“இந்த வீட்டுல உங்க முன்னாடி நீங்க வாழ்ந்த இடத்துல தான் என் கல்யாணம் நடக்கனும்ன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். அது ஒரு குறை தான். மத்தபடி நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தெரியுதா?…” என்றாள் முகமெல்லாம் புன்னகையுடன்.
“அப்பாவும் சந்தோஷமா இருக்காங்க. இதுமாதிரியே எப்பவும் என் கூடவே இருங்க…” என்றவளின் மோனநிலையை கலைப்பதை போல,
“இதழ்…” என்றவனின் அதிரும் சப்தம் கீழே.
வேகமாய் படிகளில் இறங்கி செல்ல கடைசி படியில் விழ இருந்தவள் சுதாரித்து நிமிர,
“பார்த்து வரமாட்டியா? இங்க தானே இருக்கேன்?…” என்று அதட்டி வந்தான் குருஆர்யன்.
“இல்ல வேகமா கூப்பிட்டீங்க. அதான்…”
“உங்கப்பா போன். பேசிட்டு வா. பசிக்குது…” என்றவன் தலையை துவட்டியபடி மீண்டும் அறைக்குள் செல்ல, போனில் பேசியபடியே சாப்பிட எல்லாம் எடுத்து வைத்தாள் நனியிதழ்.
செய்துவைத்திருந்த உணவுகளை பார்த்ததும் பெருமூச்சு எழுந்தது. கணவன் உண்ணும் உணவுகள் என்ற ஆசுவாசத்தினால் உண்டான பெருமூச்சு.
‘இனி நீ ஒன்னொண்ணுக்கும் பார்த்து சமைக்கனும் போல நதி’ என்று வேறு நினைத்துக்கொண்டாள்.
“நீயே எடுத்து வச்சாச்சா?…” என வந்தவன் நடுமுற்றத்தில் பெய்துகொண்டிருந்த மழையை ரசித்தவாறு சுட சுட இருந்த உணவை ருசித்து உண்டான்.
“பிடிச்சிருக்கா?…” என்றாள் நனியிதழ்.
“பிடிக்காமலா கல்யாணம் செஞ்சு குடும்பம் பண்ணிருப்பேன்?…” வழக்கமான அதே நக்கல் குரல்.
“நான் சாப்பாட்டை கேட்டேன்…” என்றாள் அவள் மெல்லிய முறைப்புடன்.
“நானும் சாப்பாட்டை தான் சொன்னேன். உன் காதுல என்ன விழுந்துச்சாம்?…” என கேட்டவன் குரலிலும், முகபாவனையிலும் நனியிதழ் குழம்பி போனாள்.
தான் சரியாக தான் கேட்டோமா, இல்லை தன் மன பிரம்மையா என அவனையே அவள் பார்க்க,
“சாப்பாட்டை சாப்பிடனும். என்னை இல்லை…” என்றான் நமுட்டு சிரிப்புடன் அவளின் பார்வையை கண்டு.
“நீங்க நிஜமாவே சாப்பாட்டை தான் சொன்னீங்களா?…” என கேட்க,
“எஸ். உன் காதுக்கு என்ன கேட்டுச்சு? இதழ் நீ ஓகே தானே?…” அவனின் தீவிரமான முகபாவனையில்,
“ப்ச், ஒண்ணுமில்லை. வேற யோசிச்சேன்…” என்றாள்.
“யோசிக்காம சாப்பிடு…” என்று சொல்லியவன் உணவுடன் சிரிப்பையும் விழுங்க, மீண்டும் மீண்டும் அவனை தான் பார்த்தாள்.
“அநியாயத்துக்கு அநியாயம் பன்ற இதழ் நீ. நான் கொஞ்ச நேரம் சைலண்டா இருக்க நினைக்கறேன். விடமாட்ட போல…” என்று பின்னந்தலையை கோதியபடி இருக்கையில் சாய்ந்தமர்ந்து சொல்ல,
“நான் என்ன பண்ணேன்?…” என முனுமுனுக்க,
“ஆமா, ஒண்ணுமே பண்ணலை. அதைவிட்டு மார்னிங் சீக்கிரம் எழும்பி சைட் சீயிங் போகனும். உன் ப்ளான் என்ன?…” என்றான் வேண்டுமென்றே அவளை உசுப்பேற்றும் விதமாக.
“எனக்கு என்ன ப்ளான்? புரியலையே?…”
“ஆமா, நான் வந்த வேலையை பார்க்க வேண்டாமா?…” என்றவனை இன்னும் நனியிதழால் கண்டுகொள்ள முடியவில்லை.
“லொக்கேஷன் பார்க்க வந்தேன். ஆனந்த் சொன்னான். அதான் அப்படியே உன்னையும் கூட்டிட்டு வந்தா உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் பாரு…” என்றான் நடிகன் அவன்.
‘உண்மையை தான் சொல்கிறானா?’ என்ன என்று நம்பிக்கையின்றி பார்த்தவள் தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது.
முகத்தில் அதுவரை இருந்த சந்தோஷம் எல்லாம் வடிந்துவிடும் போலிருக்க சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டாள்.
