“முடியலை சாமி. ஆளை விடுங்க…” என்று போனை ஓரமாய் வைத்தாள்.
“சூப்பை இன்னுமா குடிக்கலை நீ?…” என்று தமயந்தி வர,
“ரொம்ப சூடா இருக்கு த்தை. கொஞ்சம் ஆறட்டுமே?…” என்றதும் பதறி போனார்.
“முடிஞ்சது என் கதை. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் போன் பண்ணி என்னை பாடா படுத்திருவான். குடி முதல்ல…” என்று மருமகளின் அருகிலேயே அமர்ந்துவிட்டார் தமயந்தி.
ஆரி என்று போய் இப்போதெல்லாம் அதிகமாய் உன் புருஷன் என்னும் அடையாள வார்த்தை தான் அவரிடமிருந்து வருகிறது.
மற்றவர்களிடம் இன்னும் அப்படியே இருப்பவன் மனைவி என்று வரும்பொழுது மட்டும் வெண்பஞ்சாய் மாறிவிடும் மாயம் தான் யாருமறியாதது.
ஆனால் அதனை சிரிப்புடனும், சிலநேரம் கேலியாகவும், சிலநேரம் சந்தோஷத்துடனும் முழுமையாய் ஏற்றுக்கொண்டனர் குடும்பத்தார்.
நனியிதழுக்கு இப்போது எட்டாம் மாதம் அன்றுடன் முடிகிறது. ஒன்பதாம் மாதம் முதல் வாரத்தில் வளைகாப்பு வைக்கலாம் என்று பேசியிருந்தனர்.
குருஆர்யன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வர சரியாக இருக்கும் என்று தேதியை முடிவு செய்திருந்தனர்.
அவனின் இந்த படத்திற்கு அத்தனை இடைஞ்சல்கள். அதனால் படப்பிடிப்பும் கால தாமதமாகி இப்போது தான் நிறைவில் வந்து நின்றது.
ஒருவாரத்தில் படப்பிடிப்பின் வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். வெளிநாடு சென்றிருப்பவன் அங்கிருந்து மனைவிக்கான உடைகள், அவனுக்கு பிடித்தவிதமாய் வாங்கி அனுப்பி வைக்க முகமெல்லாம் வெட்க கதிர்கள்.
“பாதிநாள் வீடியோ கால் வரமாட்ட. காலும் பண்ணமாட்ட. ஸோ வாட்? எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. நான் அனுப்பறேன். என் வாய்ஸ் நீ கேளு….” என்றவனின் அழிச்சாட்டியம் இப்போதெல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. (www.newportworldresorts.com)
“பேசாம கால் பண்ணியே பேசிடட்டுமா? ரொம்ப பன்றீங்க நீங்க…” என்று அவளே நொந்து போய் அவனுக்கு செய்தி அனுப்ப,
“ம்ஹூம். ஐ லவ்ட் இட். இது எனக்கு வேணும். இந்த ஃபீல் எனக்கு நீ குடுத்துட்டே இரு இதழ். உன் மெசேஜ் என்னோட தப்பை சுட்டி காமிக்க இல்லை. இப்ப இதை நான் ரொம்பவே விரும்ப ஆரம்பிச்சிட்டேன்…” என்றவனின் பினாத்தல்கள் எல்லாம் உலக அதிசயம் தான் அவளுக்கு.
‘எப்படி இருந்த மனுஷன்?’ என்று சிரிப்பு தாளவில்லை நனியிதழுக்கு. கோபத்தில் குறுஞ்செய்திகள் அவர்களுக்கு பாலமாயிருந்தது இப்போது காதலாய் மாறியிருந்தது.
வார்த்தைகளில் இல்லை அவர்களின் காதல். வாழ்க்கையில் இணைபிரியாமல் மிளிர்ந்தது.
திருமணத்திற்கு முன்பு தான் சொல்லிய ஒவ்வொன்றையும் குருஆர்யனே உடைத்து தகர்த்திருந்தான்.
குருஆர்யன் மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு உலகத்தை சுற்றாத குறை தான்.
ஒவ்வொன்றிக்கும் தன்னை அவள் சார்ந்து இருக்க கூடாதென்றவன் அவளிடம் ஒன்றி போயிருந்தான்.
தன்னை இழுத்து பிடித்து வைக்க கூடாதென்றவன் அவளின் கைகளுக்குள் இருந்து மீள விரும்பாமல் இருந்தான்.
