக தலையை கோதியபடி தந்தையை பார்த்தான்.
“எப்போ, எப்படி கிளம்பறதா ப்ளான் ஆரி?…” என்றாள் மதுஸ்ரீ.
“ஆனந்த்கிட்ட டிக்கெட் அரேஞ்ச் பண்ண சொல்லிட்டேன். இன்னும் ரெண்டுமணி நேரத்துல ப்ளைட். திருவனந்தபுரம் போய் அங்க இருந்து ரோட் ட்ராவல்…” என்றான் கடகடவென்று.
திட்டமிடுதலில் அவனை மிஞ்ச முடியுமா? அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு முடிவெடுத்து சொல்பவனிடம் மறுக்க முடியுமா?
“போறதை பத்தி ஒண்ணுமில்லை. ஆனா…” நரசிம்மன் இன்னும் தெளியாமல் பார்த்தார்.
தான் தானே அழைத்திருக்க வேண்டும். அவருள்ளம் குத்திவிட்டது. குருஆர்யன் சொல்லவந்த வார்த்தையை சரியாக கண்டுகொண்டார் அவர்.
அதுவே அவரை தள்ளாட செய்ய, ‘என் குடும்பம், என் மனைவி என்று வாழ்ந்த வீட்டிற்கு என் மகளை, அவளின் கணவனை அழைக்காமல் போனோமே’ என்று சஞ்சலம் கொண்டார்.
“அங்க எல்லாம் நானே மேனேஜ் பண்ணிப்பேன். நாங்க பார்த்துப்போம்…” என்றவன்,
“என்ன மிஸஸ். குருஆர்யன், ரெடியா? இன்னும் கால்மணி நேரத்துல இங்க இருந்து புறப்படனும். க்விக்…” என்றான் குருஆர்யன்.
அதன்பின் திகைத்து நிற்க கூட நேரமில்லை. கடகடவென்று எல்லாம் எடுத்துவைத்து அனைவரும் சேர்ந்து விமானநிலையம் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
அப்போதிருந்து நனியிதழ் ஒன்றும் பேசவில்லை. நெஞ்சில் முட்டி மோதியது உணர்ச்சி அலைகள்.
மறுவீடு என்று ஸ்ரீநிவாசன் வீட்டிற்கு வந்ததும் சிறிதுநேரத்தில் அவனை நனியிதழ் அறைக்கு அழைத்து செல்ல சுஜாதா சொல்லியிருக்க, தன் அறையில் அங்கிருந்த தாயின் புகைப்படத்தை பார்த்து புன்னகை கண்டவன்,
“இப்ப தான் பார்க்கறேன். நீ உன் அம்மாவை மாதிரியே ஜாடை…” என்றான் குருஆர்யன்.
“ஹ்ம்ம், ஆமா. ஆனா அம்மாவோட போட்டோ தான் இங்க. அவங்க வாசம் எல்லாம் ஊர்ல எங்க வீட்டுல…” என்று அதனை வருடியபடி குருஆர்யனிடம் கூறியதை எண்ணி இப்போதும் புன்னகைத்தாள் அவன் விரல்களுடன் கை கோர்த்தபடி.
அலையாய் கடந்து செல்லும் வெண்மேக கூட்டங்களுக்கு மத்தியில் காணவியலாத வெண் நிழலாய் அவன் உணர்வுகள் அவளுள் சிறிது சிறிதாய் ஊடுருவிக்கொண்டே அவளுள் நிறைய ஆரம்பித்திருந்தது.