கணவனின் தேர்வில் அவனை போலவே அவளின் இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள அதனை அணிந்தவள் வாசலில் சப்தம் கேட்டு வெளியே சென்றாள்.
குமாரின் மனைவி தான் வந்திருந்தார் அங்கே. காலை உணவை எடுத்துக்கொண்டு வந்திருக்க,
“ஏன் ஆன்ட்டி நான் செஞ்சுக்க மாட்டேனா? இந்த தூறலோட எடுத்துட்டு வரனுமா?…” என்று மென்மையாக கடிந்துகொள்ள,
“இதுல என்ன இருக்கு நதி? என்னைக்குமா செய்ய போறேன்? ரெண்டுநாள் தானே? இருக்கட்டும். மதியத்துக்கு நானே கொண்டுவரேன். இதுல பூவும் இருக்கு வச்சுக்கோ…” என்றவர்,
“எங்க வீட்டுக்கு உன் வீட்டுக்காரர் வருவாரான்னு தெரியாது. கூப்பிட்டு சங்கடப்படுத்த கூடாதுல. சரி இதையாவது செய்வோம்ன்னு தான்…” என்று சொல்லி வர,
“மேம், இதை பாஸ்கிட்ட குடுத்திருங்க…” என்றான் பாதுகாவலன் ஒருவன்.
“என்னதுண்ணா இது?…” என்று அந்த பார்சலை வாங்காமல் நனியிதழ் கேட்க,
“கேமரா இருக்கு. ப்ரவன் ஸார் அனுப்பி வச்சிருக்கார்…” என்று சொல்ல,
“ஓகே…” என்று வாங்கிக்கொண்டுவந்து டைனிங் டேபிளில் வைத்தவள்,
“நீங்க வாங்க ஆன்ட்டி…” என்று அடுக்களையில் முதல்நாள் அவர் கொடுத்திருந்த பாத்திரங்களை தேய்த்து எடுத்து தந்தாள்.
பேசிக்கொண்டே மீண்டும் வெளியே வந்து நிற்க அங்கே தோட்டத்தில் இருந்தவற்றை பார்த்தபடி பேச்சுக்கள் தொடர்ந்தது.
குருஆர்யன் வந்ததையும் கவனிக்கவில்லை. அவன் கையிலிருந்த கேமராவையும் கவனிக்கவில்லை நனியிதழ்.
குமாரின் மனைவியுடன் அப்படி ஒரு சுவாரஸியமான பேச்சுக்கள் புன்னகை குறையாமல்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளும், ஆச்சர்யங்களும், இதழ் குவிப்புகளும், மெல்லிய நடையும், கையசைவுகளும், வியப்புகளும் சிந்தாமல் சிதறாமல் குருஆர்யனின் கேமராவினுள் பதிவாகியது.
அத்தனை இயல்பாய் இயற்கையுடன் லேசாய் பூஞ்சாரலில் இதழ் மலர்ந்த பூவாய் அவளிருக்க அதனை மீண்டும் மீண்டும் ஓட்டி பார்த்தான் குருஆர்யன்.
அவன் நினைத்ததை போல அந்த புடவையும், அதற்கு நிகரான இயற்கை காட்சியும் கொள்ளை அழகாய் பதிவாகியிருந்தது.
உடனே தனது லேப்டாப்பில் அதனை பதிவு செய்து அவனுக்கு தேவையான சின்ன சின்ன துணுக்குகளை எல்லாம் தனித்தனியே பிரித்தான்.
தானும் வேறு உடையணிந்து தன்னை நன்றாய் பார்த்துக்கொண்டவன் அவனுக்கு திருப்தியானதும் கேமராவை அதன் ஸ்டேண்டில் பொருத்திவிட்டு தேர்ந்தெடுத்த இடத்தில் சென்று சாய்ந்து நின்றான்.
கேமரா முன் அவன் பேச ஆரம்பிக்க, அந்நேரம் நனியிதழ் அவனை தேடி உள்ளே வர சட்டென அதனை நிறுத்திவிட்டு பார்த்தான்.
“என்ன இதழ்?…” என்றதும்,
“சாப்பிட கூப்பிட வந்தேன்….” என அவனை பாராமல் கேமராவை பார்த்தபடி அவள் சொல்ல,
“நான் இங்க இருக்கேன்…” என்றான் அவள் முகம் பற்றி தன்பக்கம் திருப்பி.
“இது எதுக்கு?…” என கேட்டாள்.
“நம்ம வெடிங் வீடியோவுக்கு ஒரு ப்ரோமோ வீடியோ பண்ணனும். அதுக்கான ஷூட் தான் இது…”
“ஓஹ்…” என்றாள்.