அவனின் மாற்றங்கள் ஒவ்வொன்றும் வாழ்வின் சுவையை கூட்டிக்கொண்டே தான் சென்றது.
‘பெத்தவங்க பார்த்து வச்ச கல்யாணம்’ இந்த ஒன்றை மட்டும் அவன் மாற்றுவதே இல்லை.
மனைவி தன்னிடம் தானாக பேசவில்லை என்றாலும் அதனை பெரிதாய் நினைக்கவே இல்லை.
‘இருந்துவிட்டு போ, நான் மெசேஜ்லையே பேசிக்கறேன். எனக்கொண்ணும் கஷ்டமில்லை’ என்று இஷ்டப்பட்டு அதனை ஸ்வீகரித்தான்.
இப்படி ஒவ்வொன்றிலும் அவள் மனதில் அவன் பிழையின் அளவை சுருங்க செய்யாமல் அவனின் நேசத்தின் வாசத்தை அடர்த்தியாக்கிக்கொண்டே சென்றான்.
மன்னிப்பை ஒற்றை வார்த்தையில் யாசித்து பெற்றுவிடுவதை விட அதனை யாசிக்காமல் மறக்க செய்வது சால சிறந்ததென்று நினைத்தானோ என்னவோ?
இயல்பாகவே இருந்து அவளின் இயல்பில் இருந்து நழுவாமல் பிடித்துக்கொண்டான் குருஆர்யன்.
மனதிற்கு பிடித்திருந்தது இந்த கடிவாளம். அவன் விரும்பி பிணைத்துக்கொண்ட அந்த சங்கிலியை விலக்கவில்லை.
இப்படி ஒவ்வொன்றிலும் அவனின் பரிமாணம் நனியிதழை வசீகரித்துக்கொண்டே இருந்தது.
பலநாட்கள் அவனுக்கு அழைக்க நினைத்து பின் மௌனமாகிவிடுவாள். முதலில் குறுஞ்செய்திகள் மட்டுமே என்றிருந்து பின் அவன் அழைக்கும் காணொளி அழைப்புகளை ஏற்க ஆரம்பித்தாள்.
இப்போதும் இன்னும் ஒருவாரத்தில் கிளம்பிவிடுவேன் என்று அங்கிருந்தே இங்கே வீட்டினரையும் தன் சுண்டுவிரலில் நிறுத்தி ஆட்டிவைத்தான்.
“இவன் இம்சை தாங்க முடியலையே?…” என குருமூர்த்திக்கே மண்டை காய்ந்தது.
“வேணும்னா கூட கூட்டிட்டு போய் வச்சு பார்த்துக்கோப்பா…” என்று குருமூர்த்தியே சொல்லிவிட,
“விட்டா தனியா போன்னு சொல்லுவீங்க போல? முதல்ல பிள்ளை பிறக்கட்டும். அப்பறம் தனிக்குடித்தனம் பத்தி யோசிப்போம்…” என்ற சின்னமகனின் பேச்சில் வாயடைத்து தான் போனார் குருமூர்த்தி.
“மருமகளை கவனிச்சீங்களான்னு கேட்டா இவ்வளோ சலிப்பு? ஏன், அம்மா கம்ப்ளைன்ட் பண்ணினாங்களா நான் கால் பண்ணி கேட்டுட்டே இருக்கேன்னு?…” என்று தமயந்தியை கேட்க,
“ஆத்தீ நானில்லை. மயங்கிட்டேன்…” என நிஜத்திற்குமே மயக்கம் வந்தது தமயந்திக்கு.
“மகன் பக்கத்துல இல்லைன்னா நீங்க தானே பார்த்துக்கனும். உங்களுக்கும் வயசாகிருச்சு. நீங்க எதுவும் மறந்திருந்தா? அதை ஞாபகப்படுத்த தான் கால் பன்றேன். எனக்கு வேற வேலையே இல்லையா? இருந்தும் நான் கூப்பிடறேன்னா புரிஞ்சுக்க வேண்டாமா நீங்க?…” என்று சொல்லி,
“போனை அம்மாக்கிட்ட குடுங்க…” என்று கேட்டு தமயந்தி ‘வேண்டாம். பேசமாட்டேன்’ என்று சொல்லியும் அவரின் கையில் குருமூர்த்தி போனை திணித்துவிட,
“இப்ப என்னவாம் உங்களுக்கு? என் மண்டையை கழுவி, கண்ணீர் விட்டு கெஞ்சி, அவளை மாதிரி பொண்ணு கிடைக்குமான்னு பில்டப் குடுத்து கட்டி வச்சீங்க தானே? அப்போ அவளை யார் பார்த்துப்பா? அவங்கப்பாகிட்ட என்ன பதில் சொல்லுவீங்க?…” என்று அவரை பாடாய் படுத்தி வைத்தான்.
