“நதி தூங்கறா. நீங்க உட்காருங்க….” என்று அவர் வேறொன்றை கேட்க இங்கே இவனுக்கு பொறுமை பறந்தேவிட்டது.
“குடிக்க எதுவும் கொண்டு வரட்டுங்களா? இல்ல சாப்பிடறீங்களா?…” என்று நரசிம்மன் உபசரிக்க,
“எனக்கு எதுவும் வேண்டாம்….”
“சரி உக்காருங்க. நதி எந்திக்கட்டும். வீட்டுலையும் வேற யாருமில்லை. நாம மட்டும் தான். அதனால என்னமாச்சும் வேணும்னா உங்களுக்கு நான் தான் குடுக்கனும்…” என்று சொல்ல,
“எதுவும் வேண்டாம். நான் போய் பார்க்கறேன்…” என்று அவன் அவரை தாண்டிக்கொண்டு செல்ல பார்க்க,
“இப்பத்தான் ஹிமாச்சல்ல இருந்தே வந்திருக்கீங்க போல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்திருக்கலாம். இவ்வளோ அவசரமா…” என்று அவர் முடிக்கும் முன் பாய்ந்து அவரை அணைத்திருந்தான் குருஆர்யன்.
அதில் அதிர்ந்து திணறி போய் பார்த்த நரசிம்மனை நன்றாக கட்டியணைத்தவன் முத்தமிடுவதை போல முகத்தை அருகே கொண்டுசென்று அவரின் அரண்ட பார்வையை பார்த்து,
“இதுக்கு தான் வந்தேன். போதுமா? போங்க, குடுத்துடக்கிடுத்துட போறேன்…” என்றுவிட்டு விலகி மனைவியின் அறை நோக்கி சென்றான் குருஆர்யன்.
இதனை சுத்தமாய் அவர் எதிர்பார்க்கவில்லை. மருமகனின் வேகத்தில் சிலையாய் நின்றிருந்தவர் கதவடைக்கும் சத்தத்தில் சுதாரித்து தலையை உலுக்கிக்கொண்டு,
“என்ன மனுஷனோ? நல்லவேளை யாரும் பார்க்கலை…” என்று தலையில் தட்டிக்கொண்டாலும் முகத்தில் சிரிப்பு வேறு.
அங்கே அறைக்குள் நுழைந்தவனின் ஆவேசமும், கோபமும் அந்த நொடியில் அப்படியே உதிர்ந்து கீழே மடிந்திருந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் சீரான சுவாசத்துடனான ஏற்ற இறக்கங்கள் அவன் மனதை இலகுவாக்க மெல்ல நகர்ந்து மனைவியின் கன்னம் வருடினான் குருஆர்யன்.
உள்ளுக்குள் மத்தளம் கொட்டும் சத்தம். கண் விழித்தால் என்னவெல்லாம் கேட்டு சண்டை பிடிப்பாளோ? சட்டையை பிடிப்பாளோ? என்று.
‘நல்லா பயப்படறடா ஆரி’ என்று தன்னை குறித்தே சிரிப்பும், கொஞ்சம் அச்சமும்.
“இதழ்…” என்றவனின் மெல்லிய குரலும் அவனின் தீண்டலும் நனியிதழின் உறக்கத்தை கலைக்க மெல்ல கண் விழித்தவள் மீண்டும் இமைகளை மூடி திறந்தாள்.
‘இதோ எந்திக்க போறா. இதோ இப்ப கேட்டுடுவா. கடவுளே அழுகாம என்னவேணா பேசட்டும். அழ வச்சிடாத இதழை’ என உள்ளுக்குள் நினைத்தபடி அவளை பார்க்க தன்னை பார்த்த அதிர்ச்சியோ, சந்தோஷமோ இன்றி,
“வாங்க, எப்போ வந்தீங்க? சாப்பிட்டீங்களா?…” என்ற அவளின் வழக்கமான கேள்வியிலும், அந்த புன்னகையிலும் அவன் தான் மழலையாய் விழித்தான்.