“என்ன ஓஹ்? உங்கண்ணா சேனல்ல டெலிகாஸ்ட் பண்ணனும். அதுக்கு என்னோட சில ஆன்ஸர்ஸ் பைட்ஸ் மாதிரி அந்த கிளிப்பிங் நடுவுல குடுக்கனும். அதுக்கு தான் உன்னையும்…”
“ம்ஹூம், நீங்க பேசுங்க. நான் மாட்டேன்…” என்று அவசரமாய் மறுத்தாள் நனியிதழ்.
உலகம் பார்க்க அவர்கள் திருமண நிகழ்வு ஒளிபரப்ப போவதே ஒருவித கூச்சத்தை தந்திருந்தது.
இதில் தானாக பேசுவதா என்று வேகமாய் அவள் சொல்லவும் அவளின் தலையில் தட்டியவன்,
“அதெல்லாம் தெரியும். நீ எதுவும் பேசவேண்டாம். நான் பேசிப்பேன். நீ போ. வரேன்…” என்று அவளை அனுப்பிவைத்தான்.
நனியிதழ் சென்றதும் அதில் ப்ரவன் அனுப்பியிருந்த அந்த ஆறு கேள்விகளை பார்த்தான்.
அதில் நான்கை மட்டும் தேர்வு செய்தவன் அதில் ஒவ்வொன்றாய் தன்னிடம் கேட்பதை போலவே பதில் கூற ஆரம்பித்தான் குருஆர்யன்.
பேசி முடித்து தானே எடிட் செய்து வீடியோவை ஒளிபரப்ப தயாரும் செய்து ப்ரவனுக்கு அனுப்பிவைத்துவிட்டு லேப்டாப்புடன் வெளியே வந்தான்.
ப்ரவன் பார்த்ததுமே பிரமித்து போனதுடன், அதில் மற்ற இரண்டு கேள்விகளை காணாமல் குருஆர்யனுக்கு அழைப்பு விடுக்க,
“அந்த ரெண்டு கொஷின்ஸ் எனக்கு கம்பர்டபிளா இல்ல ப்ரவன். அதுக்கு ஆன்ஸர் பண்ண முடியாது. யார் இந்த கேள்வியை செலெக்ட் பண்ணினது? அறிவிருக்காதா? நீங்களும் பார்க்காம அனுப்பியிருக்கீங்க?…” என்று சொல்ல ‘அவனிடம் பார்த்தேன் என்றா கூற முடியும்?’
“நான் கவனிச்சுக்கறேன் ஆர்யன். நீங்களே எடிட்டிங் முடிச்சு பிரமாதமா அனுப்பியிருக்கீங்க…” என்றான் சந்தோஷத்துடன்.
“ஓகே, ப்ரோமோ வீடியோ ஃபுல்லா முடிச்சு எனக்கு அனுப்பிட்டு நான் ஓகே சொல்லவும் டெலிகாஸ்ட் பண்ணலாம். இப்ப பை…” என்று அழைப்பை துண்டித்துவிட அங்கே ப்ரவன் திகைத்து போயிருந்தான்.
‘அவனிடம் கேட்டு செய்யவேண்டுமாமே?’ என்று சிறு எரிச்சல் தோன்றினாலும் ‘கற்றுக்கொள்ளும் நேரம்’ என்று அதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டான்.
“முடிஞ்சதா?…” என்று நனியிதழ் கேட்க,
“ஹ்ம்ம், நீயும் பாரேன்…” என்று அந்த வீடியோவை போட்டு காண்பித்தான்.
பேக்ரவுண்ட் ம்யூஸிக் முதற்கொண்டு குருஆர்யன் சேர்த்திருக்க முதலில் தூறலும், சுற்றுப்புறமும் தான் திரைவிருந்தாய் விரிந்தது.
அதன்பின் ரப்பர் தோட்டங்கள். அதற்கிடையில் முதலில் முந்தானை மட்டும் சரசரக்க புல்தரைக்கு இணையான பசுமையுடன் அந்த புடவை நிறம்.
சாப்பிடுவதை மறந்து நனியிதழ் விரிந்த விழிகளுடன் அதனை பார்த்தவள் அதில் லயித்து போனாள்.
தோற்றம் காண்பிக்கும் பேரழகு. அவளின் முழுவுருவம். காதோரத்து குழல் கற்றைகள் மெல்லிய காற்றில் அசைந்தாட தூறலில் சாரல் துளிகள் கூட துல்லியமாய் தெரிந்தது அதில்.
அரக்குநிற கெம்புக்கல் வைத்த ஜிமிக்கி அவள் காதோரம் பெரிதாய் உறவாட அவள் பேச்சுக்கள் எல்லாம் சப்தமின்றி பதிந்திருந்தது.
