“ஆரி வந்துட்டான்…” என்று தமயந்தி சொல்ல, பேச்சுக்களில் இருந்தவர்கள் திரும்பி குருஆர்யனை பார்த்தனர்.
“வாழ்த்துக்கள் ப்ரவன்…” என்று தங்கை கணவனுக்கு கைகொடுத்து அணைத்து வாழ்த்தியவன் மற்றவர்களை பார்த்து புன்னகைத்தான்.
நரசிம்மன் ஸ்ரீநிவாசன் இருவரும் குருமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்க, கீதா மதுவுடன் உள்ளே அனுஷாவை பார்க்க சென்றிருக்க சுஜாதாவும் தமயந்தியும் நனியிதழுடன் இருந்தனர்.
“குழந்தையை காமி நதி…” என்றார் சுஜாதா.
அவள் அருகே செல்லும்முன் குருஆர்யனே அவர்களை நெருங்கிவிட்டான் ஆவலுடன்.
உள்ளுக்குள் அலையலையாய் பெரும் உணர்வுகள் கையில் குழந்தையுடன் நிற்பவளை காணுகையில் அவனின் எண்ணங்கள் தங்களின் குடும்பம் என்று கற்பனையில் சென்று சிக்கிக்கொள்ள குப்பென்று மகிழ்ச்சி பிரவாகம் அந்த நினைவிற்கே.
“தூக்கறீங்களா?…” என்றாள் நனியிதழ் அவனிடம்.
“ம்ஹூம். இருக்கட்டும்…” என்றவன் ஒற்றை விரல் நீட்டி குழந்தையின் கன்னத்தை வருடியவன் அதன் மூக்கை லேசாய் பிடித்து பார்த்தான்.
“என்ன இருக்கட்டும்? தூக்கனும்ன்னு தோணும் தானே? பிடிங்க…” நனியிதழ் அவனிடம் தர ஒரு அடி பின்னே வைத்தான்.
“அதான் சொல்றேன்ல. நீயே வச்சிரு…” என்றவனின் மெல்லிய அதட்டலில்,
“ஆசையா பார்க்கறீங்க…”
“இப்ப என்னடி உன் பிரச்சனை? எனக்கு கையில வச்சுக்க தெரியாது. அதான் வச்சுக்கோன்னு சொல்றேன். கத்தி சொல்லனுமா நான்…” என்று அதையுமே அவன் அதே அதட்டல் குரலில் சொல்ல,
“அதுவும் ஒரு வயசாகவும் தான். அதுக்கு முன்னாடி இப்படி கையில வச்சதெல்லாம் இல்லை…” என்று பேச இருவரும் என்னவோ ரகசியம் பேசுவதை போலிருந்தது மற்றவர்களுக்கு பார்க்க.
“பதில் இல்லை. அதனால சொல்லலை…” அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பதிலளித்தவள்,
“விஷ்ணு அண்ணாவோட அம்மா வராங்க…” என்றாள் நனியிதழ்.
அவள் காண்பிக்கவும் குருஆர்யன் திரும்பி பார்க்க அங்கே தணிகாச்சலத்தின் மனைவி வந்திருந்தார் குழந்தையை பார்ப்பதற்கென்று.
நிதீஷ் வந்து அடிவாங்கி சென்ற பின்னர் தணிகாச்சலம் எந்த ஒரு நிகழ்விற்கும் குருஆர்யன் இல்லம் வருவதில்லை.
பொது இடங்களில் பார்த்தால் கூட விலகி சென்றுவிடுவார். பலநாட்கள் விஷ்ணுவும் அப்படியே இருக்க பரத் தான் சமாதானம் செய்தான் அவனையும்.
“நிதீஷ் பண்ணின கிறுக்குத்தனத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க மாமா?…” என்று சொல்லியும் விஷ்ணுவுமே அடிக்கடி வீட்டிற்கு வரவில்லை.
அனுஷாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வரவும் கிளம்பி வந்துவிட்டான் உடனடியாக.
நரசிம்மன் விஷ்ணுவிடம் கூட சகஜமாக முகம் கொடுத்து பேசுவதையே நிறுத்தியிருந்தார்.
மருத்துவமனைக்கு வந்ததும் தலையசைத்து வரவேற்றதோடு சரி. ஏதாவது கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில்.
அவரால் நிதீஷ் செய்ததை மன்னிக்கவே முடியவில்லை. திருமணமான பின்னும் கூட மகளை தொல்லை செய்திருக்கிறான், அதற்கு தணிகாச்சலம் துணை வேறு என்று ஆற்றாற்று போனார்.