“கனவு ஒன்னும் காணலையே நீ? எங்க என்னை கிள்ளி வை…” என்று அவளின் கை எடுத்து அவனின் கன்னத்தில் வைக்க,
“பகல் கனவெல்லாம் நான் காணமாட்டேன்…” என்று இருபொருள்பட பேசினாள் நனியிதழ்.
“டபுள் மீனிங் இதழ். ஆனா இந்த விஷயத்துக்கு பேசினா இன்ட்ரெஸ்ட்டா இருக்காது…” என்றவன்,
“நான் வந்தது எப்படி தெரியும்? நான் சொல்லவே இல்லையே?…” என்றும் கேட்க,
“அத்தை கால் பண்ணியிருந்தாங்க…” என்று சொல்லி நன்றாக சாய்ந்தமர்ந்துகொண்டாள் நனியிதழ்.
‘ம்மா’ என பல்லை கடித்தவன் தமயந்தியை வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என கோபத்தை அடக்கினான்.
“ஏன் சொல்லக்கூடாதா?…” அவனின் முகம் போன போக்கிலேயே கணவனின் எண்ணத்தை அவள் கண்டுகொள்ள,
“பேஸ் ரீடிங் படிச்சிருக்கியா நீ?…” என்றவன் உடனே தன் போனை எடுத்து தமயந்திக்கு அழைத்தான்.
“சொல்லு ஆரி, நதியை பார்த்துட்டியா?…” என்றார் அவர் ஆர்வமாய்.
“ஆமா, அதான் சொல்லிட்டீங்களே. பார்த்துட்டேன். நான் வர வரைக்கும் தூங்காம வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க நனியிதழ் முறைத்தாள்.
“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என்று கேட்க,
“அதையே தான் நானும் கேட்கறேன். தப்பு பண்ணிட்டேன். அதையே நினைப்பியா நீ?…” என்று சொல்லி அவளை நெருங்கி அமர்ந்தான்.
“ப்ளீஸ் இதழ். வேணும்ன்னு செய்யலை. செய்யவும் மாட்டேன். இது ப்ச், ஆமா தப்பு தான். அந்தநேரம்…” என்று சொல்லியவனின் இதழ்கள் மேல் விரல் வைத்து அவன் பேச்சை தடை செய்தவள்,
“நான் உங்ககிட்ட சண்டையே போடலையே? அந்த விஷயத்துல இருந்து மூவ் ஆன் ஆகிட்டேன்…” என்றாள் சாதாரணமாக.
ஆனால் அந்த சாதாரணம் தான் அவனுள் அபாயமணியை எழுப்பி ஒலிக்கவிட்டது.
‘ஆஹா பெருசா என்னமோ இருக்குடா ஆர்யா உனக்கு’ என்று கண்ணை உருட்டினான்.
“ஓகே, பைனலா சொல்றேன். இதை நாம பேசி சாட்டவுட் பண்ணிடுவோம். இனிமே கால் பண்ணினா என்னன்னு கேட்க ட்ரை பன்றேன்…” என்று கூற சிரித்துவிட்டாள் நனியிதழ்.
“என்னன்னு வெளிப்படையா பேசு இதழ். என்னடி நினைக்கிற?…” என்றான் அவளின் முகம் பற்றி.
“உங்களை நான் மாத்திக்கோங்கன்னு சொல்லவே இல்லை. ஆனா நான் உங்ககிட்ட இப்படித்தான் இருக்கனும்ன்னு நீங்க ஏன் என்னை மாத்த ட்ரை பன்றீங்க? இனிமே அது வேண்டாம். நான் எப்பவும் போல இருக்கேன்…” என்று சொல்ல அவனுக்கு புரியவே இல்லை.
“இதழ்….” என்று குருஆர்யன் பார்க்க,
“நானும் தப்பு பண்ணிருக்கேன். நீங்க கண்டிஷன் போட்டப்பவே நானும் கண்டிஷன் போட்டிருக்கனுமோ? ஆனா எனக்கு அந்த நிமிஷம் எதுவுமே தோணலை. அதுதான் நிஜம்…” என்றவள்,
“மெசேஜ் தான் பண்ணனும். இதை தான் செய்யனும் வைக்கனும்ன்னு நீங்க முன்னாடியே ஒரு லைன் போட்டு வச்சுட்டீங்க. ஆனா நீங்க மட்டும் எப்போவேணா அந்த லைனை க்ராஸ் பண்ணி வருவீங்க. அதானே?…” என்று கேட்க பேந்த பேந்த விழித்தான்.
