“நீ என்ன குழந்தையா? விட்டா இறங்கி நடந்திடுவ போல?…” குருஆர்யனுக்கு அவளின் சந்தோசம் கண்டு சிரிப்பு தான் வந்தது.
“எத்தனை வயசானாலும் அவங்கவங்களுக்கு அவங்க வீடு பெருசு தான். மனசு குழந்தை மாதிரி தான்…” என பதில் கொடுத்தவள் திரும்ப வீட்டின் கேட்டை திறந்துவைத்திருந்தனர் இவர்களுக்காக.
குமாரும், குமாரின் மனைவி பிள்ளைகள் என்று அத்தனைபேர் வரவேற்க நின்றிருந்தனர்.
“இப்படி இங்க கொண்டுவாங்க. காரை இங்க நிறுத்திவைங்க…” என்று குமார் கார் நிறுத்துமிடத்தை காண்பிக்க நனியிதழ் குருஆர்யனுடன் இறங்கிவந்தாள்.
“வாம்மா நதி, நல்லாருக்கியா? வாங்க தம்பி…” என்று அந்த குடும்பம் இருவரையும் வரவேற்க அவர்களின் பின்னால் பாதுகாவலர்கள் வேகமாய் வந்து நின்றனர்.
குருஆர்யனை ஒருவித பிரமிப்புடனும், ஆசையுடனும் அருகில் நின்று பார்த்தார்கள் அவர்கள்.
“ஆரத்தி எடு. பார்த்துட்டே இருக்க?…” என்று குமார் சொல்லவும் ஆலம் சுற்றப்பட்டு இருவரும் உள்ளே செல்ல,
“நைட் டின்னர் செஞ்சு வச்சுட்டேன் நதி. பால் ப்ரிட்ஜ்ல இருக்கு. கொஞ்சம் காய்ச்சியும் வச்சிருக்கேன். சாப்பிட்டு எடுத்துக்கோ. பழங்கள் வாங்கி வச்சிருக்கேன். வேற எதுவும் வேணும்னா கால் பண்ணு…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் குமாரின் மனைவி.
அவர்களை வழியனுப்பிவிட்டு நனியிதழ் உள்ளே செல்ல செக்யூரிட்டியிடம் பேசிவிட்டு அவர்களுக்கு உணவுக்கும் கொடுத்துவிட்டு உள்ளே வந்து கதவை சாற்றினான் குருஆர்யன்.
வீடு நன்றாக பெரிதாகவே இருந்தது. அந்தகாலத்து பாரம்பரிய தொட்டிகட்டு வீடு.
சுற்றிலும் பார்த்தவன் உள்ளிருந்தே வெளிப்பக்கம் எட்டி பார்க்க இருளில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் எதுவும் தெளிவாய் தெரியவில்லை.
சாரல் பெரிதாகி மழையாய் பெய்ய ஆரம்பித்திருக்க கூடவே காற்றும், அதில் இங்குமங்கும் உரசிக்கொள்ளும் ரப்பர் மரங்களின் அசைவுகளும் தான்.
அதனை பார்த்தவனுக்குள் சிலபல சிந்தனைகளும், காட்சிகளும் உருவெடுக்க மனதோரம் குறித்துக்கொண்டான் தன் திரைக்கதைக்கு.
“நீங்க குளிக்கறீங்களா?…” என்றாள் நனியிதழ் அவனிடம் வந்து தோள் தொட்டு.
“இன்னும் நீங்க பார்க்கலைல. வாங்க…” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சுற்றி காண்பித்தாள்.
கீழே எல்லாம் பார்த்துவிட்டு மாடிக்கு தன் தாயின் அறைக்கு அழைத்து சென்றாள் நனியிதழ்.
“இதுதான் அம்மாவும், அப்பாவும் இருந்த ரூம். அம்மா இருந்தவரைக்கும் இங்க தான் இருந்தாங்க. அப்பறம் அப்பா கீழே தங்கிகிட்டாங்க. எப்ப எல்லாம் மனசுக்கு கஷ்டமா இருக்குமோ அப்போல்லாம் அப்பா இங்க வந்திருவாங்க. நானும்…” என்றவள் அங்கிருந்த தாயின் ஒவ்வொரு பொருட்களையும் அவனிடம் காண்பித்து அதற்கொரு கதை கூறினாள்.
“அதெல்லாம் இல்லை. வேற ஒன்னு யோசிச்சேன் உங்கம்மாவை பத்தி…” என்று சொல்ல,
“என்ன யோசிச்சீங்க? கேளுங்க…” என்றாள் தாயின் உடையை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு.
“உங்கப்பாவை உங்கம்மா எப்படி கூப்பிடுவாங்க?…” என சாதாரணமாக கேட்பதை போல பேச்சுவாக்கில் கேட்டுவைக்க,
“அது வந்து…” என்றவள் சொல்லும்முன் அவன் இன்னும் தன்னருகில் வந்து நின்று,
“ஹ்ம்ம், சொல்லு…” என்றான் ஆர்வக்கோளாறாய்.
“சட்டுன்னு ஞாபகம் வரலையே?…” என்று தெரியாததை போல உதட்டை பிதுக்க,
“நிஜமா தெரியாது…” என்றான் நம்பமுடியாமல்.
பதில் சொல்லாமல் இதழ்களுக்குள் அவள் சிரிப்பை விழுங்க வேண்டுமென்றே செய்கிறாள் என தெரிந்துபோனது.
“கொழுப்பு அவ்வளவும்…” என்றவனின் ஒரு இழுப்பில் அவனும் மேல் மோதி நின்றவளின் இதழ்கள் அவனிடம் சிக்கிக்கொண்டது.
மெல்லிய திமிறலும், விலகலும் கூட அவனை நிதானப்படுத்தவில்லை. மெல்ல விலகியவன்,
“வலிச்சதா?…” என்று கேட்க,
“தெரிஞ்சுட்டே கேட்டா பதில் சொல்லமுடியாது…”
“பதில் சொல்லாததுக்கு தான் குடுத்தேன்…” என்றவன் மெல்ல விரல்கொண்டு வருடியபடி,
“ஓகே, சொல்லவேண்டாம். பார்ப்போம் நீயா எப்போ சொல்றன்னு…” என்று சொல்லி கீழே சென்றுவிட்டான்.
அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்று நெஞ்சை முட்டும் ஆசையிருந்தும் அந்த விளையாட்டு அவளுக்கு பிடித்தது.
அதைவிட தன்னை அதற்கு வற்புறுத்தாத அவனின் அந்த தன்மை இன்னும் பிடித்தது.
அனைவரிடத்திளிருந்தும் முரண்பட்டு தன்னிடம் அவன் காட்டும் இந்த பரிமாணம் இன்னும் முழுதாய் அவளுக்கு வேண்டுமென்றிருந்தது.
காற்றின் சத்தம் இன்னும் பெரிதாக ஜன்னல் கதவுகளை எல்லாம் இழுத்து அடைத்தவள் மீண்டும் தாயின் புகைப்படத்தின் முன் வந்து நின்றாள்.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ம்மா. உங்களை பார்க்கனும்ன்னு நான் சொல்லாமலே என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க உன் மருமகன். உங்களுக்கு பிடிச்சிருக்கா?…” என்றாள் அவரின் எதிரே நின்று விழிகள் கலங்க கேட்டபடி.