ப்ரவனுக்கு தான் இன்னும் பதட்டம் அடங்கவில்லை. மருத்துவமனைக்கு வரும்பொழுதே அத்தனை அழுகை அனுஷா.
பயத்தில் என்னென்னவோ உளறிக்கொண்டிருந்தாள். தனக்கு எதுவும் ஆகிவிடுமோ என்றளவிற்கு எல்லாம் அவளும் பயந்து அவனையும் பயத்தில் தள்ளிவிட்டாள்.
இதில் அவளின் பிபி குறையவே இல்லை என்றதில் இருந்து அத்தனை டென்ஷன் அவனுக்கு.
மது வந்து சொல்லவும் தான் நிம்மதியானது. முகத்தில் முழுமையான புன்னகையே அப்போது தான்.
“இன்னும் கொஞ்சம் நல்லா சிரிங்கண்ணா…” என்று நனியிதழ் கேலியாய் சொல்ல,
“இன்னுமாடா நீ மந்திரிச்சு விட்ட மாதிரியே சுத்தற?…” என்றாள் கீதா கிண்டலுடன்.
“ஆமா, பயந்ததெல்லாம் போதும். முதல்ல ப்ரெஷப்பாகிட்டு சாப்பிட்டு தெம்பா வாங்க. அப்போ தான் அடுத்து அனு கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியும்…” என்று மதுவும் சொல்ல,
“எவ்வளோ நேரம் பேசிட்டே இருப்பீங்க? போங்க. போய் ரூம்ல குளிச்சிட்டு சாப்பிட்டு வாங்க. நாங்க இருக்கோம்…” என்று விரட்டினார் நரசிம்மன்.
“வா நதி…” கீதா அழைக்க,
“அவ எதுக்கு? அவ வருவா. இப்பத்தான மருமகன் வந்திருக்காரு. நீங்க போங்க…” என்று குருஆர்யனை பார்த்துக்கொண்டே சொல்ல கிளம்பிவிட்டனர்.
அதுவரை அத்தனைமுறை தமயந்தி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், குருமூர்த்தி என மாற்றி மாற்றி சாப்பிட சொல்லியும் ஒருவரும் நகராமல் இருந்துவிட்டு, இப்போது நரசிம்மனின் ஒற்றை வார்த்தையில் அடித்துபிடித்து கலைந்து சென்றனர் அங்கிருந்த அவர்களின் அறைகளுக்கு.
“நானும் என் ரூமுக்கு போய்ட்டு வரேன்…” என்ற குருமூர்த்தி,
“நீங்களும் வாங்க சம்பந்தி…” என்றார் ஸ்ரீநிவாசன், நரசிம்மனை பார்த்து.
“நீ போ ஸ்ரீநி. நான் இருக்கேன்…” என்று நரசிம்மன் சொல்ல,
“சரிப்பா…” என்று குருமூர்த்தியுடன் அவர் மறுவார்த்தை பேசாமல் செல்ல பார்த்துக்கொண்டிருந்த குருஆர்யனின் முகத்தில் சன்னமான புன்னகை.
அங்கிருந்த இருக்கையில் சென்று ஆசுவாசமாய் அமர்ந்துகொண்டான் குருஆர்யன்.
அவனருகில் வந்து நரசிம்மனும் அமர நனியிதழ் சுஜாதா, தமயந்தியுடன் சேர்ந்தமர்ந்தாள்.
“ஹ்ம்ம், அப்பறம் அடுத்து எங்கையோ போறீங்களாம்?…” என்று தொண்டையை செருமிக்கொண்டு விரைப்பாய் அவனை பாராமல் கேட்க குருஆர்யன் அடக்கப்பட்ட புன்னகையுடன் வாய் திறக்கவில்லை.
“உங்களைத்தான்…” என்று மீண்டும் நரசிம்மன்.
திரும்பி அவரை பார்த்தவன் வேண்டுமென்றே சுற்றி சுற்றி பார்த்துவிட்டு தோளை குலுக்க,
“அட உங்களைத்தான்னு சொன்னேன்…” என்றார் நரசிம்மன் அவனின் அலும்பில் அவனை நேரடியாக பார்த்து.
“ஓஹ், நான் கூட முதல்ல சுவத்துட்ட பேசறீங்கன்னு நினைச்சேன். அப்பறம் என் பக்கத்துல வேற யாரோடையும் பேசறீங்களோன்னு நினைச்சேன். அப்ப கூட சுவரு எங்க போக போகுதுன்னு ஒரு யோசனை?…” என்றான் நக்கலை அளவில்லாமல் கொடுத்து.