அதைதானே அவன் செய்ததும். ஒருவழி பயணம் போல அவனின் செயல்கள் அவன் வழியில் அல்லவா அவளை இழுத்து சென்றது.
“என்னோட நீங்க கடமைக்கு வாழலைன்னு எனக்கு தெரியும். அதனால ப்ளீஸ் எதையும் ப்ரூவ் பண்ணவோ, என்னை சமாதானம் செய்யவோ நீங்க முயற்சி பண்ணாதீங்க. இதை நான் ஒரு விஷயமாவே நினைக்கலை…” என்று சொல்லியவள்,
“அப்பறம் ஒரு விஷயம். இனி மெசேஜ் பன்றதும், கால் பன்றதும் நான் டிஸைட் பண்ணிக்கறேன். உங்களோட கண்டிஷனை இங்க நான் ப்ரேக் பன்றேன். இது பொண்டாட்டியா என்னோட ரைட்ஸ். அதை உங்க பர்மிஷன் வச்சு எடுத்துக்கனும்ன்னு அவசியமில்லை…” என்றாள்.
சுத்தமாய் குருஆர்யன் குழம்பி போனான். அவள் கோபமிருக்கிறது என்கிறாளா? இல்லை என்கிறாளா? எதுவுமே அவனுக்கு தெளிவாய் விளங்கவில்லை.
கண்ணை கட்டி எங்கோ எதையோ தேடு என்று விட்டுவிட்டதை போல பார்த்து நின்றவன்,
“இப்ப என்ன சொல்ற?…” என்றான்.
“நான் எதுவுமே சொல்லலையே? நீங்களா வந்தீங்க சண்டையா? கோபமா? சாட்டவுட் பண்ணலாம்ன்னு சொன்னீங்க. நான் என்ன சொன்னேன்?…” என்று கேட்க சுத்தமாய் நொந்துவிட்டான்.
“அப்போ கோபமில்லையா இதழ்?…”
“எதுக்கு கோபப்படனும்?…” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
“நான் கால் அட்டன் பண்ணாததுக்கு, ஆனந்த்கிட்ட சொல்ல சொன்னதுக்கு?…”
“நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கறீங்க?…” என்று கேட்க தலை கிறுகிறுத்தது அவனுக்கு.
“கொஞ்சம் தெளியவிட்டு என்னை அடியேன்…” என்றவனை பார்க்கவும் பாவமாக இருந்தது.
ஆனாலும் அவனின் பேச்சுக்கள். அந்த நிமிடம் தன்னுணர்வுகள். ‘இவனிடம் சொல்லாமல் அடுத்தவனிடம் சொல்ல வேண்டுமாமே?’ சட்டென முகமெல்லாம் ரத்தம் பாய்ந்தது நனியிதழுக்கு.
“இனிமே கால் பண்ணினா எடுக்கறேன்…”
“குழந்தை இருக்கு. எமர்ஜென்ஸிக்கு அட்டன் பண்ணனும்ன்னு தோணும்ல ஒரு அப்பாவா…” என்றாள் சாதாரணமாக.
“என்னை நாலு அறை விட்டுடு நீ. சுத்தமா தாங்க முடியலை. எதுவும் நடக்காத மாதிரி நீ பேசறது இருக்கே. இங்க இங்க கத்தியை சொருகுற மாதிரி இருக்கு இதழ்…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
அவனுக்கு எப்படி இதனை சரி செய்வதென்றும் தெரியவில்லை. அவளை கஷ்டப்படுத்தவும் முடியவில்லை.
அவன் அப்படித்தான். அதற்கு மேல் எப்படி அவளை மலையிறக்குவது என்று தெரியவில்லை.
‘நான் கீழே தான் இருக்கிறேன்’ என்று தலைக்கு மேல் நிற்பவளிடம் என்ன செய்ய முடியும் என முழி பிதுங்கினான்.