“நீ ஒரு சின்ன பையன் இருக்கன்னு மறந்துட்டேன் பாரேன்…” என்று நரசிம்மன் சிரிப்புடன் அவரிடம் கை கொடுத்து,
“டேய் ப்ரவா, இங்க பாரு. அட என்னை பாருடா…” என்று அவன் முகம் நிமிர்த்தி அவனின் கண்ணீரை துடைத்துவிட்டவர்,
“நான் ஒரு முட்டாப்பய, எப்பவும் சரியா பேசுவேன்னு உங்கப்பன் என்னை ஏத்தி ஏத்தி விட்டு இப்ப என்ன பேசன்னே தெரியாம உளறிட்டு இருக்கேன்…” என்றவருக்கு கண்கள் அலைபாய்ந்தது.
“ப்ரவா…” என்று கீதாவின் குரல் பதட்டத்துடன்.
“நதி எப்படி இருக்கா?…” என அனைவரும் அவளை சூழ்ந்துகொள்ள,
“நீ உள்ள வா….” என்றாள் கீதா.
“கீதா என்னன்னு சொல்லு. நதி எப்படி இருக்கா?…” என்று ஸ்ரீநிவாசனும், சுஜாதாவும் கேட்க,
“நல்லாருக்காம்மா. ப்ளட் தேவைப்படுது. இருக்குது தான். ஆனாலும் தேவை இருக்கு…” என்று சொல்லி ப்ரவனை அழைத்து சென்றாள்.
நரசிம்மன் அப்படியே அமர்ந்துவிட்டார். முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. மகள் வந்துவிடுவாள் தான்.
ஆனால் எதற்கு இந்த சோதனை என்று புரியவில்லை அவருக்கு. குருமூர்த்தியும், ஸ்ரீநிவாசனும் அவரின் இருபக்கமும் வந்தமர்ந்தனர்.
மேலும் சிலநிமிடங்கள் கரைந்தது. மது முதலில் வர கீதா கையில் குழந்தையுடன் முகமெல்லாம் புன்னகையுடன் வந்தாள்.
“பெண் குழந்தை…” என்று சொல்ல நரசிம்மன் உயிர்த்து பார்த்தார்.
“பிடிங்க சித்தப்பா…” என்று சொல்ல,
“நதி எப்படிம்மா இருக்கா?…” என்றார் அவர் தளர்ந்த குரலில்.
“மயக்கத்துல இருக்கா சித்தப்பா. நீங்க குழந்தையை வாங்குங்க…” என்று சொல்ல,
“நதிக்கு ஒண்ணுமில்லையே. எப்படி இருக்கா?…” மீண்டும் கேட்க,
“ஒண்ணுமில்லை சித்தப்பா. ப்ளட் லாஸ் தான். மயக்கம் தெளியவும் ரூம்க்கு மாத்துவோம்…” என்று சொல்லியவள் குழந்தையை தரவும் சந்தோஷமாய் வாங்கிக்கொண்டார் நரசிம்மன்.
ஆனாலும் மகளை காணாமல் அவருக்கு முழுநிம்மதி இல்லை. இதில் அவரின் எதிர்பார்ப்பு குருஆர்யன் எப்போது வருவான் என்பதில்.
குழந்தை பிறந்ததுமே நனியிதழ் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட ரத்தபோக்கும் அதிமாகி உடல் சில்லிட ஆரம்பித்தது.
வெளியில் இருப்பவர்கள் யாரிடமும் இதனை தெரிவிக்கவில்லை கீதாவும் மதுவும்.
பரத்தும், விஷ்ணுவும் ப்ரவனுடன் இதனை பகிர்ந்துகொள்ள அந்த பதட்டத்தை வெளிப்படுத்தாமல் அவளின் உடல்நிலையை சீராக்க முயன்றனர்.
அனைவரும் குழந்தையை பார்த்துவிட்டு தர இன்குபெட்டரில் வைக்கப்பட்டது குழந்தை.
மேலும் இரண்டுமணி நேரம் கடந்தும் நனியிதழ் நினைவு திரும்பவில்லை. வீட்டினர் அவ்வப்போது குழந்தையை சென்று பார்த்துவிட்டு வர நரசிம்மன் குருமூர்த்தி சொல்லிய தகவல் கேட்டு நொடிக்கொருமுறை லிப்ட்டை பார்த்தார்.
அவரின் பார்வையை நிறைத்து மனதிற்குள் நிம்மதியை தரவென்றே வந்துவிட்டான் குருஆர்யன்.
“ஆரி…” என்று ஆளாளுக்கு அழைக்க வந்துகொண்டிருந்தவன் பார்வை மனைவியை தேடியது.