“மண்டைய கழுவினேனா? கழுவிட்டாலும். இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு அவங்கப்பாக்கிட்ட என்னை பதில் சொல்ல சொல்றான்?…” என்று தமயந்தி ஒருபக்கம் புலம்ப, எல்லாம் நனியிதழுக்கு வந்து சேரும் மது, கீதாவின் மூலம்.
“பக்கத்துல இல்லைன்னாலும் இந்த ஆரி அநியாயத்துக்கு எல்லாரையும் ஆட்டி வைக்கிறான். போன் சவுன்ட் கேட்டாலே அம்மா அலறுறாங்க…” என்று மது ஒருபக்கம் சிரிக்க,
“நீங்களும் தான் இருக்கீங்களே?…” என்று கீதா பரத்தை வாரிவிடுவாள்.
எல்லாம் சேர்ந்து நனியிதழுக்கு தான் பிபியை கூட்டும். அவனிடம் கேட்டாலும் வாய் கிழிய அவன் பேசும் வசனங்களில் தலையை முட்டிக்கொள்ள வேண்டும்.
அத்தனைக்கும் பின்னான அவனின் நேசம் ஒன்றே அவளது மகிழ்ச்சியை பலமடங்கு கூட்டியது.
இப்போதும் தமயந்தி அமர்ந்து சொல்லிய விதத்தில் நனியிதழ் வாய்கொள்ளாமல் சிரித்துவிட,
“நான் குடிச்சுக்கறேன் த்தை…” என்று சொன்னாலும் அவர் சட்டமாய் அமர்ந்துகொண்டார்.
தான் இதனை அருந்தாமல் அவர் கிளம்ப போவதில்லை என்று நனியிதழ் அதனை எடுத்து குடிக்க வயிற்றில் சுரீரென்று ஒரு வலி.
“த்தை…” என்று சொல்லும் பொழுதே கண்கள் கண்ணீரை உகுத்துவிட்டது.
“என்னம்மா? என்ன நதி?…” என்றார் அவளின் கை பிடித்து.
“இல்லை…” என்று சொல்லியவள் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.
“என்ன நதி? என்னாச்சு? வலிக்குதா?…” என்றார்.
“த்தை, எனக்கு வாஷ் ரூம் போகனும்…” என்று எழுந்துகொண்டாள்.
“முடியலை த்தை…” என்று மீண்டும் கட்டிலில் அமர்ந்தவள் கண்கள் இருண்டுகொண்டு வந்தது.
அமர்ந்த வேகத்தில் நனியிதழின் காலின் கீழ் ஓடிய திரவம் கண்டு மிரண்டு போனார்.
“பாவா, பாவாக்கு பாவாக்கு கூப்பிடுங்க த்தை….” என்று மூச்சு வாங்க அவள் சொல்லும் முன் நெஞ்செல்லாம் பேச முடியாமல் அடைத்தது.
“ம்மா…” என்றவளின் அலறல் அந்த அறையை ஆட்டிவைக்க,
“ஐயோ நதிம்மா…” என்று பதறியவர் அவளை தனியே விட்டு செல்லவும் முடியாமல், தன் போனை எடுக்க செல்லவும் முடியாமல் சமையல் செய்பவரை கத்தி அழைத்தார்.
“ட்ரைவரை கூப்பிடு, என் போனை எடுத்துட்டு வா….” என்று கத்தி சொல்லியவர் நனியிதழின் போனை எடுத்து அதில் இறுதியாக வந்திருந்த மகனின் எண்ணிற்கே மீண்டும் அழைத்துவிட்டார்.
இரண்டு முறை அழைப்பு சென்ற பின்னர் தான் மகனுக்கு அழைக்கிறோம் என்று புரிந்து அதனை துண்டித்து பரத்திற்கு அழைத்தார்.
“பரத் ஹாஸ்பிட்டல் வரோம். நதிக்கு இங்க…” என்று விஷயத்தை சொல்ல அதற்குள் குருஆர்யனின் அழைப்பு.