“நான் புத்தி சொல்லி ஊருக்கு அனுப்பிடறேன் நரசிம்மன்….” என்று நரசிம்மனின் கையில் நிதீஷ் துள்ள துடிக்க உயிருக்கு அந்தரத்தில் தொங்கிய பொழுது தணிகாச்சலம் கெஞ்ச,
“ஒழுக்கசீலனுக்கு உறவுமுறைன்னா என்னன்னு சொல்ல வக்கத்து போன உனக்கு எங்கிட்ட பேச தகுதியே இல்லைய்யா. அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும் ஆத்தாமை. உனக்கு எம்புட்டு சொன்னாலும் எருமைமாட்டு மேல என்னமோ பெஞ்சமாதிரி தான் நிப்ப. த்தூ…” என்று சொல்லிவிட்டு கிளம்பியவர்,
“உங்க முகத்துக்காக இந்த பிள்ள முகத்துக்காக விட்டுட்டு போறேன். எனக்கு எம்பிள்ளைங்கள விட்டு வேற ஒன்னும் பெருசில்ல. சீவி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். ஜெயிலுன்னா என்ன? எங்கனாலும் நான் ராஜா தான். எம்புள்ளைங்க சங்கடமில்லாம இருக்காங்கன்னா அவங்க பக்கத்துல நான் இருக்கனும்ன்னு இல்ல. அவங்க நிம்மதியோட இருக்காங்கன்னு நான் நிம்மதியா எங்க வேணா இருப்பேன்…” என்று சீறியவரின் சினத்தில் அத்தனைபேரும் நடுநடுங்கி போயினர்.
“எம்மா, இவனுங்க மத்தில பாத்து இருந்துக்கோ. என்னமாச்சும் பேசினா எனக்கு போன போடு. புரியுதா?…” என்று அழுது நின்ற மதுவிடம் அவர் சொல்ல கூனி குறுகிவிட்டான் விஷ்ணு.
“பார்த்துக்க பெரியமனுஷா. ஒத்தைக்கு ஒத்தையா வளர்த்த உம்பையனுக்கு நீ சேர்த்து வச்சதை. இப்படி நிக்கவச்சி என்னத்த சேத்து கட்டிட்ட? நீயெல்லாம் என்ன தகப்பனோ?…” என்று சொல்ல, விஷ்ணு அவரிடம் கையெடுத்து கும்பிட்டுவிட்டான்.
“அட விடுய்யா. உம்மேல எனக்கு எந்த வருத்தமுமில்ல தம்பி. ஆனா மனசுக்கு ஒவ்வலை. பாத்து இருந்துக்க. சூதானம்….” என்று சொல்லிவிட்டு வந்தவர் தான்.
அதன்பின் எங்கே பார்த்தாலும் உள்ளார்ந்து எல்லாம் புன்னகைப்பதில்லை. அதையும் விட விஷ்ணுவை பார்க்கும் நரசிம்மனின் பார்வையில் ஒரு பரிதாபமிருக்கும்.
விஷ்ணு அதிலேயே சுருண்டுவிடுவான். சொத்திருந்து, பெயரிருந்து என்ன பிரயோஜனம்?
பெண்ணெடுத்த குடும்பத்தில் மரியாதை போய்விட்டதே. என்னதான் அதனை அவர்கள் கடந்துவிட்டாலும் ஆறாத வடு தான் இன்னும்.
அதன்பின் ஒருநாள் நனியிதழை பார்த்து பேச என்றே விஷ்ணுவும் மதுவும் வீடு வந்து, அப்போதும் விஷ்ணு நனியிதழிடம் மன்னிப்பை கேட்க,
“இப்படி சங்கடப்படுத்தாதீங்க ண்ணா. நான் அண்ணான்னு சும்மா உறவுக்காக பேருக்கு கூப்பிடலை. ப்ரவன் அண்ணா மாதிரி தான் உங்கட்டையும் பேசறேன். ப்ளீஸ், ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றாள் அவனின் புன்னகையற்ற நிம்மதியற்ற முகம் கண்டு.
எப்போதும் கலகலப்பாய் மதுவிற்கு இணையாக கேலியும், கிண்டலும், அன்புமாய் இருந்தவனின் இந்த முகம் பெரிதாய் வருத்தியது அவளை.
“அண்ணன்னு சொல்ற. அப்போ இதை நீ சொல்லியிருக்கலாமே நதி?…” என்ற விஷ்ணுவிடம் புன்னகைத்தவள்,
“நான் இவங்ககிட்டையே சொல்லலை. அவங்களா தற்செயலா நாங்க தக்கலை போனப்போ தெரிஞ்சுக்கிட்டாங்க. இதை ஒரு பிரச்சனையாக்கி வெளில சொல்ல எனக்கு இஷ்டமில்லை. சும்மா எல்லாரையும் கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணி இப்ப பாருங்க எவ்வளோ பிரச்சனைன்னு…” என்று கூறி,
“அவனை நான் மனுஷனாவே மதிக்கலை. அப்படி நினைச்சிருந்தா சொல்லிருப்பேன். கூப்பிட்டு கண்டிச்சு வைங்கன்னு. விருப்பமில்லாத பொண்ணுக்கு தொந்தரவு குடுக்கக்கூடாதுன்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவன்கிட்ட கண்டிச்சு மட்டும் என்ன?…” என்றாள் இலகுவாய்.
“அப்படின்னு நினைச்சா தான் மனவுளைச்சல். தெரியாத நம்பர்ல, ஐடில இருந்து இப்படி வீடியோஸ் வந்தா ஓபன் பண்ணவே மாட்டேன். ப்ளாக் பண்ணிருவேன். என் நிம்மதியை கெடுக்க அனுப்பியும் அவனுக்கு நோ யூஸ். நான் கன்சிடரே பண்ணலை. இதுல நீங்க ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்கனும்?…” என்றாள் நனியிதழ்.