அன்றொருநாள் இதே போல தான் வருகையில் கையில் குழந்தையுடன் நின்றவளின் சிரித்த முகம் காணாமல் மனது வாட முகத்தில் காண்பிக்க முடியவில்லை.
வரும்வழியிலேயே விஷ்ணுவும், பரத்தும் அழைத்து நிலவரத்தை சொல்லியிருக்க பெண் குழந்தை என்றதுமே அவனின் நினைவுகள் அவளிடமே.
“உன்னை மாதிரியே பெத்து குடுப்பியா?…” என்று விளையாட்டாய் அவன் கேட்டிருக்க,
“முதல்ல பிள்ளையை தூக்க கத்துக்கோங்க. அப்பறம் என்னை மாதிரி பெத்துக்கலாம்…” என்று கேலி செய்தவளை வெகுவாய் உயிர் தேடியது.
யாரிடமும் பேசவில்லை. வந்தவன் முதலில் உள்ளே சென்று நனியிதழை பார்த்துவிட்டு வந்தான்.
ஒருபக்கம் ரத்தம் ஏறிக்கொண்டிருக்க ஆழ்ந்த மயக்கத்தில் படுத்திருந்தாள் நனியிதழ்.
சில நொடிகள் அவளின் முகத்தையே இமைக்காது பார்த்தவன் மனைவியின் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்துவிட்டு வெளியே வந்தான்.
அதன் பின்னரே குழந்தையை பார்க்க செல்ல கீதாவே தூக்கிக்கொண்டு வந்தாள் வெளியே.
“ஆரி வாங்குங்க…” என்று சொல்ல அதுவரை திடமாய் இருந்தவன் கண்களில் கண்ணீர் கலக்க, தன் மகளின் உருவம் விழிநீரின் பளபளப்பில் கலங்கலாய் தெரிந்தது.
“இப்படி உக்காருங்க…” என்று அவனை பிடித்து இருக்கையில் அமர வைத்த நரசிம்மன்,
“கொண்டாம்மா…” என்று குழந்தையை வாங்கி,
“பிடிங்க. அட பிடிப்பா. இப்படி இப்படி…” என்று பிள்ளைய தர யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்.
“நதிக்கு ஒண்ணுமில்லை. கொஞ்ச நேரம் தூங்குறா. அப்படி நினைக்கனும். சரிதான. பிள்ளையை பாரும். கண்ணு முழியெல்லாம் உம்மை மாதிரியே அடாவடியா இருக்கு…” என்று கிண்டல் போல சொல்ல மகளின் ஸ்பரிசமும் அந்த பார்வையும் அவனை உருக வைத்தது.
“ஆரி, வெறும் மயக்கம் தான். எல்லாருக்கும் இருக்கறது தான்…” என்று தமயந்தி சொல்ல சிவந்து கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவன்,
“தெரியும்…” என்று மட்டும் கூற பரத் அவனின் தோளில் கை வைத்து அழுத்தினான்.
“பிபி நார்மலுக்கு வந்திருச்சு ஆரி. பல்ஸ் ரேட் கூட ஹோப்ஃபுல் தான். பாடி டெம்ப்பரேச்சர் கூட ஓகே…” என மதுஸ்ரீ வரிசையாக சொல்ல சொல்ல அவனிதழ்கள் மெலிதாய் விரிந்தது.
“ஹ்ம்ம், சரியாகிடும். சரியாகிடுவா…” என்றவன்,
“என்னடா குட்டி. அப்பா சரியா தான சொல்லுவேன்?…” என்று கேட்க அவனின் கைகள் இன்னும் நடுங்கியது.
எல்லாம் சரியாகிவிட்டது தான். சொற்பநேரத்தில் அனைவரையும் நனியிதழ் நடுங்க வைத்திருந்தாள்.
ஆனாலும் அவள் கண்விழித்து பார்த்து ஒருவார்த்தை பேசினால் தான் அனைவருக்குமே நிம்மதி என்பதை போல காத்திருந்தனர்.
“குழந்தையை குடுங்க…” என்று மீண்டும் வாங்கிக்கொள்ள பாவமாய் பார்த்தான் கீதாவை.
“நீங்க பார்க்கனுமேன்னு தான் தூக்கிட்டு வந்தேன் ஆரி. இப்ப பேபி இன்குபெட்டார்ல இருக்கனும். ரெண்டுநாள் தான்…” என்று வாங்கி செல்ல குருஆர்யனின் கைக்குள் இன்னொரு கை.
“ரொம்ப இல்ல. ரொம்ப ரொம்ப. பெத்து வச்சிருக்கீங்க பாருங்க பொண்ணை. என்னை கலவரப்படுத்தன்னே…” என வழக்கம் போல அவருக்கு பதிலடி கொடுத்தவனின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க பார்க்க சட்டென தலையை தாழ்த்திக்கொண்டான்.