அவரின் காதில் கைபேசிக்கு கொடுத்த அழுத்தத்தில் அவனின் அழைப்பு எடுக்கப்பட அதனை கவனியாதவர் பரத் என்று எல்லாவற்றையும் சொல்லி,
“சீக்கிரம், நான் ட்ரைவரை வர சொல்லிருக்கேன். எல்லாம் ரெடி பண்ணு…”
“ம்மா, ம்மா இதழ்க்கு என்னாச்சு? இதழ்…” என்ற சின்னமகனின் கத்தலில் தான் தமயந்திக்கு சுதாரிப்பு வந்தது.
போனை எடுத்து பார்க்க அதில் குருஆர்யன் பதட்டமாய், பயத்துடன் படபடப்பாய் அவரை பார்த்தபடி.
“கேட்கிறேன்ல. இதழுக்கு என்ன?…” என இரைந்து,
“காமிங்க அவளை…” என்றான் குருஆர்யன்.
“ஆரி ஒன்னும் ஒன்னும் இல்லப்பா. பதட்டப்படாத. நதிக்கு வலி வந்திருச்சு போல?…” என்று சொல்லி கேமராவில் காண்பிக்க படுக்கையில் வயிற்றை பிடித்துக்கொண்டு மயக்கத்திற்கு சென்றாள் நனியிதழ்.
குருஆர்யனின் அழைப்பு அவளின் காதில் கேட்டாலும் அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில் நனியிதழ் இல்லை.
“நாங்க ஹாஸ்பிட்டல் போகனும் ஆரி. நீ பதட்டப்படாத. கிளம்பறோம்…” என்று சொல்லி வைத்துவிட்டார் தமயந்தி.
வேலையாட்கள் மூலம் நனியிதழை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்ப அதற்குள் இரு குடும்பத்திற்கும் விஷயம் தெரியவந்தது.
அங்கே குருஆர்யனின் நிலையோ பித்து நிலை. எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அசராமல் திட்டங்களை வகுப்பவன் செய்வதறியாது நின்றுவிட்டான்.
மனதின் ஒவ்வொரு காட்சிகளும் நனியிதழை பார்த்ததில் இன்று இன்றுவரையிலான இருவரின் வாழ்க்கையையும் புரட்டி காண்பிக்க முகத்தை மூடி அமர்ந்திருந்தவனுக்கு ஆனந்த் அழைத்தான்.
“பாஸ், மேம் சேஃப். ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. பயப்படவேண்டாம்ன்னு சொன்னாங்க. குருமூர்த்தி ஸார் நாம கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டார். புறப்படலாம்…” என்றவன் தானே வந்து கடகடவென்று அனைத்தையும் எடுத்துவைத்தான்.
குருமூர்த்தி மகன் பயணச்சீட்டுக்கு முயற்சி செய்வான் என்றறிந்து அங்கிருந்தவர் மூலம் தனிவிமானத்திற்கு ஏற்பாடு செய்து முடித்து ஆனந்திடம் சொல்லி கிளம்பிவர அனைத்தையும் செய்துவிட்டார்.
ஆனந்த் எல்லாவற்றையும் எடுத்து வைக்க குருமூர்த்தி மகனுக்கு அழைப்பு விடுக்க அதனை உணர்வற்று எடுத்து பார்த்தான்.
“ஆரி, இங்க நதி நல்லாயிருக்கா. எல்லாரும் இங்க தான்ப்பா இருக்கோம். நீ கிளம்பி வா…” என்று சொல்ல அவனின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.
முகத்தில் எந்தவித பாவனையும் இல்லை. தலையசைப்புடன் அழைப்பை துண்டித்தவன் எதுவும் பேசாமல் கிளம்பி வந்தான்.
இதயத்தின் வார்த்தைகள் மௌனமாய் அவளிடத்தில் எதையோ பேசிக்கொண்டிருக்க வேறு யாருடனும் பேசவில்லை குருஆர்யன்.
“எப்படிம்மா, என்ன ஆச்சு?…” என்று மருத்துவமனையில் நரசிம்மன் கண்ணீருடன் தமயந்தியிடம் கேட்க,
“பேசிட்டு தான் இருந்தா. பாத்ரூம் போறேன்னு எந்திச்சவ நடக்க முடியாம போய்…” என சொல்லும் பொழுதே தமயந்தி அழுதுவிட,
“ம்மா, சீரியஸ் எல்லாம் இல்லை. நீங்க அழாம இருங்க…” என்று மது வந்து சத்தம் போட்டுவிட்டு சென்றாள்.
நனியிதழுக்கான சிகிச்சைகள் நடந்துகொண்டிருக்க கீதாவும் மதுவும் பேசியபடி வெளியே வந்தனர்.
“ம்மா, வாட்டர் பேக் உடைஞ்சிருச்சு. ஆப்பரேஷன் பண்ணி குழந்தையை எடுத்திடலாம். அதுதான் சரி…” என்று கீதா சொல்ல,
“என்னம்மா இப்படி சொல்ற? இப்ப தான் எட்டு மாசம்…” என சுஜாதா கேட்க,
“ம்மா, என்ன பேசறீங்க நீங்க? குழந்தையும் நல்ல வளர்ச்சியோட இருக்கு. எல்லாமே நார்மல் தான். சிலபேருக்கு இந்த மாதிரி நடக்கும். என்ன ஒன்னு அவங்களுக்கு அந்த சிம்டம்ஸ உணர முடியாம இருந்திருக்கும்…” என்றாள் கீதா.