“இந்த ஏத்தம் தான ஆகாதுன்றது…” நரசிம்மன் நரம்பு புடைக்க பார்க்க,
“கேட்கறதுன்னா என்னை பார்த்து கேட்கனும். அதை விட்டுட்டு அங்க பார்த்து கேட்டா சுவரா நகரும்? பார்க்கறவங்களுக்கு தான் உங்களுக்கு எங்க அடிபட்டுச்சோன்னு டவுட் வரும்…”
“வாருமய்யா வரும். ஏன் வராது? கேட்டதும் பொண்ணை கட்டிக்குடுத்தேன்ல…” என்று நரசிம்மன் பல்லை கடிக்க,
“மாமாவா போய்ட்டீங்க. வரவர வயசான காலத்துல களியும், கஞ்சியுமா சாப்பிட்டு இருக்கற இடம் தெரியாம இருக்கறதை விட்டுட்டு இந்த வயசுல நமக்கு ஸ்டண்ட் எல்லாம் தேவையா?…” என்றான் இன்னும் கிண்டலுடன்.
“வயசாச்சுன்னா அது உடம்புக்கு. மனசுக்கில்ல. அவன அப்படியே விட முடியுமா? கொன்னு போட்டுருக்கனும்…”
“அதுக்கு நானிருக்கேன்னு சொல்றேன். மனசுக்கு வயசாகலைன்னா அங்க என்ன ஊஞ்சலாடுதா? இந்த வாய் தான சொல்லுச்சு என் பொண்ணை விட்டுட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்குன்னு. அந்த பயம் எப்பவும் இருக்க வேணாமா?…” என்றான் கண்டிப்புடன்.
இருவரின் இந்த பேச்சில் பெண்கள் மூவரின் பார்வை இங்கே தான் இருந்தது. தமயந்திக்கு தெரியவில்லை என்றாலும், சுஜாதா, நனியிதழுக்கு தெரியுமே இருவரும் எப்படி பேசிக்கொள்வார்கள் என்று.
“நான் இப்ப வரேன் த்தை…” என்று எழுந்து அவர்களிடம் சென்றாள் நனியிதழ்.
“என்னப்பா நீங்க போய் குளிக்கலையா? மாத்திரை சாப்பிடனுமே?…” என்று நரசிம்மனிடம் சொல்ல,
“நடுமண்டையில ஆணியடிக்கிற மாதிரி சொல்லு. வயசாகலையாம், மனசுக்காம். பூங்காத்து திரும்புமான்னு பாடற வயசா இது?…” என்று சொல்லியவன் பேச்சில் நனியிதழ் முறைக்க,
“பாடினா என்னங்கேன்? அதெல்லாம் திரும்பும். மொதல்ல போற இடத்துல சூதானமா இருந்து படத்த புடிச்சு பத்திரமா வந்து சேருங்க. பேசறாரு பேச்சு…” என்று உடலை உலுக்கிக்கொண்டு எழுந்து சென்றார் நரசிம்மன்.
அவர் செல்லவும் குருஆர்யன் ஒரு கையால் வாயை மறைத்தபடி அடக்கமாட்டாமல் சிரிக்க,
“ஹப்பா, எங்கப்பாக்கிட்ட பேசக்கூடாததெல்லாம் பேசிட்டு சிரிப்பு வேறையா? இதுல அத்தைக்கு என் பிள்ளை முறைப்பாவே பேசுவான், அதட்டுவான்னு கவலை வேற. உங்களோட லந்தெல்லாம் எங்கப்பாக்கிட்டையும் என்கிட்டயும் மட்டும் தான்….” என்று தலையசைத்து சொல்ல,
“உங்கப்பாவா தான் வந்து என் கையை பிடிச்சு இழுத்தார். நான் பேசினேன். இதுல என் தப்பு என்னவாம்?…”
அனுஷாவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்து இருவாரங்கள் கடந்திருந்தது.
அன்றிரவு குருஆர்யன் ஹிமாச்சலுக்கு பயணப்படுகிறான். அவனின் படப்பிடிப்பை முதலில் அங்கே முடித்துவிட்டு அதன்பின் அடுத்த பகுதிக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தான்.
உடைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தவன் தன் குறிப்பேடுகளை பார்த்து எடுத்து வைக்க அவனுக்கு ஒவ்வொன்றாய் எடுத்து காண்பித்து இதுவேண்டுமா, இதுவேண்டுமா என்று ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் நனியிதழ்.
“கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட திங்ஸ் எல்லாம் நான்தான் பேக் பண்ணுவேன் இதழ். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கற?…” என்று அவன் மறுக்க,
“இல்ல சும்மா ஹெல்ப்…” என்றவள்,
“அனுஷாண்ணியை அங்க அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு போற பங்க்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணியாச்சு…” என்றாள் அவனின் பின்னே வந்து நின்று.
“ஹ்ம்ம், தெரியுமே. அப்பா சொன்னாங்க…”
“இல்ல அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு…”
“கண்டிப்பா வரமுடியாது. எனக்கு நேரம் இருக்கும்போது வரதா இருந்தா வருவேன்…” என்றவன் அவள் புறம் திரும்பி,
“உனக்கு பர்ஸ்ட் டைம்ல நான் இப்படி கிளம்பி போனா வர நாலஞ்சு மாசமாகும்ன்னு சொன்னது. அதான் ஃபீல் பன்ற. ஆனா பழகிரும்…” என்றான் இலகுவாய்.
அவள் மனதின் தவிப்புகள் அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை நனியிதழுக்கு.
“அன்ட் இதழ், இன்னொரு விஷயம். அங்க என்னால டெய்லி உன்னை கான்டேக்ட் பண்ண முடியுமான்னு தெரியலை. கால் பண்ணலைன்னா எதுவும் நினைச்சுட்டு இருக்கக்கூடாது. புரியுதா?…”
“ஹ்ம்ம், மெசேஜ் பன்றேன்…” என்றாள்.
“குட். டேக் கேர்…” என்றவன்,
“வேற எதுவும் சொல்லனுமா?…” என்றவன்,
“இங்க இருந்த இன்னொரு பெர்ஃப்யூம்…” என்று தேட,
“இந்த பேக்ல வச்சீங்களே?…” என்று காண்பித்தாள்.
“ஓஹ் எஸ்…” என்று மற்றதையும் அடுக்க,
“எனக்கு நனியிதழ்ன்னு பேர் அப்பா வச்சாலும் நதின்னு அம்மா தான் கூப்பிட ஆரம்பிச்சாங்க…” என அவள் சொல்ல குனிந்து அடுக்கிக்கொண்டிருந்தவன் பக்கவாட்டாய் அப்படியே திரும்பி பார்க்க,
“இல்ல இதை உங்ககிட்ட நான் சொன்னதில்லை. அதான்…” பேச முடியாமல் தொண்டை கரகரத்தது அவளுக்கு.
மௌனமாய் புன்னகைத்தவன் தலையசைத்துவிட்டு தன் வேலையை தொடர, கண்ணீர் ததும்பியது நனியிதழுக்கு.
“இன்னொரு விஷயம், அம்மா அப்பாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க. அதான்…” என்று இன்னும் குரல் தழுதழுக்க அவள் அவனை அழைப்பதற்குள் அவளை திரும்பி அணைத்திருந்தான் குருஆர்யன்.
வார்த்தைகளாக கூட அவனால் எதையும் பகிர முடியவில்லை. கிண்டலுடன் சொல்லிவிட்டாலும் அவன் மனதும் புதிதாய் கிளம்பி செல்ல அடம்பிடித்தது.
“எதையாச்சும் இப்ப கூப்பிட்டு வச்சு என்னை ப்ளாக் பண்ண பார்க்காத இதழ். நான் கிளம்பனும்…” என்று கூறியவன் அளித்த முத்தங்கள் அவளில் எத்தனை என்று கணக்கில் அடங்காமல் சென்றது.
“டைம் கிடைக்கும் போது வர ட்ரை பன்றேன் இதழ். எதுவும் எமர்ஜென்ஸின்னா மட்டும் கால் பண்ணு. இல்லைன்னா நானே ப்ரீயாருக்கும் போது கூப்பிடுவேன். புரியுதா?…” என்று கேட்க தலையசைத்தாள்.
“உங்கப்பா வந்து அங்க என்ன பாடி ஆட போறாராம்? ஏற்கனவே இளமை திரும்புதேன்னு பேசிட்டு சுத்தறார்….” என்றவன் நனியிதழ் முறைத்ததும்,
“என்னவோ உன் ஆசையை ஏன் கெடுக்க? அனுப்பி வை. அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வைப்போம்…” என்று சொல்லியவனை அப்பட்டமாய் முறைத்தவள் அவனின் கன்னத்தை கடித்து வைத்தாள்.