“எனக்கு எந்த ப்ளானும் இல்லை. நீங்க போய்ட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு தட்டில் இருந்ததை திணித்துவிட்டு எழுந்தவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து அடுக்களைக்குள் வர சட்டென்று விக்கல்.
அடுக்களையிலிருந்து திரும்பி பார்க்க குருஆர்யனை காணவில்லை. உறங்க சென்றிருப்பான் என்று நினைத்தவள் விக்கல் விடாமல் எடுக்க கலங்கும் போலிருந்த கண்ணீரை சிமிட்டி உள்ளிழுத்து தண்ணீரை வேகமாய் பருக ஆரம்பித்தாள்.
எத்தனை குடித்தும் விக்கல் நின்றபாடில்லை. அழுகை வரும்போலிருக்க தன்னை தானே தேற்றிக்கொண்டவள் அதனை ஏற்கவும் முனைய,
“வேற எதுவும் சொல்லனுமா?…” என்றாள் அவன் முகம் பார்க்காமலே.
“என்னை பாரு சொல்றேன்…” என தன் பக்கம் திருப்ப பார்க்க,
“ம்ஹூம். இப்படியே சொல்லுங்க…” என்றாள்.
“என்னை, என் முகத்தை பாரும்மா…”
“ம்ஹூம்…” என்னும் பொழுதே அவளின் குரல் விசும்பலுக்கு சென்றிருக்க,
“பார்க்கமாட்ட நீ?…”
“ம்ஹூம்…”
“இதழ்…” என்றவன் மொத்தமாய் அவளை தன் கையில் அள்ளியிருக்க அவனிடமிருந்து நழுவ நினைத்தாலும் விலக விடவில்லை.
“மனுஷனை படுத்தறடி நீ…” என்ற குரலின் ரசனையை உள்வாங்க முயன்றவள் கண்ணை திறக்கவில்லை.
அவன் செல்வது தெரிந்தது. அறைக்குள் தான் என்று புரிந்தது. கைகள் தானாக அவனின் கழுத்தை வளைத்திருக்க அறை கதவு அடைக்கப்படுவதும் விளங்கியது.
“இப்ப நீ என்னை பார்க்கலைன்னா நைட் ஃபுல்லா லைட் எரியும். புரியுதா?…” என்ற அந்த அழுத்தமும், அழைப்பும் அவள் விழிகளை திறக்க செய்ய பார்த்தவள் கண்ணில் நீர் நிரம்பி நின்றது.
“நான் ரொம்ப ஸ்ட்ரிக்டான டைரெக்டர். என்னோட பிரபஷனுக்குள்ள ஃபேமிலியை கொண்டுவரமாட்டேன்…” என்று சொல்ல,
“இதெதுக்கு எனக்கு? கை வலிக்கும். கீழ இறங்க விடுங்க…”
நள்ளிரவில் மெல்லிய வெளியே வீசிக்கொண்டிருந்த மழை காற்றின் சப்தத்துடன் இன்னொரு சப்தமும் குருஆர்யன் உறக்கத்தை கலைக்க லேசாய் விழி திறந்தான்.
ஒருக்களித்து படுத்திருந்தவன் முகத்தினருகே அவனை அணைத்தபடி நனியிதழ். அவளின் அந்த மெல்லிய குரல்.
முதலில் சரியாக விழவில்லை. எங்கோ என்னவோ கேட்கிறது என்று திரும்பி படுக்க இருந்தவன் சட்டென்று உயிர்பெற்றான்.
தன் காதுகளை கூர்மையாக்கியவன் மெல்ல மனைவியின் இதழோரம் செவிகளை உரசவிட்டு கவனமாய் கேட்க உயிர் செல்கள் எல்லாம் பூப்பூத்தது.
“பாவா…” எத்தனை எத்தனை அழைப்பு?
“எங்க போறீங்க பாவா. இன்னும் கிட்ட வாங்க பாவா. நதி தேடறா…” என்ற பேச்சில் மொத்தமாய் சரிந்துவிட்டான் அவன்.
உறக்கத்தில் அவளின் அடிமனத்தின் அழைப்புகள் எல்லாம் அவனை அடைய முகமெல்லாம் பூரித்தது.
சிறிது நேரம் தான். பேசியவள் அவனின் அணைப்பில் வருடலில் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அதன்பின் பொட்டு உறக்கம் அவனை அண்டவில்லை.
“கூப்பிடமாட்டேன்னு எத்தனை பாவா சொல்றடி நீ? இப்பவே எழுப்பனும் போல இருக்கே?…” என்று சத்தமின்றி சொல்லிக்கொண்டவன் அவள் உறக்கம் கலைக்காமல் விட்டத்தை பார்த்து திரும்ப,
“பாவா…” மீண்டும் மனைவியின் தேடல்.
“இருக்கேன்டா ம்மா இதழ்…” என்று அவளை தனக்குள் வாரிக்கொண்டவன் அணைப்பு மென்மையாய் அவளை சுற்றிக்கொண்டது.