“ஹ்ம்ம், அதான் சொல்றேன் த்தை. நைட்ல என்கிட்டயும் கேட்டா. சூடா தண்ணி குடிச்சிட்டு நடக்க சொன்னேன். ஆனா இதை நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை…” என்ற கீதா,
“எப்படியும் அடுத்த மாசம் எப்போ வேணா டெலிவரி ஆகிருக்கும். என்ன இப்ப கொஞ்சம் முன்னாடியே ஆக போகுது. அவ்வளோ தான்…” என கூறினாள் சமாதானத்துடன்.
“முதல்ல ஆரியை கான்டேக்ட் பண்ணுங்க. அவன் சைன் போட உடனே வர முடியாது. அதுக்கு பதிலா மாமாவை போட சொல்லலாம்…” என்றாள் மதுஸ்ரீ நரசிம்மனை காண்பித்து.
அவர் முகத்தில் அத்தனை கலவரமும், பயமும். இதில் மருமகன் வேறு அருகில் இல்லை என்ற நிலை. தாளமுடியவில்லை.
“அந்த மனுஷன் துடிச்சு போவாரு. நமக்காவது நாம இத்தனபேரு இருக்கோம். அங்க அவர் ஒத்தையா என்ன நினைச்சிக்கிட்டு வராரோ?…” என்றார் நரசிம்மன்.
தமயந்தி மருத்துவமனை வரவும் ஆர்யாவை பார்த்ததும், அவன் நனியிதழை பார்த்ததையும், பேசியதையும் கூற மனதெல்லாம் விண்டு போனது.
அதை நினைத்தபடியே நரசிம்மனும் பேச யாருக்கு யார் சமாதானம் சொல்வதென்றானது.
“கீதா…” என்று தனியே அழைத்த ப்ரவன்,
“நதியோட உண்மையான கண்டிஷன் என்னன்னு சொல்லு….” என்றான் அதட்டலுடன்.
“ப்ரவன்…”
“அடிச்சிருவேன் பார்த்துக்கோ. உன்னை தெரியாதா? என்ன இவ்வளோ பதட்டம்?…” என்று கேட்க,
“ப்ளட் லாஸ் நிறைய ஆகிருச்சு நதிக்கு. குழந்தைக்கும் அசைவில்லை. உடனே ஆப்பரேஷன் பண்ணியே ஆகனும். அப்ப தான் ரெண்டுபேரையும் காப்பாத்த முடியும். தியேட்டர் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…” என்றாள் கீதா கண்ணீரை அடக்கிக்கொண்டு.
“சரி சரி. ஒன்னும் ஆகாது…” என்று அவளின் தலையில் தட்டியவன் இதயமும் கண்ணீர் சுமந்தது.
“எல்லாரும் பார்க்கறாங்க. நார்மலா இரு. முதல்ல சித்தப்பாக்கிட்ட சைன் வாங்கு…” என்று அவளை அனுப்பி வைத்தவனுக்கும் உயிரெல்லாம் பதறியது.
“சரி தானே சித்தப்பா…” என்று இன்னொரு கையையும் கொண்டு அவரை அணைவாய் பிடித்துக்கொண்டான்.
“நதியும், குழந்தையும் நல்லவிதமா வந்து சேரட்டும். வேண்டிகிட்டே போட்டேன். மனசெல்லாம் என்னமோ பண்ணுது. என்னன்னு தெரியலை. நெஞ்சை அடைக்குதே. அந்த தண்ணிய எடு…” என்று கேட்டு அவன் எடுத்து தரவும் வாங்கிக்கொண்டார்.
“இந்த மனுஷன் பாரு, என் கையெழுத்து இல்லாம எப்படி இதை செய்வீங்கன்னு வந்ததும் குதிப்பாரு…” என்று சொல்லி லேசாய் சிரித்துக்கொண்டார் நரசிம்மன்.
அனைவரின் கவனமும் அவரிடம் குவிந்தது. பிரசவ அறையையும் இங்கே இவர்களையும் மாற்றி மாற்றி பார்த்தனர்.
“இப்ப பிறந்து, வளர்ந்து படிச்சாப்ல இருக்கு. கைக்குள்ள வளர்ந்த புள்ளை. ஆனா பாரேன் நதிக்கே ஒரு குழந்தை. இன்னும் அவளையே நாம சின்ன புள்ளையா பார்க்கறோம்….” என்று மகளின் சிறுவயது ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டே இருந்தார் நரசிம்மன்.
அவ்வப்போது கண்கள் கலங்கும். கண்ணீர் வரும். சிரிப்புடன் துடைத்துக்கொள்வார்.
பேச்சுக்கள் நிற்கவே இல்லை. யாரையும் கவனிக்கவில்லை. அவருக்கு அவரே ஞாபகப்படுத்திக்கொண்டதை போலிருந்தது அவர் பேச்சு எல்லாம்.
“என்னமோ செய்யுதே? என்னடா பண்ணுது எனக்கு? என் பொண்ணு உள்ள எப்படி இருப்பா? குழந்தை பிறந்திருக்குமா? ஒண்ணுமே சொல்லலை யாரும்?…” என்று கேட்டவர் நெஞ்சை நீவிக்கொண்டார்.
ஸ்ரீநிவாசனுக்கு தன் தம்பியின் நிலை கண்டு தாளவில்லை. திடமாய் இருக்கும் மனிதன் குழந்தையாய் புலம்பிக்கொண்டிருக்க கண்ணீரை அடக்க பெரும்பாடானது.
“ஆனா ஒன்னுடா எனக்கெதுவும்ன்னா நீ பார்த்துப்ப. என் பொண்ணை விட்டுடமாட்ட. நல்ல மனுஷங்களுக்கு மத்தில நதியை விட்டுட்டு போறேன்னு திருப்தியோட…” என்று முடிக்கும்முன்,