அவளருகில் இருந்த குமாரின் மனைவி அங்கே தெரியவே இல்லை. நனியிதழ் மட்டுமே காணப்பட்டாள்.
சட்டென்று திரைக்குள் அவள் கணவன் அள்ளிக்கொள்ளும் வசீகர புன்னகையுடன்.
“நனியிதழ். இதழ். என் மனைவி. என்னோட எல்லாம். இப்படி சொல்லிட்டே போகலாம்…” என்றான் காதலுடன்.
ஆம், காதல். சொல்லிக்கொள்ளாத காதல் அங்கே அள்ள அள்ள குறையாமல் பிரவாகம் எடுத்திருந்தது அவன் முகத்தில்.
மீண்டும் நனியிதழ் காணொளி. மெல்லிய பின்னணி இசையுடன் அவளின் அசைவுகள் நளினமாய், நாகரீகமாய். அடுத்ததாய் குருஆர்யன்.
“நோ நோ. லவ் மேரேஜ் இல்லை. எங்க கல்யாணம் எங்க வீட்டு பெரியவங்களோட முடிவு. அவங்க ஆசைப்படி நடந்த திருமணம். ப்யூர்லி அரேஞ்ச்ட் மேரேஜ்….” என்றான் அதே புன்னகையுடன் குருஆர்யன்.
கேட்டதுமே நனியிதழுக்கு சட்டென்று புரையேறிவிட அவளை பார்த்தவன் கண்களில் மிதமான முறைப்பு.
“சாப்பிட்டிட்டிருந்தேன்ல. அதான்…” என்று சொல்ல,
“கொழுப்புடி…” என்றவன்,
“நாளைக்கு ஈவ்னிங் வீடியோ டெலிகாஸ்ட் ஆகிடும். நமக்கு ஒரு காப்பி வரும். பாரு. ஏதாவது அன்கம்பர்டபிளா ஃபீலாச்சுன்னா சொல்லு…” என கூறியவன் ஆனந்திற்கு அழைத்து பேச செல்ல, ப்ரவன் நனியிதழுக்கு அழைத்தான்.
“ண்ணா…” என்று அவள் ஆரம்பித்ததும்,
“செம்ம பிக்சரைஸ் நதி. எவ்வளோ அழகா பேசிருக்கார். எப்படி எடுத்திருக்கார். எடிட்டிங் எல்லாம் பக்கா மாஸ். எங்களோட டீம் கூட இப்படி பண்ணாது போல…” என்றான் குருஆர்யனை சில்லாகித்து.
“இப்பதான் பார்த்திட்டு இருக்கேன் ண்ணா…” நனியிதழும் அதனை பார்த்தபடி கூற,
“ஆனா அந்த ஒருவிஷயம் தான் நம்பவே முடியல. பேரெண்ட்ஸ் டிசிஷன் இந்த மேரேஜ்ன்னு சொன்னது. பயங்கர உருட்டு மாதிரியே தோணுது…” என்றான் கிண்டலாய்.
“அவர்கிட்டயே கேட்டு கிளியர் பண்ணிருவோமா?…” என்று அவள் சிரிக்க,
“கேட்டுட்டாலும்? தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட மனப்பாடமா சொல்லுவார் போல. சரியான ஹெட்வெய்ட் பிடிச்ச மாப்பிள்ளை. ஒத்துக்கனுமே. எல்லாம் உன் மனபிராந்தி மச்சான்னு என்னை தூக்கிட்டு போய் பரத் மச்சான்கிட்ட ட்ரீட்மென்ட் எடுக்க வச்சிருவார்….” என்று சிரித்தான்.
“என்கிட்டையே என் புருஷனை கம்ப்ளைன்ட்டா? அவர் என்ன சொல்றது? நானே உங்களை ட்ரீட்மென்ட்க்கு அனுப்பறேன்…” என்று பதிலுக்கு பேச என்று கலகலப்பாய் சில மணித்துளிகள்.
அடுத்த ஐந்துநாட்களும் தக்கலையில் தான் அவர்கள் வாசம். கிளம்புவதை கூட வீட்டிற்கு அவன் தெரியப்படுத்தவில்லை.
“போனோம்ன்னா தெரிஞ்சுக்க போறாங்க…” என்றவனை ஒன்றும் செய்யமுடியாமல் தானே அழைத்து தாங்கள் வரும் விஷயத்தை கூறினாள் நனியிதழ்.
இயல்பான வாழ்க்கைக்குள் இருவரும் அடியெடுத்து வைத்தனர். வெண் நிழல்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை.