வீட்டினுள் நுழைந்ததுமே கேட்ட குரலில் இன்னும் வேகமாய் உள்ளே வந்தவள் முகத்தில் கொஞ்சமே சோர்வு மிஞ்சி இருந்தது.
அதுவும் தன் குடும்பத்தை பார்த்ததும் சென்று மறைய உற்சாகம் குமிழிடும் முகத்துடன் வந்தவள்,
“சொல்லுங்க கல்யாண பொண்ணே…” என்று கீதாவின் அருகில் அமர்ந்தாள் நனியிதழ்.
“இன்னும் ரெண்டுவருஷம் தான். உனக்கு அலையன்ஸ் பார்த்துடனும்ன்னு சொல்லியிருக்காங்க. அப்ப பேசிக்கறேன் நானும். இப்ப எங்க போன இவ்வளோ நேரம்?…” என்றவள்,
“சுப்பையாண்ணா நதி வந்தாச்சு. ஒரு காபி…” என்று சப்தம் கொடுக்க,
“டின்னருக்கு முன்னாடி என்ன காபி?…” என்றார் நரசிம்மன். நனியிதழின் தந்தை.
“இல்ல சித்தப்பா, டயர்டா இருந்தா. அதான்…” என்று கீதா சொல்ல,
“வெளில போய்ட்டு வந்தா முகம், கை, கால் கழுவ வேண்டாமா நதி?…” என்று மகளிடம் கேட்கவும் தலையசைத்து எழுந்து சென்றாள் நனியிதழ்.
“பிள்ளைங்களுக்கு டிஸிப்ளின் அவசியம் தான். அதுக்கு எந்தநேரமும் அப்படியே இருக்கனுமா என்ன? விடுப்பா…” என்றார் ஸ்ரீநிவாசன். நரசிம்மனின் அண்ணன்.
அவர் இலகுவாய் சொன்னாலும் நரசிம்மன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லிவிட்டேன். செய்யவேண்டும் என்பதை போலிருந்தது அவர் பாவனை.
“கீதா நீ போய் இந்த காபியை நதிக்கு குடு…” என காபியுடன் வந்த சுஜாதா நரசிம்மனை கண்டுகொள்ளாமல் மகனருகில் அமர்ந்து மீண்டும் பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் வைக்க ஆரம்பித்தார்.
மனைவியின் செயலில் ஸ்ரீநிவாசன் பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டாலும் அவரின் செயலில் உள்ளூர சந்தோஷமே.
“ப்ரவன் அந்த பார்சலை எடு. சீக்கிரம் முடிச்சுட்டு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்…” என்று சொல்ல மகனிடம் எந்த பதிலும் இல்லை.
அமைதியாய் அமர்ந்திருந்தான் ப்ரவன். அனுஷாவிடமிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க பிஸி என்று மட்டும் பதில் செய்தி அனுப்பிவிட்டாகிற்று.
அதற்குள் முகத்தை கழுவி உடைமாற்றிக்கொண்டு வந்த நனியிதழ் காபி கப்புடன் வந்தாள்.
“தேங்க்ஸ் ம்மா…” என்று சொல்லி சுஜாதாவின் முறைப்பையும் வாங்கிக்கொண்டவள்,
“நானும் மஞ்சள் வைக்கறேன்…” என அமர்ந்துகொள்ள நரசிம்மன் அமைதியாய் பார்த்தார் மகளை.
தான் அதிகம் தன் மகளை படுத்துகிறோமோ என்றொரு ஆராயும் பார்வை. அப்படி எதுவுமில்லை என்பதை போல அவள் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த புன்னகை அவருக்கு நிம்மதியை தந்தது.
“சபிதா வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க நதி?…” நரசிம்மன் கேட்க,
“நல்லாயிருக்காங்க ப்பா. உங்களையும் ரொம்ப விசாரிச்சாங்க. நேரமிருந்தா உங்களை இங்க வந்து பார்க்கிறதா அங்கிள் சொன்னார்…” என மகள் சொல்ல,
“ஹ்ம்ம், பார்க்கலாம்…” என்றார் நரசிம்மனும்.
“அப்பறம் அப்பா, அங்க இருக்கும்போது ஹாஸ்பிட்டல்ல இருந்து ஒரு கால். சபி அண்ணனுக்கு தான் போன் வந்தது ப்ளட் தேவைப்படுதுன்னு. அவங்களுக்கு பீவர். என் ப்ளட் க்ரூப்பும் அதே தானே? அதான் போய்ட்டு வர நேரமாகிருச்சு…”
“ஓஹ், சரி சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு….” என்று மட்டும் நரசிம்மன் சொல்ல,
“கூட ரெண்டுநாள் லீவ் எடுத்துட்டு வந்திருக்கலாம். நாலு நாள் லீவ். அதுவும் வந்ததுல இருந்து வீட்டுலையே இல்லை நீ. நாளைக்கு நைட்டே கிளம்பனும்ன்னு நிக்கிற…” என ஸ்ரீநிவாசன் தம்பியிடம் சொல்ல,
“வேலையும் இருக்கே. வந்தநேரம் தானே அதை பார்க்க முடியும்? கல்யாணத்துக்கு வரப்போ பார்ப்போம்….” நறுக்கென்ற பதில்.
சிறிதுநேரம் பேசியபடி பத்திரிக்கைகள் அனைத்திற்கும் மஞ்சள் வைத்து முடித்திருக்க இரவு உணவையும் முடித்துக்கொண்டனர்.
“நான் போய் படுக்கறேன். ரொம்பநேரம் அரட்டை அடிக்காம நேரத்துக்கு தூங்குங்க…” என்ற நரசிம்மன்,
“நீ இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வா, உன் கூட பேசனும்…” என அண்ணனை அழைத்துவிட்டு முன்னே சென்றார் நரசிம்மன்.
“கீதா, நதி நீங்க போய் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைங்க. இப்பவே வச்சா தான் மார்னிங் கிளம்பறப்போ எதையும் மறக்காம எடுத்துக்கமுடியும்…” என அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார் சுஜாதா.
இப்போது வரவேற்பறையில் ப்ரவன், சுஜாதா, ஸ்ரீநிவாசன் மட்டுமே இருக்க மகனருகில் அமர்ந்தார் சுஜாதா.
“என்ன பிரச்சனை ப்ரவன் உனக்கு?…” என்றதும் அவன் ஒன்றுமில்லை என தலையசைக்க,
“அனுஷாகிட்ட இருந்து போன் மேல போன் வந்துட்டே இருக்கு. நீ அவாய்ட் பண்ணலாமா? இதுக்கா லவ் பண்ணின?…” என்று கடிந்துகொண்டார் மகனை.
“இந்தநேரம் இண்டர்வ்யூ முடிஞ்சு எடிட்டிங்கே ஆரம்பிச்சிருப்பாங்க. இன்னும் அதையே யோசிக்காத ப்ரவன்…” என்று ஸ்ரீநிவாசனும் சொல்ல,
“ப்ச், இதுதான் டாட் எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு. இனி இதை வச்சு எவ்வளோ காசிப் கிளப்புவாங்க. கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருக்கும் போது இப்படி ஆர்யன் செய்வார்ன்னு நான் நினைக்கவே இல்லை…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“அதுக்கு அனுஷா என்ன பண்ணுவா? ஏன் அவளை அவாய்ட் பன்ற? இது ரொம்ப தப்பு….” என்றார் ஸ்ரீநிவாசன்.
“ப்ச், நான் பேசிக்கறேன்…” என்றவனுக்கு இதை மீடியா எந்தளவுக்கு பெரிதுபடுத்த பார்க்கும் என்று தான் மண்டையை குடைந்தது.
“இப்படி ஒன்னொண்ணுக்கும் நாம யோசிச்சா நிம்மதி போயிரும். சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷனானா அது அனுஷாவை பாதிக்கும் ப்ரவன். உங்களோட வாழ்க்கையையும் பாதிக்கும்….” என்ற சுஜாதா,
“எல்லாருமே நாம நினைச்சதை தான், நம்மோட எதிர்பார்ப்பை தான் செய்யனும்ன்னு நினைக்கிறது மடத்தனம். அவ்வளோ தான் சொல்லுவேன். ஒழுங்கா அவகிட்ட பேசி சமாதானம் செய். நீயும் ப்ரீயா இரு….” என்றதற்கு மகன் ‘சரி’ என்று எழுந்து செல்லவும்,
“நீங்க என்ன உக்கார்ந்துட்டீங்க? போய் உங்க தம்பிக்கிட்ட பேசுங்க. வர சொல்லிட்டு போனார்ல…” என்று நொடித்துக்கொண்டார்.
“ப்ச், என்ன சுஜா இது?…” என்ற ஸ்ரீநிவாசன்,
“அவரை நீயும் கொஞ்சம் டென்ஷன் பண்ணாம இரேன். எப்பயாவது தான் இங்க வராங்க…” என்றார் மனைவியிடம்.
“தாயில்லா பிள்ளையை எல்லாத்துக்கும் ரூல் பன்றது மட்டும் சரியா? ஸ்கூல் ஹெட்மாஸ்டர்ன்னா அது ஸ்கூலோட. தெரியாதவங்க பார்த்தா என்னவோ அவர் தான் அண்ணன் மாதிரியும், நீங்க தம்பி மாதிரியும் நினைப்பாங்க. என்னவோ செய்ங்க….” என்று சொல்லியவர்,
“அடுத்த வருஷம் ரிடையர்ட் ஆகறார்ல. இங்கயே வர சொல்லி பேச சொன்னேனே? அதையும் மறந்திடாம பேசுங்க. நதிக்கு கல்யாணமாகற வரைக்கும் இங்க கொஞ்சநாள் நம்மோட சந்தோஷமா இருப்பா…” என்றார்.
“சென்னை வரவரைக்கும் சரி. ஆனா நம்மோட நம்ம வீட்டுல சந்தேகம் தான். இப்பவே பேச வேண்டாம். பசங்க கல்யாணம் முடியட்டும். பேசறேன்…” என்றதும் சுஜாதாவும் எழுந்து செல்ல ஸ்ரீநிவாசன் நரசிம்மனின் அறைக்கு சென்றார்.
ஸ்ரீனிவாசனும், நரசிம்மனும் உடன்பிறந்தவர்கள். சிறு வயதிலிருந்து படிப்பு, அரசாங்க வேலை என்று நரசிம்மன் இருக்க, தனியாய் சுயமாய் தொழில் தொடங்குவதில் முனைப்பாய் இருந்தார் ஸ்ரீநிவாசன்.
அதனின் ஆரம்பமாய் டிவி சேனல் துவங்க ஆயத்தமாக அதில் நரசிம்மனுக்கு சுத்தமாய் விருப்பமில்லை.
“பேசாம படிச்ச படிப்புக்கு வேலையை பார்க்கவேண்டியது தானே? இதென்ன தேவையில்லாத வேலை…” என்று நரசிம்மன் கண்டித்தாலும் அண்ணனின் ஆர்வத்தில் குறுக்கே நிற்கவில்லை.
அண்ணனுக்கு தேவையான பொழுது பணத்திற்கு உதவவும் நரசிம்மன் மறுக்கவில்லை.
சிறிதாய் ஆரம்பித்தது இப்போது பெயர்பெற்ற தொலைகாட்சி நிறுவனமாக திகழ்கிறது.
ஆனால் அதன் உலகத்திற்குள் நரசிம்மன் நுழையவே இல்லை. உறவு என்னும் சூழலை தாண்டி அந்த நிறுவனத்தில் தலையிடவே இல்லை.
அவரையும் அதில் ஒரு உரிமையாளராக சேர்க்க நினைக்க நரசிம்மன் முழுமூச்சாய் மறுத்துவிட்டார்.
“இதுல எல்லாம் எனக்கு சுத்தமா உடன்பாடில்லை. ஆர்வமும் இல்லை. இதை உன்னோட வச்சுக்கோ. பிடிக்காததுல என்னை இழுக்காதே…” என்று தவிர்த்துவிட்டார் நரசிம்மன்.
மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு தகப்பனிற்கு அடுத்தபடியாய் தன் தம்பி நரசிம்மன் தான். அது அவர்களின் குடும்பத்திற்கும் தெரிந்த ஒன்று தான்.
நனியிதழ் பிறந்து ஐந்துவருடத்தில் அடுத்த குழந்தையை சுமந்துகொண்டிருந்த நரசிம்மனின் மனைவி உடல்நல குறைபாடால் இறைவனை அடைய இன்றுவரை மகளுக்கென மட்டுமே அவர் வாழ்க்கை.
அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் நரசிம்மன். மகளின் விருப்பப்படி உடலியக்க மருத்துவம் படிக்க வைத்தார்.
தனியாய் கஷ்டப்படுகிறாரே என பிள்ளையை தங்களிடம் கொடுத்துவிட்டு அவரையும் தங்களுடன் இருக்கும்படி எத்தனையோ முறை சுஜாதா சொல்ல,
“என் பிள்ளையை வளர்க்க எனக்கு தெரியாதா?…” என்றுவிட்டார்.
முகத்திலடித்தார் போன்ற பேச்சுக்கள் தான் என்றாலும், அதில் மிதமிஞ்சி இருப்பது உரிமையோடான அன்பும் அக்கறையும் மட்டுமே.
இப்போதும் அவற்றை நினைத்துக்கொண்டு ஸ்ரீநிவாசன் அவரின் அறைக்குள் நுழைய நரசிம்மன் இரவு உணவிற்கு பிறகு போடவேண்டிய மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீரை பருகினார்.
“நீ மாத்திரை போட்டியா?…” என தன் அண்ணனை கேட்க,
“போய் தான் போடனும். நீ சொல்லு…” என்று கட்டிலில் அமர்ந்தார் ஸ்ரீநிவாசன்.
“ப்ரவனுக்கு என்னவாம்? ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கான்?…” என்று நேரடியாக விஷயத்துக்கு வர ஸ்ரீநிவாசனும் மேலோட்டமாய் சொல்ல,
“அந்த பையன் இண்டர்வ்யூ குடுப்பான்னு தான் நீயும், உன் மவனும் சேனல் நடத்தறீங்களா?…” என்றார் நரசிம்மன் சூடாக.