மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்துவிட்டனர் குருஆர்யனும், நனியிதழும்.
விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் அங்கே அவர்களுக்கான வாகனம் காத்து நிற்க கூடவே மூன்றுபேர் பாதுகாப்பிற்கு.
“இவங்க எப்போ வந்தாங்க?…” என்றாள் நனியிதழ்.
“சென்னை ஏர்போர்ட்ல நீ கவனில்லையா?…” குருஆர்யன் அவர்களுக்கு பின்தொடருமாறு தலையசைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தவன் மனைவியிடம் கேட்க,
“ம்ஹூம் இல்லையே…” என்றாள்.
நிஜமாகவே அவளின் கவனம் எல்லாம் குடும்பத்தினரிடம் இருக்க, நரசிம்மனிடம் இருக்க இதை எங்கே பார்க்க முடிந்தது?
“அதான் இப்போ கவனிச்சாச்சே? அவங்க நம்மோட காட்ஸ். நமக்கு செக்யூரிட்டி குடுக்க வந்திருக்காங்க…”
“அவ்வளோ பெரிய அப்பாட்டக்கர் நானில்லை…” என்றாள் மெல்லிய குரலில் கேலியாக.
“ஆனா நான் பெரிய அப்பாட்டக்கரே தான். அதனால எனக்கு பாதுகாப்பு வேணும்…” அவளை போலவே பதில் சொல்ல தோளை குலுக்கிக்கொண்டாள் நனியிதழ்.
அதற்குள் வீட்டிலிருந்து அழைப்பு. சென்று சேர்ந்தாகிவிட்டதா என்றுகுருமூர்த்தி அழைத்திருந்தார்.
“ஏர்போர்ட்லருந்து கிளம்பி முக்கால்மணி நேரமாகிருச்சு. இன்னும் ஒருமணி நேரத்துல தக்கலை ரீச்சாகிருவோம்…” என்று சொல்ல,
“ஓகே வீட்டுக்கு போட்டு பேசுங்க…” என்று வைத்துவிட்டார்.
குருஆர்யனிடம் பேசிக்கொண்டு வந்ததில் நனியிதழ் நரசிம்மனுக்கு அழைக்க மறந்திருக்க தன் கைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.
“நதிம்மா…” என்று அவரின் குரலில் அத்தனை கவலை.
தன் மகளை தான் அழைத்து செல்லாமல் போனோமே என்று ஸ்ரீநிவாசன், சுஜாதாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
குருஆர்யன் சொல்லவும் அவரின் மனதில் சம்மட்டியால் அடித்ததை போலொரு வலி.
மகளின் ஆசை அதுவாக நிச்சயம் இருந்திருக்கும். தான் என்ன கவனித்தோம் என்று உள்ளுக்குள் ரணப்பட்டு போனார்.
உடன் வருகிறோம் என்றும் சொல்லமுடியாமல் இருவரும் மட்டும் செல்கிறோம் என்றவனிடம் மௌனம் காக்கவேண்டியதானது.
“அங்க எல்லார்கிட்டயும் சொல்லி கூட்டம் சேர்த்துடாதீங்க. பீஸ்ஃபுல்லா இருக்க தான் அங்க போறோம். அதனால வீட்டை ரெடி பன்றவங்கட்ட மட்டும் சொல்லுங்க…” என்று கண்டிப்பாக சொல்லியிருந்தான் குருஆர்யன்.
‘அங்க சொந்தபந்தமின்னு அத்தனை பேர் இருக்காங்க. பார்க்க தான செய்வாங்க?’ என்று மற்ற நேரமாக இருந்தால் துடுக்காக அவனுக்கு நிகராய் பேசியிருப்பார் தான்.
ஆனால் பேசும் சூழ்நிலை இல்லை. அவரால் முடியவும் இல்லை. தலையசைத்துக்கொண்டவர் மௌனம் குருஆர்யனை என்னவோ செய்ய கிளம்பும் முன் தனியே மகளுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம் வந்தவன்,
“கொஞ்ச நாள் போகவும் எல்லாரும் சேர்ந்து போறப்போ நீங்க என்ன செய்யனுமோ செய்ங்க…” என்று அப்போதும் திண்ணக்கத்துடனே அவன் பேச,
“என்னவோ செய்யனும்ன்னா என்ன செய்யனுமாம்? மருமவன் வாராங்கன்னா ஒயிலாட்டம், மயிலாட்டமா வைப்பாங்க?…” என்றார் அவன் சொல்லியதில் உள்ளுக்குள் உவகையுடன் இருந்தாலும் அவரும் அவனை போலவே இடக்காக.